Thursday, January 12, 2017

thanks to Nakeeran

 ண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும்; ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல் தேதியை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதை என்று ஒன்று உண்டு. இதனை "மகர சங்கராந்தி தேவதை' என்று அழைப்பார்கள். இவ்விதம் 60 வருடங்களுக்கு தனித்தனி பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த தேவதைகளின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை- தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள். இத்தகைய புண்ணிய தினமான சங்கராந்தியன்று சூரியன் வடக்கு நோக்கித் திரும்பி சஞ்சரிக்கத் தொடங்குவதால் இதற்கு உத்திர அயனம் என்று பெயர். அன்றைய தினம் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பார்.

அன்றைய தினம் சூரிய வழிபாடு செய்ய மிக உகந்த நாளாகும். எனவேதான் அன்று சூரியனுக்கு விருப்பமான சர்க்கரைப் பொங்கல், கரும்பு முதலிய பொருட்களைப் படைக்கிறோம். சூரியனை வழிபடுவதால் உலகில்  அடைய முடியாதவையே கிடையாது. வேதம் கதிரவனைப் பலவாறும் புகழ்கிறது. "நாஸ்திகர்களாலும் இல்லை என்று கூற முடியாத கடவுள் சூரிய பகவானே' என்பதை வேதம் கூறுகிறது.

மேலும், சூரியன் ஆன்மா வைத் தட்டி எழுப்பி நல்வழிப்படுத்துபவர் என்பதை "ஓம் ய ஏஷோந் தராதித்யே ஹிரண்மய புருஷ' எனப் புகழ்கிறது.

உடல் ஆரோக்கியத்தை அளிப்பதிலும் சூரியன் அருட்கடல் என்பதை வேதம், "ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்' என்றும்; இதய நோயை நீக்குபவர் என்பதை "ஹ்ருத்ரோகம் மம சூர்ய ஹரிமாணம் ச நாசய' என்றும் குறிப்பிடுகிறது. இவரே மழை பெய்யக் காரணம் என்பதை வேதத்தில் "யாபி ராதித்யஸத்பதி ரஸ்மிபிஸ் தாபி:' எனக் கூறுப்படுகிறது. இதையே கீதாசார்ய னும், "ஆதித்யஜாஜாயதே வ்ருஷ்டி' என்று கூறுகிறார்.

இத்தகைய சிறப்புமிக்க சூரிய பகவானைப் போற்றும் சூரிய நமஸ்கார மந்திரங்கள் யஜுர் வேதத்தில் 32 அனுவாகங்களாக உள்ளன. ரிக்வேதம் இவரைப் பற்றி "மஹா ஸௌரம்' என்ற ஒரு துதியை வெளியிடுகிறது. சாமவேதம் சூரியனை "சுக்ரியம்' என்ற ஒப்பற்ற துதியால் போற்றுகிறது.
சூரிய தேவனது பெருமையைக் கூறும் "அசதி உபநிஷத்' என்ற உபநிடதத்தை ஜெபிப்பவர்கட்கு கண்நோய் ஏற்படாது என்றும்; இந்த கிரந்தத்தை ஜெபம் செய்வதால் எத்தகைய பயங்கரமான நோய் ஏற்பட்டிருந் தாலும் அதைப் போக்கிவிடலாம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பாண்டவர்கள் விராட நகரத்தில் அஞ்ஞாத வாசம் செய்தபோது, கீசகனால் துன்புறுத்தப்பட்ட திரௌபதி சூரியனை வேண்டி தன்னைக் காப்பாற்றுமாறு துதித்தாள். அப்போது சூரியன் தனது தூதனை அனுப்பி கீசகனை விரட்டியதாக பாரதம் கூறுகிறது. மேலும் மகாபாரதத்தில் சூரியனுக்கு சித்திரை முதலான மாதங்களிலும் பன்னிரண்டு பெயர்கள் கூறப்படுகின்றன. அவையாவன: மித்ரன், ரவி, சூரியன், பானு, சுகன், பூஷ்ணன், ஹிரண்ய கர்ப்பன், மரீசி, ஆதித்யன், ஸவிதா, அர்க்கன், பாஸ்கரன் என்பதாகும்.

பெண்கள் சூரியனுக்கு அர்க்யம் கொடுத்தால், ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் வைதவ் யம் (விதவைக் கோலம்) அடைய மாட்டார்கள் என்று கூறுகிறது. விதவைப் பெண்களை கஷ்டங் களினின்று காப்பவன் என்று சூரிய சஹஸ்ரநாமம் போற்றுகிறது.

சூரிய பகவானது கருணையை விளக்க சௌர புராணத்தில் ஒரு வரலாறு கூறப்படுகிறது. ஒரு காட்டில் தன் மனைவி, மக்களுடன் ஏழை ஒருவன் வசித்து வந்தான். ஒருநாள் அவனுக்கு காட்டில் எங்கு தேடியும் உணவு கிடைக்கவில்லை. அன்று மாலை வரை தண்ணீர்கூட அருந்தாத அம்மனிதன் சூரியனை நோக்கி தற்செயலாகத் தன் குறையைக் கூறி புலம்பிவிட்டு தரையில் மயங்கி வீழ்ந்தான். இரவு முழுவதும் அவ்விதம் மயக்கத்தில் கிடந்தான். கண் விழித்து பார்த்தபோது அவ்வழியே வந்த அரசன் ஒருவனது பாதுகாப்பில் இருப்பதைக் கண்டான். 



தற்செயலாக இம்மனிதனைப் பார்த்த அரசன் அவனைக் காப்பாற்றியதோடு மட்டுமின்றி,  அவனது ஏழ்மை நிலை பற்றி அறிந்ததும் 

அவனைப் பெரும் செல்வந்தனாகவும் ஆக்கிவிட்டான். இவையனைத்துக்கும் காரணம் அம்மனிதன் அன்ன ஆகாரமின்றி இருந்த தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகும். எனவே பானுவார விரதம் இருந்து சூரியனை வழிபட்டதால் இப்பேறு கிடைத்தது என்று சௌரபுராணம் கூறுகிறது. 

மேலும் ராமாயணத்தில் வரும் சுக்ரீவன்  என்ற வானரனும், பாரதத்தில் வரும் கர்ணனும் சூரிய புத்திரர்கள் ஆவார்கள். வாலகில்யர்கள் எனப்படும் 60,000 முனிவர்கள் சூரியனது சீடர்கள் ஆவர். இவர்கள் மிகச்சிறிய வடிவம் உடையவர்கள். தண்டி, பிங்களன் என்பவர்கள் இவரது முக்கிய ஏவலர்களாகும். 

சூரிய பகவானை சிவாகமங்களும், அபிதான சிந்தாமணி, சூரிய உபநிஷத் போன்ற நூல்களும், ஜோதிட நூல்களும் புகழ்கின்றன. சூரியன் இல்லையேல் இவ்வுலகில் ஒளியும் உயிரினங் களும் இல்லை என்பதை மகாநாராயண உபநிஷத், "க்ருணி ஸூர்ய ஆதித்யோ ப்ரபாவாத்யக்ஷரம்' என்று கூறுகிறது.

சூரியனை மேல்நாட்டார் அப்பல்லோ என்கின்றனர். இவருக்கு உரிய சமித்து எருக்கு ஆகும். சீர்காழிக்கருகில் உள்ள திருவெண்காட் டில் சிலப்பதிகாரம் புகழும் சூரியகுண்டம் உள்ளது. திருக்கண்டியூரில் மாசி மாதமும்; திருவேதிக்குடி, திருநாவலூரில் பங்குனி மாதமும்; சித்திரை மாதம் குடந்தைக் காரோணம் என்று புகழப்படும் நாகேசுவரன் கோவிலிலும் சூரிய பூஜை சிறப்பாக நடக்கிறது. அன்று கதிரவன் இத்தலங்களில் சிவபூஜை செய்வதாக ஐதீகம்.

தை மாதம் முதல் தேதியான மகர சங்கராந்தி தினத்தன்று திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் இறைவன் சிறப்பாக ஆராதிக்கப்பட்டு தீர்த்தம் கொடுக்கிறார்கள் பூஜை செய்வோர். மன்னார்குடி என்ற வைணவத் தலத்தில் சங்கராந்தி முதல் "ஸங்க்ரமண உத்ஸவம்' சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது. மகர சங்கராந்தியன்றுதான் மதுரையம்பதியில் இறைவன் கல் யானைக்குக் கரும்பு அளித்த திருவிளையாடல் நடந்தது. சபரிமலையில் ஐயப்பனுக்குக்குரிய "மகரஜோதி தரிசனம்' காண்பதும் இந்த புண்ணிய தினத் தன்றேயாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த உத்ராயண புண்ணிய காலத்தில் இறக்கும் ஜீவன்கள் நற்கதி அடைவதாகக் கூறப்படுகிறது. உத்தராயணத்தில் இறந்த உயிர்கள் முக்தி பெறுவதைப் பற்றி விவரிக்கும் பகவத்கீதை (அக்னிர் ஜோதிர் அஹ: சுக்ல: ஷண்மாஸா உத்தராயணம்' என்று கூறுகிறது. மகாபாரதமும் மிகச்சிறந்த யோகியான பீஷ்மர் உத்தராயண புண்ணிய காலம் வந்தபின்பே தன் உயிரை விட்டார் என்றும் சிறப்பாக விவரிக்கிறது. 

இத்தகைய பவித்ரமான உத்தராயண புண்ணிய காலம் தொடங்கும் மகர சங்கராந்தி தினத்தன்று நாம் அனைவரும் சூரிய வழிபாடு செய்து, கிரக தோஷங்கள் நீங்கி எல்லா வளமும் பெறுவோமாக!

No comments:

Post a Comment