Friday, May 27, 2016

வெற்றி நமதே

வெற்றி நமதே!
Advertisement





பள்ளி, கல்லுாரி தேர்வுகளிலோ நேர்முகத் தேர்விலோ, விளையாட்டு போட்டியிலோ தோல்வி நேர்ந்து விட்டால் துவண்டு போகிறவர்கள்தான் அதிகம். 'அதற்கு அவசியம் இல்லை' என்கிறார்கள் அறிஞர்கள். 'வெற்றியால் கிடைக்கும் பலனை விட தோல்வியால் கிடைக்கும் பாடங்களே சிறந்தவை' என்கின்றனர்.தோல்வி ஏற்பட்டால் ஏன் ஏற்பட்டது? என சிந்திக்க வேண்டும். மாறாக கவலைப்பட்டால் சோர்வு வரும். சிந்தித்தால் தீர்வு வரும்.
ஏன் தோல்வி என்பதை பட்டியலிடுங்கள். சுயபரிசோதனை செய்யுங்கள். பல காரணங்கள் நமக்கு பிடிக்கும். அணுகுமுறையில் ஏற்பட்ட குளறுபடி தெரியும். தயாரிப்பு முறையில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் விளங்கும்.'வேகமாக ஓடும் முயல், மெதுவாக செல்லும் ஆமையிடம் தோற்றது ஏன்?' என்ற கதை நமக்கு தெரியாதா.
தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல், ஒரு மணிநேரம் தாமதமாக சென்று தனது கண்டுபிடிப்பு குறித்து பதிவு செய்திருந்தால், அதே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த எலிசா கரே என்பர் முந்தியிருப்பார் என்று ஒரு தகவல் உண்டு. எனவே தாமதம் என்ற தடைகளை தகர்த்து சிகரம் தொட சிறகை விரியுங்கள்.

உங்களால் முடியும் :உங்களால் முடியும் என்று உறுதியாக நம்புங்கள்; வெற்றி உறுதி. அது நீங்கள் விரும்பும் வகையில்தான் அமையும் என அவசியமில்லை. அது வேறுமாதிரியாகவும் அமையலாம்.பள்ளி படிப்புக்கு தகுதியில்லை என்று விரட்டியடிக்கப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன், பல கருவிகளை கண்டுபிடித்தார். பார்வை இழந்த பின்பும் உலகம் போற்றும் வகையில் உன்னத கவிஞனாய் உயர்ந்தவர் மில்டன்.'ஓடப்பயந்த நதிகளில் கிருமிகள் வந்து குடியிருக்கும்
உயரப் பிறந்த நதிகளே அருவிகள் என்று பெயரெடுக்கும்'என்ற கவிதையின்படி இயங்கி கொண்டே இருக்க வேண்டும்.

திருப்புமுனை :தோல்வி என்பது தோல்வி அல்ல; அது ஒரு திருப்புமுனை. கும்பகோணத்தில் பிறந்த கணிதமேதை ராமானுஜம் கண்டுபிடித்த, சில கணித வழிமுறைகளை உலகெங்கிலும் உள்ள அறிஞர்கள் பிரமிப்போடு ஆராய்கிறார்கள்.ஆனால் கும்பகோணம் கல்லுாரியில் ஒருமுறை, சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் ஒரு முறை என தனியாக முயன்று 'இன்டர்மீடியட்' எனும் தேர்வில் தோற்றுப் போனார். அதே ராமானுஜத்துக்குதான் கணித ஆராய்ச்சிக்காக லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலை பி.ஏ., பட்டம் வழங்கி சிறப்பித்தது. தேர்வு ஒன்றுதான் வழியல்ல; நாம் பிரகாசிக்க எத்தனையோ வழிகள் உள்ளன.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், தொடக்க காலத்தில் டில்லியில் ஒரு நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு சென்றார்; தேர்வாகவில்லை. ரிஷிகேஷ் பகுதிக்கு சென்று சோர்வோடு உலாவிக்கொண்டிருந்தபோது, ஒரு மகானை சந்தித்தார். அவரிடம் நடந்ததை சொன்னார்.
'கவலைப்படாதே! இதைவிட பெரும்வாய்ப்புக்கள் உனக்காக காத்திருக்கின்றன' எனக்கூறி ஆசி வழங்கினாராம்.

மருத்துவக்கல்லுாரியில் இடம் பிடித்து சிறந்த மருத்துவராக வேண்டும் என ஒரு மாணவர் ஆசைப்பட்டார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. தனது வாழ்க்கை பாதையை திருப்பினார். கடுமையாக உழைத்து ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றார். முதலில் ஆசைப்பட்டது நிறைவேறவில்லை என முடங்கிவிடக் கூடாது.'தோல்விகள் சில நாள் வரவாகும். உன் வேள்வியில் அவைதான் உரமாகும். லட்சியம் ஒரு நாள் வரமாகும்' என்ற கவிதை வரிகளை எண்ணிப்பார்ப்போம்.

ஆறுமுனை சிந்தனைகள்
தோல்வி ஏற்பட்டு அதை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்பதை பற்றி ஓர் ஆறிஞர் பட்டியலிடுகிறார்...
1. நமது ஆற்றல் என்ன என்பதை ஆராய்தல்.
2. தோல்வி ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்தல்.
3. இந்த தோல்வியால் ஏற்பட்ட நஷ்டம் என்ன
4. வெற்றியாக அமைந்து இருந்தால் என்ன பயன் கிடைத்திருக்கும்.
5. தொடர்ந்து முயல்வதற்கான அடுத்த வாய்ப்புகள் என்னென்ன?
6. உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக உங்களது பெற்றோரால் திணிக்கப்பட்ட துறையாக இருந்து தோல்வி ஏற்பட்டிருந்தால், உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு முயலுதல் வேண்டும்.
விருப்பம்
விருப்பம்தான் வெற்றியின் விதை. ஆயிரம் பூக்களில் அமர்ந்தும் தேனீக்
களுக்கு அயர்வில்லை. காரணம், தேன் எடுப்பதில் உள்ள ஆர்வம்.
இலக்கியம், வரலாறு போன்றவற்றில் ஈடுபாடுடைய மாணவர்களை பெற்றோர் தங்கள் நோக்கத்திற்காக பொறியியல், மருத்துவ துறைக்கான பாடங்களை படிக்க வற்புறுத்துவதால், அது எதிர்விளைவை ஏற்படுத்தி விடுகிறது.
ஒரு பங்களாவில் இரவு எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த போது, திருடன் ஒருவன் புகுந்து, சில பொருட்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அதை விழித்திருந்த ஒரு சிறுமி பார்த்துவிட்டாள். கத்தி விடுமோ என பயந்து கத்தியை காட்டினான். சிறுமி, திருடனை அருகில் அழைத்தாள்.

''பயப்படாதே கத்த மாட்டேன். அதற்காக
நீ எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்.
என்னுடைய பள்ளிக் கூட பையை துாக்கிக்கொண்டு போய்விடு,'' என்றாளாம். பாடத்தில் இத்தகைய வெறுப்பு இருந்தால் படிப்பு எப்படி வரும்?
ஆற்றல் இல்லாமையா
'தங்களிடம் ஆற்றல் இல்லாததே தோல்விக்கு காரணம்' என சிலர் தாழ்வு மனப்பான்மை கொள்வார்கள்; அது முழு உண்மையல்ல. சூழ்நிலையும் சந்தர்ப்பமும் காரணமாக அமையலாம். உதாரணமாக, கிரிக்கெட் விளையாட்டில் ஒரு போட்டியில் செஞ்சுரி அடித்த சச்சின் டெண்டுல்கர், இன்னொரு ஆட்டத்தில் 'டக் அவுட்'
ஆகி வெளியேறுகிறார். அதற்காக அவருக்கு ஆற்றல் இல்லை
என்பதா. அவருடைய ஆற்றல் நாம் அறியாததா? உடல்நிலை, வெளி நாட்டின் சீதோஷ்ண நிலை போன்ற காரணங்களால் அந்த தோல்வி ஏற்பட்டிருக்கலாம். இதனால் அவர் முடங்கி போகவில்லை. அடுத்த போட்டியில் சாதனை படைக்கிறார். வாழ்க்கையும் ஒரு கிரிக்கெட் விளையாட்டு போல் தான்.

அவமானத்தை உரமாக்குங்கள்

தோல்வி என்பது அவமானப்படத்தக்கதல்ல; ஆராயத்தக்கது. மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று மயங்கக் கூடாது. எதிர்காலமே இருண்டு விட்டதாக எண்ணக் கூடாது. அந்த அவமானங்ளையே உரமாக்கிக்கொள்ள வேண்டும். துாற்றுகிறவர்கள் துாற்றினாலும் மாற்றுவழி கண்டுபிடித்து ஏற்றம் காணுங்கள். இகழ்ந்தவர்களே புகழ்ந்து பேசும் சூழ்நிலையை உருவாக்குங்கள்.
வரலாற்றில் டெமாஸ்தனிஸ் என்பவர் திக்குவாய்க்காரர். தொடர்ச்சியாக பேச வராது. மற்றவர் கேலி செய்தார்கள். அதற்காக அவர் உயிரைவிட நினைக்கவில்லை. அதை உரமாக்கினார்.
கடற்கரையோரம் சென்று வாயில் சிறு சிறு கூழாங்கற்களை போட்டு பேசி பேசி பழகினார். பின்னாளில் உலகின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக உயர்ந்தார்.
நம்பிக்கையூட்டும் ஒரு கவிதையை பாருங்கள்...
சிறகாய் முயற்சியை தரித்துவிடு - உன்
செயல்களில் எல்லாம் விரித்துவிடு
திசைகள் எவையென தெரிந்துவிடு
தெளிவாய் உன்னை புரிந்துவிடு
தோல்வி சொல்கிறதாம்
முதலில் என்னை சந்தித்தவர்கள்
முயன்றால் விரைவில்
வெற்றியை சந்திப்பார்கள்.
- முனைவர் இளசை சுந்தரம்





மன்னித்தால் மனம் சுத்தமாகும்

 
Advertisement
தமிழில் எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை 'மன்னிப்பு'. இதுகொஞ்சம் வித்தியாசமாக மட்டும் அல்ல. பைத்தியக்காரத்தனமாகக் கூடத் தோன்றும். ஆனால் மன்னிப்பதும், மன்னிக்க வேண்டுவதும் எவ்வளவு பாதுகாப்பு என்பதை நாம் அறிய வேண்டும்.
“உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை நண்பர்கள்?”என்று என்னைப் பார்த்துப் பலர் வியப்பதுண்டு. இத்தனைக்கும் நான் பெரிய பிரபலமும் இல்லை. இதற்கு நட்பு மட்டும் போதாது. நாளும் பிறர்க்குதவும் நல்லெண்ணம் மட்டும் அல்ல. பாசமும் பரிவும் காட்டுவதுகூட அல்ல. மன்னிக்கிற மாண்புதான் மிக இன்றியமையாதது. மன்னிப்பு மாபெரும் சித்துகளை நிகழ்த்துகிறது என்பதைக் கேட்டு அல்ல, கடைப்பிடித்துப் பயன்கொண்டால் உங்களுக்கே இது புரியும்.

மன்னிப்பு மானுடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தண்டனையால் முடியாத மாற்றத்தை மன்னிப்பு நிகழ்த்தி விடுகிறது. மன்னிப்பு என்பது இறைத்தன்மை. இறைவன் நம்மை மவுனமாக மன்னித்துக் கொண்டிருப்பதால்தான் வெளியில் தெரியாத மாபாவிகளான நம்மில் பலர் நிம்மதியாக நடமாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் மன்னிப்பு என்பது ஒரு மென்மையான தண்டனையே தவிர அடுத்த தவறுக்கான அங்கீகாரமோ, அனுமதியோஅல்ல.

உறுத்தும் பாரம் :“இருளை இருள் அகற்ற முடியாது என்பதைப்போல பகையை பகை அகற்ற முடியாது. அன்புதான் பகையை அகற்றும்” என்பார் மார்ட்டின் லுாதர் கிங். அந்த அன்புதான் மன்னிப்பு. மன்னித்தல் என்பது இயலாமையோ,கோழைத்தனமோ அல்ல.

“மன்னித்தல் என்பது பலசாலிகளின் பண்பு” என்று முன்னாள் பிரதமர் இந்திரா சொல்லியிருக்கிறார். நமக்கு ஊறு செய்கிறவர்களை மன்னிக்கிற போது ஒரு பெரிய பாரத்தை மனதிலிருந்து இறக்கி வைத்ததைப் போல உணர்வோம். மாறாக அது மனதிலேயே தங்கியிருக்குமானால் பெரும் பாரமாகவே நம்மை உறுத்திக்கொண்டிருக்கும். “கண்ணுக்குக்கண் என்ற பகையுணர்வு இருந்தால் உலகில் எல்லோருமே குருடர்களாகத்தான்திரிந்து கொண்டிருப்பார்கள்” என்று காந்தியடிகள் சொல்வதிலிருந்து இந்தப் பேராபத்து நமக்குப்புலப்படும்.

பொறுத்தல் :க.ப.அறவாணன் 'பொறு, புறக்கணி, புறப்படு' என்பார். நமது வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு ஊறு செய்கிறவர்களை அலட்சியப்படுத்திவிட்டு மேலே சென்று கொண்டிருக்கவேண்டும் என்ற கருத்தை, இந்தமூன்று சொற்களும் நம்மைப்புரிந்து கொள்ள வைக்கும். இவற்றுள் பொறுத்தலும் புறக்கணித்தலும் தான்மன்னிப்போம் மறப்போம் என்கிற,பண்பு. ஏசு கிறிஸ்துவை சிலுவையில்அறைகிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள்.
அதற்காக அவர் ஆத்திரப்படவில்லை. மாறாகப்பொறுத்துக் கொள்கிறார். அறைந்தபாவிகளைப் புறக்கணிப்பதோடு, “தாம்செய்வது இன்னதென்று தெரியாத இந்த பாவிகளை மன்னியும்” என்கிறார். அவரது இரக்கம் பொதிந்த இந்த வாசகங்கள் உலக மக்கள் அனைவருடைய மனதிலும் பதிந்திருக்கிற மாணிக்கவரிகளாகும்.

புத்தபிரான் கருணையே வடிவானவர். பகையைக்கொண்டு பகையை அழிக்க முடியாது. அன்பினால்தான் பகையை அழிக்கமுடியும் என்று போதித்தவர். பகைவரின்மீது பகை என்பது பகையை அதிகமாக்குமே தவிர அழிக்காது. ஊரிலிருக்கிற ரவுடிகளெல்லாம் பெரிய பெரிய கார்களில் பத்து பதினைந்து அடியாட்களோடு வளைய வருகிறார்களே… மிரட்டுவதற்கா அப்படி..? இல்லையில்லை. மிரண்டுபோய்தான் அப்படி. அவர்கள் தம் பகைவர்களை மன்னித்திருந்தாலும், பகைவர்களால் மன்னிக்கப் பட்டிருந்தாலும் பலரைத் துணைக்கு வைத்துக்கொண்டு பிரியாணி போட்டுக்கொண்டும், பிராந்தி ஊற்றிக்கொடுத்தும், வாழத்தேவை இருந்திருக்காது.

மன்னித்தால்... பகைவனை மன்னித்தால் பயமின்றித் திரியலாம். இன்று இது நடைமுறையில் சாத்தியமில்லைதான். ஆனால் நடைமுறைக்கு வந்தால் நாளை இது சாத்தியமாகலாம். கொஞ்சம் பொறுமையும் பயமின்மையும், நிதானமும்மிக அதிகமாய் மன்னிக்கிற மாண்புமிருந்தால் பகையில்லா உலகின் பேரின்பத்தை எல்லோரும் நுகரலாம்.“குற்றம்புரிவோரை மன்னிப்பதென்பது குற்றங்களை அதிகப்படுத்தி விடாதா?” என்று நீங்கள் கேட்கலாம். குற்றங்கள் பெருகாதிருப்பதற்கு தண்டனை இருக்க வேண்டும் என்பதும் நியாயமாகத்தோன்றும். ஆனால் சிறைச்சாலைக்குச் சென்று திரும்புகிற சிறிய குற்றவாளிகள் பெரிய குற்றங்களுக்கான பயிற்சியோடு வெளிவருவதைப்பார்க்கும்போது, நமது நடைமுறையைக்கொஞ்சம் பரிசீலிக்கத் தோன்றும்.

மன்னித்தல் எப்படி மாண்பு மிகுந்ததோ, அப்படித்தான் மன்னிப்பு கேட்பதும். மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு பேருள்ளம்வேண்டும் பெருந்தன்மை வேண்டும். கூடுதலாக ஆண்மையும் வேண்டும். குற்றத்தைஒப்புக் கொள்வதே அதைத் தவறென்று உணர்ந்திருப்பதை வெளிப்படுத்தும். மன்னிப்பு கேட்பதே குற்றத்திற்கான பாதிதண்டனையை பெற்றுவிட்டதற்கு சமம்.
கூடுதல் குற்றம் :குற்றத்தைச் செய்துவிட்டு குற்றமென ஒப்புக்கொள்ளவும், மன்னிப்புக்
கேட்கவும் மறுப்பது கூடுதலாக ஒரு குற்றத்தைச் செய்வதற்குச் சமம். இன்றைக்கும் தவறு செய்கிறவர்கள் மன்னிப்பு கேட்கிறார்கள். மன்னிக்கும் இடத்தில் இருக்கிறவர்களும் மன்னிக்கிறார்கள். இதனால் மனமாசு தூசு தட்டப்படுகிறது. புழுங்கும் நெஞ்சங்களில் புதுக்காற்று புகுந்து கொள்கிறது. இதயங்கள் இதமாகின்றன.

பாவத்தை கழுவி... மியான்மரில் இன்றும் ஒரு வழக்கமிருப்பதாகச்செய்தித் தாள்களில் படித்தேன். தவறு செய்தவர்கள் மட்டுமல்ல தவறாக மனதில் நினைத்தவர்களும் கனவில் ஒரு தவறை இழைத்தவர்களும் சம்பந்தப்பட்டவரை நேரில் சந்தித்து மன்னிப்புகேட்டுவிடுகிறார்கள். மன்னிப்பு கேட்பதின் மூலம், அந்தப் பாவத்தை அவர்கள் கழுவிக் கொள்வதாகக் கருதுகிறார்கள். மன்னிப்பு கேட்பதற்குத் தயங்கியோ அல்லது பயந்தோ தவறை மறைப்பவர்கள் நரகத்தில் தள்ளப்படுவதாக அவர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக அழகான ஒரு பெண்ணிடம் 'அப்படி' நடந்து கொண்டதாக கனவு கண்ட இளைஞன் மறுநாள் அவளிடம் சென்று 'சகோதரி என்னை
மன்னித்துவிடு' என்று கனவில் தான் செய்த தவறுக்காக வருந்தும்போது அவளும் பெருந்தன்மையோடு மன்னித்து அனுப்பிவிடுகிறாள். நம்மூரில் யாருக்கும் இப்படி மன்னிப்பு கேட்கிற திராணியும் கிடையாது, மன்னிக்கிற தயாளமும் இல்லை. பொது இடங்களிலும் பேருந்துகளிலும், இல்லங்களிலும் அலுவலகங்களிலும் சில சாதாரண தவறுகள் கூடப் பெரிதுபடுத்தப்பட்டு பூதாகாரமாகப்பட்டுவிடும். சிறியதவறுகளை நாம் செய்கிறபோது அல்லது
அதுவாக நிகழ்கிறபோது 'சாரி' என்ற ஒரு வார்த்தை எல்லாவற்றையும் சரி செய்துவிடும். மன்னிப்புஎன்பது வருந்துகிறவர்களோடு நின்றுவிடக்கூடாது. 'பரவாயில்லை' என்று மன்னித்து விடுகிறவனில் அது முழுமை பெற வேண்டும். பிழைபொறுக்கும்பெருந்தன்மை இல்லையெனில்பெருந்தீமை நிகழவும்வாய்ப்பிருக்கிறது.

கேட்காமலே... மன்னிப்பதில்கூடபல்வேறு நிலைகள் உண்டு. கேட்கும்போது மன்னிப்பது ஒரு வகை. கேட்கவைத்து மன்னிப்பது மற்றொருவகை. அதனிலும்மேலாய் கேட்காமலேயே மன்னிப்பதுதான்மிகச் சிறந்தது. நாள்தோறும் நாம் எத்தனையோ தவறுகளைச் செய்கிறோம். தெரிந்தோ தெரியாமலோ மனத்தளவிலும்,செயல்வடிவிலும் நாம் செய்கிற எல்லாத்தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் நாம் தண்டனைகள் பெறுவதில்லை.

ஆனால் இறைவனும் நாம் வேண்டாமலேயே நம்மை மன்னிக்கிறான். இறைவன் நம்மை நாம் கேட்காமலேயேமன்னிப்பதுபோலப் பரந்த மனம்கொண்டவர்கள் தமக்குத்தெரிந்ததுபோலக் காட்டிக்கொள்ளாமல் தவறு செய்தவர்களை மன்னிப்பதுண்டு. இப்படி மன்னிப்பது பிழை செய்தவர்களிடம்நாணத்தை ஏற்படுத்தும். இதைத்தான் திருவள்ளுவர்,'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல்'என்று குறிப்பிடுகிறார்.

மன்னிக்கிற போது மனதில் இருக்கிற மாசுவெளியேற்றப்படுகிறது. மனம்
சுத்தமாகிறது. மனம் சுத்தமாக இருப்பதுகூட உடல்சுத்தத்தைப் போல உயிர்பேணும் ஒப்பற்ற உபாயமாகும். மன்னித்தல் என்பது நாளும் நம்மை நலமாக வைத்திருப்பதால் மறப்போம்... மன்னிப்போம்; மகிழ்ச்சியாக இருப்போம்.-ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன்எழுத்தாளர், 94441 07879
Advertisement
















எழுத்தாளர், 

No comments:

Post a Comment