Friday, March 18, 2016

கவலையின்றி வாழ்வதற்கே வாழ்க்கை!
உளவியல் மருத்துவர் த.செந்தில்குமார்: மலச்சிக்கல் பல நோய்களின் தந்தை; மனச்சிக்கல் பல நோய்களின் தாய்; இரண்டுமே வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.மனச்சிக்கலால் உண்டாகும் விளைவுகள் அதிகமானவை. மனக்கவலை ஏற்படுத்தும் அழுத்தங்களால் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்தல், பசியின்மை, அதிக பசி, படபடப்பு, பதற்றம், எதிலும் கவனமின்மை, துாக்கமின்மை, அதிக துாக்கம், உடல் சோர்வு. வார்த்தைகளில் தடுமாற்றம், திடீரென எதுவும் செய்ய தோன்றாமை, முகத்தில் சூடு பரவுவது, கைகள் மரத்துப் போவது போன்ற உணர்வு, வாய், நாக்கு உலர்ந்து போதல், தாகமின்மை மற்றும் அதிக தாகம் ஆகியவை ஏற்படும். கவலை வந்தால் பெரும்பாலானோர், மனதை கட்டுப்படுத்தச் சொல்வர். ஆனால், மனதை அடக்க நினைத்தால் அலை பாயும்; மனதை அறிய நினைத்தால் அடங்கும். எனவே, எண்ண ஓட்டங்களை மூன்றாம் நபராக இருந்து கவனித்தாலே, பல கவலைகள் பனி போல் மறையும். கவலை வந்தால், அடுத்து, கோபமும் கைகோர்த்துக் கொள்ளும். கோபம் வந்தால், கவலை வந்து கட்டிப் பிடித்துக் கொள்ளும்.எனவே, கோபம் வந்தால்உடனடியாக அந்த இடத்தை விட்டு அகன்று, 10 நிமிடம் நடை பயிலலாம். நடக்கும் போது எதிரில் கடந்து போகும் பல முகங்களைப் பார்க்கும் போது ஏற்படும் உணர்வுகள், மனதை, 'ரிலாக்ஸ்' ஆக்கும்.கவலை வரும்போது செய்ய வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், இதற்கு முன் வந்த பெரிய கவலையை எடுத்து, அதை எப்படி சமாளித்தீர் என, ஒரு பேப்பரை எடுத்து எழுத ஆரம்பியுங்கள். அதையே கடந்து வந்த உங்களால் இப்போதுள்ள பிரச்னையை சமாளிக்க முடியாதா என நினைத்து கொள்ளுங்கள்.பிரச்னையை, பிரச்னையாக நினைக்காத வரை, அது பிரச்னையே இல்லை. பிரச்னை இல்லை என்பதே, சிலருக்கு பிரச்னையாக இருக்கும். எப்போதும், நல்ல எண்ணங்களோடு இருக்க வேண்டும்; நேர்மறைஎண்ணத்தோடு அனைத்து விஷயங்களையும், அணுக வேண்டும். கவலைகளை குறைக்கும் வழிகளில் இது முக்கியமானது. அடுத்து பல நேரங்களில் கவலைக்கு காரணமாக இருப்பது, தாமதம் தான். தாமதத்தை தவிர்க்க, நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் போதும்.கவலை வரும் போதெல்லாம், இரண்டு விஷயங்களை நினை வில் வைத்து கொள்ளுங்கள். ஒன்று, கவலையை தீர்க்க முடியும் என்றால் ஏன் கவலைப்பட வேண்டும்; ஒருவேளை தீர்க்க முடியாதென்றால் கவலைப் பட்டு என்ன பயன். எனவே, கவலைகள் கால் முளைத்து வரும்போது கையசைத்து வழி அனுப்பி விடுங்கள். வாழ்க்கையை, நொடி நொடியாய் அனுபவியுங்கள். வாழ்க்கை கவலையின்றி வாழ்வதற்கே!

No comments:

Post a Comment