Sunday, October 7, 2018

புரட்டாசி 22ம் நாள்.. முன்னோர் ஆசி பெற மகாளய அமாவாசை thanks to dinamalar.com

பொது செய்தி 

தமிழ்நாடு

புரட்டாசி 22ம் நாள்.. முன்னோர் ஆசி பெற மகாளய அமாவாசை

 Added : அக் 08, 2018 
புரட்டாசி 22ம் நாள்.. முன்னோர் ஆசி பெற மகாளய அமாவாசை
நமது முன்னோரும், பெற்றோரும் ஏற்கனவே மேல் உலகம் சென்றவர்களாய் இருந்தாலும், அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும், நம்மை எங்கிருந்தோ ஆசிர்வதித்துக் கொண்டிருக்கின்றன என்பது, நம் நம்பிக்கை.

தாய் மற்றும் தாய் வழி உறவினர்களாகிய சந்திரனும், தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே, அமாவாசை எனப்படுகிறது. மறைந்த நம் முன்னோர், அவர்களது சந்ததியினர் வாழ்வில் முன்னேற, தடைகள் அகல, பலவித தோஷங்கள் நிவர்த்தி பெற, அனைத்து அமாவாசையன்றும், இந்த உலகத்திற்கு எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவர் என்பது ஐதீகம்.

முக்கியமாய் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையான இன்று, இதன் சக்தியும் நம் பிரார்த்தனையின் பலனும் மிக அதிகமாய் இருக்கும்.மகாளய பட்சம் என்பது, 15 நாட்கள் கொண்ட ஒரு வழிபாடு. இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். இந்த புரட்டாசியில் வரும் அமாவாசையே, மஹாளய அமாவாசை என, சிறப்புடன் செய்யப்படுகிறது.

மகாளயம் என்பது, மகான்களின் இருப்பிடத்தை குறிக்கும். இறந்த பின் நம் முன்னோர், நம் வீட்டு பெரியவர்கள், தர்மராஜனின் அனுமதியோடு, இந்த, 15 நாட்களும், பித்ருலோகத்திலிருந்து இறங்கி வந்து, இந்த பூலோகத்தில் நம்முடன் உண்டு உறங்கி மகிழ்ந்து, நமக்கு ஆசி வழங்கிச் செல்வர் என்பது, நம் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இந்த புரட்டாசி மஹாளய அமாவாசை, தை மற்றும் ஆடி அமாவாசையை விட சிறப்பு பெற்றது. பிற மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில், முன்னோரை வணங்க மறந்தவர்களும், சந்தர்ப்பம் சரியாக அமையாதவர்களும், இந்தப் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை நாளில், முன்னோர் வழிபாடு செய்ய, பிதுர்தோஷம் முற்றிலுமாக நீங்கி, புண்ணியம் அடைவர் என்பது ஐதீகம்,இந்த, 15 நாட்களிலும், நாம் செய்யக் கூடிய பூஜை, வழிபாடு, உணவு என, அனைத்துமே நம் முன்னோரை எண்ணியே இருக்க வேண்டும். பித்ருக்களுக்கு மகாளயத்தை தவறாமல் மறக்காமல் சாஸ்திரப்படி செய்து முடிக்க வேண்டியது அவசியம்.

திருமணம் செய்து கொள்ளாமல் இறந்துவிட்டவர்களுக்கு, அக்., 6 சனிக்கிழமையன்றும், விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு, அக்., 7 ஞாயிறன்றும், கணவருக்காக மனைவி செய்யும் மகாளயத்தை, அக்., 8 திங்களன்றும் செய்வது சிறப்பு.மறைந்த தாய் தந்தையருக்கு, ஆண்டு தோறும் மகாளயத்தை தவறாமல் செய்ய வேண்டும். ஏதாவது தடங்கல் ஏற்பட்டால், அது நீங்கிய பின், மற்றொரு நாளில் செய்ய வேண்டும்.

ஆறு பிராமணர்களை வரவழைத்து, முறைப்படி பூஜை புனஸ்காரங்களை செய்து, ஹோமம் ஏற்பாடு செய்து, அனைவருக்கும் உணவளிப்பது பார்வணம் என அழைக்கப்படும், மகாளயம்.நிறைய பேரை வரவழைத்து, ஹோமம் செய்து, உணவளிக்க மனம், பணம், நேரம் இல்லையென்போர், ஹிரண்யம் என சொல்லப்படும் முறையில், அரிசி, வாழைக்காய் ஆகியவற்றை படைத்து, அதை தானமாக கொடுக்கலாம்.மாதந்தோறும் வழிபடும் பித்ருக்களின் நினைவான அமாவாசையை போல, தர்ப்பணம் செய்து வழிபடலாம்.

நம் முன்னோரை மனதுருக வேண்டி, இந்த மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றில், வழிபாடு செய்ய வேண்டும் என்கிறது, நம் சாஸ்திரம்.நம் சொந்தங்கள் தாண்டி, நம்மீது,அக்கறை கொண்டு உதவியோர், நண்பர்கள், ஆசிரியர்கள் என, நமக்கு அறிந்தவர் எல்லாரையும் திரும்ப நினைவிற்கு கொண்டு வந்து, கறுப்பு எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து, தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் ஆன்மா மகிழ்ந்து, நமக்கு ஆசி வழங்கும் என்பது நம்பிக்கை.

எளிமையான வழிபாடு-, அனைத்து சாபங்களும் தீர, திருச்செந்துார், ராமேஸ்வரம், திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரண்யம், காசி, கயா, சென்னை மத்திய கைலாஷ் போல, இன்னும் பல புகழ் பெற்ற புனித திருத்தலங்களுக்கு செல்லலாம்.நம் வீட்டுக்கு அருகில் உள்ள, நீர் நிலையான ஏதேனும் ஒரு ஆறு, கடல், ஏரியில், காலை, 11:30 மணிக்கு மேல் குளிக்க வேண்டும். இந்த வருட திதி நேரப்படி, காலை, 11:30 மணிக்கு பிறகே, வழிபாடு செய்ய வேண்டும்.

தலை வாழை இலையில், கறுப்பு எள், பொரி, கற்கண்டு போன்றவற்றை வைத்து கொள்ள வேண்டும். முன்னோர் சாபம் நீங்க, தமது முன்னோரின் பெயரை, 21 முறை வெள்ளை தாளில் எழுதி, மஞ்சள் தடவி சுருட்டி, நுாலால் கட்டி எடுத்து கொள்ள வேண்டும். இலையில் அனைத்தையும் வைத்து, கையில் பிடித்து, ஆற்றில், கிழக்கு திசையில் சூரியனை நோக்கி நிற்க வேண்டும். தலைக்கு மேல் துாக்கி, ஆகாயத்தை காட்டி பிரார்த்தனை செய்து, பின் நீரில் மூழ்கி, தண்ணீரை மூன்று முறை தலைக்கு பின்னால் தெளித்து, முழுவதுமாய் மூன்று முறை மூழ்கி வெளியில் வர வேண்டும். இந்த எளிய பரிகாரம், எப்பேர்பட்ட முன்னோரின் சாபத்தையும் நீக்கிவிடும்.

தம் கர்மவினை தீர வேண்டுமே என அஞ்சுவோர், அங்கு, 11 பேருக்கு, வயிறார முழுச்சாப்பாடு வாங்கிக் கொடுங்கள். அதே தினத்தில், அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என, தானமளிக்கலாம்.எதுவும் செய்ய இயலாத சூழல் இருந்தால், காகம், ஈ, எறும்பு, நாய், பசு போன்ற ஜீவராசிகளுக்கு முடிந்த உணவை வழங்கலாம். இந்த புனித தினத்தில் தான், இவர்கள் காருண்ய பித்ருக்கள் என்றும் அழைக்கப்படுவர்.

அமாவாசையன்று, நம் வீட்டு வாசலில், நம் வீட்டில் இறந்தவர்கள் காத்துக் கொண்டிருப்பராம். அவர்களுக்கு, கருப்பு எள் கலந்த நீரை தெளிப்பதன் மூலம், குடிக்க வைக்கிறோம். உடனே அவர்கள் மனம் மகிழ்ந்து, நல் ஆசிகள் வழங்கிச் செல்வார்களாம்.யார் இந்த பக்ஷத்தில், உணவு அளிக்கிறார்களோ, அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள். இந்த நாளில், இதை செய்யாவிட்டால், வாசலில் நீண்ட நேரம் காத்திருந்து, தாகத்திற்கு எள் கலந்த நீர் கிடைக்காமல், நம் மூதாதையரின் ஆவி, வருத்தத்தோடு கிளம்பி போகுமாம். அந்த தோஷம், பிறகு நம் சந்ததியரின் வாழ்க்கையை பாதிக்கும் எனவும் நம்பப் படுகிறது.

பிரதமையில் துவங்கி, துவிதியை, திரிதியை சதுார்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி தசமி ஏகாதசி துவாதசி, த்ரையோதசி சதுர்தசி என, செப்., 25 முதல், வரிசையாய் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் செய்து, அதன் மூலம் புண்ணியம் ஈட்ட வேண்டும்.இத்தனை திதிகளையும் விட்டுவிட்டாலும், பதினான்காம் நாளான இன்று, திங்கள் கிழமை, மஹாளய அமாவாசையில், முறைப்படி விரதம் இருந்து, நம் முன்னோருக்கு ஸ்ரார்தங்கள் செய்து, தர்ப்பணம் செய்ய, அத்தனை நாளின் புண்ணியங்களும் ஒன்று சேர்ந்து, நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

நம் மூதாதையருக்கே உரித்தான இந்தத் தர்ப்பண பூஜை, பித்ருக்களுக்கு மட்டுமின்றி, வம்சாவளியிலுள்ள நமக்கும் பெரிதும் புண்ணியம் கிடைக்கச் செய்கிறது. பொதுவாக, வலது ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையிலுள்ள, பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக, தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன. இந்த தர்ப்பண நீரின் சக்தி, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பி, பித்ரு லோகத்தை அடைகிறது.பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யும் போது, பசு தயிர் கொண்டு தர்ப்பணம் செய்வது கூடுதல் நல்லது. 

தர்ப்பண மந்திரம்:
விளம்பி நாம ஸம்வத்ஸரே - தக்ஷிணாயணே - வர்ஷ ருதெள - கன்யா மாஸே - க்ருஷ்ண பக்ஷே - அமாவாஸ்யாம் - புண்யதிதெள - இந்து வாஸர யுக்தாயாம் - உத்தரபல்குனி நக்ஷத்ர யுக்தாயாம் - விஷ்ணு யோக - விஷ்ணு கரண - ஏவங்குண - விஸேஷேண விஸிஷ்டாயாம் - அஸ்யாம் - வர்த்தமானாயாம் - அமாவாஸ்யாம் - புண்யதிதெள - அமாவாஸ்ய புண்யகாலே - தர்ஸ ஸ்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

No comments:

Post a Comment