Sunday, March 25, 2018

சுவை தருவது மட்டுமே சிறந்த உணவல்ல! - நன்றி தினமலர்.


சுவை தருவது மட்டுமே சிறந்த உணவல்ல!

சமையலில் பயன்படுத்தப்படும் நறுமணமூட்டிகளின் மருத்துவ குணங்கள் குறித்து கூறும், டாக்டர் வி.விக்ரம்குமார்:வரலாற்றுப் பாதையில் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, பெருங்காயம், ஏலக்காய் போன்றவற்றில் இருந்து வரும் வாசனையின் காரணமாக, முதலில் அவற்றை நறுமணமூட்டிகளாக மட்டும் பார்த்தது, மனித சமுதாயம்.

காலப்போக்கில், அவற்றில் உள்ள மருத்துவ குணங்களை கருத்தில் கொண்டு, நோய் தீர்க்கும் மருந்துகளாகவும் பார்க்க ஆரம்பித்தது.'இயற்கை மசாலா பொருட்களை அதிகமாக பயன்படுத்தும் நாடுகளை, பல நோய்கள் அண்டுவதில்லை' என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகமாக மசாலா பொருட்களை பயன்படுத்தும் இந்தியர்களை விட, அமெரிக்கர்களுக்கு மூன்று மடங்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான அபாயம் உண்டு.
மஞ்சள், கிராம்பு, லவங்கப்பட்டை போன்றவை, பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு தருகின்றன. 'அல்சைமர்' எனப்படும் மறதி நோயும், மற்ற நாடுகளை விட, நம் நாட்டில் மிக குறைவு. அதேசமயம், மசாலா பொருட்களின் பயன்பாடு அதிகம் உள்ள ஸ்பெயின், கிரேக்கம் போன்ற நாடுகளில், இதய நோயாளிகளின் எண்ணிக்கை அவ்வளவாக இல்லை.
அசைவ உணவு உட்பட, கடினமான உணவுகள், எளிதாக செரிமானமாக, சீரகம் அல்லது ஓமம் சேர்ந்த தண்ணீரை குடித்தவர்கள், தற்போது, அவற்றை மறந்து, வாயு நிரப்பிய பன்னாட்டு குளிர்பானங்களை குடிக்கிறோம்; இயல்பாக நடக்க வேண்டிய செரிமானத்துக்கு, மாத்திரைகளின் துணை தேடுகிறோம்.முன்பு, சமையலறையில் நீங்கா இடம் பிடித்த அஞ்சறை பெட்டியில் அங்கம் வகித்த மருந்து பொருட்களை, இன்றைய சமையலறைகளில் அவ்வளவாக பார்க்க முடிவதில்லை. ரசப் பொடி, சாம்பார் பொடி, இஞ்சி - பூண்டு விழுது என, அனைத்துமே, 'இன்ஸ்டன்ட்' ஆகி விட்டன.அதிவேக உலகில், நேரமின்மையை முக்கிய காரணமாக கூறி, 'ரெடிமேட்' மசாலாக்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அவற்றின் தரம் மற்றும் கலப்படத்தை உறுதியாக சொல்ல முடியவில்லை.சாப்பிடும் போது, நாவுக்கு சுவை அள்ளி தருவது மட்டுமே, சிறப்பான உணவல்ல; சுவையுடன் சேர்த்து உடலுக்கு ஊட்டம் கொடுத்து, நோய் உண்டாகாமல் பாதுகாக்கும் அரணாகவும் பயன்படுவதே,
முழுமையான உணவு.அப்படிப்பட்ட முழுமையான, திருப்திகரமான உணவை உருவாக்க, மசாலா பொருட்கள் பயன்படுகின்றன. அவற்றின் பயன்களை தெரிந்து, பல்வேறு நாடுகள் பயன்படுத்த துடித்து கொண்டிருக்கின்றன. ஆகவே, நம்முடன் பின்னிப் பிணைந்த இயற்கையான, மசாலா பொருட்களை முறையாக பயன்படுத்தி, நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment