Sunday, August 30, 2015

ஆழ் மனதின் அற்புத சக்திகள்

நன்றி: தினமலர் - 2015/08/29

ஆழ்மனது என்பது கணினியில் உள்ள 'ஹார்டு டிஸ்க்' போன்றது. நம்முடைய கடந்த கால, நிகழ்கால சுவையான, கசப்பான அனுபவங்களை சேர்த்துக்கொண்டே இருக்கும். எப்போதாவது ஏதேனும் புதிய சூழ்நிலையை சந்திக்கும் போது நம்முடைய சுயநினைவு அதை சார்ந்த நினைவுகளை ஆழ்மனதிலிருந்து எடுத்துக்கொள்ளும்.

நம்முடைய ஆழ்மனதில் அதிகமாக எதிர்மறையான சூழ்நிலைகளையும், நினைவுகளையும் சேர்த்துவைக்கும் போது நம்முடைய வாழ்விலும் அதிகமாக எதிர்மறையான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிட்டு வாழ்வும் தவறான பாதைக்கு சென்று விடுகிறது.

நம்மை இயக்கும் ஆழ்மனம் :ஆழ்மனதில் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் போது அது அவர்களுக்குள் சென்று எதிர்மறைகளால் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்து மனதை குணப்படுத்தும் சக்தியை பகிரங்கமாக காணும்படி செய்யும். ஆழ்மனம், நாம் உறங்கும்போது கனவுகளோடு செயல்படுகிறது. வருகின்ற கனவுகள் நமது ஆழ்மனதின் பிரதிபலிப்பு.

திகில், பயம், குற்ற உணர்வு நிறைந்த கனவுகள் இதற்கு உதாரணம். ஆழ்மனதில் எதிர்மறையான எண்ணங்கள் இருந்தால் அது கனவுகளில் வெளிப்படும். நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளையும் இயக்குவது நம் ஆழ்மனமே.ஆழ்மனது நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள், நம்பிக்கை போன்றவற்றை வைத்தே செயல்படும். செல் உயிரியலாளர் டாக்டர் ப்ரூஸ் லிப்டன் ஆய்வில், 'நம்முடைய நம்பிக்கைகள் டி.என்.ஏ.,வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது' என்று கூறியுள்ளார்.

நம்முடைய நம்பிக்கைகள் நேர்மறையாக இருந்தால் அவை நமக்குள் இருக்கும் பழைய டி.என்.ஏ., செல்களின் மேல் புதிய டி.என்.ஏ., செல்களை உருவாக்குகின்றது. இதை 'எப்பிஜெனிடிக்ஸ்' என்று கூறுவர். உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு நம்முடைய எதிர்மறையாக எண்ணங்களே காரணம். இதை மருத்துவர்கள் 'சைக்கோசொமட்டிக் டிஸ்சாடர்' என அழைக்கின்றனர்.

நம்பிக்கையின் சக்தி :விஞ்ஞானி டாக்டர் கிரக் ப்ராடன் ஆய்வில், 'நம்முடைய உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகள் நம்முடைய உடலை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது' என கூறுகிறார். அவர் எழுதிய 'டிவைன் மேட்ரிக்ஸ்' என்னும் புத்தகத்தில் ஒருவர் சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருடைய புற்றுநோய் முற்றிப்போன நிலையிலும் மருத்துவர்கள் அவருக்கு நம்பிக்கை அளித்தனர்.அவர் சீனாவில் பீஜிங் நகருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 'சைனங் க்யுகாங்' என்னும் மாறுபட்ட ஒரு சிகிச்சை முறை அளிக்கப்பட்டது. இரண்டே நிமிடங்களில் புற்றுநோய் கட்டி இடம் தெரியாமல் மறைந்துபோனது. இச்சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்து மருத்துவர்கள், ஒரு கருத்தரங்கில் திரையிட்டனர். அவர்கள் என்ன பேசுவது என தெரியாமல் திகைத்து நின்றனர்.

பின், இந்த சிகிச்சைக்குப் பின்னால் இருக்கும் ரகசியத்தை அவர்களிடம் கிரக் ப்ராடன் எடுத்துரைத்தார்.'அம்மருத்துவர்கள் அப்பெண்ணுக்கு நீங்கள் முழுவதாக குணமடைந்து விட்டீர்கள் என்று முழு மனதாக நம்பும்படி கூறி அவர்களை அம்மனநிலைக்கு எடுத்துச்சென்றனர். பின், அங்கு கூடியிருக்கும் மருத்துவர்களும் அவர்களுக்கு புற்றுநோய் குணமடைந்து விட்டது என, மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே அந்த சிகிச்சை அளிக்கும் அறையில் நேர்மறையான உணர்வுகளை அதிகமாக வரவழைத்தனர். எனவே அந்த நேர்மறையின் தாக்கம் அப்பெண்னுக்குள் சென்று அவர்களுக்கு உடனே சுகம் கிடைத்தது' எனக் கூறினார்.

கர்மாவின் தாக்கம் :டாக்டர் மேக்ஸ் ப்ளாக் என்பவர், 'நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது; அது நாம் வாழும் உலகத்தில் ஒவ்வொருவரும் எப்படி இருப்பார்கள் என தீர்மானித்துவிடுகிறது. வாழும் உலகை அது அதன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. அதை டிவைன் மேட்ரிக்ஸ் என்றும் கடவுளின் சக்தி என்றும் அழைக்கலாம்' எனக் கூறியுள்ளார்.

நம்முடைய உணர்வுகள் மற்றும் நம்பிக்கை இந்த கடவுளின் சக்தியிடம் தாக்கம் செலுத்துகிறது. அதற்கேற்றவாறு நம் வாழ்க்கை அமைகிறது. 'நம்முடைய நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகள் நமது டி.என்.ஏ., வை கட்டுப்படுத்துகிறது' என ஆய்வில் கூறியுள்ளார். 'நாம் நம்முடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் நேர்மறையாக வைத்திருக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

நம் வாழ்வில் நாம் செய்யும் அனைத்து நன்மையும் தீமையும் கர்மாவில் சேர்ந்துக்கொண்டே வரும். எளிமையாக சொன்னால் எதை விதைக்கிறோமே... அதை அறுக்கிறோம். கர்மா என்பது பிரபஞ்சத்தின் நீதி என்று கூறலாம்.

எண்ணங்களின் வண்ணங்கள் :நம்முடைய உடலில் 63 ஆயிரம் கோடி செல்கள் உள்ளன. அதில் பல வண்ணங்கள் உள்ளன. மருத்துவரால் அந்த வெவ்வேறு வண்ணத்தின் காரணத்தை கூற முடியவில்லை. ஆனால் அது கர்மாவின் தாக்கம் என கூறலாம். ஒரு மனிதனின் கர்மாவின்படி அவன் உடலில் உள்ள செல்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 'ஆரா கேமரா' மூலம் ஒருவரை படம் பிடித்தால் பல வண்ணங்களை வெளிப்படுத்தும்.

அந்த வண்ணங்களை வைத்து உடலில் உள்ள எலக்ட்ரோ மேக்னடிக் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம். ஆரா போட்டோவில் உள்ள வண்ணங்களை வைத்து நம் மனநிலையை எளிதில் கணக்கிட முடியும்.டாக்டர் பிரேன் வைய்ஸ் புகழ்பெற்ற மனநல மருத்துவர். மனிதனுடைய ஆத்மா பற்றியும் முற்பிறவி பற்றியும் நிரூபித்திருக்கிறார். ஒருவருடைய கடந்த காலத்தை பார்ப்பதற்கு பல வழிமுறைகள் இருக்கிறது.

ஒருவர் அவருடைய கடந்த கால நினைவுகளை அடையும் போது அவர்கள் தற்காலத்தில் வாழும் நோக்கம் மற்றும் அவர்களின் கர்மா என்ன என்பதையும் அறிந்துகொள்வார்கள். ஒருவர் தம்முடைய எதிர்மறையான கர்மாவிலிருந்து விடுபட இதுவே சிறந்த வழி.

-











வாழ்வின் நோக்கம் மனிதர்களின் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து அமைகிறது. சில நேரங்களில் நம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் மற்றும் பெரும்பாலான மக்கள் எதை நாடிச் செல்கிறார்களோ அதையே நம்முடைய நோக்கமாக கருதி பின் தொடர்கிறோம். கர்ம வினைகள் கூட நாம் தேர்ந்தெடுக்கும் விஷயங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
ஆனால் மனிதன், இவற்றையெல்லாம் கடந்து சுயமாக சிந்தித்து நன்மை, தீமைகளை ஆராய்ந்து மேன்மையான பாதையை தேர்ந்தெடுக்கும் ஆற்றல் படைத்தவன்.
படைப்பின் நாகரிகப் பரிமாணம் மட்டுமே மனிதன் கிடையாது. தனக்குள் புதைந்து கிடக்கும் ஒட்டுமொத்த தெய்வீக ஆற்றல்களையும் வெளிப்படுத்தக் கூடிய அற்புதத் திறனுடையவன். ஆகவே தான் அவ்வாற்றல் உடையவனை மறை நுால்கள் 'தீரன்' என்கிறது. 'தீனன்' என்றால் பலவீனன். பாரதியின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் 'உண்டு, உறங்கி, பிறர் போல் வாழ்ந்து மடியும் 'வேடிக்கை மனிதன்''.
அரிய மனிதப்பிறவி
'மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்கிறோம். காரணம்? வினைத் தளைகளை வேரோடு நீக்கும் மர்மம் மனிதனுக்குள் புதைந்துள்ளது. 'என்னை நடத்துவது என் வினையே' என நொந்து வீழும் நிலை அவனுக்கில்லை. இந்த மாபெரும் பாடத்தை போர்களத்தில் கண்ணபிரானிடம் கற்றான் அர்ஜூனன்.
'எல்லாம் என் வினை, இனி செய்வதற்கு ஏதுமில்லை' என தளர்ந்தவனை, பார் வியக்க செய்த பெருமை பரந்தாமனுக்கு உண்டு.
மனம் பதைத்து மதியிழந்தோனின் தோள் தொட்டு ''காலத்திற்கு ஒவ்வாத கண்ணியமற்ற, சற்றும் பொருந்தாத மனநிலை உனக்கு எங்கிருந்து வந்தது. கேடானதும், புகழை அழிப்பதுமான இந்த ஆண்மையற்ற தன்மையை அடையாதே! இழிவான மனத்தளர்ச்சியை உதறிவிட்டு எழுந்து நில்! உண்மை உணர்! நீ அழிவற்றவன்! நித்தியமானவன்'' என்றான் கண்ணன்.
''உறுதி பூண்டவனாய் செயல்படாவிட்டால் மக்கள் என்றைக்கும் உன்னைப்பற்றி அவதுாறு சொல்வார்கள். நன்மதிப்பை பெற்றவனுக்கு இகழ்ச்சியை காட்டிலும் இறப்பே மேலாகும். இன்பம், துன்பம் லாபம், நஷ்டம் வெற்றி, தோல்வி இவற்றை சமமாக பாவித்து போர் (கடமை) செய். அறியாமையால் நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் சந்தேகங்களை ஞான வாளால் அறுத்துவிடு' என்றார்.
எனவே மனதை வென்றவனே மாவீரன். புறப் பொருட்களை நாடிச் செல்லும் புலங்களை மனதால் நிறுத்துவதே யோகம். கட்டுப்படாத மனம் மனிதனுக்கு நிரந்தரப் பகையே! மனம் அலைபாயக்கூடாது. மனதை புத்தியால் தேய்த்து, கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். புலங்களை காட்டிலும் மனம் உயர்வானது. மனதை காட்டிலும் நம் புத்தி உயர்ந்தது.
மனித குலத்திற்கு அர்ஜூனனை மையமாக வைத்து கண்ணன் உரைத்த உண்மையிது. ''உன்னை நீயே உயர்த்திக்கொள். உன்னை நீ ஒரு பொழுதும் தாழ்த்திக் கொள்ளாதே. உன்னுடைய மனமே உனக்கு உற்ற நண்பன். உன் மனமே உனக்கு பரம எதிரி''.
திருமூலரின் மந்திரம்
"மனத்திடை நின்ற மதிவாள் உருவி, இனத்திடை நீக்கி இரண்டற வீரத்து" என்பார் திருமூலர். 'இனத்திடை நீக்கி' என்பது மனதை புலன் வழிப்போகாது காத்தல் என்பதாகும்.
செயல்கள் வெறும் உடலால் மட்டும் செய்யப்படுவதில்லை. அதன் பின்னணியில் சக்தி வாய்ந்த மனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எந்த எண்ணங்களை மனதில் விதைக்கின்றோமோ அதை செயல்படுத்தும் ஆற்றல் மனதுக்கு உண்டு. ஆகவே நாம் எண்ணங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயல்களுக்கும், எண்ணங்களுக்கும் ஒப்பில்லாத தரத்தை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். தனி மனிதனுடைய தரம் சமுதாயத்தில் பிரதிபலித்து நல்ல தாக்கத்தை உண்டாக்கும். மேன்மக்கள் எதை நடத்தையாகக் கொள்கிறார்களோ அதையே மற்ற மனிதர்கள் பின்பற்றுகிறார்கள். அவர்கள் உண்மையாகக் கூறுவதை உலகம் பின்பற்றுகிறது. 'நல்ல மனிதர்களே பொறுப்பான சமுதாயத்தை உருவாக்குகின்றனர்' என்கிறது கீதை.
வாழ்க்கை போர்க்களம்
வாழ்க்கை ஒரு போர்க்களமே. வாழ்ந்து காட்டியோரின் வழிகாட்டுதல் இல்லாது வெல்ல முடியாது. மண்ணோடு போவதற்கல்ல மனிதப் பிறவி. மண் மீது நின்று தன்னலமற்று பணி செய்து விண்ணோரையும் வியக்கச் செய்வதற்கே இந்த பிறவி! இதுவே வாழ்வின் நோக்கம். கல்வி, செல்வம், பெயர், புகழ் அனைத்தும் ஓர் எல்லைக்குள் அடங்கிவிடும். அவை குணங்களின் வெளிப்பாட்டுக் கவர்ச்சி மட்டுமே. மரியாதைக்குரியதாக இருக்கலாம். ஆனால் அவை என்றென்றும் மாற்றங்களின் வசப்பட்டே நிற்கிறது. ஆகவே அவற்றில் உண்மையில்லை. "உண்மை என்றும் மாறாதது. பொய்மைக்கோ நிரந்தர இருப்பில்லை. இவ்விரண்டின் தன்மை அறிந்தோரே உண்மை உணர்ந்தோர்".
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறிவு ஆண்மை கடை - வள்ளுவர்.
ஆகவே நிலையான ஒன்றை நாடுவதை, தேடுவதை உயர் லட்சியமாக கொண்டு வாழ்ந்தோரும், வாழ்வோரும் உண்டு; அந்த தேடலே ஆன்மிகம். 'வித்தைகளில் நான் ஆன்ம வித்தை' என்கிறான் கண்ணன். தேடல் உள்ளோரும், தெளிய விரும்புவோரும் விரைந்து நாடும் வீர வித்தை. இப்பயணத்திற்கு தன்னை ஒருவன் நன்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். சிந்தை செம்மையாகப் பக்குவப்பட வேண்டும். ஆர்வம் மட்டும் போதாது. அது ஊக்கமாக உயர வேண்டும். ஊக்கம் உயர
லட்சியத்தில் ஈடுபாடு வேண்டும். சோம்பேறித்தனத்தையும், பலவீனத்தையும் துறந்து விட வேண்டும்.
'Hasten slowly' என்று ஆங்கிலத்தில் மிக அழகாகக் கூறுவார் சுவாமி சின்மயானந்தர். நமது வாழ்க்கை பயணம் துரிதமாக, நிதானமாக, துாய்மையாக, புனிதமாக தொடர வேண்டும். இதனால் வாழ்வின் நோக்கத்தை அடையலாம்.
- சுவாமி சிவயோகானந்தா,
சின்மயா மிஷன், மதுரை.

No comments:

Post a Comment