Wednesday, August 23, 2017

கமலாவுடன் பேசணும்போல இருக்கு...” - நெகிழவைக்கும் இயக்குநர் எஸ்பி.முத்துராமன் thanks vikatan.com

கமலாவுடன் பேசணும்போல இருக்கு...” - நெகிழவைக்கும் இயக்குநர் எஸ்பி.முத்துராமன்

ஆணி வேரானவள்!த.கதிரவன், படம்: தி.குமரகுருபரன்
‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா... வரமாட்டாரா?’ என்ற கேள்விக்கு விடைதேடி நாம் எல்லோரும் நகம் கடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதே ரஜினிகாந்த், ‘தன் வாழ்வின் முக்கியத் தருணங்களில் எல்லாம் ‘அவர்’ தன்னோடு இருக்க வேண்டும்’ என்று `குறிப்பிட்ட’ ஒருவரின் வருகைக்காகக் காத்திருக்கிறார் என்றால் ஆச்சர்யம்தானே...?

பொங்கல், தீபாவளி மற்றும் வீட்டு விசேஷங்களில் ஆரம்பித்து சமீபத்திய ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வுவரை, `என் வாழ்க்கையின் வழிகாட்டி, உடன்பிறவாச் சகோதரர்’ என்றெல்லாம் ரஜினி நெகிழ்ந்து உருகும் அன்புக்குச் சொந்தக்காரரான ‘அவர்’, இயக்குநர் எஸ்பி.முத்துராமன். 

ரஜினியை வைத்து 25 வெற்றிப் படங்கள், கமல்ஹாசனோடு 10 படங்கள் எனத் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகர்கள் இருவரையும் ஒருசேர இயக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர். பரபரப்பான அந்த நாள்களில் தன்னுடைய ஓட்டத்துக்கு உறுதுணையாக விளங்கிய தன் மனைவி கமலா மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்புகள் குறித்த நினைவுகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
``1973-ல் ஆரம்பித்து 1993 வரையிலான 20 வருட காலமும் திரைத்துறையில் ஓய்வே இல்லாமல் உற்சாகமாக உழைத்துக்கொண்டிருந்தேன். காரணம், சிறுவயதிலிருந்தே சினிமா மீது எனக்கிருந்த வெறிபிடித்த ஆசை. ‘பத்து நாள்கள் கமல் பட ஷூட்டிங், பத்து நாள்கள் ரஜினி பட ஷூட்டிங்’ என்று இரவு பகலாக உழைத்தும் எனக்கு எதுவுமே போரடிக்கவில்லை.

சினிமாவில் மட்டுமே நான் கவனம் செலுத்திக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், என் குடும்பத்தைத் திறம்பட வழிநடத்திச் சென்றவள் என் மனைவி கமலா. என்னுடைய சுமைகளை அவள் தலையில் தூக்கிவைத்திருந்தேன். 

நான் வீட்டுக்கு வரும்போதெல்லாம், ‘கால்ல சக்கரம் கட்டின மாதிரி ஓடிக்கிட்டே இருக்கீங்களே… குடும்பம் பிள்ளைங்கன்னு இருக்கிறது ஞாபகத்துல இருக்கா, இல்லையா? ஒரு பத்து நிமிஷம் உக்காந்து பேசக்கூட நேரமில்லாம அப்படி என்ன வேலை… கொஞ்சநேரம் என்கிட்டே உக்காந்து பேசிட்டுத்தான் போங்களேன்...’ என்று அழாத குறையாகக் கெஞ்சுவாள். ஆனாலும், அவள் பேசுவது எதுவுமே என் கவனத்துக்குள் வராது. ‘நேற்று எடுத்த சீன் சரியாக வந்ததா? இன்றைய சீனை எப்படி எடுக்கலாம்…’ என்பது மாதிரியான சினிமா சிந்தனைகளே எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும்.

ஷூட்டிங் முடிந்து வீடுவந்த பிறகும்கூட திடீரென்று நள்ளிரவில் போன் வரும். ‘சார் இன்னிக்கு நான் நடிச்ச சீன் நல்லா வந்திருக்கா சார்… நாளைக்கு எனக்கு என்ன சீன் சார்…’’ என்று ரஜினி கேட்பார். அவரிடம் காட்சி பற்றி பேசி முடித்துவிட்டு தூங்கினால், மறுபடியும் அதிகாலையிலேயே எழுந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கிளம்பிவிடுவேன். இப்படி சினிமாவையே மூச்சாக நினைத்த காரணத்தினால், என் குடும்பத்தை முழுமை யாகக் கவனிக்க முடியவில்லை. பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள், வீட்டில் என்ன செலவு, என்ன பிரச்னை என்று எதுவும் தெரியாது எனக்கு.
ரஜினி நடித்த ‘பாண்டியன்’ திரைப்பட ஷூட்டிங் சென்னை துறைமுகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு போன்கால், அவசரமாக வீட்டுக்கு வரச்சொல்லி வந்தது. என்னமோ ஏதோ என்ற பயமும் பதற்றமுமாக வீடுவந்து சேர்ந்தேன். தெரு முழுக்க கனத்துக்கிடந்த அமைதி என் பயத்தை இன்னும் அதிகமாக்கியது. தெரு முனையிலேயே எங்கள் வீட்டைச் சுற்றி நின்றிருந்த கூட்டம் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உறுதி செய்தது. கார் நிற்கும் முன்னரே அவசரமாக இறங்கி வீட்டுக்குள் ஓடினேன்.  

அங்கே... என் மனைவி கமலாவின் உடல் மாலைகளுக்கு மத்தியில் கிடத்தப்பட்டிருந்தது. மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோயிருந்தாள். உடலைப் பார்த்துக் கத்தினேன்... கதறினேன். போன உயிர் திரும்ப வருமா? 
‘கமலா இறக்கவில்லை... அளவுக்கு அதிகமான வேலைபளுவைக் கொடுத்து நானே அவளைக் கொன்றுவிட்டேன்' என்ற குற்ற உணர்வு இன்னமும் என்னுள் முள்ளாகக் குத்திக்கொண்டிருக்கிறது. இப்பவும் அவளிடம் மனம் விட்டுப் பேசணும் போல இருக்கு.
எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்... குடும்பம் என்ற அச்சாணியில்தான் நீங்கள் வெளியுலகைச் சுற்றிவருகிறீர்கள் என்பதை எப்போதும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள். உங்கள் லட்சியம், வெற்றி, பணம், புகழுக்காக வெறி கொண்டு செயல்படுங்கள்… தவறில்லை. ஆனால், உங்களின் ஆதாரமாகவும் ஆணி வேராகவும் இருக்கிற குடும்பத்துக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். மனைவியிடம் அன்போடு பேசுங்கள். மாதம் ஒரு தடவையாவது குடும்பத்தோடு வெளியூர் பயணம் மேற்கொள்ளுங்கள். குழந்தைகளோடு குழந்தையாகக் குதூகலியுங்கள். தினமும் ஒருவேளையாவது குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்கள். மனைவிக்குக் கணவன் தேவைப்பட்டபோதெல்லாம் அவளுக்குத் துணையாக நான் இல்லை; இப்போது எனக்கு ஆறுதலும் அன்புமாக இருக்க என் மனைவி கமலா இல்லை.’’ 

அன்பின் ஏக்கம் தேங்கி நின்றது அவர் விழிகளில்!

Friday, August 18, 2017

நோய்கள் காணாமல்போக வேண்டுமா? - Courtesy: Dinamalar

Advertisement

பதிவு செய்த நாள்

19ஆக
2017 
00:00

நோய்கள் காணாமல்போக வேண்டுமா?


பி.சி.ஓ.எஸ்., - - 'பாலிசிட்டிக் ஓவரி சிண்ட்ரோம்' எனப்படும் நீர்க்கட்டிக்கான அறிகுறி, தீர்வு குறித்து கூறும், அறிஞர் அண்ணா அரசு சித்தா மருத்துவமனையின் சித்தா டாக்டர், வெண்தாமரை செல்வி: 15 - 44 வயதுள்ள பெண்களை, இன்று பயமுறுத்தும் விஷயம், நீர்க்கட்டி. இது, குழந்தையின்மை பிரச்னையில் முக்கிய பங்கு வகிக்கிறது.முறையற்ற மாதவிடாய், மாதவிடாயின் போது தொடர்ந்து ஏற்படும் ரத்தப்போக்கு, முகத்தில் லேசாக மீசை, தாடி வளர்வது, அடிவயிறு மற்றும் பெண் குறியில் தொடர்ந்து வலி ஏற்படுவது, உடல் பருமன் போன்றவை, நீர்க்கட்டிக்கான அறிகுறி. இளம் வயதிலேயே சிகிச்சை எடுக்காவிடில், திருமணமானதும் குழந்தை பெறுவதில் சிக்கல் உண்டாகும்.கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், 1,000த்தில் ஒரு பெண்ணுக்கு தான் நீர்க்கட்டி பிரச்னை இருக்கும். இப்போது, 10ல் ஐந்து பெண்களுக்கு இப்பிரச்னை உள்ளது. அதனால் பயப்பட தேவையில்லை; ஆனால், சிகிச்சை அவசியம். நீர்க் கட்டி வரக் காரணம், நம் வாழ்வியல் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான்.உடல் உழைப்பு இல்லாததும், கொழுப்பு சத்து உணவுகளை அதிகம் சாப்பிடுவதும் தான், நீர்க்கட்டி உருவாக முக்கிய காரணம்.
முன்பு, பெண்கள் வீட்டு வாசலில் கோலம் போடுவர்; குந்தி அமர்ந்து பாத்திரம் துலக்குவர்; வீடு பெருக்குவர், துடைப்பர்; இந்தியன் ஸ்டைல் கழிப்பறைகளை தான் பயன்படுத்தினர். இவை எல்லாம் ஒரு வகை ஆசனங்கள்.எனவே, வயதுக்கு வந்த பெண்களை, அம்மாக்கள், வீட்டு வேலை செய்ய பழக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் உடல் ஆரோக்கியம் பெறுவர். மேலும், சாப்பிடும் உணவில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். உளுந்து வடை, உளுத்தங்களி, உளுந்து சாதம் போன்றவற்றை அன்றாடம் பயன்படுத்துங்கள். மாதவிடாய் பிரச்னைகளுக்கு, எள் சிறந்த தீர்வு தருகிறது. எள் பொடி, எள் துவையலை வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம்
உணவில் சேர்க்க வேண்டும்.இன்று பயன்படுத்தும் எண்ணெய் பெரும்பாலும், ரீபைண்ட் ஆயிலாக தான் உள்ளது. சத்துக்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, வெறும் சக்கையை தான் பயன்படுத்துகிறோம். செக்கில் ஆட்டப்பட்ட நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெயை சுழற்சி முறையில் சமையலில் பயன்படுத்தலாம். விதையுள்ள பப்பாளி, அன்னாசி பழம், மாதுளை போன்றவை, நீர்க்கட்டி நோய்க்கு சிறந்த மருந்து.வெண் பூசணியை உணவில் தொடர்ந்து சேர்த்து வர, இந்த நோய் காணாமல் போய் விடும். குறிப்பாக, வெண் பூசணியை மோர்க் குழம்பாக வைத்து
சாப்பிடலாம்.கன்னித்தன்மையை காக்கும், மிகச் சிறந்த கன்னி மூலிகை கற்றாழை. கற்றாழையில் உள்ள சோற்றை, நீர்க்கட்டி மற்றும் மாதவிடாய் பிரச்னை உள்ளோர் தினமும் சாப்பிட்டு வர, நீர்க்கட்டி காணாமல் போய் விடும்.அம்மாக்களே... முதல் வேலையாக உங்கள் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் முறையாக வருகிறதா என்று, இப்போதே கவனிக்க துவங்குங்கள்.