Tuesday, November 7, 2017

சமைப்பதை போல சாப்பிடுவதும் ஒரு கலை!

உணவை மனநிறைவோடு, மகிழ்ச்சியாக சாப்பிடுவதன் அவசியம் குறித்து விளக்கும், உணவியல் நிபுணர், அனிட் பியாட்ரிஸ்: உணவில் கவனம் இல்லாமல் ஏனோ தானோ என்று சாப்பிடுவதால் தான், இன்று பல்வேறு நோய்கள் உண்டாகின்றன.செய்ய வேண்டிய வேலையையோ அல்லது செய்து முடித்த வேலைகளைப் பற்றியோ சிந்திக்கக் கூடாது. சாப்பிடும்போது நம் கவனம் முழுக்க, உணவின் மீது மட்டுமே இருக்க வேண்டும். உட்கார்ந்து தான் சாப்பிட வேண்டும். நின்றோ அல்லது நடந்தோ சாப்பிட்டால், நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற அளவு தெரியாது. வேக வேகமாகச் சாப்பிடவும் தோன்றும்.'டிவி' மற்றும் கம்ப்யூட்டர், மொபைல் போனை பார்த்துக் கொண்டோ, புத்தகங்களைப் படித்துக் கொண்டோ சாப்பிட்டால், நம் கவனம் முழுக்க அவற்றின் மீது தான் இருக்கும். இதன் காரணமாக நமக்கு தேவையான அளவில், ஆரோக்கியமான, சத்தான உணவுகளை சாப்பிட முடியாமல் போகும்.மேலும், நமக்கு வேண்டிய உணவை, நாமே எடுத்துப் போட்டு சாப்பிடுவதால், அளவும், நமக்கு தேவையான உணவும் சரியாக கிடைக்கும். தேவைக்கு அதிகமாக உண்ணும்போது, உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய தட்டில் தான், உணவைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்.உணவை, அதன் அருமையை உணர்ந்து சாப்பிட வேண்டும். சாப்பாட்டுக்குத் தேவையான பொருட்களை விளைவிக்கும் விவசாயிகளை, நமக்காக கஷ்டப்பட்டு சமைத்து தருவோரின் உழைப்பை நினைத்துப் பார்க்க வேண்டும். அதன் அருமையை உணர்ந்து சாப்பிடும் போது, உணவை வீணாக்க மனம் வராது.ஒவ்வொரு முறை உணவையும், 30 முறையாவது மென்று சாப்பிட வேண்டும். மெல்லாமல் அப்படியே விழுங்கினால், உணவில் உள்ள நுண்ணுாட்டச் சத்துக்கள் நமக்கு கிடைக்காது. வேக வேகமாக சாப்பிட்டால், செரிமானக் கோளாறுகள் ஏற்படும். அதனால் தான் நம் முன்னோர், 'நொறுங்கத் தின்றால் நுாறு ஆயுசு' என்று சொல்லி வைத்து இருக்கின்றனர்.வேக வேகமாக சாப்பிடுவதற்கு, ஸ்பூனால் சாப்பிடுவதும் ஒரு காரணம். அதற்காக, ஸ்பூனால் சாப்பிடவே கூடாது என்று அர்த்தமல்ல. ஒரு வாய் உணவை சாப்பிட்ட பின், ஸ்பூனை வைத்து விட வேண்டும். அப்போது தான் பொறுமையாக, மென்று சாப்பிட முடியும். தட்டில் போட்ட உணவு முழுவதையும் சாப்பிட்டு விட வேண்டும்.இவற்றோடு நாம் சாப்பிடும் உணவுகள், சரிவிகித உணவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து ஆகியவை உணவில் நிறைந்திருக்க வேண்டும். காய்கறிகள், பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். தினமும் பால் குடிப்பது நல்லது.சமைப்பதை போலச் சாப்பிடுவதும் கூட, ஒரு கலை தான். அதனால் உணவின் நிறம், மணம், வடிவம் ஆகியவற்றை ரசித்து, ருசித்து உண்ண வேண்டும்.

No comments:

Post a Comment