Friday, July 22, 2016

ஔவையாரின் 'மூதுரை'; ஔவையாரின் 'நல்வழி'

ஔவையாரின் 'மூதுரை'  – 17

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

விளக்கம்.

நீர் வற்றியதும், குளத்திலிருந்து நீங்கிவிடும் நீரில் வாழும் பறவைகளைப் போல துன்பம் வந்த போது நீங்கி விடுபவர்கள் சுற்றத்தார் ஆக மாட்டார்கள். அந்தக் குளத்திலுள்ள கொட்டிப்பூண்டையும், அல்லிக்கொடியையும், குவளைக் கொடியையும் போன்றவர்களாக சேர்ந்து, (நீர் ஏற உயர்ந்தும், நீர் குறையத் தாழ்ந்தும் இருத்தல் போல) இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்றுக் கொள்பவர்களே நல்ல சுற்றத்தவர் ஆவார்கள்.
(கருத்து – இன்பக் காலத்தும், துன்பக் காலத்தும் இசைந்து சேர்ந்து இருப்போரே சிறந்த சுற்றத்தார் ஆவார் என்பதாம்.)

-------------------
ஔவையாரின் 'நல்வழி'

மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று
மிதியாமை கோடி பெறும்
உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்
கோடி கொடுத்ததும் குடிப்பிறந்தார் தம்மொடு
கூடுவதே கோடி பெறும்
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்

"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது...

விளக்கம்:
தன்னை மதியாதார் வீட்டிற்கு செல்லாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... விருந்தினரை சரியாக உபசரிக்காதவர் வீட்டில் உணவு அருந்தாமல் இருப்பது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... கோடி செல்வம் செலவு செய்து உயர்ந்தோர் நட்பு பெற்றாலும் அது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்... எவ்வளவு கோடி செல்வம் பெற்றாலும் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவது கோடி செல்வம் பெற்றதற்கு சமமாகும்...

No comments:

Post a Comment