Thursday, July 23, 2020

நாக்கில் தெரியும் ஆரோக்கியம்! - நன்றி: தினமலர்


நாக்கை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்பது பற்றி, சென்னை அசோக் நகர், 'டென்ட் ஷைன்' பல் மருத்துவமனையின்டாக்டர் ப.சிவகுமார்: 

உணவின் வாசனையை நுகர்வது வேண்டுமானால் மூக்காக இருக்கலாம். ஆனால், அந்த உணவின் சுவையை, நாக்கு தான் உறுதி செய்கிறது. மனிதகுலம் ஒவ்வொன்றும், வெவ்வேறு மொழிகள் பேச, நாக்கு தான் உதவுகிறது.மனிதனின் நாக்கு, தொண்டை பகுதியில் துவங்கி, நுனி வரை, ௭ - ௮ செ.மீ., இருக்கும். நாக்கு, எட்டு தசைகளால் ஆனது. நாக்குக்கு நரம்புகள் உண்டு என்பது தான் உண்மை.நாக்கின் மேல் புறத்தில் மொட்டு போன்ற சுவை அரும்புகள் இருக்கும். அவை தான், உணவின் சுவையை உணரச் செய்கின்றன. அதே நேரத்தில், நாக்கின் கீழ்ப்புறத்திலும், மொட்டுகள் இருக்கும். அவை, சுவை அரும்புகள் கிடையாது. 

அடிப்படையான சுவைகளான இனிப்பு, புளிப்பு, கசப்பு, கரிப்பு போன்றவற்றை, நாக்கு தான் உணர்கிறது. முன்புறம் இனிப்பு, பின்புறம் கசப்பு என சொல்வதெல்லாம் தவறு. நாக்கின் அனைத்து பகுதிகளிலும், அனைத்து விதமான சுவைகளை அறிய முடியும். நாக்கில் உள்ள சுவை அரும்புகள், என்னென்ன சுவை என்பதை, மூளைக்கு எடுத்து செல்கின்றன. ஆனால், சுவை நரம்புகள் மூலம் காரம், மூளைக்கு செல்வதில்லை. அதற்கு மாறாக, அதில் உள்ள அதிக வெப்பம் மற்றும் காரம், நரம்பின் மூலமாகத் தான், மூளைக்கு செல்கிறது.இதனால் தான், அதிக காரமான உணவை உட்கொள்ளும் போது, கண்களிலும், மூக்கிலும் நீர் வந்து விடுகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல, உடல் உபாதைகளை, நாக்கை வைத்தே கண்டுகொள்ளலாம். இதனால் தான், டாக்டர்கள், நாக்கை நீட்டு என்கின்றனர். 

ஆரோக்கியமான நாக்கு, இளம் சிகப்பு நிறத்தில், சற்றே சொரசொரப்பு தன்மையுடன் இருக்கும்.நாக்கின் நிறமோ, வடிவமோ மாறுபட்டால், அது ஏதோ ஒரு வகை நோயின் அறிகுறி என்பதை அறிந்து கொள்ளலாம். நாக்கில் வெள்ளை படலம் அதிகம் இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி, உடலில் குறைந்து விட்டது என்பதை அறியலாம். சிகப்பாக இருந்தால், வைட்டமின் - பி சத்து குறைபாடு உள்ளது என்பதை அறியலாம். கறுப்பு நிறத்தில் இருந்தால், மோசமான வாய் பராமரிப்பு என்பதை அறிந்து கொள்ளலாம்.நாக்கை பராமரிப்பது எளிது. ஒவ்வொரு முறை, சாப்பிட்ட பிறகும், வாயை நன்கு கொப்பளித்து துப்பி, நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாயை உலர்ந்த நிலையில் வைக்காமல், அடிக்கடி தண்ணீர் குடித்து, நாக்கை ஈரமாக வைத்துக் கொள்ள வேண்டும். நாக்கில் ஆறாத புண், வலி போன்றவை இருந்தால், டாக்டரிடம் அவசியம் காண்பிக்க வேண்டும்!

No comments:

Post a Comment