Thursday, December 13, 2018

சுடு தண்ணீர் முடிக்கு நல்லதல்ல!

சுடு தண்ணீர் முடிக்கு நல்லதல்ல!
நன்றி: தினமலர் - பதிவு செய்த நாள் : டிச 13, 2018  00:00

தலை குளியல் முறை குறித்து கூறும், ஆயுர்வேத மருத்துவர், ரா.பாலமுருகன்: தலைக்கு, எண்ணெய் மற்றும் சீயக்காய் பொடி தேய்த்த பின், சாதாரண தண்ணீரால் தலையை அலசலாம். அதைவிட, மூலிகைகள் கலந்து கொதிக்க வைத்த தண்ணீரில் அலசினால் நல்லது. தலைக்கு சுடு தண்ணீர் பயன்படுத்தினால், முடிக்கும், கபாலத்திற்கும் கேடு விளைவிக்கும். அதனால், குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான தண்ணீரிலேயே, தலை குளிக்க வேண்டும்.நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், அதிமதுரம், நெருஞ்சில், சிறிதளவு தேயிலைப் பொடி ஆகியவற்றை கஷாயம் போல் கொதிக்க வைத்து, தலை அலசினால், முடி மிருதுவாவதுடன், உதிர்வது நிற்கும்; பொடுகுத் தொல்லையும் நீங்கும். மருதப்பட்டை, வாகை மரப்பட்டையை கஷாயம் போல் காய்ச்சி, முடியை அலசினால், தலை அரிப்பு குணமாகும். நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய், வசம்பை தண்ணீரில் கலந்து, கொதிக்க வைத்து அலசினால், புழுவெட்டு குணமாகும்.மருதோன்றி இலையை கஷாயம் வைத்து அலசினால், முடி கறுமை நிறமடையும்; இளநரை நீங்கும். படிகாரத்தை தண்ணீரில் கரைத்து அல்லது கருந்துளசி கஷாயத்தால் அலசினால், பேன் தொந்தரவு நீங்கும். கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், ரோஜா இலை சேர்த்து காய்ச்சிய கஷாயத்தால் தலையை அலசினால், முடி நன்றாக வளரும். தேக்கு மர இலையில் கஷாயம் வைத்து அலசினால், முடி உதிருவது நிற்கும்; நன்கு செழித்து வளரும்.'ஸ்நானம்' என்பது, உச்சி முதல் உள்ளங்கால் வரை, உடலைக் குளிர்வித்தல். இதுவே, 'குளித்தல்' என்று மாறிவிட்டது. தவிர, தினமும் தாராளமாக, தலைக்குக் குளிக்கலாம். ஆனால், அதற்கென சில வழிமுறைகள் உள்ளன. பெண்களுக்கு அதிக முடி இருப்பதால், சளி தொந்தரவு ஏற்படும் என்பதாலேயே, தினமும் தலைக்குக் குளிக்கக் கூடாது என்கின்றனர். ஆயுர்வேதத்தின்படி, தினமும் குளிப்பது தான் சிறந்தது. தலைக்கு குளிக்கும்போது, உடலுக்கு வெதுவெதுப்பான நீரும், தலைக்கு குளிர்ச்சியான நீரும் ஊற்றிக் குளிக்கக்கூடாது.தற்போதைய இளைய தலைமுறையினர், சரியாக தலையைத் துவட்டுவதில்லை. இப்படிபட்டவர்கள், 'ஹெல்மெட்'டால் வியர்வை ஏற்படும் நிலையில் உள்ளவர்கள், தலை அதிகமாக வியர்ப்பவர்கள், தலையில் நீர்கோர்த்து இருப்பவர்கள், சாம்பிராணி புகை போடலாம். இது, தலையில் நீர் கோர்த்துக் கொள்வதைத் தடுக்கும்.தவிர, நம் முன்னோர், கோவில் குளம், நீர்நிலைகளில் குளித்த பின், நெற்றி நிறைய திருநீற்றால் பட்டை அடிப்பர். அந்த திருநீறானது, தலையில் உள்ள நீரை முற்றிலுமாக இறக்கிவிடும். இப்போதைய தலைமுறையினர், இந்த வழிமுறையைப் பின்பற்றுவதை தவிர்க்கின்றனர். அதனால், இதற்கு மாற்றாக, தலையை துவட்டிய பின், 'ராஸ்னாதிக்' என்ற பொடியை, உச்சியில் சிறிதளவு வைத்துக் கொண்டால், தலையில் நீர் கோர்த்துக் கொள்ளாது!

No comments:

Post a Comment