Saturday, May 28, 2016

Advertisement




கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை!மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம்!
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்!என்று நம்முடன் நுால்கள் பின்னிப் பிணைந்திருக்கின்றன.ஒருவரின் நல்லறிவானது அவர் பயின்றிடும் நல்ல நுால்களைப் பொறுத்து அமையும் என்பதனை,
"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்றநுாலவே ஆகுமாம் நுண்ணறிவு"என்கிறார் ஒளவையார்.
மனிதனின் அறிவுத்தேடலை நிறைவடையச் செய்பவை நுால்களே. மனிதனை அறிவில் சிறந்தவனாகவும், ஆளுமை நிறைந்தவனாகவும் மாற்றுவதில் நுால்களின் பங்கு அளப்பரியது. ஒவ்வொரு நுாலும் மனிதனை விசாலமாக்குகிறது. வாசிப்பு அவனுக்குள் ஒரு பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
நுால் வகைகள்
நுாலாசிரியர்களில் முதல் வாழ்வியல் நுாலை எழுதியவர் திருவள்ளுவரே. கம்பர், இளங்கோ, காளிதாசர் போன்றவர்களின் நுால்கள் நமது இலக்கிய அறிவை வளர்க்கும். திரு.வி.க, மறைமலையடிகள், அ.ச.ஞானசம்பந்தன் போன்றோரின் நுால்கள் நமது மொழி அறிவை வளர்க்கும். மு.வ. எழுதிய நுால்கள் நாம் வாழ்க்கையை நெறியோடு வாழ வழிகாட்டும்.
எம்.எஸ்.உதயமூர்த்தி, மெர்வின், காப்மேயர், டேல்கார்னகி ஆகியோரது சுயமுன்னேற்ற நுால்கள் நமது சிந்தனையை விரிவு செய்யும். தொழிற் நுால்கள், நமது வேலை, தொழில் வியாபாரத்தில் விருத்தி காண உதவும். உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கைச் சரிதங்கள் போன்ற நுால்கள் உழைப்பு, விடாமுயற்சியின் அவசியத்தை உணர்த்தி நிற்கும். மேலும் வெற்றிக்கான வழிமுறைகளை
விவரிக்கும், பிரச்சனைகளுக்குத் தேவையான தீர்வுகளை தம்முள் வைத்திருக்கும். ஆபிரகாம் லிங்கன் தொடங்கி பில்கேட்ஸ் வரை, மகாத்மாகாந்தி, நேரு தொடங்கி அப்துல்கலாம் வரை நாம் படித்து அறிய வேண்டிய நுால்கள் பல உள்ளன. தத்துவ நுால்கள் சிந்தனையை மேம்படுத்தும். சமய நுால்கள் ஆன்ம அறிவோடு மன அமைதியையும் தரும்.
நுால் சொல்லாட்சி நுவலப்பட்டதே (உரைத்தலே) 'நுால்' ஆகும். 'நுால்' எனும் வார்த்தை பழந்தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வந்துள்ளது.
'மாலை மார்ப நுாலறி புலவ'
- திருமுருகாற்றுப்படை - 261'நுாலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல்'- பெரும்பாணாற்றுப்படை - 487'நுால் வழிப் பிழையா நுணங்கு நுண்தேர்ச்சி'- மதுரைக்காஞ்சி'அலகு சால் கற்பின் அறிவுநுால் கல்லாது
உலக நுால் ஓதுவது எல்லாம்'- நாலடியார் - 140
'அதிகாரம் பிடகம் ஆபிடம் தந்திரம்பனுவல் ஆகமம் சூத்திரம் நுாலே'- பிங்கல நிகண்டு-2057மேற்சொன்னவற்றால் நுால்கள் பல தமிழகத்தில் சிறந்து விளங்கின என அறியலாம். அறிஞர்கள் வாழ்வில் நுால்கள் புகழின் உச்சத்தை எட்டிய அறிஞர்களின் வாழ்க்கைச் சரிதத்தை படிக்கும் போது, அவர்கள் தம் வாழ்நாளில் நுால் சேகரித்தலுக்கும், நுால் வாசித்தலுக்கும் ஒதுக்கிய காலத்தின் பயனையே புகழெனும் அறுவடையாகப் பெற்றுள்ளனர் என்பது தெரிய வரும்.
காரல் மார்க்ஸ் தனது 'மூலதனம்' எனும் நுால் உருவாக்கத்திற்காக பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை நுாலகத்திலேயே கழித்தார் என்பர். அண்ணாதுரை சென்னை கன்னிமரா நுாலகத்தில் நாள் முழுவதையும் செலவிடுவாராம். நுாலகத்தில் எந்த வரிசையில், எந்தப் புத்தகம் இருக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும்.
மாவீரன் அலெக்சாண்டர், போர்க்களத்திற்கு கூட ஹோமருடைய காவியங்களை எடுத்துச் சென்று படித்தாராம். அலெக்சாண்டருக்கு தங்கப் பேழை ஒன்றை பாரசீக மன்னர் பரிசாகக் கொடுத்தார். உடனே நண்பர்களைப் பார்த்து,
"இந்தப் பேழையில் எந்தப்பொருளை வைக்கலாம்"? என்று கேட்டார். அவர்கள் ஏதேதோ கூறினர். ஆனால் அலெக்சாண்டரோ, 'இதனுள் வைக்கத் தகுதியான பொருள் ஹோமர் இலியட் காவியம் தான்' என்றார்.
மில்டன் ஐந்து ஆண்டு காலம் கிரேக்க காவியங்களைப் படித்துக் குறிப்பெடுத்தார். பின்பு 'சொர்க்க இழப்பு' என்னும் அழியாத காவியத்தைப் படைத்தார்.
அக்பர் தன்னுடைய நுால் நிலையத்தில் 20,000 கையெழுத்துப் பிரதிநிதிகள் கொண்ட பல்வேறு நுால்களைப் பத்திரப்படுத்தி
வைத்திருந்தார்.தலைவர்களின் வாழ்வில் ஐசக் நியூட்டன் இளமையில் மாடுமேய்க்கச் செல்லும்போது, அவற்றை புல் மேயவிட்டு புத்தகங்களைப் படிப்பார். அலெக்சாண்டர் ஒவ்வொரு நாடாக வெற்றி கண்டு அந்த செய்தியை தன்னுடைய குருவான அரிஸ்டாட்டிலுக்கு தெரிவித்தப்போது, "நாடு உனக்கு முக்கியமாக இருக்கலாம். அந்த நாட்டிலுள்ள அறிஞர்கள் எழுதிய ஏடுகள் எனக்கு முக்கியம். அவற்றை எனக்கு அனுப்பி வை" என்றார்.
அவ்விதமே அலெக்சாண்டரும் அனுப்பினாராம். ஜான்ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் 'கடைத்தேற்றம்' என்ற நுால்தான் காந்தியடிகளின் வாழ்வைப் புரட்டிப் போட்டது.
பகத்சிங்கை துாக்கில் போடும் நேரம் நெருங்கிய போது, 'லெனின் புரட்சி' என்ற நுாலின் கடைசி அத்தியாயத்தைப் படித்து கொண்டிருந்தார். காவல் அதிகாரிகளிடம் ஐந்து நிமிடம் அனுமதி வாங்கி, அந்த அத்தியாயத்தைப் படித்து முடித்துவிட்டு அந்தப் பக்கத்தை மடித்து வைத்துவிட்டு துாக்கு மேடைக்குச் சென்றார்.
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு, நுால்கள் கற்பதன் அருமையை நன்கு உணர்ந்தவர். அவர் கோவை - சென்னை ரயிலில் போக வர முதல் வகுப்பு பயணச் சீட்டு வாங்கிக் கொண்டு பயண நேரம் முழுவதும் படித்தப்படி இருப்பார். படிப்பதற்கென்றே பயணம் மேற்கொள்வாராம். வேலைகளை ஒதுக்கிவிட்டு, பிரச்னைகளை மறந்து அடுத்தவர் குறுக்கீடின்றி படிப்பதற்காகவே அந்த
உத்தியைக் கையாண்டார். முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் தனது படுக்கை முழுவதும் புத்தகங்களைப் பரப்பி வைத்திருப்பாராம். அதை அடிக்கடி எடுத்துப் படிப்பாராம். இவ்வாறு, அறிஞர் பெருமக்களின் வாழ்வில் நுால்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
"மனிதரெல்லாம் அன்பு நெறி காண்பதற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கி
சக மக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்
இனிதினியாய் எழுந்த உயர்
எண்ணமெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச்சாலை
புனிதமுற்று மக்கள் புது வாழ்வு வேண்டில்
புத்தக சாலை வேண்டும் நாட்டில் யாண்டும்!
என்ற சீரிய கருத்தினை கவிஞர்
பாரதிதாசன் கூறுவதிலிருந்து நுால்களின் அருமை புலனாகிறது. நுால் எனும்
ஏணி நமக்காக காத்திருக்க, நாமும்
ஏறத் தயாராகலாமே!

தோல்விகள் சொல்லும் பாடம்


தோல்விகள் சொல்லும் பாடம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
“ பத்தாவது முறையாகக் கீழேவிழுந்தவனைப் பார்த்துபூமி முத்தமிட்டு சொன்னதுநீ ஒன்பது முறை எழுந்தவன் என்று”உண்மைதான்! விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர, அழுவதற்கு அல்ல என்பதே தோல்விகள் நமக்குச் சொல்லும் பாடம்.
மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்றஇடுக்கண் இடர்ப்பாடு உடைத்து(திருக்குறள்)தடைப்படும் இடங்களில் தளராது வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப் போல விடாமுயற்சி உடையவனுக்கு வரும் துன்பமே துன்பப்பட்டு விலகிப் போகும். எருதினைப் போன்ற முயற்சி உடையவர்கள், 
தோல்விக்கே தோல்வி தந்து விடுவார்கள். நமது முயற்சிகளுக்கு தோல்விகள் என்றும் தடைபோடக் கூடாது. முன்னணிக்கு வந்தவர்களின் பின்னணிகள் எல்லாம், தோல்வியால் தான் சூழப்பட்டிருக்கும். தோல்விகள் இல்லாத வெற்றி யாருக்கும் சாத்தியப்படாது. வாழ்க்கை என்பது திரைப்படம் அல்ல, ஒரே பாடலில் முன்னேறி விடுவதற்கு!
தோல்வி தாங்கும் மனம்: தோல்வியே ஒருவர் அடைந்ததில்லை என்றால் அவர் புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர் என்று தான் அர்த்தம். நாம் நடக்கும் பாதை மலர் மீது அமைய வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் அதில் உள்ள ஒரு முள்ளைக் கூட மிதிக்கக் கூடாது என்று நினைப்பதில் அர்த்தமில்லை. வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியைத் தாங்கும் மனம் இருப்பதில்லை. தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றி தான் என்பதை உணரவேண்டும்.
மனவியல் அறிஞர் யங், தோல்விகள் என்பவை அடையாளங்கள், முன்னோடிகள், வரும் நிகழ்ச்சிகளின் போக்கை தெரிவிக்கும் சூட்சுமங்கள் என்றும், மேலே செல்லுங்கள் அல்லது போகாதீர்கள் என்று எச்சரிக்கும் வழிகாட்டிகள் என்றும் குறிப்பிடுகிறார். தோல்வி என்பது நாம் செல்லும் பாதை சரியில்லை என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறது. அதை நாம் புத்திசாலித்தனமாக புரிந்து கொண்டு வேறு பாதையை ஆராய வேண்டும். வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம். ஏனெனில் வெற்றி சிரித்து மகிழ வைக்கும். ஆனால் தோல்வியோ சிந்தித்து வாழ வைக்கும். பெரும்பாலானோர் வாழ்வில் திருப்பு முனை என்பது தோல்வியின் வடிவில் தான் வந்திருக்கிறது. அவற்றை நமது மன உறுதிக்கு வைக்கப்பட்ட சோதனையாகவே நினைத்தால், தோல்விகளால் நமக்கு பயன் உண்டு என்பதை உணரலாம்.
பாடம் கற்கலாம்: நேற்றைய தோல்விகளிலிருந்து இன்றைய முன்னேற்றத்திற்கான பாடங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். தோல்வி என்னும் நேற்று மடிந்த வைக்கோல், இன்று நல்ல எருவாகி இருக்கிறது என்பதை உணர்ந்தால், தோல்வி என்பதை வரவேற்கலாம் அல்லவா! சமையல் நிபுணர்கள் இனிப்புகள் தயாரிக்கும் போது 
சிறிதளவு உப்பினைச் சேர்ப்பார்கள். அப்போது தான், இனிப்பின் ருசி அதிகப்படுமாம். உப்பு எனும் தோல்வி சேரும் போது தான், நமக்கு வெற்றியின் ருசி அதிகரிக்கும் என்பதை அறியும் போது தோல்வி என்பதை வரவேற்பதில் தவறில்லையே! ஒவ்வொரு துன்பமும், ஒவ்வொரு தோல்வியும், தம்மோடு அதற்கு சமமான அல்லது அதைவிடப் பெரிய பயனுக்கான விதையைச் சுமந்தே வருகின்றன என்று நெப்போலியன் ஹில் கூறுவதில் உண்மை இருப்பதை நாம் உணர வேண்டும்.
பொருள் சார்ந்த தோல்விகள், நம்முடைய முன்னுரிமைகளை மதிப்பீடு செய்யவும், எது நமக்கு முக்கியம் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளவும், நமக்கென்று புதிய குறிக்கோள்களை நிர்ணயித்துக் கொள்ளவும் வழிசெய்யும்.உறவுகளுக்குள் ஏற்பட்ட தோல்விகள், நம்முடைய பண்புகளைப் பரிசோதிக்க நம்மை நிர்பந்திக்கும். அடுத்தவர்களைக் கையாள்வதில் உள்ள சமயோசிதங்களை நமக்கு போதிக்கும்.
அச்சம், கவலைகள் போன்றவற்றால் நம் மனதுக்குள்ளேயே ஏற்படும் தோல்விகளுக்கு நாம் சுயபரிசோதனை செய்ய ஆரம்பிப்போம். ஆறுதல் பெற வழிதேடுவோம். அந்தத் தேடலில் உள்ளார்ந்த அமைதியைக் காண்போம். மன அமைதி பெறுவோம். இவ்வாறாக பல்வேறு தோல்விகளிலிருந்து பல வகையான பாடங்களைக் கற்றுத் தெளியலாம்.
விழுந்து எழுந்தவர்கள்:ராபர்ட் புரூஸ் என்ற மன்னன் போரில் பல முறை தோல்வியுற்று குகையில் ஒளிந்து கொண்டிருந்தபோது வலை பின்னிய சிலந்தியைப் பார்த்து சிந்தித்தான். வலை அறுந்து அறுந்து விழுந்தாலும், விடாமுயற்சியுடன் அது வலை பின்னியதைப் பார்த்து அவனுக்கு தன்னம்பிக்கை பிறந்தது. அதுவே பின்னாளில் அவனை வெற்றியாளனாக்கியது. அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் பாலிடெக்னிக் நுழைவுத் தேர்வில் தோற்றவர். கணிதமேதை ராமானுஜம், மூன்று முறை இன்டர்மீடியட் தேர்வில் தோற்று, பிறகு கணிதத் துறையில் சாதனைகள் புரிந்தவர். மாபெரும் கவிஞர் ஷெல்லி, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டவர். 
ஆபிரகாம் லிங்கன் சட்டப் பேரவை நடுவர் தேர்தலில் தோல்வி, நகராட்சி தேர்தலில் தோல்வி, மாமன்றத் தேர்தலில் தோல்வி, கமிஷனர் தேர்தலில் தோல்வி, செனட்டில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று பல தோல்விகளுக்குப் பிறகே வெள்ளை மாளிகை அதிபராக உயர்ந்தார்.பொருளாதாரச் சறுக்கல்களை அடைந்த பிறகு தான் கார்ட்டூனிஸ்ட் வால்ட்டிஸ்னி உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தைத் தொடங்கினார். மிக்கி மவுஸ் என்ற பாத்திரத்தை உருவாக்கினார். மருத்துவ ஆராய்ச்சி தோல்வியடைந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகே அலெக்ஸாண்டர் பிளமிங்கால் பெனிசிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பலமுறை தோல்வி கண்ட பிறகு தான் ஹென்றி போர்டு, சிறப்பான மோட்டார் காரைக் கண்டுபிடித்தார். அதிகமான தோல்விகளைச் சந்தித்த பெர்னாட்ஷா, தொன்னுாறு முறை முயன்றால் ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும் என்று அறிந்து கொண்டதால் முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டதாகக் கூறியுள்ளார்.வெற்றி வாசல் கண்டவர்கள்: வானொலி கண்டுபிடித்த மார்கோனி, கம்பியில்லாத் தந்தி முறையைக் கண்டுபிடித்து அதை இத்தாலி ராணியிடம் தெரிவித்த போது அவர் அலட்சியப்படுத்தி விட்டார். பிறகு அது இருவருடங்கள் கழித்து, இங்கிலாந்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எட்மண்டு ஹில்லரி, டென்சிங் ஆகிய இருவரும் பல தடைகளைச் சந்தித்த பிறகே எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்டவர்கள். 
ஆயிரம் தடவைகளுக்கு மேல் தோல்வியடைந்த பிறகே தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடித்தார். நுாறு சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர். 
இவர்கள் அனைவருமே தோல்விகளிடம் முகவரி கேட்டுச் சென்று தான் வெற்றியின் வாசலை அடைந்தவர்கள் என்பதை அறியும் போது நமது விழிகள் வியப்பால் விரிகின்றன அன்றோ!
விதையானது தாம் விழும் போதெல்லாம் மரமாக எழுவோம் எனும்போதும், இலை தாம் விழுந்தாலும் உரமாக ஆவோம் எனும் போதும், நாம் மட்டும் விழுவதற்குத் தயங்கலாமா? விழுவோம்! எழுவோம்!-பா.பனிமலர்,தமிழ்த்துறை தலைவர்இ.மா.கோ. யாதவர் மகளிர் கல்லுாரி

தியானமும் எண்ண அலைகளும்

தியானமும் எண்ண அலைகளும்
Advertisement
 
 
A
 
 
Advertisement
நவீன வாழ்க்கை பிரச்னைகள், இறுக்கங்கள் நிறைந்தது. இந்த பிரச்னைகளைத் தீர்க்க சிறந்த வழி தியானம் செய்வது; கடவுளிடம் பிரார்த்தனை செய்வது. இடைவிடாது ஒரு பொருளையோ, அல்லது நமக்கு விருப்பமான கடவுளையோ, மகான்களை பற்றிய எண்ணமே தியானம்.
மருத்துவத்துறையில் குணமாக்க முடியாத நாள்பட்ட வியாதி, மன உளைச்சல் போன்றவற்றை தியானம் மூலம் குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மேலை நாட்டு மக்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள பல மருத்துவக் கல்லுாரிகளில் தற்போது
மருத்துவப் படிப்புடன், ஆன்மாவைப் பற்றிய படிப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.
தியானத்தின் வலிமை 
நம் எல்லோருக்குள்ளும் சக்தி இருக்கின்றது. சாதாரணமாக சிதறிக் கிடக்கின்ற இந்தசக்தி தியான நிலையில் வலுப்படுகின்றது. தியானம் மனதை ஒருமைப்படுத்துகிறது. ஏதாவதுஒன்றை ஆதாரமாய் வைத்து இது இயங்கும்.அப்போது எட்டுத் திக்கிலும் ஓடும் மனதை இழுத்துப் பிடித்து ஒன்றை நோக்கிச் செலுத்துகின்றோம். அதன்நோக்கமே ஒளி காணல் (அல்லது)விழிப்புணர்வு அடைதல் என்பதாகும். அந்த ஒன்று உருவமுடையதாயிருக்கும், உருவமற்றதாயும் இருக்கும். உருவமற்றஒளியை (அ)வெளியைத் தியானித்தல் ஞானியர் இயல்பு.
பொதுவாகவே தியானத்துக்கு மன ஒருமைப்பாடும், மனப்பக்குவமும் வேண்டும். தொடக்கத்திலேயே பலன் கிடைத்து
விடாது. தொடர்ந்து முயல வேண்டும். தியானத்துக்கு முதல் தகுதி துாய மனம்; -இரண்டாவது தகுதி ஈடுபாடு. இது இருந்தால் தான் மனதை இழுத்துப்பிடிக்க முடியும்.
“இறைவன் ஆத்மாவாயிருக்கிறான்.
அவனே ஆத்மாவின் ஆத்மாவாகிறான்.”
தியானத்திற்கு பக்குவம் அவசியம். தியானம் தன்னையறிய உதவும் சாதனம். மனதில் சிதறிக் கிடக்கும் ஆற்றல்களை ஒருங்கிணைக்கிறது.
தியானம் -தடைகளை உடைத்தெறிகிறது. உங்களை உயர்நிலைக்கு உயர்த்துகிறது. ஆன்மா பல நல்ல அனுபவங்களைப் பெறுவது தியானத்தின் மூலம் தான்.
குழப்பம் ஒரு நோய், தியானம் அதற்கு மருந்து. நீங்கள் குழம்பித் தவிக்கின்ற நிலை ஏற்படும் போதெல்லாம், தியானத்தில் அமருங்கள். தியானம் உங்களுக்குத் தெளிவைத் தரும்.
எதிர்மறை செயல் தியானம் உங்களிடமிருந்து கோபத்தை, பேராசையை, வேண்டத்தகாதவற்றை எடுத்துச் செல்லும். இப்படி உங்களிடம் எடுத்து எடுத்தே அது உங்களை ஏழையாக்கி விடும். தியானம் சூரியனைப் படைத்துத் தராது. ஆனால் சூரிய ஒளியை உங்களுக்குள் வரவிடும். 
தியானம் உங்களுக்குள் இருக்கும் அழுக்கையெல்லாம் வெளியேற்றுகின்றதே, அதைவிட வேறென்ன வேண்டும்? உங்களுக்குள் இதுவரை மாறாதிருந்த அமைதியின்மையை மாற்றியிருக்கின்றதே, அதைவிட பெரிதாய் வேறெதைச் செய்ய? தியானம்- ஆழ்ந்த உணர்ச்சித் துாய்மை. தியானம் அன்பில் மலர்வது, வார்த்தைகளற்றது. இதனை அனுபவத்தில் உணரலாம்.
மனிதனுடைய உயர்வுக்கு தியானமே அடிப்படையாக இருக்கிறது என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். ஆன்மாவின் நியாயமான ஆசைகள் எதுவாக இருந்தாலும், அதை இறைவன் நிறைவேற்றுகிறான். அந்த ஆசை நிறைவேற்றுவதற்கான காலத்தையும், 
இடத்தையும் நிரூபிக்கும் உரிமை ஆன்மாவுக்கு கிடையாது. அது இறைவனின் உரிமையாக கருதப்படுகிறது.வாழ்க்கை வெறுப்புகள் 
பிறவி இருக்கும் வரை இன்பம், 
துன்பங்கள் மாறி மாறி அனுபவிப்பதன் விளைவாக, ஒரு காலக் கட்டத்தில் ஆன்மாவுக்கு உலகியல் வாழ்க்கையிலேயே வெறுப்புகள் உண்டாகும்.அப்பொழுது ஆன்மா இறைவன் பக்கம் திரும்பும். அந்த இறைவனை அடைய தியானமே சிறந்த முறையாகும். “கடலுக்கு மட்டுந்தான் அலைகளா? மனதுக்கும் அலைகள் உண்டு; -அவை எண்ணங்கள்”
மனிதன் ஒரு மின்கருவி. மனம் என்பது சப்த அலைகளை இசைக்கும் மின்கருவி போன்றது. மூளை அந்த சப்த அலைகளுக்குத் தகுந்த மின்காந்த அலைகளை உண்டாக்கும் கருவி போன்றது. மன அலைகள் மின்சக்தித்தன்மை கொண்டவை. நல்ல எண்ணங்கள் உள்ளோர் நல்ல எண்ணமுடையோரையும், கெட்ட எண்ணமுடையோர், கெட்ட மனமுடையோரையும் சேர்க்கின்றனர். இதனையே, “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” என்றனர் போலும்.
எண்ணங்களின் வலிமை 
எண்ணங்கள் சக்தி மிக்கவை. அவை சென்று சேருமிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். எண்ணங்களின் பின்னணியில் மனம் இருக்கிறது. மனம் அழிந்தால் எண்ணங்கள் அழியும். மனம் சுயேச்சைப் போக்கு கொண்டது. அது எவ்விதமாகவும் எண்ணும், எங்கும் செல்லும், எதையும் செய்யும்.
“எண்ணங்களைக் கட்டுப்படுத்துங்கள் மனம் கட்டுப்படும். மனதை நெறிப்படுத்துங்கள்
எண்ணங்கள் நெறிப்படும்.” தியானத்தின் மூலம் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். கெட்ட எண்ணங்களை நசுக்கி போடுங்கள்.சிந்திக்கத்தெரிந்தவர்கள் நாம். மனம் விருப்பத்தை நிறைவேற்றும் கற்பக விருட்சமாய் இருக்கிறது. “வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்.” 
என்பதன் விளக்கம் எண்ணங்களின் தன்மையை விளக்குவதாக உள்ளது.எல்லாம் வட்டம் உலகமே எண்ண அலைகளால் நிரம்பியது. நேர்கோட்டுச்சலனம் என்பது ஏதுமில்லை. எல்லாம் வட்டமாவே முடிவுறும். ஆகவே நாம் வெளியிடும் எண்ணங்கள் எதுவும் ஒருநாள் திரும்பவும் நம்மையே வந்தடையும். நல்ல எண்ணங்கள் நல்லதையே செய்யும்.“உள்ளத்தனையது உயர்வு உள்ளம்”. அந்தஅளவுக்கு இறை ஒளி பட்டு பிரகாசிக்கும். பிரதிபலிக்கவும் செய்யும். வாழ்வும் வளம் பெறும்.சுதந்திரத்திற்காக, எளியவரான காந்தியால் தேச பக்தர்களை எப்படி ஒன்று திரட்ட முடிந்தது. அவருடைய தியானத்தினாலும், கூட்டுப் பிரார்த்தனையாலும் மக்களை ஒன்று திரட்டி, சுதந்திரம் பெற முடிந்தது. சுதந்திர போராட்டத்திற்கு முன்பும், பின்பும் சரி தியானம் செய்த பிறகே முக்கிய முடிவுகள் எடுத்ததாக தேசபிதா சொல்லியுள்ளார்.
எனவே தியானத்தை நம் அன்றாட கடமையாக்குவோம்!

156 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட விவசாயிகள் - மற்ற மாநில ரகங்களை மீட்கவும் ஏற்பாடு

156 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட விவசாயிகள் - மற்ற மாநில ரகங்களை மீட்கவும் ஏற்பாடு
Advertisement
 
 
Advertisement
 
 

 
Advertisement
தமிழகத்தில், சாகுபடி செய்யப்பட்டு வந்த, 156 பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் மீட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்த நெல் ரகங்களை மீட்கும் முயற்சியும் துவங்கி உள்ளது.

தமிழகத்தில், காலம் காலமாக பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. இந்த நெல் ரகங்கள், 60 நாள் முதல், 200 நாள் வரை விளையும் பயிர்களாக உள்ளன. பாரம்பரிய நெல்லில், பல நோய்களை குணப்படுத்தும் சத்துக்கள் அதிகளவில் உள்ளன.
ஆனால், 'மகசூல் அதிகமாக கிடைக்கிறது' என்று, விதை நிறுவனங்கள் விளம்பரப்
படுத்தியதால், பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதை, தமிழகத்தின் பெரும் பகுதி விவசாயிகள் மறந்து விட்டனர்.
இப்போது, பருவநிலை மாறுதல்களால், புதிய ரக நெல் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், நஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதிக மழை பெய்தாலும், அதிக வெயில் அடித்தாலும், புதிய ரக நெல் பயிர்களில் போதிய மகசூல் கிடைப்பதில்லை.அதே நேரத்தில், பாரம்பரிய நெல் ரகங்களுக்கு ரசாயன மருந்து பயன்படுத்தும் தேவை குறைவு. மேலும், பொதுமக்களிடமும், பாரம்பரிய ரக அரிசியை பயன்படுத்தும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. இதனால், மீண்டும் பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்தும் மனநிலைக்கு தமிழக விவசாயிகள் திரும்ப துவங்கி உள்ளனர்.
இதற்கு உதவும் வகையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், 156 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளனர். அவற்றை, மாநிலம் முழுவதும் உள்ள, 27 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கி உள்ளனர்.இத்துடன், கேரளா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம், தெலுங்கானா மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் நடவடிக்கையும் துவங்கி உள்ளது. இதில், 52 ரகங்கள் தமிழகத்தில் சாகுபடி செய்ய உகந்தது என கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து, 'நமது நெல்லை காப்போம்' என்ற இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் கூறியதாவது:பல மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், தங்கள் சொந்த தேவைக்காக பாரம்பரிய நெல்லை தொடர்ச்சியாக சாகுபடி செய்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து, 156 பாரம்பரிய நெல் ரகங்களை கொஞ்சம், கொஞ்சமாக சேகரித்து, அவற்றை மீட்டுள்ளோம்.
இவ்வாறு, 'மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, சீரக சம்பா, கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, துாயமல்லி, ஆத்துார் கிச்சிலி சம்பா, கொட்டார சம்பா, பூங்காறு, குள்ளக்காரு, சிங்கினிக்காரு, பூம்பாலை, காட்டு யானம், ஒத்தடையான்' உள்ளிட்ட, 156 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளோம்.
புதிய ரக நெல்லை பயிரிட, ஒரு ஏக்கருக்கு, விதை, ரசாயன உரம், என, 15 ஆயிரம் ரூபாய் தேவை. இவற்றில் உற்பத்தியாகும், 30 மூட்டை நெல்லை விற்பனை செய்தால், 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.ஆனால், ரசாயன உரத் தேவை இல்லாமல், பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட, 8,000 ரூபாய் செலவாகிறது. ஆனால், 20 மூட்டை நெல் தான் கிடைக்கும். ஒரு மூட்டை, 1,500 ரூபாய் என விற்பனை செய்தாலும், 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.மேலும், ஒவ்வொரு பாரம்பரிய ரக நெல்லுக்கும், சிறப்பு மருத்துவ குணம்உள்ளது.
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த 'மாப்பிள்ளை சம்பா, குள்ளக்காரு, காட்டுயானம்' ஆகிய அரிசியைசாப்பிடலாம்
திருமணத்திற்கு முன் ஆண்கள், 'மாப்பிள்ளை சம்பா'வையும்; திருமணத்திற்கு பின் பெண்கள், 'கருப்பு கவுனி'யையும் சாப்பிட வேண்டும்
மகப்பேறு காலத்தில்,'பூங்காறு' அரிசியையும்; குழந்தை பிறந்தவுடன், 'பால் குடவாலை'
அரிசியையும் சாப்பிடலாம்
குழந்தை முதல் முதலாக சாப்பிடும்போது,'வாடன் சம்பா'அரிசியை கொடுக்கலாம்
காய்ச்சல் ஏற்படும்போது, அனைவரும், 'இலுப்பை சம்பா' அரிசியை கஞ்சியாக
சாப்பிடலாம்
சித்த மருந்துகள் தயாரிக்க,'கறுங்குறுவை' நெல் பயன்படுத்தப்படுகிறது.
கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள மத்திய அரசின் உணவு ஆராய்ச்சி நிலையத்தில், இதை ஆய்வு செய்து நிரூபித்துள்ளோம். பெரும்பாலான விவசாயிகள், பாரம்பரிய அரிசியை உற்பத்தி செய்து விற்காமல், அதை, விதை நெல்லாகவும், அவல், மாவு போன்று மதிப்பு கூட்டி விற்பனை செய்து லாபம் பார்க்க துவங்கி உள்ளனர்.
இது தெரியாத விவசாயிகள் தான் புதிய ரக நெல்லை பயிரிட்டு, பெரிய லாபம் இல்லாமல்,
நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதை ஊக்குவிக்க, அரசு சிறப்பு திட்டங்களை வகுக்கவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இல்லற வாழ்வின் வெற்றி

இல்லற வாழ்வின் வெற்றி
Advertisement
இல்லறம் என்பது ஆண் -பெண் இருவரையும் மனத்தாலும், உயிராலும், உணர்வாலும் திருமணம் என்ற நிகழ்வின் மூலம் ஒன்றுபடுத்துவது. திருமணம் என்பது ஒரு சடங்கு. இல்லறம் என்பது இரு இதயங்களின் அன்பு மட்டுமே கொண்டு வாழும் உண்மையான வாழ்வு. நல்ல இல்லறத்தை உருவாக்க, அதாவது நல்ல குடும்பத்தை உருவாக்க நிறைய அன்பும், முகம் மலர்ச்சியும் போதும். இதை குறுந்தொகை பாடல் ஒன்று அழகாக விவரிக்கும்.

'செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே'
இதன் பொருள் இல்லறத்தில் பாசம், பிரியம், பண்பு அன்புடன் உள்ளங்கள் கலக்க வேண்டும்... அதாவது செம்மண்ணில் பெய்த நீர்போல.

இல்லறத்தின் ஆன்மா கணவன் மனைவிக்குள் வலுவான நீடித்த பிணைப்புக்கு பலமான அஸ்திவாரம் அன்பும், பாசமும் மட்டுமே. எவ்வளவோ செல்வமும், சுதந்திரமும் இருந்தாலும் இல்வாழ்க்கையில் பண்பும், பயனும் பெற அன்பும் அறனும் வேண்டும். இல்லறம் வெற்றி
பெறுவதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கி உள்ளது.

மணவாழ்வில் சுயநலம் குறுக்கிட்டால் வெற்றி வாய்ப்புகள் குறையும் கணவனும், மனைவியும் உண்மை உள்ளவர்களாக இருப்பதே இல்லறத்தின் ஆன்மா. உண்மையும், அன்பும் கொண்டு ஒருவருக்காக ஒருவர் வாழும் பொழுதுதான் இல்லறம் நிச்சயமாக இனிக்கும். பிணைந்து ஒன்றிய அவர்களின் அன்பே வாழ்வின் வெற்றிக்கான ஏணிப்படிகள்.

நேசிக்கும் மனங்கள் :உண்மையும் அன்பும் இல்லாவிடில் மணவாழ்க்கை சீர்கெட்டுதான் போகும். மனைவி என்பவள் நல்ல கணவன் தனக்கு வாழ்க்கைத் துணையாக கிடைக்கும் பொழுது, தான் மிகவும் பாதுகாப்பாய் இருப்பதாக உணர்வாள். ஒவ்வொரு பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி நேர்மையான உண்மையான நேசிக்கின்ற மனம் தேவை.

ஆணோ, பெண்ணோ, தன்மனதை காயப்படுத்தி ஏமாற்று நாடகம் ஆடி மணம் புரிந்து கொண்டவர்களை மனரீதியாகவும், உணர்வுரீதியாகவும் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்கள்.
கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சகஜம்தான் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, 'என்னை மன்னித்து விடு” என்று கூறும் சொற்கள் தாம்பத்திய உறவின் நெருக்கமான அன்பைக் காட்டுகிறது.

அழகான இல்லறம் உண்மையான இல்லறத்தில் உடல் அழகைவிட மன அழகே நிலைத்து நிற்கும், உண்மையான அன்பை தேய்ந்து விடாமல் காப்பது ஒவ்வொரு ஆணின், பெண்ணின் கடமை. உண்மையான அன்பிற்கு உதாரணமாக நாம் வளைந்து கொடுக்கின்ற நாணலைக் கூறலாம்.

அதாவது நாணல் புயல் காற்றிலோ, வெள்ளத்திலோ பாதிக்கப்படுவது இல்லை. அதுபோல எல்லா சூழ்நிலைகளிலும் கணவன், மனைவி வளைந்து கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை.
இல்லற வாழ்வினை நமது முன்னோர்கள் புனிதமாக கருதி தெய்வீக உணர்வோடு, கணவனும் மனைவியும் விட்டுக் கொடுக்கும் குணத்துடன் வாழ்ந்தனர்.

மனைவி என்பவள் கணவனைத் தெய்வமாக மதித்து நடந்து கொண்டாள். உலகத்தை கணவன் மூலமே பார்த்தார்கள். அதாவதுகண் + அவன் என்பதே 'கணவன்” ஆனது.கணவனுக்கு உடல்நலம் பாதித்தால் கண்ணீர் மல்க எத்தனை தியாகமும் செய்து கடவுளிடம் வேண்டிக் காப்பாற்றினார்கள் என்பதை பல கதைகள் நமக்கு உணர்த்தி உள்ளது.

இல்லறம் என்பது கடவுளின் படைப்பாகும். கோடிக் கணக்கான தம்பதியர்களின் வாழ்க்கை வெற்றிகரமாய் அமைந்து இருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியாய் வாழ்ந்து இருக்கிறார்கள்.
இல்லறம் நல்லறம் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், கடினமான சோதனைகள் ஏற்பட்டாலும் இடர்பாடுகளிலும் இன்னல்களிலும் சிக்கித் தவிக்க நேரிட்டாலும் ஜெயித்தவர்களை நாம் காணலாம்

உதாரணமாக, ஒரு மகாத்மா உருவாக, மனைவி கஸ்துாரிபாய் அதன் பின் இருந்து இருக்கிறார்.
'இல்லறமல்லது நல்லறமில்லை” என்று எடுத்துரைத்த பாரதியார் உருவாக அவரது மனைவி செல்லம்மாள்.ராமகிருஷ்ணர் உருவாக அவரது மனைவி சாரதாதேவி.பாடகி எம்.எஸ்., சுப்புலட்சுமி உருவாக அவரது கணவர் சதாசிவம்.பெண்களிடம் தனிப்பண்பு ஒன்று உண்டு 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்ற பழமொழியை ஒதுக்கித் தள்ளாமல், கணவனிடம் உள்ள நல்ல குணங்களை மட்டும் கண்டுபிடித்துப் போற்றும் இயல்பு இன்றும் போகவில்லை.

நம் நாட்டில் கணவன் இறந்த அதிர்ச்சியில் அடுத்த நிமிடமே உயிர் துறக்கும் மனைவி, அவ்வாறே மனைவி இறந்த மறு விநாடியே உயிர் இழக்கும் கணவனையும் நாம் பார்க்க
முடிகிறது. அத்தகைய அளவிற்கு இந்த உறவு புனித உறவாகப் பார்க்கப்படுகிறது.இல்லறத்தின் பெருமையைச் சொல்லி மாளாது.

பரிசுத்தமான இல்லறம் நடத்தும் அனைவரும் முக்தியை அடைகிறார்கள்.இவர்கள் படிப்படியாக விதவிதமான ஏறுமுகமான சுகத்தை அடைந்து கொண்டே மகா சந்தோஷத்தை அடைந்து விடுகிறார்கள்.இவ்வுலகில் இல்லற ஆத்ம சாதனை வெற்றி பெறுவது போன்று, மற்ற
சாதனைகள் இதற்குசுருங்கச் சொல்லப் - போனால்' இல்லறமே ஆத்ம சாதனை”இரண்டு ஜீவன்களும் ஒன்று இணைந்து ஒன்றாகி ஆத்மாவில் கலக்கின்றன.கணவன், தன் இறுதி மூச்சுவரை மனைவி என்பவள் தன்னோடு இணைந்து வருவாள் என்பதால், அவள் மனதில் எந்த குறையும் பார்க்காதபடி நடந்து கொள்ளவேண்டும்.

மனைவியும், தன் இறுதி மூச்சுவரை, கணவர் தான் துணை என்பதால், அவருடைய நலனே தனக்கு முக்கியம் என்று நினைக்க வேண்டும்.நல்ல சமுதாயத்திற்கு அடிப்படை நல்ல இல்லறம்; இல்லற வாழ்வை வலுப்படுத்த கருத்தொற்றுமையைச் கட்டிக் காப்போம். ஒருவருக்காக
மற்றவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள்.இல்லற அமைதி சமுதாய அமைதிக்கு வழிகோலிடும்.
சமுதாய அமைதி, நாட்டு நலனுக்கு வழிகோலிடும். நாட்டு நலன் உலக அமைதி எனும் உன்னத நிலைக்கு கொண்டு செல்லும்.இல்லறத்தில் விட்டுக் கொடுப்பவர்கள், தோற்கிறவர்கள் அல்ல ஜெயிக்கிறவர்கள். கணவன் - மனைவி உறவை உயிராக மதியுங்கள். இல்லற வாழ்க்கை முடிவு அல்ல, தொடர்கிறது நம் வாரிசுகளின் வடிவில்.

-ஆர்.மைதிலிஎழுத்தாளர், மதுரை
98425 84933

Friday, May 27, 2016

வெற்றி நமதே

வெற்றி நமதே!
Advertisement





பள்ளி, கல்லுாரி தேர்வுகளிலோ நேர்முகத் தேர்விலோ, விளையாட்டு போட்டியிலோ தோல்வி நேர்ந்து விட்டால் துவண்டு போகிறவர்கள்தான் அதிகம். 'அதற்கு அவசியம் இல்லை' என்கிறார்கள் அறிஞர்கள். 'வெற்றியால் கிடைக்கும் பலனை விட தோல்வியால் கிடைக்கும் பாடங்களே சிறந்தவை' என்கின்றனர்.தோல்வி ஏற்பட்டால் ஏன் ஏற்பட்டது? என சிந்திக்க வேண்டும். மாறாக கவலைப்பட்டால் சோர்வு வரும். சிந்தித்தால் தீர்வு வரும்.
ஏன் தோல்வி என்பதை பட்டியலிடுங்கள். சுயபரிசோதனை செய்யுங்கள். பல காரணங்கள் நமக்கு பிடிக்கும். அணுகுமுறையில் ஏற்பட்ட குளறுபடி தெரியும். தயாரிப்பு முறையில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் விளங்கும்.'வேகமாக ஓடும் முயல், மெதுவாக செல்லும் ஆமையிடம் தோற்றது ஏன்?' என்ற கதை நமக்கு தெரியாதா.
தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல், ஒரு மணிநேரம் தாமதமாக சென்று தனது கண்டுபிடிப்பு குறித்து பதிவு செய்திருந்தால், அதே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த எலிசா கரே என்பர் முந்தியிருப்பார் என்று ஒரு தகவல் உண்டு. எனவே தாமதம் என்ற தடைகளை தகர்த்து சிகரம் தொட சிறகை விரியுங்கள்.

உங்களால் முடியும் :உங்களால் முடியும் என்று உறுதியாக நம்புங்கள்; வெற்றி உறுதி. அது நீங்கள் விரும்பும் வகையில்தான் அமையும் என அவசியமில்லை. அது வேறுமாதிரியாகவும் அமையலாம்.பள்ளி படிப்புக்கு தகுதியில்லை என்று விரட்டியடிக்கப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன், பல கருவிகளை கண்டுபிடித்தார். பார்வை இழந்த பின்பும் உலகம் போற்றும் வகையில் உன்னத கவிஞனாய் உயர்ந்தவர் மில்டன்.'ஓடப்பயந்த நதிகளில் கிருமிகள் வந்து குடியிருக்கும்
உயரப் பிறந்த நதிகளே அருவிகள் என்று பெயரெடுக்கும்'என்ற கவிதையின்படி இயங்கி கொண்டே இருக்க வேண்டும்.

திருப்புமுனை :தோல்வி என்பது தோல்வி அல்ல; அது ஒரு திருப்புமுனை. கும்பகோணத்தில் பிறந்த கணிதமேதை ராமானுஜம் கண்டுபிடித்த, சில கணித வழிமுறைகளை உலகெங்கிலும் உள்ள அறிஞர்கள் பிரமிப்போடு ஆராய்கிறார்கள்.ஆனால் கும்பகோணம் கல்லுாரியில் ஒருமுறை, சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் ஒரு முறை என தனியாக முயன்று 'இன்டர்மீடியட்' எனும் தேர்வில் தோற்றுப் போனார். அதே ராமானுஜத்துக்குதான் கணித ஆராய்ச்சிக்காக லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலை பி.ஏ., பட்டம் வழங்கி சிறப்பித்தது. தேர்வு ஒன்றுதான் வழியல்ல; நாம் பிரகாசிக்க எத்தனையோ வழிகள் உள்ளன.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், தொடக்க காலத்தில் டில்லியில் ஒரு நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு சென்றார்; தேர்வாகவில்லை. ரிஷிகேஷ் பகுதிக்கு சென்று சோர்வோடு உலாவிக்கொண்டிருந்தபோது, ஒரு மகானை சந்தித்தார். அவரிடம் நடந்ததை சொன்னார்.
'கவலைப்படாதே! இதைவிட பெரும்வாய்ப்புக்கள் உனக்காக காத்திருக்கின்றன' எனக்கூறி ஆசி வழங்கினாராம்.

மருத்துவக்கல்லுாரியில் இடம் பிடித்து சிறந்த மருத்துவராக வேண்டும் என ஒரு மாணவர் ஆசைப்பட்டார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. தனது வாழ்க்கை பாதையை திருப்பினார். கடுமையாக உழைத்து ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றார். முதலில் ஆசைப்பட்டது நிறைவேறவில்லை என முடங்கிவிடக் கூடாது.'தோல்விகள் சில நாள் வரவாகும். உன் வேள்வியில் அவைதான் உரமாகும். லட்சியம் ஒரு நாள் வரமாகும்' என்ற கவிதை வரிகளை எண்ணிப்பார்ப்போம்.

ஆறுமுனை சிந்தனைகள்
தோல்வி ஏற்பட்டு அதை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்பதை பற்றி ஓர் ஆறிஞர் பட்டியலிடுகிறார்...
1. நமது ஆற்றல் என்ன என்பதை ஆராய்தல்.
2. தோல்வி ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்தல்.
3. இந்த தோல்வியால் ஏற்பட்ட நஷ்டம் என்ன
4. வெற்றியாக அமைந்து இருந்தால் என்ன பயன் கிடைத்திருக்கும்.
5. தொடர்ந்து முயல்வதற்கான அடுத்த வாய்ப்புகள் என்னென்ன?
6. உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக உங்களது பெற்றோரால் திணிக்கப்பட்ட துறையாக இருந்து தோல்வி ஏற்பட்டிருந்தால், உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு முயலுதல் வேண்டும்.
விருப்பம்
விருப்பம்தான் வெற்றியின் விதை. ஆயிரம் பூக்களில் அமர்ந்தும் தேனீக்
களுக்கு அயர்வில்லை. காரணம், தேன் எடுப்பதில் உள்ள ஆர்வம்.
இலக்கியம், வரலாறு போன்றவற்றில் ஈடுபாடுடைய மாணவர்களை பெற்றோர் தங்கள் நோக்கத்திற்காக பொறியியல், மருத்துவ துறைக்கான பாடங்களை படிக்க வற்புறுத்துவதால், அது எதிர்விளைவை ஏற்படுத்தி விடுகிறது.
ஒரு பங்களாவில் இரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த போது, திருடன் ஒருவன் புகுந்து, சில பொருட்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அதை விழித்திருந்த ஒரு சிறுமி பார்த்துவிட்டாள். கத்தி விடுமோ என பயந்து கத்தியை காட்டினான். சிறுமி, திருடனை அருகில் அழைத்தாள்.

''பயப்படாதே கத்த மாட்டேன். அதற்காக
நீ எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்.
என்னுடைய பள்ளிக் கூட பையை துாக்கிக்கொண்டு போய்விடு,'' என்றாளாம். பாடத்தில் இத்தகைய வெறுப்பு இருந்தால் படிப்பு எப்படி வரும்?
ஆற்றல் இல்லாமையா
'தங்களிடம் ஆற்றல் இல்லாததே தோல்விக்கு காரணம்' என சிலர் தாழ்வு மனப்பான்மை கொள்வார்கள்; அது முழு உண்மையல்ல. சூழ்நிலையும் சந்தர்ப்பமும் காரணமாக அமையலாம். உதாரணமாக, கிரிக்கெட் விளையாட்டில் ஒரு போட்டியில் செஞ்சுரி அடித்த சச்சின் டெண்டுல்கர், இன்னொரு ஆட்டத்தில் 'டக் அவுட்'
ஆகி வெளியேறுகிறார். அதற்காக அவருக்கு ஆற்றல் இல்லை
என்பதா. அவருடைய ஆற்றல் நாம் அறியாததா? உடல்நிலை, வெளி நாட்டின் சீதோஷ்ண நிலை போன்ற காரணங்களால் அந்த தோல்வி ஏற்பட்டிருக்கலாம். இதனால் அவர் முடங்கி போகவில்லை. அடுத்த போட்டியில் சாதனை படைக்கிறார். வாழ்க்கையும் ஒரு கிரிக்கெட் விளையாட்டு போல் தான்.

அவமானத்தை உரமாக்குங்கள்

தோல்வி என்பது அவமானப்படத்தக்கதல்ல; ஆராயத்தக்கது. மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று மயங்கக் கூடாது. எதிர்காலமே இருண்டு விட்டதாக எண்ணக் கூடாது. அந்த அவமானங்ளையே உரமாக்கிக்கொள்ள வேண்டும். துாற்றுகிறவர்கள் துாற்றினாலும் மாற்றுவழி கண்டுபிடித்து ஏற்றம் காணுங்கள். இகழ்ந்தவர்களே புகழ்ந்து பேசும் சூழ்நிலையை உருவாக்குங்கள்.
வரலாற்றில் டெமாஸ்தனிஸ் என்பவர் திக்குவாய்க்காரர். தொடர்ச்சியாக பேச வராது. மற்றவர் கேலி செய்தார்கள். அதற்காக அவர் உயிரைவிட நினைக்கவில்லை. அதை உரமாக்கினார்.
கடற்கரையோரம் சென்று வாயில் சிறு சிறு கூழாங்கற்களை போட்டு பேசி பேசி பழகினார். பின்னாளில் உலகின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக உயர்ந்தார்.
நம்பிக்கையூட்டும் ஒரு கவிதையை பாருங்கள்...
சிறகாய் முயற்சியை தரித்துவிடு - உன்
செயல்களில் எல்லாம் விரித்துவிடு
திசைகள் எவையென தெரிந்துவிடு
தெளிவாய் உன்னை புரிந்துவிடு
தோல்வி சொல்கிறதாம்
முதலில் என்னை சந்தித்தவர்கள்
முயன்றால் விரைவில்
வெற்றியை சந்திப்பார்கள்.
- முனைவர் இளசை சுந்தரம்





மன்னித்தால் மனம் சுத்தமாகும்

 
Advertisement
தமிழில் எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை 'மன்னிப்பு'. இதுகொஞ்சம் வித்தியாசமாக மட்டும் அல்ல. பைத்தியக்காரத்தனமாகக் கூடத் தோன்றும். ஆனால் மன்னிப்பதும், மன்னிக்க வேண்டுவதும் எவ்வளவு பாதுகாப்பு என்பதை நாம் அறிய வேண்டும்.
“உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை நண்பர்கள்?”என்று என்னைப் பார்த்துப் பலர் வியப்பதுண்டு. இத்தனைக்கும் நான் பெரிய பிரபலமும் இல்லை. இதற்கு நட்பு மட்டும் போதாது. நாளும் பிறர்க்குதவும் நல்லெண்ணம் மட்டும் அல்ல. பாசமும் பரிவும் காட்டுவதுகூட அல்ல. மன்னிக்கிற மாண்புதான் மிக இன்றியமையாதது. மன்னிப்பு மாபெரும் சித்துகளை நிகழ்த்துகிறது என்பதைக் கேட்டு அல்ல, கடைப்பிடித்துப் பயன்கொண்டால் உங்களுக்கே இது புரியும்.

மன்னிப்பு மானுடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தண்டனையால் முடியாத மாற்றத்தை மன்னிப்பு நிகழ்த்தி விடுகிறது. மன்னிப்பு என்பது இறைத்தன்மை. இறைவன் நம்மை மவுனமாக மன்னித்துக் கொண்டிருப்பதால்தான் வெளியில் தெரியாத மாபாவிகளான நம்மில் பலர் நிம்மதியாக நடமாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் மன்னிப்பு என்பது ஒரு மென்மையான தண்டனையே தவிர அடுத்த தவறுக்கான அங்கீகாரமோ, அனுமதியோஅல்ல.

உறுத்தும் பாரம் :“இருளை இருள் அகற்ற முடியாது என்பதைப்போல பகையை பகை அகற்ற முடியாது. அன்புதான் பகையை அகற்றும்” என்பார் மார்ட்டின் லுாதர் கிங். அந்த அன்புதான் மன்னிப்பு. மன்னித்தல் என்பது இயலாமையோ,கோழைத்தனமோ அல்ல.

“மன்னித்தல் என்பது பலசாலிகளின் பண்பு” என்று முன்னாள் பிரதமர் இந்திரா சொல்லியிருக்கிறார். நமக்கு ஊறு செய்கிறவர்களை மன்னிக்கிற போது ஒரு பெரிய பாரத்தை மனதிலிருந்து இறக்கி வைத்ததைப் போல உணர்வோம். மாறாக அது மனதிலேயே தங்கியிருக்குமானால் பெரும் பாரமாகவே நம்மை உறுத்திக்கொண்டிருக்கும். “கண்ணுக்குக்கண் என்ற பகையுணர்வு இருந்தால் உலகில் எல்லோருமே குருடர்களாகத்தான்திரிந்து கொண்டிருப்பார்கள்” என்று காந்தியடிகள் சொல்வதிலிருந்து இந்தப் பேராபத்து நமக்குப்புலப்படும்.

பொறுத்தல் :க.ப.அறவாணன் 'பொறு, புறக்கணி, புறப்படு' என்பார். நமது வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு ஊறு செய்கிறவர்களை அலட்சியப்படுத்திவிட்டு மேலே சென்று கொண்டிருக்கவேண்டும் என்ற கருத்தை, இந்தமூன்று சொற்களும் நம்மைப்புரிந்து கொள்ள வைக்கும். இவற்றுள் பொறுத்தலும் புறக்கணித்தலும் தான்மன்னிப்போம் மறப்போம் என்கிற,பண்பு. ஏசு கிறிஸ்துவை சிலுவையில்அறைகிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள்.
அதற்காக அவர் ஆத்திரப்படவில்லை. மாறாகப்பொறுத்துக் கொள்கிறார். அறைந்தபாவிகளைப் புறக்கணிப்பதோடு, “தாம்செய்வது இன்னதென்று தெரியாத இந்த பாவிகளை மன்னியும்” என்கிறார். அவரது இரக்கம் பொதிந்த இந்த வாசகங்கள் உலக மக்கள் அனைவருடைய மனதிலும் பதிந்திருக்கிற மாணிக்கவரிகளாகும்.

புத்தபிரான் கருணையே வடிவானவர். பகையைக்கொண்டு பகையை அழிக்க முடியாது. அன்பினால்தான் பகையை அழிக்கமுடியும் என்று போதித்தவர். பகைவரின்மீது பகை என்பது பகையை அதிகமாக்குமே தவிர அழிக்காது. ஊரிலிருக்கிற ரவுடிகளெல்லாம் பெரிய பெரிய கார்களில் பத்து பதினைந்து அடியாட்களோடு வளைய வருகிறார்களே… மிரட்டுவதற்கா அப்படி..? இல்லையில்லை. மிரண்டுபோய்தான் அப்படி. அவர்கள் தம் பகைவர்களை மன்னித்திருந்தாலும், பகைவர்களால் மன்னிக்கப் பட்டிருந்தாலும் பலரைத் துணைக்கு வைத்துக்கொண்டு பிரியாணி போட்டுக்கொண்டும், பிராந்தி ஊற்றிக்கொடுத்தும், வாழத்தேவை இருந்திருக்காது.

மன்னித்தால்... பகைவனை மன்னித்தால் பயமின்றித் திரியலாம். இன்று இது நடைமுறையில் சாத்தியமில்லைதான். ஆனால் நடைமுறைக்கு வந்தால் நாளை இது சாத்தியமாகலாம். கொஞ்சம் பொறுமையும் பயமின்மையும், நிதானமும்மிக அதிகமாய் மன்னிக்கிற மாண்புமிருந்தால் பகையில்லா உலகின் பேரின்பத்தை எல்லோரும் நுகரலாம்.“குற்றம்புரிவோரை மன்னிப்பதென்பது குற்றங்களை அதிகப்படுத்தி விடாதா?” என்று நீங்கள் கேட்கலாம். குற்றங்கள் பெருகாதிருப்பதற்கு தண்டனை இருக்க வேண்டும் என்பதும் நியாயமாகத்தோன்றும். ஆனால் சிறைச்சாலைக்குச் சென்று திரும்புகிற சிறிய குற்றவாளிகள் பெரிய குற்றங்களுக்கான பயிற்சியோடு வெளிவருவதைப்பார்க்கும்போது, நமது நடைமுறையைக்கொஞ்சம் பரிசீலிக்கத் தோன்றும்.

மன்னித்தல் எப்படி மாண்பு மிகுந்ததோ, அப்படித்தான் மன்னிப்பு கேட்பதும். மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு பேருள்ளம்வேண்டும் பெருந்தன்மை வேண்டும். கூடுதலாக ஆண்மையும் வேண்டும். குற்றத்தைஒப்புக் கொள்வதே அதைத் தவறென்று உணர்ந்திருப்பதை வெளிப்படுத்தும். மன்னிப்பு கேட்பதே குற்றத்திற்கான பாதிதண்டனையை பெற்றுவிட்டதற்கு சமம்.
கூடுதல் குற்றம் :குற்றத்தைச் செய்துவிட்டு குற்றமென ஒப்புக்கொள்ளவும், மன்னிப்புக்
கேட்கவும் மறுப்பது கூடுதலாக ஒரு குற்றத்தைச் செய்வதற்குச் சமம். இன்றைக்கும் தவறு செய்கிறவர்கள் மன்னிப்பு கேட்கிறார்கள். மன்னிக்கும் இடத்தில் இருக்கிறவர்களும் மன்னிக்கிறார்கள். இதனால் மனமாசு தூசு தட்டப்படுகிறது. புழுங்கும் நெஞ்சங்களில் புதுக்காற்று புகுந்து கொள்கிறது. இதயங்கள் இதமாகின்றன.

பாவத்தை கழுவி... மியான்மரில் இன்றும் ஒரு வழக்கமிருப்பதாகச்செய்தித் தாள்களில் படித்தேன். தவறு செய்தவர்கள் மட்டுமல்ல தவறாக மனதில் நினைத்தவர்களும் கனவில் ஒரு தவறை இழைத்தவர்களும் சம்பந்தப்பட்டவரை நேரில் சந்தித்து மன்னிப்புகேட்டுவிடுகிறார்கள். மன்னிப்பு கேட்பதின் மூலம், அந்தப் பாவத்தை அவர்கள் கழுவிக் கொள்வதாகக் கருதுகிறார்கள். மன்னிப்பு கேட்பதற்குத் தயங்கியோ அல்லது பயந்தோ தவறை மறைப்பவர்கள் நரகத்தில் தள்ளப்படுவதாக அவர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக அழகான ஒரு பெண்ணிடம் 'அப்படி' நடந்து கொண்டதாக கனவு கண்ட இளைஞன் மறுநாள் அவளிடம் சென்று 'சகோதரி என்னை
மன்னித்துவிடு' என்று கனவில் தான் செய்த தவறுக்காக வருந்தும்போது அவளும் பெருந்தன்மையோடு மன்னித்து அனுப்பிவிடுகிறாள். நம்மூரில் யாருக்கும் இப்படி மன்னிப்பு கேட்கிற திராணியும் கிடையாது, மன்னிக்கிற தயாளமும் இல்லை. பொது இடங்களிலும் பேருந்துகளிலும், இல்லங்களிலும் அலுவலகங்களிலும் சில சாதாரண தவறுகள் கூடப் பெரிதுபடுத்தப்பட்டு பூதாகாரமாகப்பட்டுவிடும். சிறியதவறுகளை நாம் செய்கிறபோது அல்லது
அதுவாக நிகழ்கிறபோது 'சாரி' என்ற ஒரு வார்த்தை எல்லாவற்றையும் சரி செய்துவிடும். மன்னிப்புஎன்பது வருந்துகிறவர்களோடு நின்றுவிடக்கூடாது. 'பரவாயில்லை' என்று மன்னித்து விடுகிறவனில் அது முழுமை பெற வேண்டும். பிழைபொறுக்கும்பெருந்தன்மை இல்லையெனில்பெருந்தீமை நிகழவும்வாய்ப்பிருக்கிறது.

கேட்காமலே... மன்னிப்பதில்கூடபல்வேறு நிலைகள் உண்டு. கேட்கும்போது மன்னிப்பது ஒரு வகை. கேட்கவைத்து மன்னிப்பது மற்றொருவகை. அதனிலும்மேலாய் கேட்காமலேயே மன்னிப்பதுதான்மிகச் சிறந்தது. நாள்தோறும் நாம் எத்தனையோ தவறுகளைச் செய்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ மனத்தளவிலும்,செயல்வடிவிலும் நாம் செய்கிற எல்லாத்தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் நாம் தண்டனைகள் பெறுவதில்லை.

ஆனால் இறைவனும் நாம் வேண்டாமலேயே நம்மை மன்னிக்கிறான். இறைவன் நம்மை நாம் கேட்காமலேயேமன்னிப்பதுபோலப் பரந்த மனம்கொண்டவர்கள் தமக்குத்தெரிந்ததுபோலக் காட்டிக்கொள்ளாமல் தவறு செய்தவர்களை மன்னிப்பதுண்டு. இப்படி மன்னிப்பது பிழை செய்தவர்களிடம்நாணத்தை ஏற்படுத்தும். இதைத்தான் திருவள்ளுவர்,'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல்'என்று குறிப்பிடுகிறார்.

மன்னிக்கிற போது மனதில் இருக்கிற மாசுவெளியேற்றப்படுகிறது. மனம்
சுத்தமாகிறது. மனம் சுத்தமாக இருப்பதுகூட உடல்சுத்தத்தைப் போல உயிர்பேணும் ஒப்பற்ற உபாயமாகும். மன்னித்தல் என்பது நாளும் நம்மை நலமாக வைத்திருப்பதால் மறப்போம்... மன்னிப்போம்; மகிழ்ச்சியாக இருப்போம்.-ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன்எழுத்தாளர், 94441 07879
Advertisement
















எழுத்தாளர்,