Saturday, May 6, 2017


மனசே...மனசே...குழப்பம் என்ன?

ஆர்.வைதேகி
``அவன் சரியான மென்டல்டா'' என்று ஜாலிக்காக கலாய்க்கப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் இப்போது உண்மையாகிவிடுவோ என்கிற பதற்றத்துக்கு நம்மைத் தள்ளி யிருக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை மன அழுத்தம், டிப்ரஷன் என்றால், என்ன என்று தெரியாத இந்தியாவில் 10 வயது சிறுவன் முதல் 70 வயது பாட்டி வரை எல்லோரையும் தாக்கும் நோயாக முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறது மன அழுத்தம்.

இந்தியாவில் இதயநோய், தொற்றுநோய், புற்றுநோய், சுவாசக்கோளாறுகள் மற்றும் சாலை விபத்துகள் என்ற இந்த ஐந்தும்தான் உயிரைப் பறிக்கும் ஆபத்து கொண்டவை என அடையாளப்படுத்தப்பட்டவை. ஆனால், இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த ஐந்து காரணங்களைவிடவும், மன அழுத்தப் பாதிப்பினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய ஆய்வு. 

மாறிவரும் வாழ்வியல் சூழல், நம்முடைய பணிச்சுமை, குடும்ப உறவுச் சிக்கல்கள், காற்று தொடங்கி நீர் வரை அடைந்திருக்கும் மாசுபாடு என மன அழுத்தத்துக்கான காரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மன அழுத்தத்திலிருந்து விடுதலை தேடி சாமியார்களை நாடுவதும், மனநல ஆலோசனை பெறுவதும் அதிகரித்துள்ளன.
``மன அழுத்தத்தை ஆரம்பநிலை, மிதமானது, தீவிரமானது என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

ஆரம்பநிலை மன அழுத்தத்தால் பாதிக்கப் படுவோர், தானாகவே சரிசெய்து கொள்வார்கள். இது கவலைக்குரியதல்ல. மிதமான மன அழுத்தத்தில் கவனமின்மை அதிகரிக்கும். தற்கொலை எண்ணம் வந்தாலும், அதைச் செயல்படுத்தத் தோன்றாது. நாளைக்கு சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை இருக்கும். கவுன்சலிங் கொடுத்தாலே அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.

விடுபடத் தெரியாமல் அதிலேயே மூழ்கிப் போய் கிடப்பதுதான் தீவிர மன அழுத்தம். தற்கொலை எண்ணம் துரத்தும். என்னால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை எனத் தோன்றும். இதை மருந்து, மாத்திரைகளால் மட்டும்தான் சரிப்படுத்த முடியும். இந்த மூன்றுநிலைகள் தவிர, யூனிபோலார் டிப்ரெஷன், பைபோலார் டிப்ரெஷன் என மேலும், இரண்டு வகையான மன அழுத்த நோய்கள் இந்தியர்களைத் துரத்துகிறது'' என்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

யூனிபோலார் டிப்ரஷன் என்பது சாதாரண  மன அழுத்தத்துக்கும் தீவிரமடையும் நிலைக்கும் இடைப்பட்டதுதான் யூனிபோலார் டிப்ரஷன்.   வருத்தமோ கவலையோ சில நாள்கள் மட்டுமே இருக்கும். அடுத்தடுத்த நாள்களில் அவற்றைக் கடந்து சாதாரண மனநிலைக்கு வந்துவிடுவார்கள். மீண்டும் மன அழுத்தத்துக்குள் போவார்கள். மறுபடி மீள்வார்கள். இதுதான் யூனிபோலார் டிப்ரெஷன்.

இன்னொருவகை... பைபோலார் டிப்ரஷன். இவர்களுக்கு கவலை அதீதமாக இருக்கும். அதிலிருந்து மீண்டு சகஜ நிலைக்கு வருவார்கள். உடனடியாக சந்தோஷ மனநிலைக்குப் போவார்கள். கவலைக்கும் காரணம் இருக்காது. அதீத சந்தோஷத்துக்கும் சரியான காரணம் இருக்காது. ஒருவாரம் கவலை, ஒரு வாரம் மகிழ்ச்சி அல்லது 15 நாள்கள் கவலை, அடுத்த 15 நாள்கள் மகிழ்ச்சி என இருப்பார்கள். புகழ் வெளிச்சத்தில் இருக்கும் பிரபலங்கள், அதிக வேலைப்பளு கொண்ட உயர் அதிகாரிகள் இந்தப் பிரச்னைகளை சந்தித்துவருகிறார்கள். 

``ப்ளஸ் - 2 வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, நான் படிக்க வேண்டும் என கனவு கண்ட சென்னையின் மிக முக்கியமானப் பெண்கள் கல்லூரியில் சேர்ந்தேன். என் குடும்பத்தில் இருந்து கல்லூரிக்குச் சென்ற முதல் தலைமுறை நான் தான். கல்லூரிகள் இப்படித்தான் இருக்கும் என சினிமாவில் பார்த்துப் பார்த்துப் பழகிய எனக்கு நிஜம் வேறு மாதிரி இருந்தது. அந்தக் கல்லூரியில் அதிகம் படித்தது பிரபலங்கள் மற்றும் சென்னையின் முக்கியப் பிரமுகர்களின் மகள்கள்தான். அவர்களின் வேகத்துக்கும், அவர்களின் பழக்கவழக்கங்களுக்கும், பேச்சுக்கும் என்னால் ஈடுகொடுக்கமுடியவில்லை. எவ்வளவு நன்றாகப் படித்தாலும், அவர்களைப்போல் என்னால் இருக்க முடியவில்லையே என்பது எனக்கு நாளடைவில் பெரிய டிப்ரஷனாக மாறியது. இரண்டாம் ஆண்டில் முழுக்க முழுக்க படிப்பில் இருந்து கவனம் திசைதிரும்பியது.
யாரைக் கண்டாலும் கோபம், அளவுக்கு மீறி வீட்டில் உள்ளவர் களைத் திட்டுவது என மாறிப்போனேன். `இதற்கெல்லாம் யாருக்காவது தற்கொலை எண்ணம் வருமா' என்கிற அளவுக்கு தற்கொலை எண்ணம் என்னைத் துரத்தியது. தொடர்ந்து கவுன்சலிங் சென்று, பின்னர் இந்தத் தீவிர மன அழுத்தத்தில் இருந்து மீண்டேன். ஆனால், இப்போது வீட்டுச் சுமைகளையும், பணிச்சுமைகளையும் சுமக்க முடியாமல் திணறுகிறேன். மீண்டும் மன அழுத்தம் அதிகரிக்கிறது'' என்கிறார் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரி ஒருவர்.

ஒவ்வொருவருக்கும் மன அழுத்தத்துக்கான காரணங்கள் வேறு. மன அழுத்தத்திலிருந்து மீண்ட கதையைப் பகிர்வதைவிடவும், அப்படியொன்று இருப்பதை ஒப்புக்கொள்ளவும், அதற்குச் சிகிச்சை பெறவும்தான் அதிக தைரியம் தேவை. அது இருந்தால் மட்டுமே இந்த மன அழுத்த நோய்களிலிருந்து வெளியே வர முடியும். 

மன அழுத்தத்தை உண்டாக்குவதில் முக்கிய மானவை சமூகக் காரணங்கள். வறுமை, யதார்த்தத்தை மீறிய எதிர்பார்ப்பு, திருப்தியடையாத மனநிலை முதலானவை முக்கிய காரணிகள் என்கிறார்கள் மருத்துவர்கள். 

`` `கிளஸ்டர் சூஸைட்' என ஒன்று உண்டு. கொத்துக்கொத்தாக தற்கொலைகள் நடக்கும். ஒரு மாணவி தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்திருப்பாள். அதைப் பார்த்து அதே தெருவில் வசிக்கிற இன்னொரு மாணவியும் வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக தற்கொலை செய்துகொள்வாள். விவசாயிகள் தற்கொலைகூட இந்த ரகம்தான்.
அப்பா, அம்மாவின் சரும நிறத்தையும் சுருள் முடியையும் மரபணு மூலம் பிள்ளைகள் பெறுவது போலவே மன அழுத்தத்தையும் பெறுவார்கள் என்கிறது அறிவியல். ஒரு குடும்பத்தில் தற்கொலை நடந்திருக்கிறது என்றால், அந்தக் குடும்பத்தின் மற்ற நபர்களை மிகக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் குடும்பத்துப் பிள்ளைகளை டேக் இட் ஈஸி பாலிசி மனப்பான்மையுடன் வளர்க்க வேண்டும்.

குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும். படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். சிரித்துக் கொண்டும் பேசிக்கொண்டும், துள்ளிக்கொண்டும் இருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. ஆனால், அதைக் கட்டுப்படுத்தி, ஒரே இடத்தில் உட்காரவைத்து, பிஞ்சிலேயே மன அழுத்தத்துக்கான விதையை ஊன்றுகிறோம். குழந்தைகளுக்கு விளையாட்டு என்றால் பெரியவர்களுக்கு உடற்பயிற்சி. இவற்றின் மூலம்தான் மூளையின் நியூரோ கெமிக்கல் சமநிலையின்மையைச் சரிப்படுத்த முடியும்.
மனிதனை சமூக விலங்கு என்றே சொல் கிறோம். அவனைச் சுற்றி நிறைய உறவுகளும் நட்புகளும் இருக்க வேண்டும். சக மனிதர்களுடன் கலந்து பேசி, பழகும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். 
வெயில் படாத பகுதியிலேயே இருப்போருக்கும் மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. வெயில் வெளிச்சம் தொடர்ந்து பட்டுக்கொண்டிருந்தாலே மன அழுத்தம் பாதியாகக் குறையும். பழங்கள் சாப்பிடுவதை எல்லோரும் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். பழங்களில் `ஃபீல் குட் ஃபேக்டர்ஸ்' எனச் சொல்லப்படுகிற செரட்டோனின் போன்ற கெமிக்கல்கள் உள்ளன. அவை மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படுத்தும்'' என சின்னச் சின்ன தீர்வுகள் சொல்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

``பகிர்தல் இல்லாமல்போன வாழ்க்கை முறைதான் மன அழுத்தம் அதிகரித்ததுக்கான முதல் காரணம். துக்கமோ சந்தோஷமோ, வெறுமையோ எதுவாக இருந்தாலும் உடனடியாக வீட்டில் உள்ளவர்கள், பெற்றோர், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். எதையுமே பகிராமல்  பயந்துகொண்டே ஒவ்வொரு நாளையும் தொடர்வதுதான் மன அழுத்தத்தின் முதல் நிலை.

  பெரும்பாலான குடும்பங்களில் ஒரே குழந்தைதான். உறவினர் வீடுகளுக்குப் போவதோ, திருமணம், சாவு வீடுகளுக்குப் போவதோ குறைந்துவிட்டது. குழந்தைகளுக்காக உழைப்பதாக சொல்லிக்கொண்டு இரவும் பகலும் ஓடுகிறோம். ஆனால், அதே குழந்தைகளுடன் தினமும் அரைமணி நேரம் உட்கார்ந்து பேச எத்தனை பெற்றோர் தயாராக இருக்கிறார்கள்? எத்தனை அம்மாக்களுக்கு தம் பெண் குழந்தைகளின் மாதவிலக்கு சுழற்சி நினைவில் இருக்கிறது? மகளுக்கு மாதம் தவறாமல் மாதவிலக்கு வருகிறதா என்பதைக்கூட அம்மாவால் கவனிக்க முடியாதா? 
குடும்பத்துக்கென நேரம் ஒதுக்குவதுதான் மிக முக்கியமான தீர்வு. குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மனம்விட்டுப் பேச வேண்டும்.  தங்கள் பிரச்னைகளைத் தைரியமாக பெற்றோரிடம் சொல்லலாம் என்கிற நம்பிக்கையைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். எதையாவது சொல்ல வரும்போது, எரிந்து விழுவதும், அப்புறம் பேசலாம் என விலகிப் போவதும் கூடாது...'' என்கிறார் உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு.  
நாம் முடிந்தவரை எளிமையான  வாழ்க்கையைத் திருப்திகரமாக வாழ்வதும், நம்மோடு இருக்கிற மனிதர்களோடு அதிக நேரம் செலவழிப்பதும், எதையுமே எளிய உரையாடல்களின் வழி கடப்பதும் மன அழுத்தத்தைத் தவிர்ப்பதோடு நம் வாழ்வையும் மகிழ்வானதாக மாற்றும்.

No comments:

Post a Comment