Tuesday, January 3, 2017

துளித் துளியாய் வலி குறைக்கும் 7 உணவுகள் #PainReducingFoods #SayNoToPainKiller thanks to vikatan.com


லி... இதைப்போல துன்பம் தரக்கூடிய விஷயம் வேறொன்று இருக்க முடியாது. தலைவலியை,வயிற்றுவலியைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்களின் கதைகூட நமக்குத் தெரியும். அந்த வலிக்கே இப்படிப்பட்ட விபரீதம் என்றால், விபத்தில் ஏற்படும் காயங்கள், எலும்பு முறிவு ஆகியவற்றைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அது எப்படிப்பட்ட `உயிர்போகிற வலி’ என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இவை தவிர, வேறு சில உடல் உபாதைகளும் நோய்களும் உண்டாக்கும் வலி, வீக்கம் ஆகியவையும் அதிக வேதனை தந்து நம்மைப் பாடாகப்படுத்திவிடும். பாதிக்கப்பட்டவர், வலி பொறுக்க முடியாமல், தன் அன்றாட வேலைகளைச் செய்வதற்கே சிரமப்படுவார். இது போன்ற வலிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது, வலி நிவாரண மாத்திரைகள். அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், விபத்துக்குளானவர்கள், நாள்பட்ட வலி குறைக்கும் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் வலியிலிருந்து விடுபட, மருந்து மாத்திரைகளோடு சில இயற்கை உணவுகளையும் சாப்பிடலாம். அவை வலியைக் குறைக்கவும், விரைவில் குணம் பெறவும் உதவும். வலியைக் குறைக்கும் ஏழு உணவுகள் இங்கே...
உணவுகள்

இஞ்சி
இது, வயிற்று வலி மற்றும் செரிமானக் கோளாறுக்கு சிறந்த மருந்து. வாந்தி, குமட்டல், வயிறு மந்தத்தன்மை ஆகியவற்றைப் போக்கும். இதயத்துடிப்பை சீராக்கும். எனவே, இதய நோயாளிகள் அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டிய ஒன்று. இஞ்சியை அரைத்து கை, கால் மூட்டுகளில் பூசிவந்தால் மூட்டுவலி மற்றும் வீக்கம் குணமாகும். கர்ப்பிணிப் பெண்கள், பேறுகாலத்தில் தினமும் காலை பழச்சாறுடன் இஞ்சி சேர்த்து சாப்பிட்டால் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் நீங்கும்.


மீன்
மக்தி, வஞ்சிரம் உள்ளிட்ட மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இது தண்டுவடத்தை வலுவாக்குவதுடன் இடுப்புவலி, முதுகுவலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. இதயத்துடிப்பை சீராக்கும். விபத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு, விரைவில் கூடுவதற்கு உதவும். வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.   

மஞ்சள்
நிறம் மற்றும் மணத்துக்காக உணவில் சேர்க்கப்படும் மஞ்சளில் மருத்துவக் குணங்கள் அதிகம் நிறைந்துள்ளன. குர்குமின் என்னும் இயற்கை பீனால் உள்ளடக்கியது மஞ்சள். விபத்தில் காயம்பட்ட இடங்களில் வலி, வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.

சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழை சாற்றைத் தீக்காயங்கள் மேல் தடவிவர, விரைவில் குணமாகும். ஹெச்.பைலோரி (H.pylori) பாக்டீரியாவால் ஏற்படும் இரைப்பை அல்சர், இரைப்பையின் உட்பகுதியில் புண், வலி மற்றும் எரிச்சலை உண்டாக்கும். தினமும் காலையிலும் மாலையிலும் சோற்றுக்கற்றாழை ஜூஸ் அருந்தினால் அல்சாரால் ஏற்படும் வலி, எரிச்சல் குணமாகும்.

பப்பாளி
இதில் இயற்கையாகவே உள்ள `பபைன்’ (papain) நொதி, அறுவைசிகிச்சை முடிந்ததும் தோலில் தையலிடப்பட்ட இடத்தில் ஏற்பட்ட காயம் விரைவில் குணமடைய உதவும். குழந்தைகள் மற்றும் வளரும் சிறுவர்களுக்கு மாலை பப்பாளி ஸ்மூத்தி, சாலட் கொடுத்து வந்தால், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல்வளர்ச்சி அதிகரிக்க உதவும்.

செர்ரி, சிவப்பு திராட்சை
இவற்றில் உள்ள ரெஸ்வெர்ட்ரால் (Resveratrol) என்ற வேதியியல் மூலக் கூறு, உடல் செல்கள் வீக்கத்துக்கு எதிராகச் செயல்பட ஊக்குவிக்கிறது. நாள்பட்ட வலி, வீக்கம் உள்ளவர்கள் செர்ரி அல்லது திராட்சைச் சாறு பருகிவந்தால் விரைவில் குணமாகும்.  


கிரீன் டீ
இயற்கை நற்குணங்கள் அடங்கிய கிரீன் டீயை, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் காலையில் வெறும் வயற்றில் பருகிவந்தால், உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தருவதுடன் உடல் தசை இறுக்கம், உடல்வலி, வீக்கம் அகியவற்றைப் போக்கும்.

No comments:

Post a Comment