Friday, May 13, 2016

‘உன்னை அறிந்தால்...’ - இன்ஸ்பைரிங் இளங்கோ - NanRi: டாக்டர் விகடன்


‘உன்னை அறிந்தால்...’ - இன்ஸ்பைரிங் இளங்கோ

ளங்கோ... இன்று, ‘இன்ஸ்பைரிங் இளங்கோ’வாக உயர்ந்திருக்கிறார்; பிறவியிலேயே பார்வைத்திறனை இழந்திருந்தாலும், தன்னம்பிக்கையால் தனி உயரம் தொட்ட மனிதர்.  ஆங்கில ஆசிரியர்,  தன்னம்பிக்கைப் பேச்சாளர், பாடகர், தொழில்முனைவோர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், விளம்பரங்களில் பின்னணிக் குரல் கொடுப்பவர்  எனப் பல்வேறு முகம் கொண்டவர். 

“நமது கண் ஒரு கேமரா போன்றது. எப்படி ஒரு பொருள் நமது கண்ணுக்குத் தெரிகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நமது கண்ணுக்குள் விழித்திரை (ரெட்டினா) இருக்கிறது. நாம் பார்க்கும்  எந்தவொரு பிம்பமும் தலைகீழாகத்தான் ரெட்டினாவுக்க்ச் செல்லும், ரெட்டி
னாவில் பிம்பம் பட்ட பின்னர், ரெட்டினாவுக்கும் மூளைக்கும் இடையே சிக்னல்கள் சென்று அது என்ன என்று மூளைதான் அதை உருவகப்படுத்தும்.  ஆக, கண் என்பது ஒரு கருவிதான். மூளையால்தான் நாம் பார்க்கிறோம். 

எனக்கு  பிறவியிலேயே பார்வைக்குறைபாடு ஏற்பட்டதற்குக் காரணம் `ரெட்டினிடிஸ் பிக்மென்டேஷன்’ என்ற மரபியல் பிரச்னை. எனது தாய், தந்தை இருவரும் முறைவழிச் சொந்தங்கள். சொந்தத்தில் திருமணம் செய்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சில நோய்கள் வருவதற்கான ரிஸ்க் அதிகம். அதில் ஒன்று, ரெடினிடிஸ் பிக்மென்டேஷன். 
எனக்கு மற்றவர்களைப் போலவே கண்கள் இருக்கின்றன. அதில் காட்சிகள் விழுகின்றன. அதனால், என்னை கண் தானம் செய்வதற்குக்கூட மருத்துவர்கள் அனுமதித்திருக்கிறார்கள்.  விழித்திரையில் பிம்பம் படும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. அதன் பின்னர், விழித்திரையில் இருந்து மூளைக்குச் செல்லும் பகுதியில் நியூரான்கள் பிறவியிலேயே பாதிக்கப்பட்டிருக்கின்றன. விளைவு,  பிறவியிலேயே பார்வை இழப்பு! 

பார்வை இழப்பு என்பதை நான் `பார்வைச் சவால்’ என்றே கருதுகிறேன். எந்தக் காலகட்டத்திலும் எனக்குப் பார்வை இல்லை என்பதை ஒரு பிரச்னையாகக் கருதியது இல்லை. சிறுவயதில் இருந்தே எனக்கு எந்தவொரு விஷயத்திலும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்காகக் கடுமையாக உழைப்பேன். 

பள்ளிக்கூட ஆரம்ப நாட்களில்  எனக்கு கணக்கு பாடம் சரியாக வராது. ஒன்பதாவது படிக்கும் வரை கணக்கு பாடத்தில் மிகச் சுமாரான மதிப்பெண்களை மட்டுமே வாங்கினேன். ஒரு முறை ஆசிரியர் என்னை மனம் புண்படும்படி பேசவும், எனக்கு வருத்தமும் கோபமும் வந்தது. கணக்குப் பாடத்தை தீவிரமாகப் படித்தேன். 10-ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மாணவனாகத் தேர்ச்சிபெற்று, அதே ஆசிரியர் முன்பு கம்பீரமாக நின்றேன். அந்தக் கணம்தான் எதையும் சாதிக்க முடியும் என்பதை எனக்கு உணர்த்தியது.
லயோலா கல்லூரி மாணவன் நான். அந்தக் கல்லூரியில் ஒரு குரூப் எப்போதுமே ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடுவார்கள். நான் தமிழ் மீடியத்தில் படித்தவன் என்பதால், எனது உச்சரிப்புகள் எல்லாம் மிகவும் சுமாராக இருக்கும். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெறி இருந்ததால், நான் அந்த குரூப்புடன் இணைந்து எப்போதும் ஆங்கிலம் பேசிப் பழகிக்கொண்டிருந்தேன். அப்போது சில மாணவர்கள் தவறான புரிதல்களால் என்னை ராக்கிங் செய்தார்கள். `கண்ணு தெரியாம வாழ்ந்து என்ன பண்ணப்போற?’ என்றார்கள்.  ஏன்தான் பிறந்தோம் என்று ஒரு கணம் தடுமாறினேன். ஆனால், சில விநாடிகளில், அந்த உத்வேகம் வந்தது. ‘நான் ஆங்கிலம் கற்க  முயற்சிக்கிறேன், நீ முயற்சியே செய்யாமல், என்னைக் கேவலமாகக் கேலி செய்கிறாய். நீயே இந்த உலகத்தில் ஜாலியாக வாழும்போது நான் வாழ்வதில் எனக்கு மகிழ்ச்சியே’ எனச் சொல்லிவிட்டு  நகர்ந்தேன். நாம் வாழ்க்கையில் புதிதாக எதை முயற்சித்தாலும் நம்மை நான்கு பேர் கேலி செய்வார்கள். ஆனால், அதைக் கண்டு மனம் வெதும்பிவிடக் கூடாது என்பதை உணர்ந்தேன். ஏட்டுக்கல்வியைவிடவும் அனுபவங்கள் நிறையப் பாடங்களைக் கற்றுத்தரும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

நான் ஆசிரியராக பணியில் சேர்ந்த பிறகு, ஆங்கில மீடியத்தில் படித்தவர்களிலேயே பெரும்பாலானோர் சரியாக ஆங்கிலம் பேசவோ, எழுதவோ சிரமப்படுகிறார்கள் என்பதை அறிய முடிந்தது. பலருக்கும்  ‘தமிழும் தகராறு, இங்கிலீஷும் இடிக்கிறது’.  கல்லூரி மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் எனப் பலருக்கும் தனித்திறன் பயிற்சிகள் அவசியம் தேவை என்பதை உணர்ந்தேன். 2008-ம் ஆண்டில் ‘ஏஸ் பனேசியா லைஃப் ஸ்கில்ஸ்’ என்ற பெயரில் வாழ்வியல் மேலாண்மையை  பயிற்றுவிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினேன். இதற்கென பிரத்யேகப் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தினோம். இந்த நிறுவனம் மூலமாகப் பலச் சாதனைகளைப் புரிந்துவருகிறோம்.
‘நம்பிக்கையைவிட தன்னம்பிக்கையே பெரிது’ என்பதை  முழுமையாக உணர்ந்திருக்கிறேன். நமது எண்ணங்களும், நமது வார்த்தைகளும் சரியாக இருக்கும்போது நாம் மகிழ்ச்சியாக இயங்குவோம். எந்தக் காரணத்துக்காகவும் எந்தவொரு விஷயத்தையும் தாழ்வுமனப்பான்மையுடன் நான் அணுகுவது கிடையாது. என்னை நான் எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கிறேன். உலகில் யாருக்காகவும் எப்போதும் வளைந்து கொடுக்காதது நேரம் மட்டும்தான். ஒபாமாவுக்கும் அம்பானிக்கும் நமக்கும் ஒரு நாளில் 24 மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நேரத்தைச் சரியாக நாம் பயன்படுத்த ஆரம்பித்தாலே, வாழ்வில் பாதி சிக்கல்கள் சரியாகிவிடும். உடலில் ஏற்படும் சவாலாக இருந்தாலும் சரி,  உறவுகள், வேலையில் ஏற்படும் சவாலாக இருந்தாலும்  சரி எந்தத் தருணத்திலும் உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையையும் வெற்றிகரமாக கடந்துவரும் திறன்படைத்தவர் என்பதை  மனதில் பதியவையுங்கள். மற்றவர்களிடமும் சரி, உங்களிடமும் சரி குறைகளைப் பார்த்து மனதை உழற்றாதீர்கள், நிறைகளை மேம்படுத்துங்கள். நேர்மறையாக அணுகுங்கள். வெற்றி உங்களுடையதே!
- பு.விவேக் ஆனந்த், படங்கள்: தி.குமரகுருபரன்
ஹெல்த்தியாக ஆரம்பியுங்கள்!

நாம் `குட் மார்னிங்’, `குட் ஈவினிங்’ என ஆங்கிலத்தில் சொல்வோம். அதற்கு பதிலாக `ஹெல்த்தி மார்னிங்’, `ஹெல்த்தி ஈவினிங்’ என மாற்றிச் சொல்லிப் பாருங்கள். உங்களையே அறியாமல் ஒரு பாசிடிவ் வைப்ரேஷன் வருவதை உணர முடியும். ஹெல்த்தி என்பதை மருத்துவக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக் கூடாது.  ஃபிஸிக்கல் ஹெல்த்தி, சைக்காலஜிக்கல் ஹெல்த்தி, சோஷியல் ஹெல்த்தி, ஃபைனான்ஷியல் ஹெல்த்தி என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுக் கலவையாகக் கருத வேண்டும். நாம் ஆத்மார்த்தமாக மற்றவர்களை காலை, மாலை, இரவு என ஒவ்வொரு பொழுதிலும் வாழ்த்தும்போதும் நம்மிடமும் நேர்மறை எண்ணவோட்டங்கள் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment