Monday, July 4, 2016

திருமந்திரம்




சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் பெருகிட... தினம் ஒரு திருமந்திரம்!

தினெட்டு சித்தர்களில் திருமூலரும் ஒருவர். தவத்தால் ஞானம் பெற்ற சித்தர்கள் மவுனம் ஆகி விடுவார்கள். ஆனால் ‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் உயர் நோக்கில், தான் பெற்ற ஞானத்தை நமக்கு அளித்து மகிழ்ந்தார் திருமூலர். ‘தன்னை நன்றாகத் தமிழ் செய்ய என்னை நன்றாக இறைவன் படைத்தான்’ என்று தன் வாழ்வின் நோக்கத்தை அறிவித்தார்.

ஆகமங்கள் 28. அவற்றில் காரணம், காமிகம், வீரம், சிந்தம், வாதுளம், காலோத்தரம், சுப்பிரபேதம், மகுடம், வியாமளம் என்னும் 9 வடமொழி ஆகமங்களை தமிழாக்கி எளிதாக்கித் தந்தார். 3000 ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் திருமூலர் ஆண்டுக்கு ஒரு பாடலாக ‘தமிழ் மூவாயிரம்’ ஆக திருமந்திரம் பாடினார். அவருடைய வரலாறு அதி அற்புதமானது.

முழுமுதற்கடவுள் சிவபெருமான். இவரிடம் சிவஞான உபதேசம் பெற் றவர் நந்திபெருமான். இவரிடம் உபதேசம் பெற்றவர் சுந்தரநாதர். இவர் தான் அறிந்தது போக மேலும் எண்வகை சித்திகளையும், யோகங் களையும் கற்கும் பொருட்டு, தமிழகத்தின் பொதிகை மலையில் வாழ்ந்த அகத்தியரைத் தரிசிக்க வந்தார். அந்த பயணத்தில் திருக்கேதாரம், நேபாளம், காசி, சைலம், திருக்காளத்தி, திரு ஆலங்காடு, திருவதிகை, காஞ்சிபுரம் ஆகிய தலங்களைத் தரிசித்து சிதம்பரத்துக்கு வந்தார். அங்கே அம்பலவாணரின் அருள்பெற்றார். இவரது வரலாற்றை 28 பாடல்களில் பெரிய புராணத்தில் அழகாகப் பாடியுள்ளார் சேக்கிழார்.
பயணம் தொடர்ந்தது. வழியில் திருவாவடுதுறைக்கு அருகில் சாத்தனூரில் பசுமாடுகள் மேய்க்கும் ‘திருமூலன்’ என்பவன் இறந்து கிடந்தான். அதனால் கலங்கி நின்ற பசுக்களின் கண்ணீரைத் தாங்காத சுந்தரநாதர், ‘தன் உடலை மறைத்து, மூலன் உடலுக்குள் பரகாயப்பிரவேசம் செய்தார். பசுக்கள் மகிழ்வில் ஆனந்தக் கண்ணீர் விட்டன. மூலனின் மனைவி வீட்டுக்கு அழைத்தாள். ஆனால் திருவாவடுதுறை கோயிலில் போதிமர மாகிய அரசமரத்தின் கீழ், ஐம்புலனை அடக்கி தவநெறியில் யோகியாக அமர்ந்தார் மூலனாகிய சுந்தரநாதர். ‘தவராஜயோகி’ ஆகி மவுனம் காத்தார். ஆண்டுக்கு ஒரு பாடலாக 3000 தமிழ்ச் சாத்திரம் பாடி கடவுளுடன் கலந்தார்.

‘திருமந்திரம்’ சுருக்கம்

சதாசிவன் வடமொழியில் 28 ஆகமங்களை உபதேசித்தார். அதில் முக்கியமான 9 ஆகமங்களைத் திருமூலர் ‘தன் தவ ஆற்றலால் உணர்ந்து தமிழில் 3000 பாடல்களாகப் பாடினார். பத்தாம் திருமுறையாக இது போற்றப்படுகிறது. 3000 ஆண்டுக்கு முன் இது எழுதப்பட்டாலும், கி.பி. 600-ல் தமிழில் எழுந்த முதல் சைவத் தமிழ் நூலாகப் போற்றப்படுகிறது.
‘சக்கரவர்த்தி தவராச யோகி எனும் மிக்க திருமூலன் அருள் மேவும் நாள் எந்நாளோ?” என்று தாயுமானவர் போற்றியுள்ளார்.
தேவர் குறளும், திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும், முனிமொழியும் - கோவை
திருவாசகமும், திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர் - 
இது ஔவையார் பாடல்.

திருக்குறள், நால்வேதங்கள், மூவரின் தேவாரம், மணிவாசகர் திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம் ஆகிய 11 நூல்களின் கருத்தும் மனிதரைப் புனிதம் ஆக்கும் ஒரே வழியையே காட்டுகின்றன என்று ஔவையார் பாடியுள்ளார்.
திருமந்திரத்தில் ஒன்பது தந்திரங்களைப் பாடியுள்ளார் திருமூலர்.

முதல் தந்திரம்: காரண ஆகமம்; ஞானம் பெற அறவழி காட்டுகிறது.

2-ம் தந்திரம்: காமிக ஆகமம்; புராணம், சிவபராக்கிரமம் அட்ட வீரட்டம்

3-ம் தந்திரம்: வீர ஆகமம்: அட்டமா சித்தி, அட்டாங்கயோகம், தியானம், ஆசனம்

4-ம் தந்திரம்: சிந்திஆகமம்: மந்திர, தந்திர, யந்திர சக்தி வழிபாடு

5-ம் தந்திரம்: வாதுள ஆகமம்: சைவம், சரியை, கிரியை, யோகம், ஞானம்

6-ம் தந்திரம்: வியாமள ஆகமம்: சிவமே குரு, தவம், திருநீறு துறவு

7-ம் தந்திரம்: காலோத்ர ஆகமம்; சிவபூசை, குருபூசை, சீவன் உபதேசம்.

8-ம் தந்திரம்: சுப்பிரபேத ஆகமம்: ஞானிசெயல், ஆறு அந்தம் தத்துவமசி.

9-ம் தந்திரம்: மகுட ஆகமம்: சூக்கும பஞ்சாட்சரம், ஊழ், ஒளி, தோத்திரம், சமாதி ஆக 30 உபதேசங்கள், 300 மந்திரங்கள், 3000 பாடல்கள் கொண்ட திருமந்திரம், தமிழ்ச் சாத்திரம் ஆகும்.


அதுமட்டுமா, வழிபாட்டு துதிகளாக மட்டுமின்றி, வாழ்வை வெல்ல வழிகாட்டும் துதிகளாகவும் திகழ்கின்றன, திருமந்திரத்தின் பாடல்கள். அவற்றில் சில பாடல்கள் இந்த இணைப்பில் உங்களுக்காக தரப்பட்டுள்ளன. அனுதினமும் அவற்றைப் பாடி வழிபடுவதுடன், அந்தப் பாடல்கள் சொல்லும் நெறிப்படி நடக்கவும் சித்தம் கொள்ளுங்கள். சிவனருளால் சிந்தை மகிழத்தக்க பெரும் வாழ்வை பெறுங்கள்.

காக்கும் மந்திரம்!

வாயும், மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல்தாரமும் ஆமே

- திருமந்திரம் 1178


பொருள்: சீவர்களின் பிராணவாயு, மனம் இரண்டாலும் அறிய முடியாதவள். தவத்தாலும், தியானத்தாலும் மனோன் மணியை எளிதில் அறிய முடியாதவள். பேயையும், பூதகணங்களையும் தமக்கு ஏவலர்களாகப் பெற்றவள். பெண் தெய்வமாகவே விளங்குபவள். ஆராய்ச்சி யாலும், அறிவாலும் அறிய இயலாத சக்தி இவள். சிவனுக்குத் தாயாகவும், மகளாகவும், மனைவியாகவும் இருந்து காத்து வருகிறாள்.

திருமந்திரத்தின் நான்காம் தந்திரத்தில் வரும் பாடல் இது.  நான்காம் தந்திரம், சிந்தி ஆகமத்தின் தமிழாக்கம் ஆகும். இது சக்தியின் சிறப்பையும், சாக்த தத்துவத்தையும் விளக்குகிறது. திருமூலர் எழுதிய ஒன்பது தந்திரங்களில் நான்காம் தந்திரமாகிய இதில்தான் மிக அதிகமாக 535 பாடல்கள் உள்ளன.

இவ்வுலகையும், பிரபஞ்சத்தையும் படைத்து, காத்து, அழிப்பவள் இதே சக்தி. பிரம்மாவின் படைப்புக்கு, சரஸ்வதி நாவில் நின்று அறிவு தருகிறாள். திருமாலின் காக்கும் திறனுக்கு, திருமகள் மார்பில் அமர்ந்து செல்வம் தருகிறாள். சிவனின் அழிப்புக்கு, உடலில் பராசக்தி பாதியாக நின்று வலிமை தருகிறாள். அவளே, சிவபெருமானுக்குத் தாயும், மனைவியும், மகளுமாக இருந்து காக்கின்றாள் என்கிறார் திருமூலர். அவரது வாக்கை அபிராமிப் பட்டரும் பின்பற்றி பாடியுள்ளார்

‘தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் 
    ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை 
    இறைவியும் ஆம் 

(அபிராமி அந்தாதி 44)


இங்ஙனம் பரமனுக்கே காப்பாகத் திகழும் ஆதிசக்தி, நமக்கும் காப்பாகத் திகழ்வாள். உடல் நோய்கள் தீரவும், வலிமை கூடவும் துர்கை வழிபாடு பலன் தரும். சிக்கல் தீரவும், வறுமை போகவும் மகாலட்சுமி விரதம் கைகொடுக்கும், தேர்வில் வெல்லவும், வேலைவாய்ப்பு கூடவும் கலைமகள் வழிபாடு வழிகாட்டும். இந்த முப்பெருந் தேவியரையும் நவராத்திரி காலத்தில் மட்டுமல்ல, அனுதினமும் பெண்கள் வழிபட வேண்டும். அப்படி வழிபடும்போது மேற்கண்ட பாடலைப்பாடி வழிபட, சக்தியின் பேரருள் நிச்சயம் வாய்க்கும்.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே 

- திருமந்திரம் 81

இன்பம் நிலைக்கும்!

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே, வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே

        - திருமந்திரம் 1818


பொருள்: ஞான விளக்கினை ஏற்றி, எல்லையின்றி நிற்கும் பரம்பொருளை அறிந்துகொள்ளுங்கள். பரம்பொருள் பிரகாசத்தின் முன்னர், மாயா, மல இருள் ஆகிய வேதனைகள் மாறிவிடும். பேரொளியை வெளிப்படுத்தும் ஒளி உடையார்கள், சிவ ஒளியும் ஆத்ம ஒளியும் கலந்து விளங்குவார்கள்.

விளக்குத் தொண்டு ஆலயத்துள் ஒளி சேர்க்கும். விளக்கு ஏற்றுபவரது வீடும், வாழ்வும் இருள் நீங்கி ஒளி பெறும்.  திருமறைக்காடு வேதாரண்யத்தின் ஆலயத்தில் விளக்கு ஒளியின் திரியைத் தூண்டிய எலி, அந்தப் புண்ணிய பயனால் மகாபலி மன்னனாகப் பிறந்தது. விளக்கு ஏற்றும் தொண்டினைச் செய்த கலிய நாயனாரும், கணம்புல்ல நாயனாரும், நமிநந்தி அடிகளும் சிவன் அருள் பெற்ற வரலாறு பெரிய புராணத்தில் உள்ளது. ராமலிங்க அடிகளார் தண்ணீரால் விளக்கு எரித்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளார். 'இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது' என்று துவங்கி திருநாவுக்கரசரும் விளக்குத் தொண்டினைப் போற்றியுள்ளார்.

இருள் என்பது தீவினை கலந்த அறியாமை. ஒளி வந்தால் தானே இருள் விலகி ஓடுவது போல், ஆலயத்தில் விளக்கு ஏற்றி வந்தால் நமது குடும்பச் சண்டை, கலகம், மனச் சலனங்கள் விலகி விடும். அதேபோல்,  ‘‘உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்...' எனப் பாடிய திருமூலர், ‘‘கள்ளப்புலன் ஐந்தும் காளா மணி விளக்கே” (திருமந்திரம் 1823) என்றும் சொல்கிறார். உடம்பே குத்து விளக்கு. இதில் உள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்களும் ஐந்து திரியால் எரியும் தீபங்கள் என்று பாடுபவர், ‘‘வஞ்சனை மிகுந்த ஐம்புலன்களும்'' என்கிறார். இவற்றை ஒரு நிலையாக நிறுத்தி அதில் ஒளி ஏற்றினால் ஆத்ம ஜோதிப் பிரகாசத்தை நாமே காணலாம்.

இந்த தாத்பரியத்தை போதிப்பது குத்துவிளக்கு. அதில் பீடம் பிரம்மா, தண்டு திருமால், விளக்கு சிவன் என்று குத்து விளக்கில் மூன்று தெய்வங்களும் நின்று அருளுகின்றனர். அனுதினமும் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து, விளக்கு குறித்து திருமூலர் தந்த பாடலைப் பாடி வழிபடுவதால், நம் வீட்டில் இன்பம் எனும் பேரொளி என்றென்றும் நிலைத்திருக்கும்.

என்னை அறிந்திலேன் 

இத்தனை காலமும்

என்னை அறிந்தபின் ஏதும்  
  
 அறிந்திலேன்    - திருமந்திரம் 2366

மழலை வரம் கிட்டும்!
இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண்
துன்பக் கலசம் அனைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்ததுசூளை விளைந்தது தானே. 

- திருமந்திரம் 468


கருத்து: தாயும் தந்தையும் மனம் ஒன்றி, உடல் ஒன்றி, இசைவுடன், இருவரும் இன்புற்று புதிய உயிரை உருவாக்குகின்றனர். இன்பத்தில் உருவான, துன்ப மண்குடத்தில் ஆன்மா உருவாகிறது. கரு வளர்ந்து ஒன்பது ஓட்டைகளுடன் மனிதனாக உருவாகிறது. பச்சைமண் சூளையில் வைத்து செங்கல் ஆக தீமூட்டுவர். அது போல் தாயின் வயிற்றுச் சூளையின் சூட்டில் 300 நாள் இருந்து மனிதனாகப் பிறக்கிறது.

திருமந்திரம் இரண்டாம் தந்திரத்தில் ‘கரு உற்பத்தி’ எனும் தலைப்பில் உள்ள 41 பாடல்களும், இன்றைய மகப்பேறு மருத்துவ அறிவியலுக்கு முன்னோட்டமாக, பல வியத்தகு அறிவியல் அற்புதங்களை விளக்குவதாக உள்ளன. அதிலிருந்து சில தகவல்களைக் காண்போம்.

சேர்க்கையின்போது, பெண் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் குழந்தை மந்தனாகப் பிறக்கும். சிறுநீர் தேங்கியிருந்தால், ஊமைக் குழந்தையும், இரண்டுமே இருந்தால் குழந்தை குருடாகவும் பிறக்கும் என்று 481-ஆம் பாடலில் சொல்கிறார் திருமூலர். எனவே சேர்க்கைபோது தூய்மையுடனும், உயர் எண்ணங் களுடனும் தம்பதிகள் இருந்தால் நல்ல பிள்ளை உருவாகும்.

சிவன் அருளால் சீவன் உதிக்கிறது. எனவே தெய்வ அருள் இருந்தால்தான் மக்கட் செல்வம் வாய்க்கும்.

ஆக்குகின்றான் கர்ப்பக் கோளகை 
        உள் இருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே - திருமந்திரம் 3451


சிவன் அருள் கூடினால் மகப்பேறு வாய்க்கும். திருச்சி அருள்மிகு தாயுமானவ ஸ்வாமி திருக்கோயில் தலபுராணத்தில், சிவபெருமானே தாயாக வந்து பிரசவம் பார்த்துச் சென்ற கருணை வரலாறு உண்டு. இன்றும்  சுகப்பிரசவம் நடக்க, அங்கு வாழைத்தார் நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

ஆகவே, பிள்ளைப் பேறு வாய்க்காமல் வருந்தும் தம்பதிகள், அனுதினமும் ‘கரு உற்பத்தி’ திருமந்திரப் பாடல்களைப் பாடி தென்னாடுடைய சிவபெருமானை மனதார வணங்கி வழிபட்டு வாருங்கள்.

 சிவனருள், உங்கள் அகமகிழ
கருவைத் தந்து அருளும்!
தப்பிலா மன்றில் 

தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பில் ஏழுகோடி யுகம்  
  
இருந்தேனே - திருமந்திரம் 74

பிணிகள் நீங்கும்!

இருமலும், சோகையும், ஈளையும், வெப்பும்
தருமம் செய்யாதவர் தம்பாலது ஆகும்
உருமிடி, நாகம், உரோணி, கழலை
தருமம் செய்வார் பக்கல் தாழகிலாவே

- திருமந்திரம் 263


கருத்து: தருமம் செய்து புண்ணியம் சேர்த்து வைக்காதவர் பாவிகள். பாவம் செய்தவருக்கு பலவித நோய்கள் இப்பிறப்பில் தொடரும். இருமல், ரத்தசோகை, கோழை, காய்ச்சல் ஆகிய நோய்களை இப்பிறப்பில் பெற்றவர், தருமம் செய்யாதவர்கள் ஆவர். தருமம் செய்பவரை இடி- மின்னல், பாம்புக் கடி, தொண்டை நோய், வயிற்றுக் கட்டி ஆகியன நெருங்காது.

‘அறம் செய்யாதவன் திறம்’ என்று முதல் மந்திரத் தலைப்பில் 10 பாடல்களில், தருமம் செய்யாதவரின் துன்பங்களைக் கூறுகிறார் திருமூலர். ‘அறம் செய்வான் திறம்’ ‘தானச் சிறப்பு’ என்றும் தலைப்புகளின் 10 பாடல்களில் தருமம் செய்வதால் வரும் இம்மை, மறுமைப் பயன்களைப் பாடியுள்ளார். ‘அறத்தால் வருவதே இன்பம்’ என்று வள்ளுவரும் பாடியிருக் கிறார். ‘போன பிறவியில் தருமம் செய்து புண்ணியத்தைக் கொடுத்து வைத்தவர், இந்தப் பிறவியில் வட்டியும் முதலுமாக சேர்த்து செல்வமாகவும், ஆரோக்கியமாகவும் வாங்கிக்கொள்கிறார்.

ஆமாம்! 16 வகைச் செல்வமும் புண்ணியத்தால் வந்து சேரும். ஆகவே, இனியேனும் தருமம் செய்து புண்ணியத்தைக் கொடுத்து வைப்போம்.

சரி, தர்மம் செய்வது எப்படி?

பிச்சைக்காரருக்கு தேடிப்பிடித்து ஒற்றை ரூபாய் போடுவது மட்டுமல்ல தர்மம். இதோ புண்ணியம் தரும் தர்மங்களை திருமூலர் சொல்கிறார் கேளுங்கள்.

பசுவுக்குப் புல் தருவது, ஏழைக்கு ஒரு கவளம் உணவு தருவது, ஒரு சொம்பு தண்ணீர் மரத்துக்கு ஊற்றுவது, துன்பத்தில் உள்ளவருக்கு ஆறுதல் சொல்வது, பெற்றோரைக் காப்பது, மற்றவருக்கு உதவுவது ஆகியன தர்மங்கள் என்கிறது திருமந்திரம்.

தர்மத்தின் சிறப்பைச் சொல்லும் திருமூலர், பிச்சைக்காரருக்கு அளவாவது ஈதலைச் செய்யாதவரும், சொம்பினால் சோலைக்கு நீர் ஊற்றாதவனும் நரகத்துக்குச் செல்லும் பாவத்தையும் பாடியிருக்கிறார்!
ஆக, நாம் திருமந்திரம் காட்டும் வழிப்படி தர்மங்கள் செய்வோம்;  பொல்லாப் பிணியும், சொல்லொணா துயரங்களும் இல்லாத வாழ்வை பெற்று மகிழ்வோம்.

அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி

என்போன் மணியினை எய்த ஒண்ணாதே - திருமந்திரம் 272

கல்வி தரும் மந்திரம்! 

ஏடுஅங்கை நங்கை 
இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும் வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் 
தோத்திரம் சொல்லுமே

- திருமந்திரம் 1067


கருத்து: வாக்தேவியாக இருப்பவள் சரஸ்வதி. கையில் ஓலைச்சுவடிகள் வைத்து படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் மூன்று கண்களை உடையவள். படிகம் போன்ற தூய வெள்ளை நிறத்தவள். வெண் தாமரை யில் வீற்றிருப்பாள். நாத இசை வடிவாய் திகழ்பவள். திருமுறை பாடுபவள். அந்த தேவியின் திருப்பாதங்களை தலையில் சூடி தோத்திரம் சொல்லி வணங்குவோம்.

படித்து பட்டம் பெற்று, சம்பாதித்து திருமணம் செய்து குடும்பம் ஆகி விட்டால் ஊதியம் தொடரும், படிப்பு நின்று விடும். ஆனால் சமுதாயத்தில் சாதனை செய்த சிந்தனையாளர் பலரும் தனது இறுதிக் காலம் வரை தினமும் படித்துக் கொண்டே இருந்த வரலாற்றை படித்துள்ளோம். கலைஞர்கள் இசைக் கருவிகளில் தினமும் சாதகப் பயிற்சி செய்துகொண்டே இருப்பார்கள். அறிஞர்கள் தினமும் படித்தும், எழுதிக் கொண்டும் இருப்பார்கள். இதற்கு ஓய்வே இல்லை, இதயத்துடிப்பு போல படிப்பு எப்போதும் நடக்கும்.

ஆம்! ‘கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகு அளவு என்று உற்ற கலை மடந்தை ஓதுகிறாள்’ என்கிறார் ஔவையார். படித்தது ஓர் துளி; படிக்காதது பரந்த கடல் என்று கூறி கலைமகள் படிக்க ஆரம்பித்தாள். நாமும் அன்றாடம் படிக்க வேண்டும். செய்தித் தாள்களை மட்டும் அல்ல, சிந்தனை வளர்க்கும் நல்ல நூல்களை யும் அனுதினமும் படிக்க வேண்டும்.

அறியாமையின் நிறம் கருமை. பலவித ஆசைகளின் நிறம் ஏழு வண்ணங்கள். எல்லாம் கடந்த ஞானத்தின் நிறம் வெண்மை என்பார்கள். எனவேதான் ஞானம் பெற்ற கலைமகள் வெள்ளைச் சேலை உடுத்தாள்; வெண் தாமரையில் வீற்றிருக்கிறாள். அத்தகைய தேவியின் பொற்பாதங்களை தினமும் பணியச் சொல்கிறார் திருமூலர்.

நாம் வழிபடுவதுடன், குழந்தைகளுக்கும் அந்த வாக்தேவியை வழிபடச் சொல்லித்தரவேண்டும். ஏடுநங்கை எனும் இப்பாடலைப் பாடி குழந்தைகள் வழிபட்டு வந்தால், கல்வியிலும், கலைகளிலும் நல்ல தேர்ச்சியும், கேள்வி ஞானமும் உண்டாகும். கலைமகள் அருளால் உலகை வெல்லும் வாழ்வை பெறுவர்.
ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்                  

 - திருமந்திரம் 534

அன்னம் செழிக்கும்!

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது 
        ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே

- திருமந்திரம் 252


பொருள்: தினமும் உண்பதற்கு முன்னே இறைவனுக்கு ஒரு பச்சிலை சமர்ப்பித்து பூசித்தல் யாவருக்கும் நல்லது. பசுவுக்கு ஒரு வாயளவு புல் கொடுத்தல் யாவருக்கும் நல்லது. நாம் உண்பதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு பிறருக்கு வழங்குதல் யாவருக்கும் நல்லதாகும். பிறர் மனம் நோகாதவாறு இன்சொல் பேசுதல் யாவருக்கும் நல்லதாகும்.

ஏழைகளுக்கு உணவு அளிப்பது உயர்ந்த அறம். நோயுற்றவர், மாற்றுத் திறனாளியர், சிறைக்கைதியர், ஏழையர் யாவருக்கும் அமுத சுரபி மூலம் மணிமேகலை ‘அன்னதானம்’ செய்ததை மணிமேகலைக் காப்பியம் சொல்கிறது. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்கிறது மணிமேகலை.

அடியவருக்கு அன்னதானம் செய்த, இளையான் குடிமாறர், மூர்க்கர், காரைக்காலம்மையார், சிறுத்தொண்டர், அப்பூதி அடிகள் ஆகிய நாயன்மார்கள் சிவனருள் பெற்றனர். இதை பெரிய புராணம் பேசுகிறது. ராமலிங்க அடிகளார் அணையாத பெரு அடுப்பை ஏற்றி தினமும் முழு வேளையும் அன்ன தானம் செய்தது, இன்றும் வடலூரில் தொடர்கிறது. திருமூலரின் திருமந்திர வாக்கினைத் திட்டமாகத் தீட்டினார் காஞ்சி பீடாதிபதி ஜகத்குரு மகா ஸ்வாமிகள். ஏழைகளுக்காக பிடி அரிசித் திட்டத்தைச் செயல்படுத்தினார். இதிலிருந்தே அன்னதானத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.

பிறர் பசி நீக்கிய பிறகு தன் பசி போக்குபவன் எடுக்கும் எல்லாப் பிறவியிலும் பசியின்றி வாழ்வான். அவனை பசிப்பிணியே தீண்டாது என்கிறது திருக்குறள். ஆமாம்! அன்னத்தினால் பெறும் புண்ணியம் எல்லாத் தலைமுறையும் பசியின்றி நம்மைக் காக்கும். திருமந்திரமும் அன்னதானத்தைப் பேணச் சொல்கிறது.

செவ்வியன் ஆகி சிறந்து
    உண்ணும் போது ஒரு
தவ்விக்கொடு உண்மின் தலைப்பட்டபோதே  - திருமந்திரம் 3196

இவ்வாறு திருமந்திரப் பாடல்கள் மூலம் அன்னதானத்தின் அவசியத்தை உணர்த்தும் திருமூலரின் வழிகாட்டல்படி, நாமும் அன்னம் அளித்து ஏழைகளின் பசிப்பிணி அகற்றி, நாமும் பசிப்பிணி இல்லாதப் பெருவாழ்வைப் பெறுவோம்.
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்.
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார் - திருமந்திரம் 270

 துன்பங்கள் நீங்கும்! 

இன்பத்துளே பிறந்து இன்பத்துளே வளர்ந்து
இன்பத்துளே நினைக்கின்றது இதுமறந்து
துன்பத்துளே சிலர் சோறொரு கூறைஎன்று
துன்பத்துளே நின்று தூங்குகின்றார்களே

 - திருமந்திரம் 2089


பொருள்: பெற்றோரின் சேர்க்கை இன்பத்திலே மனிதன் பிறக்கிறான். அதனால் எப்போதும் இன்பத்தையே எண்ணி ஏங்கி வளர்கின்றான். ஆனால் நிலைத்த பேரின்பம் எது என்பதை மறந்து, சிற்றின்பத்திலேயே உழல்கிறான். துணியும், சோறுமே சுகம் என்று துன்ப வாழ்வில் சிக்கிக்கொண்டு, ஆசாபாசங்களான துக்கங்களிலேயே நின்று மயங்கிக் கிடக்கின்றனர்.

இன்பம் என்பது எது? ஐந்து புலன்களால் எழுகின்ற சிற்றின்பமே இன்பமென நினைக் கின்றனர். அது நிலையற்றது; துன்பத்தில் நம்மைத் தள்ளிவிடுவது. யோகியரும் சித்தரும் புலன் இன்பங்களை வென்று, சோறு, உடை, சுகம் என்ற எல்லைகளைத் தாண்டிய பேரின்பத்தில் கலந்தவர்கள்.

காட்டிலே உணவு, உடையின்றித் தவம் செய்யும் முனிவர்கள் பேரின்ப நிலையில் மகிழ்கின்றனர். நாட்டிலே சகல வசதிகளுடன் வாழுகின்ற நாம், சிற்றின்பச் சேற்றில் விழுந்து எப்போதும் துன்பத்துடன் இருக்கிறோம்!

‘இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” என்று பாடியபடி, ஏழு நாட்கள் சுண்ணாம்பு அறையில் அப்பர் இருந்தும் துன்பத்தை அடையவில்லையே.

புத்தர் பிரான் பல மாதங்கள் தவம் செய்து கண்ட உண்மை ‘ஆசையே துன்பங்களுக்கு காரணம்’ என்பதுதான். திருமூலரும்  ஆசையை விட்டால் துன்பமும் தானே விடுபட்டு விடும் என்கிறார்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தம் ஆமே 

- திருமந்திரம் 2615


வீடும், உறவும், சோறும், துணியும் தேவைதான். நம்மால் இவற்றை முற்றும் துறந்து முனிவராகிவிட முடியாது. எனினும் பேராசையை விட்டுவிட வேண்டும். அதை வெல்லுவதற்கு இறையருள் துணைசெய்யும்.

ஆகவே, தினமும் வீட்டில் உள்ளன்போடு தீபம் ஏற்றி வைத்து, இறைவனை மலர்களால் அர்ச்சித்து, தீப- தூபம் காட்டி, அர்ச்சனை முடித்து சிறிது நேரம் தியானம் செய்யுங்கள். உங்கள் மனதில் கவ்விய துன்பங்கள் அகன்று, இன்பம் வந்து சேரும்.

உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால் கண்ணாடி போலக் கலந்து நின்றானே 

- திருமந்திரம் 603

மழை வளம் பெருகும்!

ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில்
களிக்கும் இச்சிந்தையில் காரணம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே 

- திருமந்திரம் 1345


பொருள்: ஒளி வீசுகின்ற பராசக்தி மனத்தில் எழுந்து அருளினால்,  மனதில் மகிழும்படியான உண்மைப் பொருள் விளங்கும். தெளிவு ஏற்படும். மழையும், செல்வங்களும் வந்து சேரும். எல்லா வளங்களையும் வழங்கும் அன்னை பராசக்தியை அறிந்துகொள்வார் குறையின்றி வாழ்வார்.

மழை தருவதால் அம்பாளை மாரி என்று அழைத்து வழிபட்டார்கள். ‘கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரியிட்டு” (குறள் 211) என்று திருவள்ளுவர் ‘மாரி’யை மழை என்று குறிப்பிடுகிறார். ஆடி மாதம் மாரியம்மனுக்கு கூழ் வார்த்து பொங்கலிட்டும், அம்மனுக்கு திருவிழா நடத்தியும், கரகம் சுமந்தும் மழை தர வேண்டுவார்கள். ஆம்! அம்பாளை வழிபட மழைவளம் பெருகும்.

ஆலயங்களில் பூசைகள், திருவிழாக் கள் எப்படி நடத்த வேண்டும் என்று சொல்வதே காரண, காமிக ஆகமங்கள். ஆலயத்தில் பூசைகள் சரியாக நடக்கவில்லையேல் நாட்டில் மழை பெய்யாது, நாடாளும் மன்னர் வலிமை குறைவர், மக்களுக்கு நோய் வந்து சேரும், திருடர்கள் அதிகமாகி விடுவார்கள் என்று நந்தி எம்பெருமான் உபதேசித்துள்ளார். அதையே  திருமந்திரம் பாடுகிறது.

ஆற்றரு நோய்மிக்கு, 
      அவனிமழை இன்றிப்
போற்ற அருமன்னரும்     
      போர்வலிகுன்றுவர்
கூற்று உதைத்தான் 
        திருக்கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில்தானே 

- திருமந்திரம் 517


சிவாலயங்களில் பூசைகள் குறைந்தால் நோய் மிகும், மழை குறையும், மன்னர் கெடுவர் என்கிறார் திருமூலர். திருக்கோயிலை முன்னோர்கள் பக்தியுடன் கட்டினர். அதற்கு பலகோடி சொத்துக்களையும் தந்தனர். ஆனால் அந்தச் சொத்துகளை இன்றைய மக்கள் அபகரித்து வாழ்கிறார்கள். அதனால்தான் வளம் குன்றி மழையை இழந்தோம்; துயரங்களை அனுபவிக்கிறோம்.
மனிதன் இயற்கையை கடவுளாக வணங்கியவரை அதுவும் இயல்பாக உதவியது. இன்று இயற்கையை அழித்து, மாசுபடுத்துவதால் இயற்கை பேரிடர்கள் உருவாகின்றன. ஆலய பூசைகளை முறைப்படி செய்வோம்; மழை பெறுவோம்!
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்  - திருமந்திரம் 2116

மண் வளம் சிறக்கும்!

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு, நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்இறை ஈசனை
நண்ண அறியாமல் நழுவுகின்றாரே  

- திருமந்திரம் 1828


பொருள்: சிவ பூசையாலும், தர்மங்கள் செய்வதாலும் புண்ணியத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட புண்ணியவான்கள் இருக்கும் இடத்தில் நீர் அதிகம் இருக்கும். அதனால் பூக்கள் அதிகம் மலரும். அதனால் செய்யும் பூசைகளைக் கண்டு சிவபெருமான் அருள் புரிவார். இதை அறியாது பாவம் செய்யும் பாவிகள், எம் சிவனை அறிய முடியாமல் ஒதுங்கிப்போய் விடுகின்றனர்.

மண்ணுக்கு ஏற்பவே மகசூல் கிடைக்கும். விருந்தினருக்கு உணவளித்து உண்பவனின் வயலில் விதை போடாமல் தானே விளையும் என்கிறார் திருவள்ளுவர். பாவிகளின் வயலுக்கு எவ்வளவுதான் உரம் போட்டு தண்ணீர் ஊற்றினாலும் பாதி கூட விளையாது. மனிதனின் புண்ணிய குணத்தால் மண் மகிழ்கிறது. இவனது பாவ குணத்தால் மண் வளம் குறைகிறது. ஆக, பயிர் செழித்து வளர மண் வளத்தை விடவும், பயிரிட்டவனின் மன வளம் தேவையாகிறது.

புண்ணியம் மிகுந்திட நாம் என்ன செய்யவேண்டும். அறம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார் திருமூலர். பாவம் செய்ய இன்று பல வழிகள் உள்ளன. தருமம் செய்வது ஒன்றே புண்ணியம் பெறும் வழியாகும். கொள்கையில் சிறந்தவர், நேர்மையாளர், தர்மசீலர், எப்போதுமே ஏழ்மையில் இருப்பர், தெய்வத்தை துணைக்கு அழைப்பர், உதவிகள் செய்து புண்ணியம் சேர்ப்பர்.

ஞானிகளோ தங்களின் தவத்தால் பாவம்-புண்ணியம் இரண்டையும் கடந்து சிவனின் திருவடியைச் சேர்ந்து, வீடுபேறு அடைந்து விடுவார்களாம்.

புண்ணிய பாவம் இரண்டு உள பூமியில்
நண்ணும் பொழுது அறிவார் சில             ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேரறுத்து             அப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே - திருமந்திரம் 1647


நம்மால் ஞானியர் போன்று பாவபுண்ணியங்களைக் கடக்க இயலா விட்டாலும், பாவங்கள் செய்வதையாவது தவிர்ப்போம். இயன்றவரையிலும் தான-தருமங்கள் செய்து, ஞானநூல்கள் காட்டும் அறவழியில் வாழ்வோம். அப்போது நம் மனவளம் சிறக்கும். அதன் விளைவாக மண் வளமும் சிறக்கும்; பயிர்கள் செழித்தோங்கும்.
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை - திருமந்திரம் 5

அன்பே சிவம் தவம்!

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே! 

- திருமந்திரம் 270


பொருள்: அன்பு ஆகிய சக்தியும், அறிவு ஆகிய சிவமும் வேறு வேறான இரண்டு எனச் சொல்பவர்கள் அனுபவ அறிவு இல்லாதவர்கள். அன்பின் முதிர்வால் சிவமாகிய அறிவு ஒளிர்வதை எல்லோராலும் அறிய இயலாது. அப்படி, ‘அன்புதான் சிவத்தை விளங்கும்படி செய்கிறது’ என்று எல்லோரும் அறிந்துவிட்டால், அன்பே வடிவான சிவமாக அமர்ந்து தவம் செய்யத் துவங்குவார்கள்.

அன்பு தூய்மையானது. தனக்கென வாழும் சுயநலம் இல்லாதது. சிவமும் தூய்மையானவர். தனக்கு என வாழாது, உயிர்கள் வாழ்வதற் காகத் தன்னையே தியாகம் செய்பவர்.

பாற்கடல் கடைந்தபோது கிடைத்த எல்லா நல்லப் பொருள்களையும் தேவர்கள் பெற்றனர். ஆலகால நஞ்சு வந்தது. அது உலகத்தையே அழித்துவிடும் என்று கருதி, அதை எடுத்துப் பருகிய தியாகராஜன் சிவபெருமான்.அடியாருக் காக மண் சுமந்து, பிரம்படி பட்ட சிவனார், அடியார்க்கும் அடியார் அல்லவா?!

‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பதை அறிவதே சிவநிலை ஆகும். கண்ணப்பன் என்ற திருக்காளத்தி வேடன், சிவனாருக்காக தன் கண்களைப் பெயர்த்து அப்பிய அன்பினன் ஆவான். சேக்கிழார், இவன் சிவபக்தியைக் கூறும்போது ‘அவனுடைய வடிவு எல்லாம் நம்பக்கல் அன்பு’ என்கிறார். அதாவது, அவன் உடல் முழுமையும் அன்பாகும் என்கிறார்.

சிவபக்தி கொண்டவர், எல்லா உயிர்களையும் நேசித்து அன்பு கொள்வார். சிவன் எங்கும் உள்ள அன்பு நிலை ஆகும். ஈயின் அன்பை திருஈங்கோய்மலையிலும், எறும்பின் அன்பை திருவெறும்பூரிலும், சிலந்தி, யானையின் அன்பை திருவானைக் காவலிலும், கழுதையின் அன்பை கரவீரத்திலும், பாம்பின் அன்பை திருப்பாம்புரத்திலும், குரங்கு அணிலின் அன்பை குரங்கணில் முட்டத்திலும் சிவனார் ஏற்று அருளியுள்ளார்.

எல்லா உயிர்களையும் அன்புடன் நேசிப்பதே சிவநிலை ஆகும். தவநிலை என்பதும் அன்புநிலைதான். ஆகவே, அன்பால் உள்ளம் உருகி இறைவனை வணங்க வேண்டும். உள்ளம் உருகும்போது நாம் செய்த பாவங்கள் நம் கண்ணீரோடு கரைந்து மறைந்து தூய்மை பெற்று விடுவோம்.
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையும் கேட்டு இருந்தார் புரை அற்றே - திருமந்திரம் 133

விதியை வெல்லலாம்!

வென்றிடல் ஆகும் விதி வழி தன்னையும்
வென்றிடல் ஆகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிடல் ஆகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய் உணர்வோர்க்கே

- திருமந்திரம் 1232


பொருள்: வெல்ல முடியாத விதியையும் பராசக்தியின் அருளால் வென்றிடல் இயலும். விதியைச் சார்ந்து வரும் வினைப் பெரும் பாசத்தையும் வென்றிடலாம். பராசக்தி அருளால் ஐம்புலன்களின் ஆசையையும் வென்றிடலாம். சக்தியை உண்மையாக உணர்ந்து வழிபடுவோர் கர்ம பலன்கள் யாவற்றையும் வென்றுவிடலாம்.

பிராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்று விதி மூவகைப்படும். முன் செய்த தீவினையும், நல்வினையும் இப்போது நம்மை விதி வடிவில் வந்து சந்திக்கும். ‘ஆகூழ்’ என்று நல்விதியையும், ‘போகூழ்’ என்று தீமை செய்யும் விதியையும் திருவள்ளுவர் ஊழ் (38) என்ற அதிகாரம் முழுதும் பாடியுள்ளார். அவரே, ஆள்வினை உடைமை எனும் அதிகாரத்தில் ‘முயற்சியால் விதியை வெல்லலாம் என்று கூறுகிறார்.

சாவித்திரி சத்தியவானின் விதியை மாற்றி உயிரை மீட்டு வந்தாள். மார்க்கண்டேயன் 16 வயதில் தன் மரணத்தை மாற்றி, சிரஞ்ஜீவித்துவம் பெற்றார்.  விடாமுயற்சியும், பக்தியும் விதியை மாற்றி விடும்.

‘விதி வழி அல்லது வேலை உலகம் விதி வழி இன்பம் விருத்தமும் இல்லை’ என்கிறது திருமந்திரம். ‘கால் பட்டு அழிந்தது அயன் கையெழுத்தே’ என்றும் திருப்புகழில் அருணகிரிநாதர், தமது விதியை முருகப்பெருமான் மாற்றிய அனுபவத்தைப் பாடுகிறார். ‘நாளும் கோளும் அடியாரை நலிவுறச் செய்யாது. அதுவும் நல்லதாகும்’ என்று கோளாறு பதிகம் பாடி மதுரைக்குச் சென்றார் திருஞான சம்பந்தர். சமணர் வைத்த தீயிலிருந்து தப்பினார்.

விதியால் இந்த உலகமும், மதியால் நமது வாழ்க்கையும் சுழல்கிறது.  தெய்வ சக்தியால் விதியின் திசை மாற்றப்படும் என்பதை திருமூலர் தெளிவுறப் பாடியுள்ளார்.

விதியின் பெருவலி வேலை                 சூழ்வையம்
துதியின் பெருவலி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே” 

- திருமந்திரம் 2030


ஆக, நாம் தினமும் தெய்வம் தொழுது மதிவலியைப் பெறுவோம். அதன் மூலம் வலிய விதியை மாற்றி, வளமான வாழ்வைப் பெறுவோம்.
 திறந்தரு முத்தியும் செல்வமும் வேண்டின் மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும் - திருமந்திரம் 244

சிவதரிசனம் கிட்டும்!

நிற்கின்ற போதே நிலை உடையான் கழல்
கற்கின்ற செய்மின், கழிந்து அறும் பாவங்கள்,
சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்றுஒன்று இலாத மணிவிளக்கு ஆமே  

- திருமந்திரம் 292


பொருள்: உடலில் உயிர் நிற்கின்றபோதே, நிலையாத இவ்வாழ்வை உணர்ந்து, உயிருக்கு உறுதி பயக்கும் இறைவன் திருவடியை அறிய முயற்சியுங்கள்; உங்கள் பாவங்கள் நீங்கிவிடும். குற்றம் இல்லாத சொற்களால் அமைந்த தோத்திரத்தால் இறைவனைத் தொழுங்கள். அவ்வாறு தொழுது வணங்கினால், ஒப்புமை இல்லாத சுயசோதியான சிவபெருமானின் தரிசனமும் திருவருளும் கிடைக்கும்.

இன்றைய அவசர உலகில் ஆண்டவனிடம் எல்லாமும் கேட்கிறோம். ஆனால் அவரைப் போற்றித் தோத்திரம் செய்ய பொறுமையோ, நேரமோ இல்லை. அவசர அவசரமாக தோத்திரங்களைச் சொல்லும்போது அதில் பிழைகள் வந்துவிடுகின்றன.

வடமொழி சுலோகம் சொல்லும் போது, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் எதுவுமே தெரியாது ஒப்பிக்கிறோம். இதில் தவறு நேர்ந்தால் பாவம் சேரும். அதனால் சுலோகத்தின் பொருளை மனதில் வாங்கிக் கொண்டு, நிதானமாகச் சொல்ல வேண்டும் என அறிவுறுத்துகிறார் திருமூலர்.

என்றும் அழியாத நித்தியத்துவம் வேண்டும் என்று வரம் கேட்க நினைத்தான் கும்பகர்ணன். ஆனால் ஓர் எழுத்து பிழையாக மாறி ‘நித்திரைத்துவம் வேண்டும்’ என்று கேட்டு விட்டான். அதனால் 6 மாதம் தூங்கும் கும்பகர்ணன் ஆகி விட்டான். சொற் பிழையால் வரம் சாபமாகி விட்டது எனக் கூறுவர்.

மாணிக்க வாசகர், ‘சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வார், செல்வர் சிவபுரத்தில் உள்ளார்’ என்று திருவாசகத்தில், பொருள் அறிந்து பாடச் சொல்கிறார். அருணகிரிநாதரும் ‘எழுத்தும் பிழையறக் கற்கின்யிலீர்’ என்று கந்தர் அலங்காரத்தில், பிழையின்றி தோத்திரம் பாடுமாறுச் சொல்கிறார்.

தோத்திரத்தின், சுலோகத்தின் பொருளைக் கேட்டு, அறிந்து பிறகே அதை பிழையின்றிப் பாட வேண்டும். நீங்களும் அனுதினமும் தெய்வத் துதிப்பாடல்களைப் பாடும்போது, பிழைகள் இல்லாமலும், துதியின் பொருள் உணர்ந்தும் பாடி இறைவனை வழிபட்டு வாழ்வாங்கு வாழ வரம் பெறுங்கள்.
 அழுக்கினை ஓட்டி, அறிவை நிறையீர தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர் - திருமந்திரம் 254

1 comment: