Saturday, April 29, 2017

வீட்டைப் பசுமையாக்கும் வெர்டிகல் கார்டன்!

துரை.நாகராஜன்
கர்ப்புற நெருக்கடிகளில் வீட்டைச் சுற்றி செடிகள் நடுவதற்குப் போதிய இடம் இருப்பதில்லை. ஆனாலும் ஆர்வமுள்ளவர்கள் மாடித் தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார்கள். தரையில் செடி வளர்ப்பதற்கும் மாடியில் செடிகள் வளர்ப்பதற்கும் இருக்கிற வேறுபாடுகளைத் தெரிந்துகொண்டு செய்கிறவர்கள்,  வீட்டுத் தோட்டத்தை வெற்றி கரமாக அமைக்கின்றனர். ரசாயன உரத்தில் விளையும் காய்கறிகளைத் தவிர்ப்பதற்கும், வீட்டைக் குளுமையாக வைத்துக்கொள்ளவும் இத்தகைய வீட்டுத் தோட்டம் உதவியாக இருக்கிறது. 

இந்த வீட்டுத் தோட்டத்தில் புதிய தொழில்நுட்ப மாக வெர்டிகல் கார்டன் (சுவர்த்தோட்டம்) என்ற முறை தற்போது பிரபலமாகி வருகிறது. வெர்டிகல் கார்டன் பற்றி நெல்சன் எர்த்சென்ஸ் அக்ரோ புராடெக்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் செந்தில் பிரபுவிடம் பேசினோம்.

“மாடியில் தோட்டம் அமைக்கும்போது நீர்கசிவு ஏற்படும் என்ற பயம் பலருக்கும் இருக்கும். தற்போது மாடியில் ஏற்படும் நீர்க்கசிவைத் தவிர்க்க, வெர்டிகல் கார்டன் என்ற தொழில்நுட்பம் புதிதாக அறிமுகமாகி, பிரபலமாகி வருகிறது. இந்தத் தொழில்நுட்பம் மக்களிடையே இன்னும் பெரிதாகச் சென்றடையவில்லை. மாடியில் அதிக எடையுள்ள தோட்டம் அமைத்தால், வீட்டின் மேற்கூரை பாதிக்கப்படுமே எனக் கவலைப்படுகிற வர்களுக்கும், வீட்டின் சுற்றுப்புற இடங்கள் குறைவாக இருக்கின்றன என்பவர்களுக்கும் வெர்டிகல் கார்டன் மிகவும் ஏற்றது.
  வெர்டிகல் கார்டன் முறை

ஓர் அடுக்கு என்பது மூன்று தொட்டிகளைக் கொண்டதாக இருக்கும். இவற்றைத் தனியாகவும் சுவரில் மாட்டிக்கொள்ளலாம். மொத்தமாக 50 அல்லது 100 அடுக்குகள் கொண்டு வீட்டைச் சுற்றியுள்ள சுவரிலும், மாடியில் உள்ள சுற்றுச் சுவர்களிலும் அமைக்கலாம். மூன்று அடுக்குகள் ஒன்றின்கீழ் ஒன்றாக ஒரு வரிசையில் அடுக்கப்பட்டு இருக்கும். மேலே தண்ணீர் ஊற்றும்போது முதல் தொட்டி நிரம்பி அடுத்தத் தொட்டிக்கு தண்ணீர் செல்லும் வகையில் தொட்டியின் கீழ்ப்பகுதியில் துளை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். தண்ணீர் அதிகமாக இருந்தால், தொட்டியின் கீழ்புறத்தில் உள்ள துளை வழியாகத் தண்ணீர் வெளியேறி கீழே அமைந்துள்ள தொட்டிக்குச் சென்று விடும். கடைசி அடுக்கில் உள்ள துளை வழியாக வெளியேறும் நீரை மழை நீர் சேகரிப்பு குழாய் அமைப்பதுபோலத் தண்ணீரை வீணாகாமல் சேகரித்து மற்ற செடிகளுக்கும் பயன்படுத்தலாம். 

நீண்ட சுவர்போல தோட்டம் அமைக்கும்போது, மேலே உள்ள முதல் அடுக்கில் மட்டும் சொட்டுநீர் பாசனக் குழாய்கள் அமைக்கப்பட்டால், தண்ணீர்ப் பாசனம் செய்ய ஏதுவாக இருக்கும். வெர்டிகல் கார்டனில் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் தண்ணீர் பாசனம் செய்வது எளிது. 

பத்து அடுக்குக்குக் குறைவாக இருந்தால், கைகளால் தண்ணீர் ஊற்றுவது நல்லது. இந்த கார்டனில் அதிக தொட்டிகள் கொண்ட சுவரை அமைக்கும்போது, விலை குறைவாக இருக்கும்.
  வெர்டிகல் கார்டனில் சொட்டுநீர் பாசனம்

இந்த வெர்டிகல் கார்டனை இதுவரை பள்ளிகள், ரெஸ்டாரன்டுகள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் அமைத்துத் தந்திருக்கிறோம். அடையாரிலுள்ள பிரபலமான பள்ளி ஒன்றில் இரண்டு பகுதிகளைப் பிரிக்கும் சுவராகவே அமைத்திருக் கிறோம். இப்போது அழகுக்கான, கண்ணைக் கவரும் வகையிலான செடிகள் மட்டுமே வளர்க்கப்படு கின்றன. ஆனால், இந்த வெர்டிகல் கார்டனில் முள்ளங்கி, உருளைக்கிழங்கு, வெங்காயம், புதினா, கொத்த மல்லி, கீரை வகைகள், பந்தல் காய்கறிகள், கொடிவகை காய்கறிகள் ஆகியவற்றையும் வளர்க்கலாம். 

வீடு அழகாக இருக்க வேண்டும் என நினைப் பவர்களும், வீடு முழுவதும் பசுமையாக இருக்க வேண்டும் என நினைப்பவர் களும் மட்டுமே வெர்டிகல் கார்டனைப் பயன்படுத்தி வருகிறார்கள். மாடியிலும், சுவரின் கைப்பிடிகளிலும்கூட வெர்டிகல் கார்டனை அமைக்கலாம். பணம் செலவழித்து பெரிய சுவர்த்தோட்டத்தை அமைத்துவிட்டால் மட்டும் போதாது, பராமரிப்பு மிக முக்கியம். மாதமொருமுறை செடிகளுக்கு இயற்கை உரங்களை இடுவது அவசியம். 

இந்த வெர்டிகல் கார் டனை அமைக்க மொத்தமாக சதுரஅடிக்கு ரூ.900 ரூபாய் வரை செலவாகும். இதில் சொட்டு நீர்க்குழாய்கள், வேலையாள்கள் என முழுமையானத் தோட்டம் அமைத்துத்  தந்துவிடுவோம். சுவர்த் தோட்டம் அமைக்கும் பொருள்கள் மட்டும் தந்தால், சதுரஅடிக்கு ரூ.600 வரை செலவாகும்” என்றார் அவர்.

இடப்பற்றாக்குறை இருப் பவர்கள் சுவர்த் தோட்டம் அமைத்துப் பயன் பெறலாம் என்பதுடன், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் சுவர்த் தோட்டம் அமைத்தால் கொளுத்தும் வெயிலில் வீட்டை குளுகுளுவென ஆக்கலாம். 

படங்கள்: தே.அசோக்குமார்

வெளிநாடுகளில் வெர்டிகல் கார்டன்!

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வெர்டிகல் தொழில்நுட்பத்தில் விவசாயமே செய்துவருகிறார்கள். அங்கே விவசாயம் செய்வதற்கான இடவசதிக் குறைவு என்பதால், வெர்டிகல் கார்டனைப் பயன்படுத்தி ஸ்ட்ராபெர்ரி, முள்ளங்கி, வெள்ளரி, கீரைகள், தக்காளி போன்ற பயிர்களைப் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். பசுமைக்குடில் தொழில்நுட்பம் புதியதாக வரும்போது பிரபலமாகுமா எனக் கேள்விக்குறியாகத்தான் இருந்தது. ஆனால், இன்று அதிக அளவில் பசுமைக்குடில் விவசாயம் பிரபலமாகியிருப்பதைபோல, விரைவில் வெர்டிகல் கார்டன் தொழில்நுட்பமும் இந்தியாவில் பிரபலம் ஆகும் என்கிறார்கள்.

மாடி சுவர்த்தோட்டத்திலும் செடிகள்!

கடும் வெயிலையும், முழு வெளிச்சத்தையும் தாங்கக்கூடிய செடிகளைத்தான் மாடி சுவர் தோட்டத்தில் வளர்க்க வேண்டும். வீட்டுக்கு வெளியே திறந்த வெளியில் வளரக்கூடிய எல்லா வகை அழகுச் செடிகளையும் வளர்க்க முடியும். ஆனால், தொட்டியில் குறைந்த அளவே மண் இருப்பதனால், பெரிய செடிகளை வளர்ப்பது கடினம். மாடியில் முழு ஒளியும் கிடைப்பதால், வண்ண வண்ணப் பூக்களையும், இலைகளையும் கொடுக்கக்கூடிய செடிகளையும் வளர்த்து, வீட்டைப் பசுமையாக்கலாம்.
 

No comments:

Post a Comment