Thursday, August 18, 2016

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 23



சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி
சென்ற இதழ் கட்டுரையைப் படிச்சுட்டு, திருச்சிலேர்ந்து ஜவஹர்ங்கிறவர் போன் பண்ணியிருந்தாரு. “ஜூஜூக்கு டாய்லெட்டே இல்லியே, அங்கிள்? பாவம், அது எங்கே டூ பாத்ரூம் போகும்?”னு கேட்ட குழந்தை தன்னை ரொம்பவும் இம்ப்ரெஸ் பண்ணிட்டதா சொன்னார். எதிர்காலத்துல அந்தக் குழந்தை, உலகமே போற்றிக் கொண்டாடும்படியான ஓர் உயர்ந்த நிலைக்கு நிச்சயம் வரும்கிற தன்னோட நம்பிக்கையையும், ஆசிகளையும் பகிர்ந்துக்கிட்டார்.

கூடவே, இப்போ ஐ.டி-யில வேலை செய்துட்டிருக்கிற தன் மகன் ராஜீவ் பத்தியும் ஒரு தகவல் சொன்னாரு ஜவஹர். ராஜீவ் சின்ன வயசுல இப்படித்தான் சுட்டித்தனமா ஒரு கேள்வி கேக்க, அது தன் சிந்தனையை ரொம்பவே தூண்டினதா சொன்னார். குழந்தை ராஜீவ் ஏதோ ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரிச்சுத் தின்னத் தொடங்கறப்போ, ஜவஹர் யதேச்சையா அந்த பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிப் பார்த்திருக்காரு. 

அது நாள்பட்டது, எக்ஸ்பயரி டேட் முடிஞ்சு போனதுன்னு தெரியவும், அவர் உடனே ராஜீவைத் தடுத்து, “இந்த பிஸ்கட் வேண்டாம்ப்பா உனக்கு. வேற வாங்கித் தரேன். இது கெட்டுப் போனது! இதைத் தின்னா வயிறு வலிக்கும்”னு சொல்லி அதை வாங்கி, அங்கே இருந்த ஒரு தெருநாய்க்குப் போட்டாராம். அந்த நாய் அந்த பிஸ்கட்டை எடுத்துத் தின்னவும், “கெட்டுப் போனதை நாம திங்கக் கூடாதுன்னா, நாய்க்கு மட்டும் அதைப் போடலாமாப்பா? அதுக்கு வயிறு வலிச்சா பரவாயில்லையா? அது பாவமில்லையா? அதுக்கும் நல்ல பிஸ்கட்டைத்தானே வாங்கிப் போடணும்?”னு ராஜீவ் கேட்டானாம். 

“அப்பத்தாங்க எனக்கு உறைச்சுது. நம்மைப் போலத்தானே மத்த ஜீவராசிகளும்னு இந்தக் குழந்தைக்கு இருக்கிற அறிவு கூட நமக்கில்லையேன்னு தோணிச்சு. அதுவரைக்கும் என்கிட்ட இருந்த டிரெஸ்களில் கந்தலையும் கிழிசலையும் ஏழைகளுக்குக் கொடுத்து, ஏதோ பெரிய சேவை பண்ணிட்டதா மனசுக்குள்ள பெருமைப்பட்டுக்கிட்டிருந்தேன். மகன் கேட்ட இந்த கேள்விக்கப்புறம் அது உறுத்தலாயிடுச்சு. பேன்ட், சட்டைகள் கொஞ்சம் பழசானதும், நல்லா இருக்கிறப்பவே அதை வாஷ் பண்ணி, அயர்ன் பண்ணிக் கொடுக்கிறதை வழக்கமாக்கிக்கிட்டேன்”னார் ஜவஹர்.

வாழ்த்துக்கள் ஜவஹர்! ‘தகப்பன்சாமி’கள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அவ்வப்போது கிடைக்கும் இந்த மாதிரி குரு உபதேசங்களை எந்தவித ஈகோவுமின்றி நாமும் கடைப்பிடிப்போம். போன இதழ்ல சொன்ன மாதிரி, போகிற இடமெல்லாம் அன்புப் பயிரை விதைத்துக்கொண்டே செல்வோம். 

ஏன்னா, மனிதன்கிட்டே இருக்க வேண்டிய பல நல்ல குணங்கள்ல மிக முக்கியமான குணம் அன்புதாங்க. ஆனா, இன்னிக்கு ரெண்டு காலேஜ் பசங்க நீ பெரியவனா, நான் பெரியவனான்னு காட்ட, ஏதோ தாதாக்கள் போட்டி போடுற மாதிரி, கத்தியும், கம்பும், அரிவாளுமா திரியறதையும், பொது இடங்கள்ல ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக்கிட்டும் குத்திக்கிட்டும் தங்களோட `வீர’த்தைக் காட்ட நினைக்கிறதையும் பார்த்தா, மகா கேவலமா இருக்கு. இவங்களோட இந்தச் செயலால இவங்களுக்கு மட்டும் கேவலம் இல்லே; இவங்களைப் பெத்தவங்களுக்கும் கேவலம்; இவங்களோட குருமார்களுக்கும் கேவலம்; இவங்க படிக்கிற கல்லூரிகளுக்கும் கேவலம்; இந்தச் சமுதாயத்துக்கும் கேவலம்; இவங்களால இந்த நாட்டுக்கே கேவலம்!

ஒரு கல்லூரியில 1500 பேர் படிக்கிறாங்கன்னா, அவங்க அத்தனை பேருமே இப்படி நடந்துக்கிறது இல்லே. ஒவ்வொரு கல்லூரியிலயும் யாரோ ஒரு ஏழெட்டுப் பேர்தான் இப்படி மோசமான முன்னுதாரணமா நடந்துக்கிறாங்க. ஆனா, அவங்களால குறிப்பிட்ட காலேஜ் மொத்தத்துக்கும் கெட்ட பேர். ‘காலேஜ் பசங்களா..? அவங்க எங்கே உருப்புடப் போறாங்க? பொட்டைப் புள்ளைங் 
களை சைட் அடிக்கிறதுக்கும் ஒருத்தனோடு ஒருத்தன் வெட்டி மடியறதுக்கும்தானே அவங்க காலேஜுக்கே போறாங்க! படிச்சு உருப்புடறதுக்கா போறாங்க!”ன்னு ஒரு பெரியவர் மொத்த கல்லூரி மாணவர்களையும் சபிப்பதை என் காது படக் கேட்டு வருந்தினேன். தாங்கள் சிறந்த மாணவர்களாக விளங்குவது மட்டுமல்ல; தகாத வழியில் செல்லும் தங்களின் நண்பர்களையும் திருத்தி, பக்குவப்படுத்தி நல்ல வழியில் கொண்டு வரும் பெரிய பொறுப்பும் மற்ற மாணவர்களுக்கு இருக்கு.

வீரம்கிறது எதிராளியைப் பழிவாங்குறதில இல்லை; அவனை மன்னிக்கிறதுல இருக்கு. இதை, வன்முறையைக் கையில் எடுக்கும் இந்தப் பசங்களுக்கு நாம புரிய வெச்சிருக்கோமா? போற இடமெல்லாம் அன்பை விதைக்கச் சொல்லிப் பழக்கியிருக்கோமா? இனியாவது பழக்குவோமா?

அன்பை விதைக்கும் வழிமுறை அப்படி யொண்ணும் கஷ்டமானதோ, கடைப்பிடிக்க முடியாததோ இல்லை. சின்னச் சின்ன விஷயங்களை நாம தொடர்ந்து பண்ணினாலே போதுமானது. அது என்னன்னு பார்ப்போம்.

* உங்க முகத்தை எப்பவும் உர்ருனு வெச்சுக் காதீங்க. தெரிஞ்சவங்களோ, தெரியாதவங்களோ யாரைப் பார்த்தாலும் லேசா ஒரு புன்சிரிப்பை வெளிப்படுத்துங்க. போலியா நடிக்கிறதுன்னு இதுக்கு அர்த்தம் இல்லை. வெறுமே உதட்டுல சிரிக்காம உள்ளார்ந்து சிரிக்கப் பழகுங்க. உங்க உடம்பும் மனசும் லேசாகுறதை உணர்வீங்க.

 எதிராளியை மதிக்கக் கத்துக்குங்க. ஒவ்வொருவருக்கும் அவங்க சுயமரியாதை ரொம்ப முக்கியம். அதுக்கு மதிப்பு கொடுங்க. தன்னை மதிக்கிறவனைத்தான் எவன் ஒருவனும் மதிப்பான். தவிர, எதிராளியை மதிக்கிறதுனால உங்க கௌரவமோ, அந்தஸ்தோ குறைஞ்சுடாது. அப்படி நினைச்சீங்கன்னா, அது உங்க தப்பு.

 நன்றி சொல்லப் பழகுங்க. ஹோட்டல்ல உங்களுக்கு சர்வ் செய்யற சர்வருக்கு, கை கழுவத் தண்ணி எடுத்துக் கொடுத்த முகம் தெரியா நண்பருக்கு, உங்களை டிராப் பண்ணின ஆட்டோ டிரைவருக்குன்னு யார் யாருக்கெல்லாம் முடியுமோ, தேங்க்ஸ் சொல்லிப் பாருங்க. அதுக்காக ஆட்டோ டிரைவர்கிட்டே பேரம் பேச வேணாம்னு சொல்லலை. எது சரியான தொகையோ அதைத்தான் கொடுப்பேன்னு சொல்றது நம்ம உரிமை. ஆனா, பத்திரமா நம்மைக் கொண்டு வந்து இறக்கினவருக்கு தேங்க்ஸ் சொல்லி வழியனுப்பறது ஒண்ணும் தப்பில்லையே?

 பேசுங்க. தெரிஞ்சவங்ககிட்டே மட்டும்தான் பேசணும்கிறது இல்லை. தெரியாதவங்ககிட்டயும் பேசலாம். உங்க வாட்ச்மேன் பேரு தெரியுமா உங்களுக்கு? அவருக்கு எத்தனை பசங்கன்னு தெரியுமா? நீங்க வேலை செய்யற ஆபீஸ்ல தினமும் உங்களுக்குக் கதவு திறந்து விடுறாரே செக்யூரிட்டி, அவரோட பேர் தெரியுமா? அவருக்கு என்ன வயசுன்னு தெரியுமா? அவர் எங்கே வசிக்கிறார்னு தெரியுமா? கேளுங்க. அவர் கையில பேண்ட் எய்ட் ஒட்டியிருந்தா, ‘என்ன சார் கையில காயம்?’னு கேளுங்க. கால்ல பேண்டேஜ் ஏதாவது போட்டிருந்தார்னா, ‘என்ன சார் ஆச்சு, ஏதாச்சும் ஆக்ஸிடெண்ட்டா?’னு பரிவோடு கேளுங்க. நீங்க கைக்காசு போட்டு அவருக்கு மருந்து, மாத்திரை எதுவும் வாங்கிக் கொடுக்க வேணாம். உண்மையான அன்போடும் அக்கறையோடும் நீங்க கேக்குற ஒரு கேள்வியே அவர் காயத்தை ஆத்திடும். 

பேச எதுவும் இல்லையா, சும்மா ஜாலியா உங்களுக்குத் தெரிஞ்ச ஜோக்கை அவர்கிட்டே பகிர்ந்துக்குங்க. சினிமா பத்திப் பேசுங்க. ஒரு சினிமாவுல நடிகர் வடிவேலு, ஒரு சின்ன ஸ்டாம்ப்பை வெச்சுக்கிட்டு இந்தியாவுலேர்ந்து இங்கிலாந்து வரைக்கும் போய்ப் பேசுவாரே… பேசறதுக்கா டாபிக் கிடைக்காது! பேசுங்க. மனம் விட்டுப் பேசுங்க.

நான் வழக்கமா வாங்குற ரேஷன் கடையில பில் போடுறவர், கஸ்டமர்கள்கிட்டே எப்பவும் கடுகடுன்னுதான் இருப்பார். ஒரு நாள், அவரே பில் போட்டு, அவரே சாமான்களை எடை போட்டுட்டி ருந்தார். ‘பாவம் சார், ஒண்டியாளா சிரமப்படறீங்களே?’ன்னு சொன்னேன். ‘என்ன பண்றதுங்க, என் தலை யெழுத்து!’னு சலிச்சுக்கிட்டார். மறு மாசம் போறப்போ, கையில கட்டு போட்டுட்டிருந்தார். “என்ன சார் ஆச்சு?”னு கேட்டேன்.
“பைக்ல வரும்போது ஸ்லிப்பாகி விழுந்துட்டேன். நரம்பு பிசகிடுச்சு!”ன்னார். “ஃப்ராக்சர் எதுவும் இல்லையே?”ன்னேன் உண்மையான அக்கறையோடு. “எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தாங்க. ஃப்ராக்சர் இல்லைன்னுதான் சொன்னாரு டாக்டர். ஆனாலும், கடுகடுன்னு வலிக்குது!”ன்னார். “பார்த்துங்க சார், உங்களால 5 கிலோ சர்க்கரையை எடை போட்டுத் தர முடியுமா? நீங்க சிரமப்படறதைப் பார்த்தா எனக்குக் கஷ்டமா இருக்கே”ன்னேன். “விடுங்க. வாழ்க்கைன்னு வந்துட்டா நல்லதும் இருக்கும்; கெட்டதும் இருக்கும்; எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டுதான் போகணும்”னு சொல்லிக்கிட்டே எனக்கு வேண்டிய சாமான்களை எடை போட்டுக் கொடுத்தார். 

அடுத்த மாசம் போகும்போது ஞாபகமா, “இப்ப கை வலி பரவாயில்லீங்களா உங்களுக்கு?”ன்னு கேட்டேன். உண்மையிலேயே நெகிழ்ந்துட்டார். “இந்தக் காலத்துல யாருங்க இப்படியெல்லாம் ஞாபகம் வெச்சுக்கிட்டுக் கேக்கறாங்க. மனுஷனுக்கு மனுஷன் அன்பு செலுத்தறதே அபூர்வமா யிடுச்சே!”ன்னு தன் குடும்பக் கதை, சொத்துத் தகராறு, பங்காளி சண்டைன்னு என்னென்னவோ மனம் விட்டுப் பேசினாரு. என்னால முடிஞ்ச வரைக்கும் அவர்கிட்டே ஆறுதலா நாலு வார்த்தை பேசினேன். அவருக்குச் சந்தோஷமான சந்தோஷம். இதனால எனக்கென்ன லாபம்னா, அதுக்கப்புறம் எப்போ நான் ரேஷன் கடைக்குப் போனாலும், எவ்வளவு கூட்டம் இருந்தாலும், முதல்ல என்னை கவனிச்சு அனுப்பிடுவாரு. எடையும் சுத்தபத்தமா இருக்கும்.

சுய லாபம் கருதித்தான் அடுத்தவங்களை மதிக்கணும், அடுத்தவங்க கஷ்டத்தைக் காது கொடுத்துக் கேக்கணும்னு சொல்ல வரலை. உண்மையான அக்கறையோடு எதிராளியை விசாரிச்சா, அதுக்கு அவங்க காண்பிக்கிற எதிர்வினை அத்தனை அழகா இருக்கும்னு சொல்ல வரேன்; உங்களுக்காக அவர் எதுவும் செய்வார்னு சொல்றேன்.

ஒருத்தரைப் பார்த்ததுமே இவர் இப்படித்தான், இவர் யோக்கியம் இல்லை, டிராஃபிக் கான்ஸ்டபிளா, இவர் மாமூல் வாங்குவார்னு நீங்களா ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க. உண்மை என்னன்னு தெரியாமத்தான் நாம பல நேரங்கள்ல இது மாதிரியான முன்முடிவுகளை எடுத்துடறோம். “ஒருத்தரை இவர் யார், எப்படிப்பட்டவர்னு எடை போடுறதுல இறங்கிட்டோம்னா, அப்புறம் நமக்கு அன்பு செலுத்தவே நேரம் இல்லாம போயிடும்”னு அன்னை தெரசா சொன்னதை இங்கே ஞாபகப்படுத்த விரும்பறேன்.

ஒருவரோடு பேசுறதுக்கு முன்னாடி, அவர் நிலையில் இருந்து கொஞ்சம் பாருங்க. அவருடைய மனநிலை என்ன, அவரோட பிரச்னை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு, உண்மையான அக்கறையோடு அவரை அணுகினீங்கன்னா அவருக்கும் சந்தோஷம்; உங்களுக்கும் சாதகம்!

கவனம் வெச்சுக்குங்க, இதையெல்லாம் நீங்க செய்யறது அவங்களோட நல்லதுக்காக மட்டுமில்லே; உங்களோட சந்தோஷத்துக்காகவும்தான்!

இதை எழுதிட்டிருக்கும்போதே, வாட்ஸப்பில் எனக்கு வந்த பத்து செகண்ட் கதை ஒண்ணைப் பகிர்ந்துக்க விரும்பறேன். ஒரு பணக்காரருக்கு காலையில ஒரு போன் வந்ததாம். “சார், நாங்க முதியோர் இல்லத்துலேர்ந்து பேசறோம். உங்க செல்ல லாப்ரடார் நாயை காணோம்னு விளம்பரம் கொடுத்திருந்தீங்களா?” “ஆமாம்”னார் பணக்காரர். “கவலைப்படாதீங்க சார், அது இங்கேதான் உங்க அம்மாவோடு விளையாடிக்கிட்டிருக்கு!”

இது எப்படி இருக்கு? தாய் மீதே அன்பு இல்லாம முதியோர் இல்லத்துல கொண்டு போய்ச் சேர்த்தவனுக்கு நாய் மீது மட்டும் அன்பு எங்கிருந்து வந்தது? யோசிச்சுப் பாருங்க, அது நாய் மீதான அன்பு இல்லை. அதன் விலை மீதான கவனம்; தனது அந்தஸ்தின் மீதான அக்கறை!

No comments:

Post a Comment