Friday, November 3, 2017

எதைச் செய்யக்கூடாது? இன்னா நாற்பது பொன்மொழிகள்

எதைச் செய்யக்கூடாது? இன்னா நாற்பது பொன்மொழிகள் (Post No.4350)

by Tamil and Vedas

Written by London Swaminathan

Date: 30 October 2017

Time uploaded in London- 13-29


Post No. 4350
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

நவம்பர் 2017 (ஹே விளம்பி ஐப்பசி/கார்த்திகை) காலண்டர்


விழா நாட்கள்:- 4 குருநானக் ஜயந்தி, 6- கனகதாசர் ஜயந்தி, 23- சத்ய சாய் பாபா பிறந்த நாள்.
அமாவாசை-18; ஏகாதசி- 14, 29; பௌர்ணமி- 3; சுப முகூர்த்தம்- 2, 9, 24, 30

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னா நாற்பது என்னும் நூலில் இருந்து 30 பொன்மொழிகள் இதில் உள்ளன. ஒவ்வொரு மாத காலண்டரிலும் 30 அல்லது 31 பொன்மொழிகள் வீதம் இதுவரை ஆயிரத்துக்கும் மேலான பொன்மொழிகள் கடந்த ஈராண்டு காலண்டர்களில் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.

நவம்பர் 1 புதன் கிழமை

முக்கண்பகவன் அடிதொழாதார்க்கு இன்னா; சக்கரத்தானை மறப்பு இன்னா (சிவனையும், திருமாலையும், பிரமனையும் வழிபடாதார்க்கு இன்பமே இல்லை)

நவம்பர் 2 வியாழக்கிழமை
பந்தம் இல்லாத மனைவியின் வனப்பு இன்னா (மனைவிக்கு அழகு இருக்கலாம்; ஆனால் அன்பில்லாவிடில் இன்பம் இல்லை)

நவம்பர் 3 வெள்ளிக் கிழமை
தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா ( நல்ல நடிகர் போல அழகு இருக்கலாம்; ஆனால் தந்தை இல்லாத மகன், கல்வி கற்காமல்,  கட்டுப்பாடின்றி திரிவான்; ஆக அங்கே இன்பம் இல்லை)

நவம்பர் 4 சனிக்கிழமை
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா (அந்தக் காலத்தில் பிராமணர்கள் மனு நீதி சொன்னபடி, சொத்து சுகங்களைத் தேடி வைக்கக்கூடாது; தினமும் யார் வீட்டிலாவது பூஜை செய்து அவர்  அந்த வருமானத்தில் வாழ வேண்டும்; அத்தகைய ஏழைப் பிராமணன் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடக்கூடாது)

நவம்பர் 5 ஞாயிற்றுக் கிழமை
பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா (பிராமணர்கள் மிகவும் சுத்த மானவர்கள்; அத்தகையோர் வாழும்    அக்கிரஹாரத்தில் நாய் அல்லது கோழி புகுந்தால் அவர்களுக்கு மகிழ்ச்சி இராது).

நவம்பர் 6 திங்கட் கிழமை
ஆர்த்த மனைவி அடங்காமை நன்கு இன்னா ( சில குடும்பங்களில் மனைவி, அடங்காப்பிடாரியாக இருப்பாள்; அங்கும் மகிழ்ச்சி இல்லை).

நவம்பர் 7  செவ்வாய்க் கிழமை
நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா ( அந்தக் காலத்தில் ஆற்றுப் பாலங்கள் அதிகமில்லை; சிலர் அசட்டுத் தைரியத்தில் நீந்துவர்; உயிரிழப்பர்; ஆகவே தெப்பமின்றி நீந்தக்கூடாது)

நவம்பர் 8 புதன் கிழமை
கடுமொழியாளர்  தொடர்பு இன்னா ( சிடு சிடுவென எப்போது பார்த்தாலும், எரிந்து விழும் அல்லது எதிர்மறை சொற்களைப் பேசும் ஆட்களை நண்பராக வைத்துக் கொள்ளதே; இன்பமே இராது)

நவம்பர் 9 வியாழக்கிழமை
எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா (சொந்தத்தில் எருது முதலியன இல்லாத உழவர்கள் உடனே உழ முடியாது; நிலத்தில் நீர்ப்பசை வீணாதலைக் கண்டு துன்பமே மிகும்).

நவம்பர் 10 வெள்ளிக் கிழமை
கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா ( ஒரு அரசனுடைய படைகள் புறங்காட்டித் தோற்று ஓடி வருவது துன்பமே தரும்).
நவம்பர் 11 சனிக்கிழமை
திரு உடையாரைச் செறல் இன்னா (செல்வந்தர்களைப் பகைத்தால் இன்பம் இல்லை)

நவம்பர் 12 ஞாயிற்றுக் கிழமை

சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா ( வேலி இல்லாத கரும்புத் தோட்டத்தைப் பாது காப்பது இன்பம் பயக்காது; பயிர் செய்தால், விலங்குகள் மேயா வண்ணம் பாதுகாத்தல் அவசியம்)


நவம்பர் 13 திங்கட் கிழமை

உறைசேர் பழங்கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா ( மழைக்காலத்தில் ஒழுகும் கூரை உடைய வீட்டில் வாழ்வது துன்பம் தரும்; அதாவது மழை வரும் முன்னே வலுப்படுத்தல் அவசியம்)

நவம்பர் 14 செவ்வாய்க் கிழமை

அறம் மனத்தார் கூறும் கடுமொழியும் இன்னா ( அற நெறியில் நிற்கும் நல்லோர் (கோபத்துடன்), சொல்லும் அறிவுரைகள் தீநெறியில் செல்லுவோருக்கு மகிழ்ச்சி தராது)

நவம்பர் 15 புதன் கிழமை
மறம் மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா (போர்க்களத்தில் (ஞாட்பில்) சோம்பி இருத்தல் வீரம் நிறைந்தவர்க்கு துன்பம் தரும்; பகைவர் தாக்கும் போது சுணக்கம் கூடாது)
நவம்பர் 16 வியாழக்கிழமை

இடும்பை உடையார் கொடை இன்னா ( வறுமையில் வாடுவோர், வெளி உலக பகட்டுக்காக, கொடையாளி போல நடிப்பது துன்பம் தரும்)

நவம்பர் 17 வெள்ளிக் கிழமை

ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா
(திறமை இல்லாதவன் படைக்கலங்களைக் கொண்டு சென்று போரிட்டால், வலிமையுள்ள எதிரி, அதையே பிடுங்கி அடிப்பான்; அப்போது துன்பம் வரும்)

நவம்பர் 18 சனிக்கிழமை

நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா ( வாசனை இல்லாத மலர்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் இன்பம் தராது; அழகான பெண்கள் குணம் இலாமல் இருந்தால் துன்பம்தான்)

நவம்பர் 19 ஞாயிற்றுக் கிழமை

தேற்றம் இலாதான் துணிவு இன்னா (திட்டம் இடாமல் காரியத்தைச் செய்பவனுக்கு இன்பம் இல்லை)

நவம்பர் 20 திங்கட் கிழமை

நகையாய நண்பினார் நார் இன்னா( சிரித்துச் சிரித்துப் பேசுவோர் உண்மை அன்பு காட்டாவிடில் துன்பமே) முகநக நட்பது நட்பன்று

நவம்பர் 21 செவ்வாய்க் கிழமை

இகலின் எழுந்தவர் ஒட்டு இன்னா ( கீழ் மக்களுடன் கொள்ளும் நட்பு, துன்பம் தரும்)
வள்ளல்கள் இன்மை பரிலர்க்கு முன் இன்னா (வள்ளல்கள் இல்லாத ஊரில் வாழும் புலவர்க்கு இன்பம் கிடைக்காது)

நவம்பர் 22 புதன் கிழமை

வண்மை இலாளர் வனப்பு இன்னா ( ஈகைக் குணம் இலாதோர் எவ்வளவு சிறப்பான தோற்றம் உடையாராக இருந்தாலும் மற்றவர்க்கு மகிழ்ச்சி தராது)
நவம்பர் 23 வியாழக்கிழமை

பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா (பொருளை உணரக்கூடிய அறிஞர்களிடையே கவிதைகளைச் சொல்ல வேண்டும்; மற்றவர்களிடம் உரைப்பது மகிழ்ச்சி தராது)

நவம்பர் 24 வெள்ளிக் கிழமை

இருள் சுடர் சிறு நெறி தாம் தனிப்போர்க்கு இன்னா ( இருட்டு வழிகளில் தனியே போவது துன்பம் தரும்)

நவம்பர் 25 சனிக்கிழமை

அருள் இல்லார் தம்கண் செலவு இன்னா (அருள் இலாதவரிடம் உதவி கேட்பது துன்பம் தரும்)

நவம்பர் 26 ஞாயிற்றுக் கிழமை

உடம்பாடு இலாத மனைவி தோள் இன்னா ( கருத்து ஒற்றுமை இல்லாத மனைவியின் தோள் துன்பமே தரும்)

நவம்பர் 27 திங்கட் கிழமை

இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா ( பிழையை மட்டும் பெரிது படுத்தும் நண்பர்களோடு வாழ்வது சுகம் தராது)
நவம்பர் 28  செவ்வாய்க் கிழமை
இடங்கழியாளர் தொடர்பு இன்னா ( காமம், கோபம் மிக்க கீழ்மக்கள் தொடர்பு துன்பமே அளிக்கும்)

நவம்பர் 29 புதன் கிழமை

இன்னா கடன் உடையார் காணப் புகல் ( கடன் வாங்கியோர், அதைத் திருப்பிக் கொடுக்காதவரை, கடன் கொடுத்தவரைக் காணும் போது எல்லாம் துன்பமே மிகும்)

நவம்பர் 30 வியாழக்கிழமை

கள் இல்லா மூதூர் களிகட்கு நன்கு இன்னா (குடிகாரர்களுக்கு கள் இலாத ஊர் துன்பத்தைத் தருகிறது)
--சுபம், சுபம்

No comments:

Post a Comment