Sunday, February 24, 2019

சத்துமாவு கஞ்சி, கீரை, காய்கறி கூட்டே உணவு! thanks to dinamalar.com

ழ்நாடு

சத்துமாவு கஞ்சி, கீரை, காய்கறி கூட்டே உணவு!

 Added : பிப் 25, 2019  கருத்துகள் (2)
Advertisement
 சத்துமாவு கஞ்சி, கீரை, காய்கறி கூட்டே உணவு!
6Shares
கோவை:இன்றைய நவீன காலத்தில், முப்பதை தொட்டுவிட்டால் மூட்டு வலியும், நாற்பதை தொட்டால், பி.பி., சுகர் என, நோய்களின் பட்டியலுக்கு அளவில்லை. இச்சூழலில், மருத்துவமனை பக்கமே, தலை வைத்து படுக்காமல் யோகாவாலும், உணவு முறையாலும், நேற்று நுாறாவது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார், யோகா ஆசிரியரான நானம்மாள்.''என் தாத்தா மன்னார்சாமி தான், என் குரு. சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, குளித்துவிட்டு, சீரக தண்ணீர் குடித்தபின், ஆசனங்கள் செய்து விட்டு தான், அன்றாட பணிகளை துவங்குவோம். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, தற்போது வரை, இதுதான் வழக்கம்,'' என்கிறார் நானம்மாள்.இவரது ஆறு குழந்தைகளுக்கும், 12 பேரக்குழந்தைகள். அனைவருக்கும், சுகப்பிரசவம் தான். இவர் காலையில், நவதானியங்கள் கொண்ட சத்துமாவு கஞ்சியும், காய்கறி கூட்டு. மதியம் கீரையுடன் சாப்பாடு; இரவில் ஏதாவது ஒரு பழம், ஒரு டம்ளர் பால். இதுதான் இவரது அன்றாட உணவு.''இன்று, பிறந்த குழந்தைக்கே, சர்க்கரை நோய் இருப்பதாக கூறுகிறார்கள். ஒரு தலைமுறையை உருவாக்கும் பெண்கள், ஆரோக்கியமாக இருந்தால் தான், குடும்ப வாரிசுகள் நோயின்றி வளருவர். காய்கறிகளும், கீரைகளும், மூலிகை மருந்துகளும் நம்மை சுற்றி உள்ளன. பிரச்னையின் தன்மைக்கேற்ப, அதை சாப்பிட்டாலே போதும்,'' என்று கூறும் நானம்மாள், ''சமையலறையில் தான் ஆரோக்கியம் இருக்கிறது,'' என்று அழுத்தமாக கூறுகிறார்.''குழந்தைகளுக்கு, உளுந்து களி, எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் போன்ற தீனி வகைகளை கொடுங்கள். நோயில்லாத வாழ்வை விட பெரிய சொத்து எதுவுமில்லை. என் மக்களெல்லாம் வாழ்வாங்கு வாழ வேண்டுமென்பது மட்டுமே, இறைவனிடம் இந்த நாளில் நான் வேண்டும் பிரார்த்தனை,'' என்று ஆசீர்வதிக்கிறார் இந்த யோகா பாட்டி.மாதவிடாய், கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகளுக்கு, கற்றாழையுடன், கருப்பட்டியும் சேர்த்து சாப்பிடலாம். சளி, இருமலுக்கு, துளசியும், குறுமிளகு பொடியை, தேனில் கலந்து சாப்பிட்டால் போதும். மலச்சிக்கல் இருந்தால், கடுக்காய் பொடியும், முழங்கால் வலிக்கு முடக்கத்தான் கீரையும் சிறந்தது.

Thursday, February 21, 2019

தமிழ்மொழி போற்றுவோம்! இன்று உலக தாய்மொழிகள் தினம் thanks to dinamalar.com

 தமிழ்மொழி போற்றுவோம்!  இன்று உலக தாய்மொழிகள் தினம்
35Shares
புலம்பெயர்ந்து வேறுநாட்டில் இருக்கிறோம். யாரோ இருவர் நம் தமிழ்மொழியில் பேசிக்கொண்டு செல்கிறார்கள். நமக்குள் சொல்ல முடியாத பெருமகிழ்ச்சி! ஓடிச்சென்று அவர்களை உறவினர்களைப் போல் எதிர்கொள்கிறோம். அவர்களோடு அன்னைத் தமிழில் பேசி மகிழ்கிறோம். நம்மை இணைக்கும் அன்புச் சங்கிலி தமிழ்மொழிதான்!

அதனால்தான் தாய்மொழியில் யார் பேசினாலும் நம் தாயிடம் பேசியதைப் போலப் 
பெருமகிழ்ச்சி நமக்கு ஏற்படுகிறது!

தாய்க்கு நிகரானது


“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பாவேந்தர் பாரதிதாசன் சொன்னது போல் தமிழ் இன்றும் என்றும் நம் உயிராகவும் அடையாளமாகவும் திகழ்கிறது. மொழி நம் பண்பாட்டின் விழி. தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்ற பொருள் உண்டு. 
பேசினாலும் கேட்டாலும் இனிக்கிற நன்மொழி நம் மொழி. தமிழ் தமிழ் என்று சொன்னால் அமிழ்து அமிழ்து என்று ஒலிக்கிறது.“நல்ல தமிழ்நுாலைப் படித்தேன், இன்று முடித்தேன், 
ஒரு படித் தேனைக் குடித்தேன், நற்கருத்தைச் சுவைத்தேன், அதன் நுாற்சுவையை என் எழுத்தில் வடித்தேன்” என்று சொல்லிப் பாருங்கள். ஒரு வாக்கியத்தில் எத்தனைத் தேன்! 
அதனால்தான் மகாகவி பாரதியார், “செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” என்று பாடினார்.


தொன்மையான மொழி


லத்தீன் மொழிக்கும் கிரேக்க மொழிக்கும் முந்தைய மொழி நம் தமிழ்மொழி. அதன் கற்சான்றுகளை தமிழ்ப் பிராமி எழுத்துகளாக காலம் இன்னும் நம் கண்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது.திருப்பரங்குன்றத்திலும் திருவாதவூரிலும், அழகர் மலையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான தமிழ்ப் பிராமி எழுத்துகளை இன்றும் காண முடிகிறது. 
மூவாயிரம் ஆண்டு தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட உலகின் உயர்தனிச்செம்மொழி, எட்டுகோடி மக்களால் பேசப்படும் தன்னிகரற்ற மொழி, தமிழரின் பண்பாட்டைத் தன்னகத்தே கொண்ட மொழி. இலங்கையிலும் சிங்கப்பூரிலும் அரசு மொழியாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. உலகின் தொன்மையான இருபதுமொழிகளில் தமிழ் தனித்துவமான மொழியாகத் திகழ்கிறது. 
யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் உலக தாய்மொழிகள் தினத்தை பிப்ரவரி 21 அன்று உலகெங்கும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.திருக்குறள் படிப்பதற்காகவே தான் தமிழ் படித்ததாக மகாத்மா காந்தி குறிப்பிட்டார். தமிழில் கையெழுத்து இடுமளவுக்கு அவர் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். 
தூத்துக்குடியில் காந்தி பேசும்போது ஆங்கிலத்தைவிடத் தமிழர்கள் தமிழுக்கு அதிக மதிப்பளித்தல் வேண்டும் என்று பேசினார். அவர் தமது தன் வரலாற்று நுாலான சத்திய சோதனையை ஆங்கிலத்தில் எழுதாமல், தம் தாய்மொழியான குஜராத்தி மொழியில்தான் முதலில் எழுதினார்.
உலகமெங்கும்நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி எனும் இலக்கியத்தை தாகூர் அவரது தாய்மொழியான வங்கமொழியால்தான் முதலில் எழுதினார். அதன்பின் அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகின் பார்வைக்குக் கொண்டுசென்றார். 
பலமொழிகளைக் கற்றுத்தேர்ந்து தமிழும் ஆங்கிலத்திலும் படைப்பிலக்கியங்கள் படைத்த மகாகவி பாரதியார், “ யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று எழுதினார். 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையால் அதனால்தான் சொல்லமுடிந்தது.

லண்டன் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் குறுந்தொகையின் புகழ்மிக்க பாடலான “யாயும் ஞாயும் யாராகியரோ” பாடலின் அழகான உவமையான “செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே” எனும் உவமை இடம்பெற்றுள்ளது. இலங்கை, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மர், மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா, இத்தாலி, நோர்வே, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, பிஜி போன்ற நாடுகளில் தமிழ் இன்றும் தமிழ்மக்களால் பேசப்படுகிறது.

தமிழில் மின்னஞ்சல்
தகவலை அழகு தமிழில் இன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பமுடிகிறது. படங்களையும் கோப்புகளையும் இணைத்தனுப்ப முடிகிறது. அதைக்கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ள சிவா ஐயாதுரை தமிழர் என்பதில் நமக்கு எவ்வளவு பெருமை!

தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்க நாட்டின் பள்ளியில் உயர்நிலைப்பள்ளி மாணவராகப் பயின்றபோதே மின்னஞ்சல் அனுப்பும் முறையைக் கண்டுபிடித்த பெருமையைப் பெற்றவர்.1996ல் தொடங்கப்பட்ட உலகின் முன்னணி இணைய நிறுவனமான கூகுளின் தலைமைச் செயல் அலுவலரான சுந்தர் பிச்சை உலகப்புகழ் பெற்ற தமிழராகத் திகழ்கிறார்.மதுரையில் பிறந்த இவர் எடுத்த முயற்சிகளால் தமிழ், கூகுளில் சிறப்பிடம் பெற்றுள்ளது. தானியங்கி மொழிமாற்றச் சேவையைக் கூகுள் தமிழுக்கு அளித்துள்ளது.
தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாதவர்களுக்கு கூகுள் நிறுவனம் கூகுள் ஒலிபெயர்ப்பை வழங்கிவருகிறது. நாம் பேசினால் தானாகவே தட்டச்சு செய்துதரும் வசதியைக் கூகுள் தந்துள்ளது. 
இதனால் தமிழ்த் தட்டச்சு தெரியாவிட்டாலும் பேசி நம்மால் அதைத் தட்டச்சு செய்ய முடிகிறது.

அன்றாட வாழ்வில் தமிழ்


உலகத்தமிழர் எல்லோரும் தமிழைத் தங்கள் அடையாளமாய் கருதித் தங்கள் பிள்ளைகளை வாரஇறுதி நாட்களில் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்க, நாமோ பாஸ் பண்ணி, திங்க் பண்ணி, ஸ்டடி பண்ணி, வாக் பண்ணி என்று ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசிக்கொண்டிருக்கிறோம்.

நம்மால் என்ன செய்ய முடியும் என்று கேட்கிறீர்களா? நம் கையெழுத்தை இனி தமிழில் மட்டுமே இடவேண்டும் என முடிவுசெய்வோம். அலைபேசியில் பேசத்தொடங்குமுன் ஹலோ என்று தொடங்குவதற்குப் பதில், வணக்கம் என்று சொல்லி நம் உரையைத் தொடங்கலாம். நம் முகநுால் முகவரியைத் தமிழில் தரலாம். 
'தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்கும்' என்று சொன்ன அறிஞர் டார்வினின் பொன்மொழிக்கேற்ப தமிழ் மூவாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தகுதியோடும் தனித்தன்மையோடும் இளமையோடும் நம் இதயங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறது. 
தொன்மை, முன்மை, எளிமை, ஒளிமை, இளமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை எனும் பல்வேறு சிறப்புகளையும் உடையது தமிழ்மொழி என்று தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் மொழியில் பேசுவதும் அன்றாட வாழ்வில் தமிழுக்குச் சிறப்பிடம் தருவதும் தமிழின் சிறப்பை அடுத்த தலைமுறை குழந்தைகளுக்குத் சொல்லி அவர்களைத் தமிழ் படிக்கவைப்பதுமே இன்றைய தேவை.

- - முனைவர் 
சவுந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர்

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி.
99521 40275

அழிவின் விளிம்பில் ஆயிரம் மொழிகள் #VikatanInfographics thanks to vikatan.com

உலகில் இருக்கும் 7,097 மொழிகளில் 48 சதவிகிதம் மொழிகள் அழியும் சூழலில் உள்ளன என்றும், 40 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள், தங்கள் தாய்மொழி அல்லாத மொழிகளில்தாம் கல்வி கற்கின்றனர் என்றும் யுனெஸ்கோவின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அழிவின் விளிம்பில் ஆயிரம் மொழிகள் #VikatanInfographics
னித இனப் பரிணாம வளர்ச்சியின் மிக முக்கியக் காரணியே மொழிகள்தாம். மொழிகள் கருத்துகளைப் பரிமாறுவதற்கு மட்டுமல்லாது, அவர்களின் அடையாளமாகவும் ஆனது. மொழி ஓர் ஒட்டுமொத்த இனத்தின் அடையாளம். பெரும்பாலான மனிதர்கள் தம் தாய்மொழியைப் பேணிக்காத்து, தொடர்ந்து பின்பற்றியும் வருகின்றனர். உலகத்தில் உள்ள மொழிகளைக் காப்பதற்கும், மொழிகளின் சிறப்பைப் பறைசாற்றுவதற்கும் யுனெஸ்கோ கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் நாளை உலகத் தாய்மொழி தினமாகக் கொண்டாடிவருகிறது. 
தாய்மொழி தினம் அவசியமா..?
2008-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 89 வயதான மரியே ஸ்மித் ஜோனெஸ் இறந்தபோது, அவரின் இறப்புக்கு உலகின் பெரும்பாலானோர் வருத்தமடைந்தனர். அதற்கு முக்கியக் காரணம், அலாஸ்கா இனப் பழங்குடி மொழியான, `ஏயக்' மொழியைப் பேசத்தெரிந்த உலகின் கடைசி நபர் அவர்தான். அவருடன் சேர்ந்து ஒரு மொழியும் முற்றிலும் அழிந்துபோனது. அது தவிர, அந்த இனத்தின் பண்பாடு, கலாசாரம் என அனைத்துமே அழிந்துபோயின. 
இது, அந்த ஒரு மொழியின் நிலைமை மட்டுமல்ல... இன்றையச் சூழலில் உலகில் இருக்கும் 7,097 மொழிகளில் 48 சதவிகிதம் மொழிகள் அழியும் சூழலில்தாம் உள்ளன என்றும், 40 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள், தங்கள் தாய்மொழி அல்லாத மொழிகளில்தாம் கல்வி கற்கின்றனர் என்றும் யுனெஸ்கோவின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த மொழிகளைப் பாதுகாக்கத் தாய்மொழிகள் தினம் மிகவும் அவசியமே. 

உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் - ஆயிரம் மொழிகள்
முதன்மை மொழியாகச் சீன மொழிதான், உலகளவில் 130 கோடி மக்களால் 38 நாடுகளில் பேசப்பட்டு உலகில் அதிக மக்கள் பேசும் மொழி என்ற பெருமையைக் கொண்டுள்ளது. ஸ்பானிஷ் மொழியை 44.2 கோடி மக்கள் 31 நாடுகளில் பேசுகின்றனர். 37.8 கோடி மக்களால் ஆங்கிலம் பேசப்படுகிறது. அதிகம் பேசப்படும் முதல் இருபது மொழிகளில் ஆறு இந்திய மொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்தி மொழி 26 கோடி நபர்களால் 4 நாடுகளில் பேசப்படுகிறது. பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகள் இந்தப் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெறுகின்றன. 6.67 கோடி மக்களால் 7 நாடுகளில் முதன்மை மொழியாகத் தமிழ் பேசப்படுவதன்மூலம் இந்தப் பட்டியலில் தமிழ் 20-வது இடத்தைப் பெறுகின்றது. 
இந்தியாவில் உள்ள மொழிகள்:
இனம், மதம், மொழி எனப் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடு; பல்வேறு கலாசாரங்ககளையும், மொழிகளையும் கொண்டுள்ள நாடு நம் இந்தியா. PLSI அமைப்பின் ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் 780 மொழிகள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 220-க்கும் அதிகமான மொழிகள் அழிந்துள்ளன. அடுத்து வரும் அரைநூற்றாண்டுக்குள் இன்னும் பலநூறு மொழிகள் அழிவதற்கான அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கின்றனர். மேலும், யுனெஸ்கோவின் ஆய்வறிக்கையின்படி அழிய உள்ள மொழிகளில் 10 சதவிகித மொழிகள் இந்திய மொழிகள்தாம். 
இந்தியாவில் உள்ள மொழிகள்
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 10,000-க்கும் அதிகமான மக்கள் பேசும் 121 மொழிகள் உள்ளன. அந்த 121 மொழிகளில் 22 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளும், 99 அட்டவணைப்படுத்தப்படாத மொழிகளும் உள்ளன. 
இந்தியாவில் பேசப்படும் தாய்மொழிகளின் மொத்த எண்ணிக்கை 19,569. இதில், அடையாளம் காணப்பட்ட மொழிகள் 270. இந்த 270 மொழிகளில் 123 மொழிகள் அட்டவணையிடப்பட்ட மொழிகளின் பிரிவிலும், 147 மொழிகள் அட்டவணையிடப்படாத மொழிகளின் பிரிவிலும் வருகின்றன. அட்டவணையிடப்பட்ட மொழிகளின் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 96.71 சதவிகிதமும், மற்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 3.29 சதவிகிதமும் உள்ளனர். 
ஒரு மொழி அழியாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின், அந்த மொழியை 10,000-க்கும் அதிகமான மக்கள் பேசவும் எழுதவும் வேண்டும். அப்போதுதான் ஒரு மொழி அழியாமல் நிலைத்து நிற்கும். அப்படி 10,000-க்கும் குறைவாக மக்கள் பேசும் தாய்மொழிகள் இந்தியாவில் மிக அதிகம். அந்த மொழிகள் அனைத்துமே காலப்போக்கில் காணாமல் போக அதிகம் வாய்ப்புள்ளது. 
ஒரு மொழி அழிவதென்பது, அந்த ஒட்டுமொத்த இனத்தின் பாரம்பர்யம், பண்பாடு, கலாசாரம் என்ன அனைத்தின் அழிவாகும். ஒருவர் எத்தனை மொழிகளை வேண்டுமாயின் கற்றுக்கொள்ளலாம், ஆனால், அவர் தன் தாய்மொழியைக் காப்பது என்பது அவருடைய தலையாய கடமை. 

Monday, February 18, 2019

தமிழாய் வாழ்ந்த பெருந்தகை! -'கீழாம்பூர்' சங்கர சுப்பிரமணியன், ஆசிரியர், 'கலைமகள்' மாத இதழ் thanks to dinamalar.com

தமிழ்த் தாத்தா, உ.வே.சாமிநாத அய்யரின் வரலாற்றை, தமிழ் மொழியின் வரலாறு எனலாம். அவருக்கு சங்கீதம், சிவபக்தி மீதும், அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. எனினும், சங்கீதத்தின் மீது உள்ள ஈடுபாட்டை குறைத்து, தமிழ் மொழியின் மீது காட்டினார்.
உ.வே.சா.,வுக்கு, ஓவியம் வரைவதிலும் திறமை இருந்தது. சித்திரக் கவிதைகளுக்கு, தானே படம் வரைவார். பேசுவதிலும் கெட்டிக்காரர்.இன்று நாம், பழைய தமிழ் இலக்கியங்களை படிக்கிறோம் என்றால்,அதற்கு முக்கியக் காரணகர்த்தா, தமிழ்த் தாத்தா தான். பழைய இலக்கியங்களை, ஊர் ஊராகப் போய்த் தேடி பதிப்பித்த பெருமை இவருடையது.திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி ஆகிய மூன்று நுால்களையும் ஒன்று திரட்டி, பன்னிரு திருமுறைகள் என்ற புதிய நுாலாக, செங்கல்வராயப் பிள்ளை வெளியிட்டார். அந்த நுாலின் பிரதியை, தமிழ்த் தாத்தாவிடம் அவர் கொடுத்தார்.நுாலைப் படித்துப் பார்த்த தமிழ்த் தாத்தா, மனம் உருகி, செங்கல்வராயப் பிள்ளையின் கைகளை எடுத்து, கண்களில் ஒற்றிக் கொண்டார். வயதில் குறைந்தவரான செங்கல்வராயப் பிள்ளை பதறி, 'என்ன காரியம் செய்கிறீர்கள்... என்னை நீங்கள் வணங்கலாமா... நான் இளையவன் இல்லையா...' என்றார்.'முருகனுடைய பெருமைகளை ஆராய்ந்த கைகளாயிற்றே. அதனால் தான் அந்தக் கைகளை, என் கண்களில் ஒற்றிக் கொண்டேன்' என்றார், தமிழ்த்தாத்தா.கடந்த, 1935ம் ஆண்டு, டாக்டர் உ.வே.சாமிநாத அய்யருக்கு, 80 வயதானதால், சதாபிஷேக விழா, சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்குத் தலைமை வகித்தவர், சர்.முகமது உஸ்மான் என்ற முஸ்லிம் பிரமுகர்.
தன் இளமைக்காலம் தொட்டே, ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்து வாழ்ந்தவர் அய்யர். அவருடைய ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே சிந்தனை எல்லாம் தமிழ் தான்.அந்த விழாவில் தான், எழுத்தாளர், 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி, 'தமிழ்த் தாத்தா' என, உ.வே.சாமிநாத அய்யரை அழைத்தார். 'தமிழுக்கு ஔவையார் பாட்டியாக இருப்பது போல், தமிழுக்கு தாத்தாவாக, உ.வே.சா., இருக்கிறார்' என்றார், கல்கி.திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடு கடாம் என்பவையே பத்துப் பாட்டுகள்.கடந்த, 1889ல், பத்துப்பாட்டை, உ.வே.சா., பதிப்பித்தார். அப்போது ஏற்பட்ட சுவையான சம்பவத்தை பார்க்கலாம்.திருநெல்வேலிக்கு அருகில், இப்போதைய துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, ஆழ்வார் திருநகரி என்னும் ஊருக்குச் சென்றார், உ.வே.சா., அங்கே லட்சுமணக் கவிராயர் என்ற புலவரை சந்தித்து, பத்துப்பாட்டு எனும் நுாலைத் தேடி வந்திருப்பதாக கூறினார்.லட்சுமணக் கவிராயர் இல்லத்தில் எத்தனையோ ஓலைச் சுவடிகள் இருந்தன. அத்தனையும் தேடிப் பார்த்தார். பத்துப்பாட்டு மட்டும் அகப்படவேஇல்லை.அப்போது, லட்சுமணக் கவிராயர், 'என் வேலைக்காரன், சில ஓலைச் சுவடிகளை எடுத்து, என் மாமனாரிடம் கொடுத்து விட்டான். ஒரு வேளை நீங்கள் தேடி வந்த நுால் அவரிடம் இருக்கலாம்' என்றார்.'வாருங்கள் போய்த் தேடுவோம்' என, கவிராயரை, உ.வே.சா.,அழைத்த போது, 'என் மாமனார் வீட்டு வாசற்படியை மிதிப்பதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன்' என்றார்.'அப்படியானால் நான் மட்டும் போய்ப் பார்க்கிறேன்' என்றார், உவே.சா., 'வேண்டாம்... என், மாமனாருக்கு, தமிழறிஞர்களை மதிக்கத் தெரியாது; அவமானப்படுத்தி விடுவார்' என்றார், கவிராயர்.'அப்போ வேறு என்ன தான் வழி...' என்றார், உ.வே.சா., 'இன்னும் ஒரு நாள் பொறுங்கள்' என்று மட்டும் கூறினார், கவிராயர்.சோர்வோடு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார், உ.வே.சா., இரவு நேரம், நிலா வெளிச்சம். அப்போது, லட்சுமணக் கவிராயர், மேல் துண்டில் எதையோ சுற்றி எடுத்தபடி, ஓடோடி வந்தார்.அதன் உள்ளே இருந்த ஓலைச் சுவடிக் கட்டுகளை, உ.வே.சா.,விடம் நீட்டி, 'நீங்கள் தேடி வந்த நுால் இது தானா பாருங்கள்' என்றார் கவிராயர்.பிரித்துப் பார்த்த, உவே.சா., முகத்தில் மகிழ்ச்சி. நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை முதலில் இருந்தது. தொடர்ந்து பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு ஓலைச்சுவடிகள் இருந்தன. லட்சுமணக் கவிராயரை அப்படியே கட்டியணைத்து, 'இந்த ஓலைச் சுவடிகள் எப்படிக் கிடைத்தன?' என்றார். 'என் மாமனார் வீட்டிற்கு போய்த் தேடிக் கண்டுபிடித்து கொண்டு வந்தேன்' என, பதிலளித்தார் கவிராயர். 'நீங்கள் தான் அவர் வீட்டு வாசற்படியை மிதிப்பதில்லை என, சத்தியம் செய்திருப்பதாகக் கூறினீர்களே?' என்றார், உ.வே.சா.'ஆமாம். சத்தியம் செய்தது உண்மை தான். ஆனால், தமிழுக்காக நான் என் மானத்தை விற்று விட்டேன்' என்றார், கவிராயர். அதை கேட்டு, சிலை போல நின்றார், உ.வே.சா.மஹாத்மா காந்தி சென்னைக்கு வந்த போது, அவருக்கு தமிழில் வரவேற்பு மடல் எழுதிக் கொடுக்க வேண்டும் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டில் முக்கிய அங்கம் வகித்த, கல்கி, 'தமிழ் வரவேற்பு மடலை, உ.வே.சா., எழுதினால் தான் சரியாக இருக்கும்' என்றார்.

வாழ்த்து மடலுடன் மஹாத்மாவைப் பார்க்க வந்தார், உ.வே.சா.அவரை பார்த்ததும் மஹாத்மா, தன் இரு கைகளாலும் கும்பிட்டு, 'அடுத்த முறை எனக்கொரு பிறவி இருந்தால், தமிழனாகப் பிறந்து, இவரிடம் தமிழ் கற்க வேண்டும்' என்றார்.தஞ்சை வாணன் கோவை என்பது, 96 பிரபந்த வகைகளில் ஒன்று; தஞ்சையில் இருந்த வள்ளலைப் பற்றிய நுால் அது. தஞ்சை வாணன் கோவையைப் பற்றி, உ.வே.சா., ஆராய்ச்சி செய்திருந்தார். 'தஞ்சை வாணன் ஆட்சி நடத்திய தஞ்சை, சோழ மண்டலத்தில் உள்ள தஞ்சாவூர் இல்லை; பாண்டிய நாட்டிலுள்ள தஞ்சாக்கூர் தான் அது' என, அவர் முடிவு செய்திருந்தார்.மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில், திருப்பாச்சத்தி என்ற ரயில் நிலையம் இருக்கிறது. 1 கிலோ மீட்டர் தெற்கே போனால், தஞ்சாக்கூர் வரும்.இதே விஷயத்தை, சங்கர மடத்தில், காஞ்சிப் பெரியவர், சாமிநாத அய்யரிடம் விளக்கினார். அதை கேட்ட, உ.வே.சா., மஹா பெரியவரின் வரலாற்று திறனை வியந்தார்.பாண்டித்துரைத் தேவர், நான்காவது தமிழ்ச் சங்கத்தை நிறுவிய போது, உ.வே.சா.,வை தான், தலைமைப் புலவராக ஆக்கினார். பாண்டித்துரைத் தேவர் தான், ராமநாதபுரம் மஹாராஜாவிடம், உ.வே.சா.,வை அறிமுகப்படுத்தினார்.உ.வே.சா.,வுக்கு பெரிய வெகுமதி கொடுக்க, ராமநாதபுரம் ராஜா முடிவு செய்தார்.நான்கு கிராமங்களை, உ.வே.சா.,விற்கு பரிசாக, பட்டயம் எழுதித் தருவதாக ராஜா சொல்லி விட்டார். ராஜா சொன்னால் மறுக்கக் கூடாது எனக் கருதி, உ.வே.சா., எதுவும் பேசவில்லை. மறுநாள் நாள் காலையில், பாண்டித்துரைத் தேவரிடம், தன் நிலையை கூறி, 'அந்த கிராமங்களின் வரி வருவாயை நான் வசூலிக்கப் போவதில்லை. மன்னரிடமே அவை இருக்கட்டும்' என்றார்.உ.வே.சா.,வின் பெருந்தன்மையை, மன்னர் பாராட்டினார்.உ.வே.சா.,வையும், தமிழையும் பிரித்துப் பார்ப்பது கடினமான காரியம். தன் வாழ்க்கை முழுவதுமே, தமிழுக்காக அர்ப்பணித்தவர் அவர். அவர் பெருமையை, அவரின் நினைவு நாளான இன்று நினைவுகூர்வோம்!தொடர்புக்கு: 94442 73192

Tuesday, February 12, 2019

நம்மிடமே இருக்கு மருந்து - கீழாநெல்லி

நம்மிடமே இருக்கு மருந்து - கீழாநெல்லி
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10பிப்
2019 
00:00
* கீழாநெல்லியின் இலை, வேர், காய் அனைத்தும் மருந்தாகிறது. இதன் வேர், 10 கிராம் எடுத்து இடித்து, பால் அல்லது மோரில் கலந்து குடித்தால், கல்லீரலை பலப்படுத்தி, அது சம்பந்தமான நோய்களை போக்குகிறது 
* சிறுநீர் பாதை, எரிச்சலை குணமாக்குகிறது. மஞ்சள் காமாலையால் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை ஏற்படும். இது அதிகரிக்கும்போது, கல்லீரல் வீக்கம் ஏற்படும். இப்பிரச்னையை சரிசெய்யும் மருந்தாகிறது
* இதன் இலையை, எண்ணெயில் இட்டு காய்ச்சி, தலைக்கு தேய்ப்பதால், உடல் குளிர்ச்சியாக இருப்பதுடன், கண்களில் சிவப்பு தன்மை, எரிச்சலை போக்குகிறது; பார்வை தெளிவாகிறது
* கீழாநெல்லி சாறுடன், உப்பு சேர்த்து, தோலில் பூசினால், அரிப்பு நோய்களும், இதன் இலையுடன், சிறிது மஞ்சளை சேர்த்து அரைத்து, உடலில் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊற விட்டு குளித்தால், தோல் நோய்களும் குணமாகும்
* இதன் சாற்றை மஞ்சளுடன், கலந்து போடும்போது, 'சொரியாசிஸ்' சரியாகும். கீழாநெல்லி செடியை நன்றாக அரைத்து, சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப் போட்டால், உடனே குணமாகும்
* கீழாநெல்லியை அரைத்து, பசும்பாலுடன் கலந்து, காலை - மாலை இரு வேளை, தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால், உடல் சூடு தணிந்து, குளிர்ச்சி பெறும். விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும், இதை பயன்படுத்தலாம்
* கீழாநெல்லிச் செடி, கரிசலாங் கண்ணி இலை, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சம பங்கு எடுத்து, காய்ச்சிய பசும் பால் விட்டு அரைத்து, கோலிக்குண்டு அளவு, காலை - மாலை இருவேளையும் பாலுடன் குடித்து வந்தால், ஏழு நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும் 
* கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று, பல் துலக்கி வந்தால், பல் வலி குணமாகும்.
தொகுப்பு: பொ.பாலாஜி 

ஆரோக்கிய குறைபாட்டின் அறிகுறி! dinamalar


ஆரோக்கிய குறைபாட்டின் அறிகுறி!

 பதிவு செய்த நாள் : பிப் 13, 2019 
Advertisement
ஆரோக்கிய குறைபாட்டின் அறிகுறி!
துாங்கும் போது வியர்ப்பது தொடர்பாக கூறும், பொது மருத்துவர் அர்ஷத் அகில்: உடல் உழைப்பில் ஈடுபட்ட பின், வியர்ப்பது இயல்பு. உடல் வெப்பம் அதிகமாகும் போது, நரம்பு மண்டலத்தின் துாண்டுதலால், வியர்வை சுரப்பிகள், தங்கள் பணியை செய்ய துவங்கும்; அதைத்தான், 'வியர்க்கிறது' என்கிறோம். ஆனால், உடல் உழைப்பில்லாமல் ஓய்வில் இருக்கும்போது வியர்வை அதிகரிக்கிறது என்றால், அது இயல்பானதல்ல. குறிப்பாக, சிலருக்கு இரவில் உறங்கும்போது, அதிகமாக வியர்வை வெளியேறும். இப்படி, தவறான நேரத்தில் உடல் வெப்பம் அதிகரிப்பது, ஆரோக்கிய குறைபாடின் அறிகுறி. உடலில், 'ஹார்மோன்' மாற்றம் நிகழ்பவர்களுக்கு, அதன் காரணமாக வியர்வை வெளியேற்றம் அதிகரிக்கும். பூப்பெய்திய துவக்க காலம், கர்ப்பிணிகள் மற்றும் 'மெனோபாஸ்' நிலையிலிருக்கும் பெண்களுக்கு, ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம்.பொதுவாக, காய்ச்சலோடு தொடர்புடைய நோய்த்தொற்று பாதிப்புகள், அதிக வியர்வைக்கு காரணமாக இருக்கும். தொற்று பாதிப்புகள் ஏற்படும்போது, உடல் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும். இயல்பை விட, இரவில் தான் அது அதிகமாக இருக்கும். காசநோய், எலும்பு அழற்சி போன்றவை இருந்தால், துாக்கத்தின்போது அதிகம் வியர்க்கும்.ஒருவர் உறங்கும்போது, உடலில் ரத்தச் சர்க்கரை அளவு குறையத் துவங்கினால், வியர்வை அதிகம் வெளியேறும். ஒவ்வாமை உள்ள மருந்துகளை உட்கொண்டால், பக்கவிளைவாக, வியர்வை வெளியேறுவது அதிகமாகும். உடலில் அமிலத் தன்மை அதிகரிக்கும்போது, செரிமானக் கோளாறு ஏற்பட்டு, நெஞ்செரிச்சல் உண்டாகும். அதோடு துாங்க சென்றால், எரிச்சல் அதிகரித்து வியர்க்க ஆரம்பிக்கும்.
ஏற்கெனவே நரம்பு சார்ந்த பிரச்னை இருப்பவர்கள், அடிக்கடி பதற்றமடைவர். பக்கவாதம் இருப்பவர்களுக்கு, அது தீவிரமடைந்தால், உறக்கத்தில் வியர்ப்பது அதிகரிக்கும். இந்த பாதிப்பு உள்ளவர்கள், உடல்நலச் சிகிச்சையோடு சேர்ந்து, உளவியல் சிகிச்சையும் எடுக்க வேண்டும். முறையான மருத்துவ ஆலோசனையைக் கட்டாயம் பெற வேண்டும்.