Thursday, February 21, 2019

தமிழ்மொழி போற்றுவோம்! இன்று உலக தாய்மொழிகள் தினம் thanks to dinamalar.com

 தமிழ்மொழி போற்றுவோம்!  இன்று உலக தாய்மொழிகள் தினம்
35Shares
புலம்பெயர்ந்து வேறுநாட்டில் இருக்கிறோம். யாரோ இருவர் நம் தமிழ்மொழியில் பேசிக்கொண்டு செல்கிறார்கள். நமக்குள் சொல்ல முடியாத பெருமகிழ்ச்சி! ஓடிச்சென்று அவர்களை உறவினர்களைப் போல் எதிர்கொள்கிறோம். அவர்களோடு அன்னைத் தமிழில் பேசி மகிழ்கிறோம். நம்மை இணைக்கும் அன்புச் சங்கிலி தமிழ்மொழிதான்!

அதனால்தான் தாய்மொழியில் யார் பேசினாலும் நம் தாயிடம் பேசியதைப் போலப் 
பெருமகிழ்ச்சி நமக்கு ஏற்படுகிறது!

தாய்க்கு நிகரானது


“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பாவேந்தர் பாரதிதாசன் சொன்னது போல் தமிழ் இன்றும் என்றும் நம் உயிராகவும் அடையாளமாகவும் திகழ்கிறது. மொழி நம் பண்பாட்டின் விழி. தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்ற பொருள் உண்டு. 
பேசினாலும் கேட்டாலும் இனிக்கிற நன்மொழி நம் மொழி. தமிழ் தமிழ் என்று சொன்னால் அமிழ்து அமிழ்து என்று ஒலிக்கிறது.“நல்ல தமிழ்நுாலைப் படித்தேன், இன்று முடித்தேன், 
ஒரு படித் தேனைக் குடித்தேன், நற்கருத்தைச் சுவைத்தேன், அதன் நுாற்சுவையை என் எழுத்தில் வடித்தேன்” என்று சொல்லிப் பாருங்கள். ஒரு வாக்கியத்தில் எத்தனைத் தேன்! 
அதனால்தான் மகாகவி பாரதியார், “செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” என்று பாடினார்.


தொன்மையான மொழி


லத்தீன் மொழிக்கும் கிரேக்க மொழிக்கும் முந்தைய மொழி நம் தமிழ்மொழி. அதன் கற்சான்றுகளை தமிழ்ப் பிராமி எழுத்துகளாக காலம் இன்னும் நம் கண்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது.திருப்பரங்குன்றத்திலும் திருவாதவூரிலும், அழகர் மலையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான தமிழ்ப் பிராமி எழுத்துகளை இன்றும் காண முடிகிறது. 
மூவாயிரம் ஆண்டு தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட உலகின் உயர்தனிச்செம்மொழி, எட்டுகோடி மக்களால் பேசப்படும் தன்னிகரற்ற மொழி, தமிழரின் பண்பாட்டைத் தன்னகத்தே கொண்ட மொழி. இலங்கையிலும் சிங்கப்பூரிலும் அரசு மொழியாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. உலகின் தொன்மையான இருபதுமொழிகளில் தமிழ் தனித்துவமான மொழியாகத் திகழ்கிறது. 
யுனெஸ்கோ மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் உலக தாய்மொழிகள் தினத்தை பிப்ரவரி 21 அன்று உலகெங்கும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.திருக்குறள் படிப்பதற்காகவே தான் தமிழ் படித்ததாக மகாத்மா காந்தி குறிப்பிட்டார். தமிழில் கையெழுத்து இடுமளவுக்கு அவர் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். 
தூத்துக்குடியில் காந்தி பேசும்போது ஆங்கிலத்தைவிடத் தமிழர்கள் தமிழுக்கு அதிக மதிப்பளித்தல் வேண்டும் என்று பேசினார். அவர் தமது தன் வரலாற்று நுாலான சத்திய சோதனையை ஆங்கிலத்தில் எழுதாமல், தம் தாய்மொழியான குஜராத்தி மொழியில்தான் முதலில் எழுதினார்.
உலகமெங்கும்நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி எனும் இலக்கியத்தை தாகூர் அவரது தாய்மொழியான வங்கமொழியால்தான் முதலில் எழுதினார். அதன்பின் அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகின் பார்வைக்குக் கொண்டுசென்றார். 
பலமொழிகளைக் கற்றுத்தேர்ந்து தமிழும் ஆங்கிலத்திலும் படைப்பிலக்கியங்கள் படைத்த மகாகவி பாரதியார், “ யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று எழுதினார். 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையால் அதனால்தான் சொல்லமுடிந்தது.

லண்டன் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் குறுந்தொகையின் புகழ்மிக்க பாடலான “யாயும் ஞாயும் யாராகியரோ” பாடலின் அழகான உவமையான “செம்புலப் பெயல் நீர்போல அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே” எனும் உவமை இடம்பெற்றுள்ளது. இலங்கை, கனடா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மர், மொரிசியஸ், தென்னாப்பிரிக்கா, இத்தாலி, நோர்வே, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, பிஜி போன்ற நாடுகளில் தமிழ் இன்றும் தமிழ்மக்களால் பேசப்படுகிறது.

தமிழில் மின்னஞ்சல்
தகவலை அழகு தமிழில் இன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பமுடிகிறது. படங்களையும் கோப்புகளையும் இணைத்தனுப்ப முடிகிறது. அதைக்கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ள சிவா ஐயாதுரை தமிழர் என்பதில் நமக்கு எவ்வளவு பெருமை!

தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்க நாட்டின் பள்ளியில் உயர்நிலைப்பள்ளி மாணவராகப் பயின்றபோதே மின்னஞ்சல் அனுப்பும் முறையைக் கண்டுபிடித்த பெருமையைப் பெற்றவர்.1996ல் தொடங்கப்பட்ட உலகின் முன்னணி இணைய நிறுவனமான கூகுளின் தலைமைச் செயல் அலுவலரான சுந்தர் பிச்சை உலகப்புகழ் பெற்ற தமிழராகத் திகழ்கிறார்.மதுரையில் பிறந்த இவர் எடுத்த முயற்சிகளால் தமிழ், கூகுளில் சிறப்பிடம் பெற்றுள்ளது. தானியங்கி மொழிமாற்றச் சேவையைக் கூகுள் தமிழுக்கு அளித்துள்ளது.
தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாதவர்களுக்கு கூகுள் நிறுவனம் கூகுள் ஒலிபெயர்ப்பை வழங்கிவருகிறது. நாம் பேசினால் தானாகவே தட்டச்சு செய்துதரும் வசதியைக் கூகுள் தந்துள்ளது. 
இதனால் தமிழ்த் தட்டச்சு தெரியாவிட்டாலும் பேசி நம்மால் அதைத் தட்டச்சு செய்ய முடிகிறது.

அன்றாட வாழ்வில் தமிழ்


உலகத்தமிழர் எல்லோரும் தமிழைத் தங்கள் அடையாளமாய் கருதித் தங்கள் பிள்ளைகளை வாரஇறுதி நாட்களில் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்க, நாமோ பாஸ் பண்ணி, திங்க் பண்ணி, ஸ்டடி பண்ணி, வாக் பண்ணி என்று ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசிக்கொண்டிருக்கிறோம்.

நம்மால் என்ன செய்ய முடியும் என்று கேட்கிறீர்களா? நம் கையெழுத்தை இனி தமிழில் மட்டுமே இடவேண்டும் என முடிவுசெய்வோம். அலைபேசியில் பேசத்தொடங்குமுன் ஹலோ என்று தொடங்குவதற்குப் பதில், வணக்கம் என்று சொல்லி நம் உரையைத் தொடங்கலாம். நம் முகநுால் முகவரியைத் தமிழில் தரலாம். 
'தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்கும்' என்று சொன்ன அறிஞர் டார்வினின் பொன்மொழிக்கேற்ப தமிழ் மூவாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தகுதியோடும் தனித்தன்மையோடும் இளமையோடும் நம் இதயங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறது. 
தொன்மை, முன்மை, எளிமை, ஒளிமை, இளமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை எனும் பல்வேறு சிறப்புகளையும் உடையது தமிழ்மொழி என்று தேவநேயப் பாவாணர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் மொழியில் பேசுவதும் அன்றாட வாழ்வில் தமிழுக்குச் சிறப்பிடம் தருவதும் தமிழின் சிறப்பை அடுத்த தலைமுறை குழந்தைகளுக்குத் சொல்லி அவர்களைத் தமிழ் படிக்கவைப்பதுமே இன்றைய தேவை.

- - முனைவர் 
சவுந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத் தலைவர்

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரி, திருநெல்வேலி.
99521 40275

No comments:

Post a Comment