Sunday, August 30, 2015

முறையான குழந்தை வளர்ப்பு

முறையான குழந்தை வளர்ப்பு

என்பார்வை
நன்றி: தினமலர்-2015/07/06

காலையில் வயிறு காலியா?
பள்ளிக்கு கிளம்பும் அவசரத்தில், நேரமில்லை எனும் காரணம் காட்டி பல மாணவர்கள் காலை உணவைச் சாப்பிடுவதே இல்லை. பெரும்பாலான தினங்களில் காலி வயிற்றுடன் தான் பள்ளிக்குச் செல்லுகின்றனர். இது பல ஆரோக்கியக் கேடுகளுக்கு வழி வகுக்கிறது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.
இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரம் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளி விடுகிறோம். இதனால் உடலில் சக்தி குறைகிறது. இந்த சக்தியைப் பெறுவதற்குக் காலையில் உணவு சாப்பிட வேண்டியது அவசியம். காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான சக்தியை தருகிறது.

என்ன பிரச்னை ஏற்படும்? : காலையில் உணவு சாப்பிடாமல் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு விரைவிலேயே ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் காலை வகுப்புகளில் அவர்களால் முழுமையாக கவனம் செலுத்த முடிவதில்லை. துாக்கம், களைப்பு, தலைவலி வருகிறது. அவை கற்றல் திறனைப் பாதிக்கின்றன.
இவர்கள் மதிய உணவுக்கு முன்பாக வரும் இடைவேளை நேரத்தில் பசி காரணமாக ஏதாவது ஒரு நொறுக்குத் தீனியை வயிறு நிறைய சாப்பிட்டு விடுகின்றனர். இதனால் மதிய உணவு சாப்பிடுவதும் குறைந்து போகிறது. நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவதால் உடல் பருமன் வருகிறது. இதன் விளைவால் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

மேலும், தொடர்ந்து காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு, இரைப்பையில் சுரக்கின்ற அமிலச் சுரப்பு இரைப்பைத் திசுக்களை அரித்துப் புண்ணாக்கிவிடுகிறது. இது பசியைக் குறைத்து விடுகிறது. செரிமானக் கோளாறு தொல்லை தருகிறது. எனவே இவர்களால் அடுத்த வேளை உணவையும் சரியாகச் சாப்பிட முடிவதில்லை. இது ஊட்டச்சத்துக் குறைபாட்டை இன்னமும் அதிகரிக்கச் செய்கிறது. இது உடல் வளர்ச்சியைப் பாதிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கிறது. இவர்கள் உடலளவிலும், மன அளவிலும் பலவீனமாக இருக்கிறார்கள். இதனால் பொறுமை குறைந்து கோபம், எரிச்சல் அதிகமாக வருகிறது.

ஆரோக்கிய உணவு:காலை உணவு என்பது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து கலந்த சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். கொழுப்பு மிகுந்த காலை உணவு மந்த நிலையை உருவாக்கும். ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். வழக்கமான
அரிசியில் தயாரிக்கப்பட்ட இட்லி, தோசை, சாதம் என்று ஒரே வகை உணவைச் சாப்பிடுவதற்குப் பதிலாக பல மாற்று உணவுகளைச் சாப்பிடும் வழக்கத்தை கைகொள்ள வேண்டும்.உதாரணமாக கேழ்வரகு இட்லியுடன், நிலக்கடலை சட்னி, ஒரு வாழைப்பழம், கார்ன் பிளேக்ஸ் கலந்த பால்
சாப்பிடலாம். வேகவைத்த காய்கறிகள் சேர்த்த கோதுமை ரவா உப்புமாவுடன், வேகவைத்த முட்டை சாப்பிடலாம்.

அவசரத்துக்கு 'பிரட் சான்ட்விச்' அல்லது வெண்ணெய் தடவிய 'பிரட்' மற்றும் 'ஆம்லெட்' சாப்பிடலாம். சப்பாத்தியுடன், 100 மி.லி., பால், அரை ஆப்பிள் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடும் போது ஆரோக்கியத்துக்குத் தேவையான எல்லாச்சத்துகளும் கிடைத்து விடும். அரிசி தோசை ஒருநாள் என்றால், சம்பா தோசை ஒருநாள் சாப்பிடலாம். காலை உணவில் ஒரு பழம் அவசியம். சாமை, வரகு, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு ஆரோக்கியத்துக்கு நல்லது.

காலை உணவைச் சரியாகச் சாப்பிடும் குழந்தைகள், நல்ல உடல் நலனுடனும் ஊக்கத்துடனும் செயல்படுகிறார்கள் என்பதும்; இவர்களுக்குச் சிந்திக்கும் திறன், அறிவுத்திறன் போன்றவை அதிகமாக உள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனிமேலாவது மாணவர்கள் காலை உணவைத் தவிர்க்காமல் சமச்சீர் உணவைச் சாப்பிட்டு ஆரோக்கியத்தைக் காக்க முன்
வரவேண்டும்.

மதிய உணவு என்ன : மாணவர்கள் மதிய உணவுக்கு எடுத்துச் செல்வதில் சாதம், சாம்பார் அல்லது பருப்பு, கீரை, கூட்டு, தயிர் இருக்க வேண்டும். இதில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின், இரும்புச்சத்து, நார்ச்சத்து என எல்லாச்சத்துகளும் அடங்கிவிடும். மதியம் பழம் வேண்டாம். மாலையில் அல்லது இரவில் ஒரு பழம் சாப்பிடலாம். சாப்பிட்டு முடித்த பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிலர் தக்காளிச்சாதம், லெமன் சாதம், புளிசாதம் என ஏதாவது ஒருசாதம் மட்டும் டிபன்பாக்சில் கொண்டு செல்வார்கள். இவற்றில் தேவையான அளவுக்குக் காய் கறிகள் இருப்பதில்லை என்பதால் இரும்புச்சத்து, வைட்டமின்கள் நார்ச்சத்து ஆகியவை குறைவாகவே இருக்கும்.
இவற்றில் கிடைக்கிற கலோரிகளும் குறைவு. எனவே, சாதம் மட்டும் கொண்டு செல்பவர்கள் கூடவே, பருப்புக்கூட்டு, கீரை சேர்ந்த உருளைக் கிழங்கு பொரியல், வெங்காயமும், வெள்ளரியும் கலந்த தயிர்பச்சடி கொண்டு செல்ல வேண்டும். இப்படிச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைத்து விடுவதால் களைப்பு தெரியாது. மாலை நேரத்தில் விளையாடுவதற்குத் தேவையான சக்தியும் கிடைத்துவிடும்.

ஞாபக சக்தி அதிகரிக்க வாரம் இரண்டு நாட்களுக்கு மதிய உணவில் பிரண்டைத் துவையல், வல்லாரைத் துவையல் சேர்த்து வந்தால் செரிமானத்துக்கும், ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும் உதவும். மாலை நேரத்தில் பிட்சா, பர்கர், கேக், பிஸ்கட், சான்ட்விச், சிப்ஸ், சேவு, சீவல், வடை, பஜ்ஜி என நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவதற்குப் பதிலாக சுண்டல், பயறு, பொட்டுக்கடலை, வெல்லமிட்டாய்,கடலைமிட்டாய், அதிரசம், எள்ளுருண்டை, காய்கறியும் பழங்களும் கலந்த சாலட் சாப்பிட்டால், டீ, காபிக்குப் பதிலாக பழச்சாறு குடித்தால், உடல் பருமன் வருவது தடுக்கப்படும்.
மேலும் இவற்றில் ஊட்டச் சத்துகள் அதிகம் என்பதால், இரவில் பாடங்களைப் படிப்பதற்குத் தேவையான ஆற்றலையும் பெறமுடியும்.

ஏட்டில் முடங்கும் தாலாட்டு
நன்றி: தினமலர் - 2015/07/02

'கடன்காரன் வந்தால்கலங்காத நெஞ்சம்
கை மீது பிள்ளை
அழுதாலே அஞ்சும்'
என்று பாட்டு உண்டு. அழுகிற குழந்தையை சமாதானம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. மூன்று வேளை நல்ல உணவு கொடுத்து, நல்ல சம்பளமும் கொடுத்து, பிள்ளையை மட்டும் பார்த்து கொள்ள ஆள் தேடுவோமானால், இன்றைய சூழலில் இந்த பணிக்கு ஆள் கிடைப்பது அரிது. இந்த மாதிரி ஒரு பணிக்கு ஆள் கேட்டோமானால், அவர்கள் சொல்வது “பிள்ளை எடுத்து சாப்பிடுவதற்கு, பிச்சை எடுத்து சாப்பிடலாம்” என்கிறார்கள். பொழுதுக்கும் குழந்தையை பார்த்து கொள்வது, அதுவும் இந்த காலத்து குழந்தைகளை பார்த்து கொள்வது என்பது சிரமமான பணி.
அழும் குழந்தையை சமாதானம் செய்வது என்பது ஒரு கலை. குழந்தை எதற்கு அழுகிறது என்று அதற்கு சொல்ல தெரியாது. இதற்காகத்தான் அழுகிறது என்று நம்மாலும் அறுதியிட்டு கூற முடியாவிட்டாலும், ஒரு உத்தேசமாக, இதற்குத்தான் அழுகிறது என்று ஒரு தாயால் ஊகிக்க முடியும்.
பாலுாட்ட நேரமில்லை
அழும் குழந்தையை துாங்க வைக்க ஒரு அருமையான அணுகுமுறை, தாலாட்டு பாடி துாங்க வைப்பது. இந்த காலத்து தாய்மார்களுக்கு “பாலுாட்டவே” நேரமில்லாத போது, “தாலாட்டு” எங்கே பாடப்போகிறார்கள் என்று நினைக்கிறீர்களா. அதிலும் எத்தனை தாய்மார்களுக்கு 'தாலாட்டு' என்று ஒன்று இருப்பதாக தெரியும். 'தாலாட்டு' ஒரு அருமையான சொல்.
நல்ல தமிழ் சொற்களால் தாலாட்டை பாடும்போது, குழந்தை அதைக்கேட்டு ஒரு மயக்க நிலைக்கு வந்து துாங்கி விடுகிறது. இனி குறைந்தது இரண்டு மணி நேரத்திற்காவது கவலை இல்லை, என நிம்மதி பெருமூச்சு விடும் தாய்மார்கள் எத்தனை பேர். தாலாட்டின் வாயிலாக ராமர் கதை, சொக்கர் மீனாட்சி கதை, முருகன் வள்ளியை மணந்த கதை, தாய்வீட்டு பெருமை, புகுந்த வீட்டு பெருமை, கணவனின் பெருமை என எவ்வளவோ தகவல்களை, அந்த தாய் சொல்லி, சொல்லி பாடுகிறாள். தாலாட்டை கேட்டதால் பின் காலத்தில் உருவான கவிஞர்கள் எத்தனையோ பேர், தமிழ்பால் பற்று கொண்டவர்கள் பல பேர்.
கணவன் -மனைவி உறவு
தாலாட்டு குழந்தையை துாங்க வைக்க மட்டும் செய்வதில்லை. கணவன், மனைவி பிணக்கை கூட சரி செய்கிற ஆற்றல், தாலாட்டாய் வரும் தமிழுக்கு உண்டு. கணவன் மனைவிக்குள் பிணக்கு ஏற்படுகின்றது. மூன்று நாட்கள் முழுதாய் முடிந்து விட்டது. அவர்கள் இன்னும் சமாதானம் ஆகவில்லை. கணவனும் மனைவியும் எப்படி சமாதானம் ஆவது, என்று சிந்தனை வயப்பட்டு இருந்தனர். பின் இரவு நேரம் குழந்தை அழுகிறது. மனைவி தாலாட்டு பாடுகிறார்.
''ஆராரோ ஆரிரரோ - என் கண்ணே
ஆராரோ ஆரிரரோ
ஆரடித்தார் ஏனழுதாய்
கண்ணே என் கண்மணியே
அடித்தாரை சொல்லியழு
விளக்கிலிட்ட வெண்ணையை போல்
வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறது போல்
கண் கலக்கந்தீர்த்தாயே
கொப்புக் கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக் கழுதா யோ
வாயெல்லாம் பால்வடிய
மாமன் அடித்தானோ
மல்லி கைப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ
அல்லி மலர்ச் செண்டாலே
அடித்தாரை சொல்லியழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
தொட்டாரை சொல்லியழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
வெண்ணையால் விலங்கு பண்ணி
வெய்யிலிலே போட்டு வைப்போம்
மண்ணினால் விலங்கு பண்ணி
தண்ணீரிலே போட்டு வைப்போம்''
எனப்பாடி தொடரும்போது
''ஆரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
தானா அழுகின்றான்
தம்பி துணை வேணுமென்று
அவனா அழுகின்றான்
தங்கை துணைவேணுமென்று''
என்று முடிக்கின்றாள்.
இந்த தாலாட்டை கேட்டதும் முற்றத்தில் படுத்து இருந்த கணவன், வீட்டுக்குள் வந்து விடுகின்றான். அங்கே குழந்தையும் துாங்கிவிட்டது. கணவன், மனைவி சமாதானமும் ஆனது. மனதுகள் சங்கமமும் ஆனது.
-மாமியார் --மருமகள்
மாமியார் ஒருவர் தன் மருமகளை எப்பவும் உன் அப்பன் வீட்டில் இருந்து என்ன பெரிசா கொண்டு வந்து விட்டாய் என்று நிந்தித்து கொண்டே இருப்பாள். மருமகள் கொண்டு வந்து இருந்தாலும், மாமியார் கண்களுக்கு அவை போதவில்லை. அது கண்ணின் குற்றமல்ல பார்வைக்கோளாறு. மருமகள் பாடுகிறார்.
'போட்டு விளையாடப்
பொன்னாலே அம்மானை
வைத்து விளையாட
வைர கிலுகிலுப்பை
கட்டி விளையாடகாசிச் சிண்டுமணி
ஒட்டி விளையாட ஒயிலார ரயில் வண்டி
நெத்திக்கு சுட்டிநிழல் பார்க்க கண்ணாடி
காலுக்கு தண்டை கைக்கு கணையாழி
கொண்டு வந்து தருவார்கள் -
கோதை கிளிக்கு அம்மான்மார்
சங்கினால் பால் கொடுத்தால்
சந்தணர்வாய் நோகுமென்று
தங்கத்தினால் சங்கு செய்து
தருவார்கள் தாய்மாமன் - என்றும்
மாடுகட்டி போரடித்தால்
மாளாது சென் நெல் என்று
யானை கட்டி போரடிக்கும்
அம்மான்மார் சீமையிலே'- என்றும்
தான் பிறந்த வீட்டு பெருமையை தாலாட்டாய் பாடுகின்றார்கள். இப்பாடலை கேட்டு குழந்தை அமைதியானதோ இல்லையோ, மாமியார் அமைதியானார்.
இன்னொரு தாலாட்டு பாட்டில்...
'ஆராரோ ஆரிரரோ
ராமருக்கோ பஞ்சு மெத்தை
பஞ்சுமெத்தை மேலிருந்து - ராமர்
பஞ்சாங்கம் பார்க்கையிலே
வயது நுாறென்று சொல்லி
வாசித்தார் பஞ்சாங்கம்
எழுத்து நுாறென்று சொல்லி
எழுதினார் பஞ்சாங்கம்'
என்று தன் பிள்ளை நுாற்றாண்டு காலம் வாழ வேண்டும் என பாடுகின்றாள். திரும்ப,திரும்ப, தன் பிள்ளையை உயர்த்தியும்,வாழ்த்தியும் பாடுவதால் குழந்தைக்கு தாயின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கின்றது. நேயர் விருப்பம் போல் சில பிள்ளைகள் தான் விரும்பும் தாலாட்டு பாடலை, தாயை பாடச் சொல்லி கேட்கும்.
பரம்பரை, பரம்பரையாக செவி வழியாக வாழ்ந்து வந்த தாலாட்டு இன்றைய தலைமுறைகளின், செவிகளில் விழாமலே போய்விட்டது பரிதாபம். பாரம்பரியமிக்க பல தாலாட்டு பாடல்கள் காலப்போக்கில் அழிந்து தாலாட்டு என்று ஒன்று இருந்ததா? என கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே தாய்மார்களே பிள்ளைகளுக்கு தாய்ப்பாலும் ஊட்டுங்கள், கூடவே தாலாட்டும் பாடுங்கள்.ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா-
ஒரு குழந்தையை வையாதே பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுவதும் விளையாட்டு என
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா''
என பாரதியார், குழந்தைகள் தங்களை எவ்வாறு வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை தன் இனிய பாடல் மூலம் கூறுகிறார்.

விளையாட்டின் முக்கியத்துவத்தோடு, ஒற்றுமை, படிப்பு, சுறுசுறுப்பு போன்ற பண்புகளையும் எடுத்துக் கூறி உள்ளார். விளையாட்டுக்கள் ஓர் இனத்தின் வீரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்துகின்றன. விளையாட்டின் அடிப்படை நோக்கம் போட்டியிடுதலாகும். உடலிலும் உள்ளத்திலும் உள்ள ஆற்றல்களை வெளியிடவும், எதிர்பாராத தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பான்மை மேம்படவும் விளையாட்டு உதவுகிறது.
இது குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கிறது. குழந்தைகளிடம் சகோதரத்துவத்தையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் வளர்க்கிறது. கிராமங்களில் இரவு நேரங்களில் தெருவில் உள்ள சிறுவர் சிறுமியர் ஒன்று கூடி தங்களின் பெற்றோர்கள் முன்னிலையில் அம்மானை. குலைகுலையா முந்திரிக்காய், பூப்பறிக்க வருகிறோம். திரித்திரிப் பொம்மக்கா போன்ற விளையாட்டுக்களை விளையாடும் போது மகிழ்ந்தவர்கள் குழந்தைகள் மட்டுமல்ல அவர்தம் பெற்றோர்களும் தான். அன்றைய விளையாட்டுகள்
அன்று நாம் விளையாடி மகிழ்ந்த விளையாட்டுக்களாகிய பம்பரம், கிட்டிப்புள், பச்சைக்குதிரை, கபடி, கோலிக்குண்டு, செதுக்கு முத்து, திருடன் போலீஸ், கிளித்தட்டு, காற்றாடு, பந்து விளையாட்டு, ஒற்றையா இரட்டையா, நீச்சல் போன்ற விளையாட்டுக்கள் எங்கே போயின?
பெண் குழந்தைகள் குதுாகலமாக விளையாடிய நொண்டி, தட்டாங்கல், தாயம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, பூப்பறித்தல், கரகரவண்டி, ஊஞ்சல் போன்ற விளையாட்டுக்கள் போன இடம் எங்கே? இன்று கிராமங்களில் கூட இவ்விளையாட்டுகளை காணமுடியவில்லை. வெறுமனே மேம்போக்காக நேரத்தைப் போக்க வேண்டும் என்ற நோக்கில் விளையாடப்பட்டவை அல்ல இவை. உடல் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் குழந்தைகளின் சிந்தனைத் திறனையும், சமயோஜிதப் புத்தியையும் வளர்க்கும் விதத்தில் தான் இருந்தன. எடுத்துக்காட்டாக ஆண்கள் விளையாடும் கபடியை எடுத்துக் கொண்டால் அது கண்களுக்கு பயிற்சி, மூச்சுப் பயிற்சி, கை, கால் தசைகளுக்குப் பயிற்சி அளிக்கும் விதமாக உள்ளது. பெண் குழந்தைகள் விளையாடும் தட்டாங்கல்லை எடுத்துக் கொண்டால் கைவிரல்களுக்கும், கண்களுக்கும் நாம் கொடுக்கும் பயிற்சியாகவே இருக்கிறது.
மண்ணில் விளையாடட்டும்
குழந்தைகளை மண்ணில் விளையாடவிடுங்கள், அப்போதுதான் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி கூடும் என அமெரிக்க ஆராய்ச்சி கூறுகிறது. நாம் குழந்தைகளை மண்ணில் இறங்கி விளையாட விடுவதில்லை. குழந்தைகளின் பொழுதுபோக்கு தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது, அலைபேசியில் சேட்டிங் செய்வது என்றாகி விட்டது. இதன்
விளைவாக ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்கின்றனர். குழந்தைகளின் அதிக எடை, மெலிந்த தேகம், கண்பார்வை நோய், சர்க்கரை நோய் போன்றவைகளுக்கு முக்கியக் காரணம் ஓடி ஆடி விளையாடாமல் ஒரே இடத்தில் அடைந்து கிடப்பது தான். மன இறுக்கத்திற்கும் இதுவே காரணம் .
முற்காலங்களில் திருவிழா நேரங்களில் கிராமங்களில் வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல், மஞ்சள் தண்ணீர் ஊற்றுதல், கபடி மற்றும் கைப்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கி குழந்தைகளிடையே விளையாட்டு மனப்பான்மையை வளர்த்தார்கள். ஆனால் இன்றோ திருவிழாக் காலங்களில் கிராமங்களில் திரைப்பாடலுக்கு ஆட்டம் போடுகின்றனர்.
வீரவிளையாட்டுகள்
நமது கிராமங்களுக்கே உரிய வீரவிளையாட்டுகளாகிய சிலம்பம், ஜல்லிக்கட்டு, இளவட்டக்கல் துாக்குதல், மற்போரிடல், நீரில் மூழ்கி மண் எடுத்தல், ஏறு தழுவுதல் போன்றவை போன இடம் தெரியவில்லை. இவற்றுக்கான காரணங்களை ஆராய்வோமேயானால் நம் முன்னே நிற்பது நாம் மறந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை. பழக்கப்படுத்திக் கொண்ட இயந்திர வாழ்க்கை, கிராமங்களை மறந்து நகரத்துக்கு வந்தது, பெற்றோர் குழந்தைகளுக்கு இடையேயான உறவில் தொய்வு மற்றும் அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றைக் கூறலாம். இன்றைய தினம் விளையாட விளையாட்டுக்கள் இல்லையா? குழந்தைகள் விளையாடவில்லையா? என கேட்கலாம். அன்று நாம் விளையாடிய கிட்டிப்புள் தான் இன்று கிரிக்கெட்டாக உருவெடுத்துள்ளது. அன்று நாம் விளையாடிய தாயம், ஆடுபுலியாட்டம் தான் இன்று செஸ் ஆக மாறியுள்ளது. இன்றைய விளையாட்டுக்கள் அனைத்தும் பணம் சார்ந்ததாகவும் (உபகரணங்களுக்கு ஆகும் செலவு), பிறர் உதவி சார்ந்ததாகவும் (பயிற்சியாளர்) இன்னும் சொல்லப்போனால் மேல்தட்டு மக்கள் மட்டுமே விளையாடக்கூடிய விளையாட்டுக்களாகவே உள்ளன. நடுத்தர மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் இது எட்டாக்கனியாகவே உள்ளது.
எனவே பெற்றோர்களாகிய நாம் செய்ய வேண்டியது நமக்குத் தெரிந்த, நம் மூத்தோர்கள் அறிந்த பல அழிந்துபோன விளையாட்டுக்களை நம் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். நாமும் நமது குழந்தைகளோடு சேர்ந்து விளையாட வேண்டும். விழாக்காலங்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளில் உறவினர்களையும், குழந்தைகளையும் சந்திக்கும் போது நாம் விளையாடி மகிழ்ந்த விளையாட்டுக்களை விளையாடச் சொல்லி மகிழலாம். இதனால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பெருகுவதோடு, உள்ளமும் பண்படும். சகோதரத்துவம் மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வளரும். குழந்தைகளின் மன இறுக்கம் அகலும். பெற்றோர், குழந்தைகள் மற்றும் அண்டை அயலாருடன் நட்புறவு ஓங்கும். மொத்ததில் நல்ல பண்புள்ள மாண்புமிக்க மனிதனாக ஒவ்வொரு குழந்தைகளும் உருவெடுப்பர். இது நமது வீட்டிற்கு மட்டுமின்றி நாட்டிற்கும் பெருமை சேர்க்கும்.
-முனைவர் எஸ்.கணேசன்,
பொருளியல் துறைத் தலைவர். அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி

கசக்கிறதா கறிவேப்பிலை!
நன்றி: தினமலர் - 2015/07/05


நாம் ஆரோக்கியமாக இருக்கவே விரும்புகிறோம். அதற்கென பல்வேறு உணவுப்பழக்கங்களையும், உடற்பயிற்சிகளையும் செய்கிறோம். ஒரு பெரிய நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட இணை உணவினையோ, அல்லது உடலுக்கு போஷாக்கு மற்றும் சக்தி தரக்கூடிய விலை உயர்ந்த உணவுப்பொருட்களையோ அன்றாடம் பயன்படுத்துகிறோம்.ஆப்பிள், ஆரஞ்சு போன்ற கண்களுக்கு இதமான பழங்களில் மட்டுமே சத்துக்கள் நிறைந்துள்ளன எனக்கருதி அவற்றை உண்ண ஆவல் கொள்கிறோம். நாம் தினந்தோறும் நம் உணவில் காணும் பொருள் கறிவேப்பிலையில் எத்தனை வித உயிச் சத்துக்கள் அடங்கியிருக்கின்றன என உங்களுக்கு தொரியுமா...? எத்தனை போர் கறிவேப்பிலையைத் தட்டின் ஓரம் எடுத்துவைக்காமல் உண்டிருப்போம். பழந்தமிழ்ச் சித்தர்கள் கறிவேப்பிலையின் மகத்துவம் உணர்ந்து, அதனை தங்கள் மருத்துவத்தில்
பயன்படுத்தி உள்ளனர். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சகலத்துக்கும் நன்மை பயக்கும் கறிவேப்பிலை நமக்கு கிட்டிய வரப்பிரசாதம்.
கறிவேப்பிலை வரலாறு
பாரசீகத்திலிருந்து வந்த ஆரியர்களின் வருகைக்குப் பின், தென்னகத்தில்
திராவிடர்களுக்கு, கறிவேப்பிலை
அறிமுகமானது என வரலாற்றிலிருந்து அறிகிறோம். உலகெங்கும் பரவலாக வளரும் தாவரமாக உள்ள கறிவேப்பிலையின் அறிவியல் பெயர் முராயாகோனிகி. curry leaves என ஆங்கிலத்தில் வழங்கப்படும் இப்பெயர் ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது வழக்கில் வந்தது.
இந்திய நறுமணப் பொருள் கழகத்தின் தகவல்படி, 100 கிராம் கறிவேப்பிலை சராசரியாக 6 கிராம் புரதம், 1 கிராம் கொழுப்பு, 4 கிராம் தாதுக்கள், 7 கிராம் நார்ச்சத்து, 19 கிராம் கார்போஹைட்ரேட், 830 மில்லி கிராம் கால்சியம், 57 மில்லி கிராம் பாஸ்பரஸ், 0.930 மில்லி கிராம் இரும்புச்சத்தும் கொண்டது. பீட்டா கரோட்டின், தயாமின், ரைபோபிளேவின், தயாசின், போலிக் அமிலம்,
விட்டமின் ஏ.பி.சி. மற்றும் இ, மாங்கனீசு, குரோமியம் போன்ற தாதுச்சத்துக்களும், கறிவேப்பிலையில் அடக்கம்காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு கறிவேப்பிலையைப் பச்சையாக உண்ணும் போது, அதனால் கிடைக்கக்கூடிய பயன்கள் அளப்பரியவை.

பலதரப்பட்ட ஆன்டி ஆக்ஸிடண்ட் மூலக்கூறுகளைக் கொண்ட கறிவேப்பிலை வயிற்றுப்போக்கு, வாயுக்கோளாறு, செரிமானமின்மை, வயிற்றுப் புண், அல்சர், இன்சுலின் குறைபாடு, கெட்ட கொழுப்புகளைக் கரைத்து சமநிலையில் பராமரித்தல் மற்றும் உடலில் தோன்றும் கட்டிகள் மற்றும் புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படும் ஆற்றலும் இந்த அற்புத மூலிகைக்கு உண்டு.இயற்கை மருத்துவம்நம் தமிழ் இயற்கை மருத்துவத்தில், மனித உள் உறுப்புகளைப் பாதுகாக்கும் மகத்தான பணியினைக் கறிவேப்பிலை செய்கிறது என்பதனை சித்தர்களின்
குறிப்புகளிலிருந்தும் அறிகிறோம்.சிறிது கறிவேப்பிலைச்சாறுடன், எலுமிச்சை பழச்சாறு மற்றும் வெல்லம் சேர்த்துக் காலை நேரத்தில் பருகுவது, நம் மனதையும், உடலையும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்வாகவும் வைக்கும் என்பதை இயற்கை மருத்துவம் குறிப்பிடுகிறது. காடுகளில் வாழ்ந்த நம் தமிழ் யோகிகள் இவ்வாறான மூலிகைகள் பற்றிய உண்மைகளை அறிந்து போற்றினர். அவற்றைக் குறிப்புகளாகவும் எழுதி வைத்திருந்தனர். காலப் போக்கில் இவற்றையெல்லாம் நாம் மறந்திருக்கிறோம் என்பதும், போற்றிக் கொண்டாட வேண்டிய இயற்கை மருத்துவத்தை கேப்சூல்களாக மாற்றி, வெளிநாட்டுக் கம்பெனிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதும் கண்கூடு.பாதுகாக்கும் அரண் பலவிதமான நம் உடல் குறைபாடுகளிலிருந்து கறிவேப்பிலை நம்மைக் காக்கிறது. புற்றுநோய், வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பிரச்னை, உடல் பருமன் பிரச்னைகளுக்கு நிவாரணம் தருகிறது. உடலில் உள்ள குளுகோசின் அளவைக் கட்டுப்படுத்தி, ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. விட்டமின்கள் இருப்பதால் கண்கள், கேசம், தோல் பகுதிகளுக்கு நிறைந்த பலனையும், பலவித தோல் ஒவ்வாமையிலிருந்தும் காக்கும். ரத்த சோகையை விரட்டும் தன்மை கொண்டது.

கறிவேப்பிலையின் கனி, இலை, வேர், பட்டை என அனைத்தும் உயிர் சத்துக்கள் நிறைந்தவை. மூல நோய்க்கான மருத்துவத்தில் இதன் கனி முதன்மையானது.தமிழ் மருத்துவத்தில் சிறப்பான இடம் பெற்ற கறிவேப்பிலையை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். கறிவேப்பிலை துாக்கி எறிந்து விடும் பொருளல்ல. அது நம் உடலைக் காக்கும் அரண். இலை வடிவினில் உடல் நலம் பேணும் இனிய அறம்.

உங்கள் குழந்தை 
உண்மையிலேயே நலமா..?!
நன்றி: அவள் விகடன் - 08 Sep, 2015

‘உங்கள் குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா?’ என்றால், ‘நல்ல ஸ்கூல்ல சேர்த்துவிட்டிருக்கேன். ரெண்டு, மூணு எக்ஸ்ட்ரா கரிக்குலர் கிளாஸ் போறாங்க. ரிச் ஃபுட். கம்ப்யூட்டர், யூடியூப்னு டெக்னாலஜியிலும் பிரில்லியன்ட். சூப்பரா இருக்காங்க!’ என்பது, பெற்றோர் பலரின் பொதுவான பதிலாக இருக்கும். ஏனெனில், இதையெல்லாம்தான் ‘நலம்’ என்று அவர்கள் நினைக்கிறார்கள்; நம்புகிறார்கள். ஆனால், குழந்தைகளின் நலம் என்பது, இந்த வெளிப்புறக் காரணிகளையும் கடந்து, உள்ளார்ந்து நோக்க வேண்டிய ஒன்று. உடல்நலம், மனநலம், பாதுகாப்பு, கல்வி, ஊட்டச்சத்து என முக்கிய ஐந்து அம்சங்களில், வெளிப்பூச்சைக் கடந்து உங்கள் குழந்தையின் உண்மையான நலனை ஸ்கேன் செய்து அறிந்துகொள்ள, இங்கே ஆலோசனைகள் தருகிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள்!
‘பியூட்டி ஸ்லீப்’ கிடைக்கிறதா உங்கள் குழந்தைக்கு?!
‘‘தடுப்பூசியில் இருந்து தூக்கம் வரை, ஒவ்வொன்றையும் பிள்ளைகளுக்குத் தெளிவுற அமைத்துக் கொடுப்பது பெற்றோரின் பொறுப்பு!’’
- மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் இளங்கோவன், இப்படி  அடிக்கோடிட்டு ஆரம்பித்தார்...
 தாய்ப்பாலைப் போலவே, தடுப்பூசியும் குழந்தையின் பிறப்புரிமை. சிலர், ‘என் குழந்தை ஆரோக்கியமா, நோய்த் தொற்றுக்கான சூழலில் இருந்து பாதுகாப்பா இருக்கு. எதுக்கு தடுப்பூசி?’ என்ற அர்த்தமற்ற மனநிலையிலும், இன்னும் சிலர், தடுப்பூசி ஏதோ குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை பாதிக்கும் காரணி என்பது போன்ற தவறான நம்பிக்கையிலும் இருப்பார்கள். கொடிய நோய்களில் இருந்து குழந்தைகளின் உயிர் காக்கும் கவசமே, தடுப்பூசி. கடந்த 2015 பிப்ரவரியுடன், போலியோ இந்தியாவில் முழுமையாக ஒழிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகிறது என்பது நற்செய்தி. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, தடுப்பூசி முதல் புள்ளி.
 குழந்தைக்குக் குறைந்தது 9 மணி நேரத் தூக்கம், அதன் உடலின் அவசியத் தேவை. தூக்கம், நிலை 1, நிலை 2, நிலை 3 எனக் கடந்தே ஆழ்ந்த உறக்கமாகும். இடையில் குழந்தை விழித்தால், மீண்டும் அது நிலை 1-ல் இருந்து தன் தூக்கத்தை ஆரம்பிக்க வேண்டும். அப்படி எந்தத் தொந்தரவும் அற்ற, 9 - 12 மணி நேரத் தூக்கமான ‘பியூட்டி ஸ்லீப்’பை குழந்தைக்குக் கிடைக்கச் செய்யுங்கள். இரவு 9  மணிக்கெல்லாம் தூக்கம், அதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன் குடும்பத்துடன் உணவு என்று பழக்கப்படுத்துங்கள். அதிக ரத்த ஓட்டம் செரிமானத்துக்காக வயிற்றுக்குச் சென்றால் தூக்கம் தாமதமாகும் என்பதால்... எளிதாக ஜீரணமாகக்கூடிய, கொழுப்பில்லாத இரவு உணவு அவசியம்.
 காலை உணவைக் குழந்தைகள் ‘ஸ்கிப்’ செய்வது, அடிப்படைத் தவறு. இரவு 9 மணிக்கு சாப்பிட்ட குழந்தை, காலை உணவைச் சாப்பிடாமல் பள்ளி சென்றால், பகல் 12 மணி உணவு இடைவேளை வரை, கிட்டத்தட்ட 15 மணி நேரம் அதன் வயிறு காலியாக இருக்கும். எனில், வகுப்புகளை கவனிக்கும் ஆற்றல், ஆர்வம் அதுக்கு எப்படிக் கிடைக்கும்? சோர்வு, கோபம், வயிற்றுவலி என்று அது படும் பாட்டுக்கு, பெற்றோர்தான் பொறுப்பு.
 ‘அல்ட்ரா சாஃப்ட்’ டூத் பிரஷ், குழந்தைகளுக்கானது. ஒன்றரை வயதில் இருந்து மூன்று வயது வரை அரிசி அளவு பற்பசையும், ஐந்து வயது வரை பட்டாணி அளவு பற்பசையும் குழந்தைகளுக்குப் போதும்.
 ‘வெயிலுக்குக் காட்டாமல்’ குழந்தை களை வளர்ப்பதால் பெருகி வருகிறது விட்டமின்-டி குறைபாடு. தினமும் ஐந்து நிமிடங்கள் சூரிய ஒளி வாங்க வேண்டியது உடலுக்கு  அவசியம்.
 குழந்தைக்குச் சீரான இடைவெளியில் பூச்சிமருந்து கொடுக்க வேண்டும். தூக்கத்தில் குழந்தைகள் பற்களைக் கடித் தால், வயிற்றில் பூச்சி இருக்கிறது என்பது பழைய மருத்துவக்கூறு. ‘பிரக்சிஸம்’ என்ற அந்தச் செயலுக்கு, குழந்தை மனதில் உள்ள விடைகிடைக்காத கேள்விகளும், குழப்பங் களும் காரணம் என்கிறது நவீன மருத்துவம். எனவே, ஒவ்வோர் இரவும் குழந்தை தெளிவுபெற்ற மனதுடன் உறங்கச் செல்ல வேண்டும். அதற்கு பெற்றோருடனான ‘இன்டராக்‌ஷன்’ மிக அவசியம்!’’
- வலியுறுத்திச் சொன்னார், டாக்டர் இளங்கோவன்.
‘‘பேரன்டிங்கா, சைல்டிங்கா...’’
‘‘குழந்தையை, பெற்றோர் தாங்கள் விரும்பும்படி வளர்க்க அவர்கள் செய்யும் அல்லது தவிர்க்கும் செயல்களை, பேரன்டிங் என்கிறோம். 10, 15 வருடங்கள் முன்வரை இதுதான் எல்லா வீடுகளிலும் நடந்தது. ஆனால், இன்று பிள்ளைகள் தங்கள் விருப்பத்துக்கு பெற்றோரை நடக்க வைக் கிறார்கள். இதை நான்‘சைல்டிங்’ என்று கேலியாகச் சொல்வதுண்டு. இதுதான் இன்று எல்லா குடும்பங்களிலும் நடக்கிறது!’’
- சுடும் உண்மைகள் அடங்கியது, மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல ஆலோசகர், ‘டாப்கிட்ஸ்’ குழந்தைகள் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை மையத்தின் இயக்குநர், டாக்டர் தீப் பகிர்ந்த விஷயங்கள்...
 குழந்தையின் கையில் கொடுத்த ஒரு பொருளை மீண்டும் வாங்குவது, எளிதான காரியமல்ல. அது பொம்மையைவிட, ஸ்மார்ட்ஃபோன், லேப்டாப், டேப் (tab) என்று கேட்ஜட்களுக்கு இப்போது மிகப்பொருந்தும். ‘இன்டர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’, ‘இன்டர்நெட் கேமிங் டிஸார்டர்’ என்று பிரச்னைகள் முளைத்துக் கொண்டே இருக்கும் இந்த யுகத்தில், ப்ளஸ் டூ முடிக்கும் வரை ஸ்மார்ட்ஃபோன், ` டேப்’, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டூ-வீலர் அனைத்துக்கும் குழந்தைகளுக்கு ‘ஸ்ட்ரிக்ட் நோ’ சொல்லுங்கள்.
 ‘டியூஷன்னு போறதால, சேஃப்டிக்கு நான் தான் வாங்கிக்கொடுத்தேன்’ - பிள்ளையின் அடத்துக்குப் பணிந்து ஸ்மார்ட்ஃபோன் வாங்கித் தந்துவிட்டு பெற்றோர் சொல்லும் சாக்கு இது. தகவல் பரிமாற்றத்துக்கு பேஸிக் மாடல் போன் போதும்.
 கணினியில், மொபைலில், சமையலில், அரட்டையில் பிஸியாக இருக்கும் உங்களை, குழந்தை தொந்தரவு செய்யாமல் இருக்க, ‘இந்தா நீயும் ஒரு `டேப்’ பிடி!’, ‘கார்ட்டூன் பாரு, இதோ ரிமோட்!’ என்று டெக்னாலஜியை ‘மாற்று பெற்றோர்’ (சப்ஸ்டிட்யூட் பேரன்ட்) என ஆக்குபவர்கள் இங்கு அதிகம். அவர்களே தங்கள் குழந்தையின் கேட்ஜட் போதைக்கு, சைபர் விபரீதங்களுக்குக் காரணமான குற்றவாளிகள். தன் அம்மாவிடம் வந்து ‘ரேப்னா என்னம்மா?’ என்று கேட்கும் மூன்றாம் வகுப்புச் சிறுவன், அவர் திகைத்ததும், ‘சரி, ஸ்பெல்லிங் சொல்லு, நான் யூடியூப்ல போட்டு பார்த்துக்குறேன்!’ என்று தன் ‘மாற்று பெற்றோரை’த் தேடி ஓடுகிறான். நன்மையோ, தீமையோ... ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள, ‘ஸ்பெல்லிங்’ மட்டும் போதும் இன்றைய குழந்தைகளுக்கு!
 குழந்தைக்கு நேரத்தைச் செலவழிக்க முடியாததை ஈடுகட்ட, பணத்தைச் செலவழிக்கிறார்கள் பலர். ‘இல்லை, வார இறுதியில் குழந்தைகளைத் தவறாமல் அவுட்டிங் அழைத்துச் செல்கிறோமே!’ என்கிறீர்களா? எங்கே..? மால், தியேட்டர், ஷாப்பிங், ரெஸ்டாரன்ட் என்று பொருள் சார்ந்த பொழுதுபோக்கையே அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறீர்கள். இதில் பெற்றோரின் அன்பு, அரவணைப்பு, பகிர்வது, மனம்விட்டுப் பேசுவது எல்லாம் அவர்களுக்கு எங்கு கிடைக்கிறது? குடும்பத்துடன் நூலகம் சென்று, வாசிப்பின் சுவாரஸ்யத்தை குழந்தைக்கு அறிமுகப்படுத்துவதைப் பற்றி யோசித்ததுண்டா? 
 வளரும் பிள்ளைகளுக்கு உணர்ச்சிகள், எண்ணங்கள், எனர்ஜி லெவல் எல்லாமே நிரம்ப இருக்கும். அதற்கெல்லாம் ஒரு பாஸிட்டிவ் வடிகால் கொடுக்கவில்லை எனில், அது நெகட்டிவ் வழியில் வெடித்துச் சிதறும். எனவே, ஆடிக் களைக்கும் விளையாட்டுப் பொழுதுகளை தினமும் கொடுங்கள்.
 ‘என் குழந்தையை சிறப்பா வளர்க்கணும்’ என்று குழந்தையைக் காரணம் காட்டி, உங்கள் சுதந்திரத்துக்கு கூட்டுக் குடும்பத்தில் இருந்து வெளியேறினீர்கள். எனில், குழந்தை பற்றிய 100% பொறுப்பையும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். நடப்பது என்ன? பெற்றோரான பின்னும் டீன் ஏஜ் லைஃப் ஸ்டைலில் நீங்கள் நாட்டமிழக்காமல் இருக்க...  கட்டுப்பாடு, ஒழுக்கம் என்ற கடிவாளம் அற்றுக் கிடக்கிறார்கள் ‘நியூக்ளியர் ஃபேமிலி’ குழந்தைகள்.
 ‘எது கேட்டாலும் கிடைக்கும்’ என்ற, ஏமாற்றங்களே அறியாத வாழ்க்கையை குழந்தைகளுக்குத் தரத் துடிக்கிறீர்கள். அது அவர்களுக்கு நீங்கள் செய்யும் கெடுதல்களில் மற்றொன்று. தோல்விகளைக் கடந்தே வெற்றியை அடைய முடியும். எனவே, ஏமாற்றங்கள், தோல்விகள் கடந்தே வளரட்டும் குழந்தைகள்!
இனி உங்கள் வீடுகளில் ‘சைல்டிங்’ நிறுத்தி, ‘பேரன்டிங்’ ஆரம்பியுங்கள்! இது அவசியமாகச் செயல்படுத்த வேண்டிய மாற்றம்’’
- அழுத்தமாகச் சொன்னர் டாக்டர் தீப்.
‘‘கத்தக் கற்றுக்கொடுங்கள்!’’
‘‘உங்கள் குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது என்பது உங்களது நம்பிக்கை மட்டுமே, உண்மையல்ல!’’
- நிதர்சனம் சொன்னார் மானாமதுரை, அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாரதிப்ரியா.

‘‘ஸ்கூல் பஸ் டிரைவரில் இருந்து, பக்கத்துக் கடைக்காரர் வரை உங்கள் குழந்தையின் உலகத்தில் உள்ள அனைவரையும் பற்றி நீங்கள் அறிந்துகொள்வது முக்கியம். பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆண் குழந்தைகளுக்கும் `குட் டச், பேட் டச்’ சொல்லிக்கொடுங்கள். ஒருவேளை யாரேனும் ‘பேட் டச்’ செய்தால், உரக்கக் கத்தி அருகில் உள்ளவர்களை அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்துங்கள். குறிப்பிட்ட நபரிடம் குழந்தை பேச, பழக மறுத்தால், தனிமையில் பக்குவமாக அதற்கான காரணத்தை கேட்டறியுங்கள்.
புதியவர்கள் யாரிடமும் பேசவோ, அவர்கள் தரும் பொருட்களை வாங்கவோ கூடவே கூடாதென்று வலியுறுத்திச் சொல்லுங்கள். வீட்டு விலாசம், பெற்றோர் தொலைபேசி எண்களுடன், இப்போது பரவலாகிவரும் ‘குடும்ப பாஸ்வேர்ட்’ ஒன்றையும் உருவாக்கி அவர்களிடம் சொல்லி வையுங்கள். ‘அப்பா கூட்டிட்டு வரச் சொன்னாங்க’ என்று யாராவது அழைத்தால், ‘பாஸ்வேர்டு சொல்லுங்க’ என்று முதலில் கேட்கச் சொல்லுங்கள். அம்மாவிடம் குழந்தை அனைத்தையும் பகிரும் சூழலை உருவாக்க வேண்டியது அவசியம்’’ என்று எச்சரித்தார் பாரதிப்ரியா.
‘‘குழந்தையின் திறனுக்கேற்ற சிலபஸ்!’’
‘‘கல்வி விஷயத்தில் பெற்றோர் கொண் டிருப்பது பெரும்பாலும் பேராசையே!’’
- படிப்பு என்ற பெயரில் குழந்தைகளுக்கு பெற்றோர் தரும் சிரமங்கள் பற்றிச் சொன்னார் டாக்டர் விவேகானந்தர். ஓய்வுபெற்ற பேராசிரி யரான இவர் மதுரை, ‘எலீட்’ போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய கௌரவ இயக்குநர்.
‘‘மாநில அரசின் ‘சமச்சீர்’ கல்வித்திட்டம், எளிமையானது. மத்திய அரசின் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ கல்வித்திட்டங்கள் சிரமமானவை. பெற்றோர் ‘பிலோ ஆவரேஜ்’ குழந்தையை, தங்களின் ஆசைக்காக, சொஸைட்டல் ஸ்டேட்டஸுக்காக சென்ட்ரல் போர்டு சிலபஸில் சேர்க்கும்போது, அவர்களின் திறனுக்கு மீறிய அந்தச் சுமையால் மதிப்பெண் களுடன் தன்னம்பிக்கையையும் இழக்கும் மாணவர்கள் பலர். எனவே, குழந்தையின் ஆற்றலுக்கேற்ற சிலபஸை தேர்ந்தெடுங்கள்.
ஒன்பதாம் வகுப்புப் பாடத்தை நடத்தாமல் பத்தாம் வகுப்புப் பாடத்தை நடத்துவது, பதினொன்றாம் வகுப்புப் பாடத்தை ‘ஹை ஜம்ப்’ செய்து பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்துக்குச் செல்வது, கல்லூரிகளில் ‘பிளேஸ்மென்ட் செல்’ என்ற பெயரில், பாடம் நடத்த வேண்டிய வகுப்புகளை பலிகொடுத்து, ஒரு நிறுவனத்தின் நேர்காணலில் தேர்வாகும் டெக்னிக்குகளை சொல்லிக் கொடுப்பது... இப்படிக் குறுக்குவழிகள் பெருகிப்போய்க் கிடக்கிறது இன்றைய கல்விச் சாலை. ‘உணவு வேண்டாம்... விட்டமின் டேப்லட் சாப்பிட்டுக் கொள்ளலாம்’ எனும் இந்த கொள்கைக்கு உங்கள் பிள்ளையையும் பலி கொடுக்காமல், பாடங்களைப் புரிந்து, முழுமையாகப் படிக்கும் பண்பை அவர்களிடம் வளர்த்தெடுங்கள். அப்போதுதான், பணியில் ஏணி கிட்டும்.
படிப்பே வரவில்லையா? பரவாயில்லை. விளையாட்டு, அனிமேஷன், கிராஃபிக்ஸ், மீடியா, கேட்டரிங், ஃபேஷன் என்று அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையில் அவர்களை மடை
மாற்றுங்கள். எட்டாம் வகுப்பு ஃபெயிலானவர்தான், சச்சின் டெண்டுல்கர்!’’
- குருவி தலையில் பனங்காய் வைக்கும் கல்வி நம்பிக்கைகளை களைந்து பேசினார், விவேகானந்தர்.
இப்போது சொல்லுங்கள், உங்கள் குழந்தை உண்மையிலேயே நலமா?!
ஜெ.எம்.ஜன



நாம் என்ன விதைக்கிறோமோ அதுதான் விளையும். கருவேலம் விதைச்சா ஆலமரம் வளராது. அதுபோலதான் குழந்தை வளர்ப்பும். குழந்தைப் பருவத்தில் ஒரு விஷயத்தை கிரகித்துக் கொள்ளும்போது, அந்த விஷயம் வாழ்நாள் முழுக்க மனசைவிட்டு அகலாமல் அப்படியே பசுமரத்தாணிபோல மனதில் பதிந்துவிடும். குழந்தைகளை மனிதத் தன்மையோடு வளர்ப்பது குறித்து,சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல மருத்துவர் கீர்த்தன்யாவிடம் பேசியபோது, குழந்தை வளர்ப்பின் மிக முக்கிய அம்சத்தை கையில் எடுத்தார், 
“2013-ம் ஆண்டு மட்டும் 30% நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அவர்களின் நண்பர்களின் வன்முறைக்கு ஆளாகி உள்ளார்கள். 7 - 12ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளில் 50 சதவிகிதத்துக்கும் மேலானோர் சக மாணவர்களால் பாலியல் ரீதியாக தொல்லை செய்யப்பட்டுள்ளனர். 50% சதவிகிதத்துக்கும் மேலான மாணவர்கள் தேர்வில் ஆசிரியர்களை ஏமாற்றி காப்பி அடித்துள்ளனர். இரக்கமும் கருணையும் பின்னுக்குத் தள்ளப்படும்போது மாணவ சமுதாயம் அரக்கர்களாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும், மரியாதை தெரியாதவர்களாகவும்தானே மாறும்? அடிபட்டுக் கிடக்கும் பிராணிகளை வீட்டுக்கு எடுத்துவந்து உதவ நினைக்கும் குழந்தையிடம் கோபம் காட்டாதீர்கள். உங்கள் நேரமின்மையினால் அவர்களின் இரக்க குணத்தை முளையிலேயே கிள்ளி எறியாதீர்கள்.
இன்று பெரும்பான்மையான பெற்றோர், தங்கள் குழந்தைகளை ஒரு நடமாடும் கௌரவ அடையாளமாகத்தான் உருவாக்க விரும்புகிறார்கள். விளைவு... எதிர்காலத்தில் உங்களையும் அவர்கள் உறவாக, உயிராக இன்றி பராமரிப்புப் பொருளாகவே பார்க்கவிருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள். பாசம் என்றால் என்னவென்று அறியாமல் அவர்கள் வளர்ந்து நிற்கும்போது, அதற்கான பொறுப்பை மதிப்பெண்களுக்கும், பணத்துக்கும், தனி மனித வெற்றிக்கும் முதல் இடத்தை தந்து பிள்ளைகளை வளர்த்தெடுத்த பெற்றோரே ஏற்க வேண்டும். உங்கள் குழந்தைகள் அனைவர் மத்தியிலும் தனித்துத் தெரிய அவர்கள் நடத்தை, திறமைதான் காரணமாக இருக்க வேண்டுமே தவிர, உடுத்தும் உடை, உபயோகிக்கும் விலைமதிப்புமிக்க பொருட்கள், படிக்கும் பள்ளி, கௌரவம், அந்தஸ்து போன்றவை அவர்களை அடையாளப்படுத்தக் கூடாது!’’
- பெற்றோர் மனசாட்சியினை உண்மை வார்த்தைகளால் உரசிய கீர்த்தன்யா, குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகளையும், அதனால் ஏற்படும் பிரச்னைகளையும், அதைக் கையாளும் வழிகளையும் தொகுத்துத் தந்த அட்டவணை...
நடைமுறை
நமது கலாசாரத்துக்கு மாறாக மேற்கத்திய கலாசாரத்தின் கவர்ச்சிகரமான உடைகளை சிறுமிகளுக்கு உடுத்திவிடுவது. வயதுக்கு வந்தபின் அதே மேற்கத்திய உடைகளை அணிய தடை போடுவது.
குழந்தைகள் விரும்பும் பொருட்களை அதன் அதிக விலை பற்றி யோசிக்காமல், கேட்டவுடன் வாங்கிக்கொடுத்து குழந்தைகளின் எதிர்பார்ப்பை வளர்த்துவிடுவது. பின்னர் குடும்ப நிதிநிலைமையில் இறக்கம் ஏற்படும்போது, அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாமல் போவது.
பள்ளியிலும் சரி, வீட்டிலும் சரி... குழந்தைகளுக்கு எப்படிப் படிப்பது எனப் பொறுமையாகக் கற்றுக் கொடுப்பது இல்லை. ஆனால், பள்ளியில் படிப்பது போதாதென டியூஷனுக்கும் அனுப்பி, எந்நேரமும் படி படி என தொல்லை கொடுப்பது. குழந்தைகள் விருப்பத்துக்கு படிப்பை தேர்வு செய்யாமல், உங்கள் விருப்பத்தை அவர்கள் மீது திணிப்பது.
குழந்தைகள் முன்னிலையில், வீட்டுப் பெரியவர்கள் மற்றும் உறவினர்களை தவறாகப் பேசுவது, வீட்டு பணியாளர்களையும், காய்கறி விற்பவர், ஆட்டோ ஓட்டுநர் போன்ற தொழிலாளர்களை மரியாதை இல்லாமல் நடத்துவது.
உங்களுடைய கௌரவத்துக்காகவும், அடுத்தவர்களிடம் பெருமை பேசுவதற்காகவும் குழந்தைகளை ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என நிர்பந்திப்பது, விலைமதிப்புள்ள உடை, பொருட்களை மட்டுமே வாங்கிக் கொடுப்பது என, நாம் வசதி மிக்கவர், உயர்ந்தவர் எனும்  கருத்தை சிறு வயதிலேயே குழந்தைகள் மனதில் பதிய வைப்பது.
பாதிப்பு
(1) சிறு வயதிலிருந்து உடுத்திவந்த உடைக்கு திடீரென தடைவரும்போது எது சரி, எது தவறு என மனதளவில் ஏற்படும் குழப்பம். (2) சக தோழிகள் இதுபோல உடை உடுத்திவரும்போது என்னுடைய சுதந்திரம் ஏன் பறிக்கப்படுகிறது எனும் கேள்வி. (3) பெற்றோரின் உடையை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்போது, என்னுடைய உடைகளை நானே தேர்வுசெய்தால் என்ன எனும் எண்ணம்.
இதுவரை கேட்ட பொருள் உடனுக்குடன் கையில் வந்ததை வைத்து சக நண்பர்கள் மத்தியில் கிடைத்த மரியாதை, தற்போது ஆசைப்பட்டது எதுவும் கிடைக்காமல், சக நண்பர்களிடம் அவமானப்படுவதால் ஏற்படும் மன உளைச்சல்.
படிப்பின் மீதே வெறுப்பு ஏற்படுவது. தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாவது. சொந்தமாக முடிவு எடுக்கத் தெரியாமல் போவது.
பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கத் தவறுவது. சக மனிதர் களை மனிதராகப் பார்க்காமல் மட்டமாக நடத்துவது.
தன்னுடன் படிக்கும் சக மாணவர்களைக் காட்டிலும் நாம்தான் உயர்ந்தவர் எனும் எண்ணம் வலுப்பது, ஏழ்மையில் இருப்பவர்களை தாழ்வாக நினைப்பது. ஒரு கட்டத்தில் குடும்ப பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும்போது, தாழ்வு மனப்பான்மையினால் மன உளைச்சலுக்கு ஆளாவது.
தீர்வு
(1) குழந்தைகளுக்கு நம் கலாசாரத்தை சிறுவயது முதலே எடுத்துச்சொல்லி வளர்ப்பது.  (2) குடும்பத்தின் பாரம்பர்யத்தையும், கடைப்பிடித்துவரும் ஒழுக்கநெறிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்லுங்கள். (3) `என்னுடைய வயதுக்கு எனக்கான சரியான உடைகளை என்னால் தேர்வு செய்துகொள்ள முடியும், நீ என்னைப்போல் வளர்ந்ததும் உனக்கானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்’ என உறுதியளியுங்கள்.
உங்கள் குழந்தை ஒரு பொருளை கேட்கும்போது அதன் அத்தியாவசியத்தையும், அநாவசியத்தையும் எடுத்துச் சொல்லி புரிய வைப்பது மற்றும் சமயம் கிடைக்கும்போது அருகிலிருக்கும் ஏதாவது ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்று, வாழ்வாதாரம் இல்லாமல் இருக்கும் குழந்தைகளின் நிலைமையை கண்முன் காட்டி, இவர்களின் கையால் அவர்களுக்கு ஏதாவது பரிசளிக்கச் செய்வது போன்ற விஷயங்களால், பொருட்களின் அருமை மற்றும் உதவும் மனப்பான்மை என இரண்டு குணங்களையும் வளர்க்க முடியும்.
(1)படிப்பு விஷயத்தில் குழந்தைகளை பெற்றோர்கள் அதிகமாக கண்டிக்கவும் கூடாது, கண்டிக்காமல் விடவும் கூடாது. பக்குவமாக எடுத்துச் சொல்லவும். (2) குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமான தாய்மாமன், சித்தப்பா, சித்தி போன்ற மூன்றாம் தரப்பினர் மூலம் படிப்பின் அவசியத்தை ஒரு தோழமையுடன் எடுத்துச்சொல்லி புரிய வைக்கலாம்.
குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை கரடியாகக் கத்திப் புரியவைக்க முடியாது. அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறோமோ அதற்கு நாமே சிறந்த உதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும். ஏனெனில், கண்ணால் பார்ப்பதைத்தான் உடனுக்குடன் மனதில் வாங்கிக்கொள்வார்கள்.
மொழியை மொழியாக மட்டுமே பதிய வையுங்கள். 7 வயது வரை குழந்தைகளுக்கு மொழியை கற்றுக்கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும். அதனால் ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக் காமல் அக்கம்பக்கத்தில் உள்ள வேற்று மொழியாளர்களிடம் பேசவைப்பது என குறைந்தது ஐந்து மொழிகளையாவது கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுங்கள்.

-டாக்டர். கு. கணேசன்

No comments:

Post a Comment