அறிவியலின் ஆராய்ச்சிக்கூடம் கோயில்
Advertisement
பதிவு செய்த நாள்
27செப்2016
00:20

கோயில்கள் பிரபஞ்சத்தின் ஆற்றலை பூமியில் சேகரிக்க நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது என்றால் அது மிகையாகாது. கிரகங்களின் மின்காந்த அதிர்வலைகள் பூமியை வந்தடையும் போது, மனித உயிரினங்களின் மீது பாய்கிறது. இது 24 மணி நேரமும் நடக்கிறது. இந்நிகழ்வின் போது, நமது முன்னோர்கள் மின்காந்த அலைகளை சேமிக்கும் அறிவியல் தளமாக கோயிலை உருவாக்கினர். கருங்கல்லால் கோயில்களில் சிலைகள் உருவாக்கப்பட்டது. கருங்கல் மந்திர ஒலி அலைகளை உள்வாங்கி சேமித்து வைத்து கொள்ளும். உள்வாங்கப்படும் ஒலி அலைகள் கோயில் முழுவதும் மின்காந்த அலைகளாக பரவி நிற்கும். அபிேஷகம் செய்யப்படுகின்ற பால், எண்ணெய், நெய் போன்ற பொருட்கள் ஆகர்ஷண சக்தியை உள்வாங்கி கொள்கிறது. சிலையை சுற்றி அலங்கரிக்கப்படுகின்ற மலர்களானது, நல்ல மின் காந்த அலைகளை அப்பகுதியில் பரவி நிற்க உதவுகின்றது. மூலவரை நாம் தரிசிக்கும் போது, அங்கு பரவியுள்ள மின்காந்த அலைகள் நமது கண்களின் வழியாக உடல் முழுவதும் பரவுகிறது. தீபம் பார்த்தால் புண்ணியம் என்று சொல்வார்கள். தீபத்தை தொட்டு வணங்கும்போது, மூலவரின் அருகில் உள்ள மின்காந்த அலைகள், நம் கைகளின் வழியாக உடல் முழுவதும் பரவுகின்றது. அதே போல்தான் திருநீறு, குங்குமம் மூலம் கோயிலில் உறைந்திருக்கின்ற பிரபஞ்ச ஆற்றலான கிரக சக்திகள் நம் உடலில் இணைகிறது.
மனதின் நிலைப்பாடு : முழுமையான நல்ல மின்காந்த அலைகள் உடலில் சேர்வதன் மூலம் பல்வேறு நலன்களை அடையலாம். அதே நேரத்தில் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கின்ற அனைவரும் துன்பம் இல்லாமல் வாழ்கின்றனரா? என்ற ஐயப்பாடு எழக்கூடும்.
ஒரு மாணவன், தன்னுடைய பாடத்திட்டம் 100 சதவீதம் இருந்தாலும், 25 சதவீத மனதை நிலைப்படுத்தி படித்தால், 25 மதிப்பெண்ணும். 50 சதவீதம் நிலைப்படுத்தி படித்தால் 50 சதவீத மதிப்பெண்ணும், 100 சதவீதம் மனதை நிலைப்படுத்தி படித்தால் நுாறு மதிப்பெண்களும் பெறுகிறான்.அதே போல் தான் கோயிலுக்கு செல்கின்ற மக்கள், கோயிலில் தன் சிந்தனைகளை வேறு இடத்தில் வைத்தால் ஆலயம் சென்றும் பலன் இல்லை. ஒருவர் புதிய காலணியை வாங்கி கோயில் வாசலில் போட்டுவிட்டு, உள்ளே சென்று இறைவனை வணங்கும்போது, ஆழ்மனதானது இறைவன் மீது இல்லாமல், தான் வாங்கிய காலணி மீது இருந்தால், மின்காந்த அதிர்வலைகள் உடலில் இணையாது. இதன் அடிப்படை தத்துவம் என்னவென்றால், ஆழ்மனதை ஒரு நிலை படுத்தாவிட்டால், பிரபஞ்ச பேராற்றலான கிரக சக்திகள் அந்த மனித உயிருக்கு கிடைக்காது.
கோயில் கோபுரம் : கோயிலின் உள்ளே நுழையும்போது, கோபுரம் பிரபஞ்ச சக்தியை உள்ளே இழுக்கிறது. கோபுர கலசத்தில் வரகு என்ற தானியம் கொட்டப்படுகிறது. அந்த தானியத்தின் மின்காந்த ஆற்றல், மின்னலால் ஏற்படும் மின் சக்தி, கோயிலை தாக்காமல் பாதுகாக்கிறது. கோயிலின் ஈசான்ய பகுதி, பிரபஞ்ச ஆற்றல் நுழையும் பகுதியாக இருக்கின்றது. ஈசான்ய பகுதியில், நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஒன்பது நவகிரகத்தின் சக்திகளும், கோயில் முழுவதும் பரவுகிறது. பிரபஞ்சத்திற்கும் மூலவருக்கும் இணைப்பு பாலமாக கொடிமரம் அமைக்கப்பட்டிருக்கிறது. வான் மண்டல மின்காந்த சக்தி, கோயிலின் கொடிமரம் மூலமே மூலவருக்கு அனுப்பப்படுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள், கொடிமரம் அருகே சென்று நம் கோரிக்கைகளை சொன்னால், அவை வான் மண்டலத்தில் உள்ள பிரபஞ்சத்தின் மூலம் இணைவு ஏற்பட்டு, அக்கோரிக்கை நிறைவேறும் என்றனர்.
அதே போல் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு தெய்வ சக்தியின் மீது உறைகின்றது. பிரபஞ்சத்தில் கலந்து வருகிற ஒன்பது சக்திகள் உறையக்கூடிய இடமாக கோயில்களை முன்னோர்கள் அமைத்தனர்.
ராகங்கள் : பக்தி, ஞானம், கலை, இலக்கியம், வேதம் போன்ற பல்வேறு தன்மைகளை ஒரே இடத்தில் கொண்டுவரக்கூடிய ஒரே இடமாக கோயில் திகழ்கிறது. இலக்கியமும், பண்பாடும் ஆலயத்தின் துாண்களாக உள்ளது. நமது முன்னோர்கள் கர்நாடக இசை ராகங்களை மனம் குளிர கேட்டால் மனதளவில் பல நல்ல மின்காந்த அதிர்வுகள் இணைந்து, ஆயுளை நீட்டிக்க முடியும், என்பதை கண்டறிந்து இசை கச்சேரிகளை நடத்தும் இடமாக கோயில்களை தேர்வு செய்தனர்.அமிர்தவர்ஷினி என்ற ராகம் மழைபொழியவும், 'ஹம்சானந்தி' மனஅழுத்தம் தீரவும், 'கேதாரம்' ஆஸ்துமா, தலைவலி, இருமல் போன்ற நோய்களை நீக்கவும், 'விஜயஸ்ரீ' வெற்றி கிடைக்கவும், 'அகிர் பைரவி'உயர் ரத்த அழுத்தம் தீரவும், 'ராமகளி' ராகம் அல்சர் தீரவும், 'கோலா ஹலம்' என்ற ராகம் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் பாடினர். இவ்வாறு அறிவியல் உண்மைகள் அடங்கிய இசை, கோயில்களில் இசைக்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இன்னும் 70-க்கும் மேற்பட்ட ராகங்களை பயன்பாட்டில் குறிப்பிடலாம். கணவன், மனைவி உறவின் அறிவியல் உண்மைகளை தெரிந்து கொள்ள கூடிய சிற்பங்கள் கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் அறிவியல் சிறப்பம்சம் பொதிந்து கிடக்கும் ஓர் ஆராய்ச்சி கூடம் கோயில்.
- டி.ஐங்கரன்
விஞ்ஞான ஜோதிடர்
நான் படித்ததிலேயே மிகவும் அறிவுபூர்வமான செய்தி.வாழ்க தமிழ்!!!வளர்க வையகம்!!!
ReplyDelete