Saturday, April 6, 2019

வெயில்... நம்மை என்ன செய்யும்! thanks to dinamalar.com


வெயில்... நம்மை என்ன செய்யும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07ஏப்
2019 
00:00
வெயில் தாக்கத்திலிருந்து தப்ப, சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே போதும், கோடையும் நமக்கு தோழன் தான்.
இக்காலத்தில், சாப்பிட வேண்டிய உணவு வகைகள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம். இவை அனைத்திலுமே, நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும், கால்சியம், புரதம், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்துக்களும் நிரம்பியுள்ளன.

தண்ணீர்: வெயிலில், வியர்வை அதிகம் வெளியேறும். உடலில் நீர் சத்தை சமமாக வைத்திருக்க, 10 முதல் 12 டம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

கீரை: தினமும் ஏதாவது ஒரு வகை கீரையை, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வேனல் கட்டிகள் வருவது தடுக்கப்படும்; எளிதில் ஜீரணமாகும்.

கூழ்: தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று, கூழ். கம்பு மற்றும் கேழ்வரகு மாவில், கூழ் தயாரிக்கலாம். கூழ் குடிப்பதால், உடல் எடை குறையும்; கெட்ட கொழுப்பு சேராது. 

பழைய சோறு: ஏழைகளின் உணவு, பழஞ்சோறு, 'ஐஸ் பிரியாணி' என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படும் பழைய சோறு, வெயிலுக்கு ஏற்றது.
முதல் நாள் வடித்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் கரைத்து குடித்தால், உடல் உஷ்ணம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். மண் சட்டியில் இருக்கும் பழைய சோற்றுக்கு, தனி சுவையே உண்டு.
காலையில் இதை சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய் குணமாகும்.
இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும். ரத்த அழுத்தம் சீராகும். ஒவ்வாமை பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வு.
அனைத்துவிதமான வயிற்று புண்களுக்கும், பழைய சோறு வரப்பிரசாதம். நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும். வனப்பை தரும்; இளமை தோற்றத்தை தக்க வைக்க உதவும்.

நுங்கு: உடலுக்கு வேண்டிய நீர்சத்துக்களை, தன்னுள் உள்ளடக்கியுள்ளது, நுங்கு. மேலும், உடலின் கனிம சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்பட பெரிதும் உதவுகிறது. 
கோடையில் அதிக வெப்பத்தால், சின்னம்மை வரும் வாய்ப்பு அதிகம். இது வராமல் தடுக்கவும், சின்னம்மை விரைவில் குணமாகவும், நுங்கு உதவுகிறது. 
நுங்கு சாப்பிடுவதால், உடல் எடையை குறைக்கலாம். இதில் உள்ள, 'ஆந்தோசையனின்' என்னும், 'பைட்டோ கெமிக்கல்' மார்பக புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கும். வயிற்றில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை போக்க, நுங்கு சாப்பிடுங்கள்.

மோர்: செரிமானத்தை அதிகரிக்கவும், 'ஹார்மோன்' சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதை தடுக்கலாம்; ரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக் கொள்ளலாம்.

சாத்துக்குடி: ரத்த சோகையை விரட்டியடிக்க, சாத்துக்குடி நல்ல மருந்து. 'மெனோபாஸ்' சமயங்களில் பெண்களுக்கு ஏற்படும் சத்து குறைவால், பல இன்னல்கள் உண்டாகும். இக்குறை நீங்க, பெண்கள், தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.
வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்று போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவு பொருள் சேருதல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

இளநீர்: ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, இளநீர் சரியான மருந்து. இளநீரில் உள்ள பொட்டாஷியம், உடலில் நீர் வறட்சி குறைபாட்டை போக்கி, வயிற்றுப்போக்கை சரி செய்ய உதவுகிறது. 
உடல் உஷ்ணத்தை குறைப்பதுடன், குளிர்ச்சியை தருகிறது. ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது. சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. ரத்த சோகை, உற்சாகமின்மைக்கு நிவாரணம் அளிக்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. 
குடல் புழுக்களை அழிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்கிறது. சிறுநீரக கற்களை கரைக்கிறது. சிறுநீரக கிருமி நீக்கியாகவும், ரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருட்களையும் அகற்றுகிறது. காலரா நோயாளிகளுக்கு, இளநீர் நல்லதொரு பானம்.

தர்பூசணி: உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரக்கூடிய சிறந்த பழமாக, தர்பூசணி கருதப்படுகிறது. குறைந்த ரத்த அழுத்தம் உள்ளோர், தர்பூசணி பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால், அதிலிருந்து தப்பலாம்.
தர்பூசணியில் உள்ள, 'பைட்டோ - நியூட்ரின்ட்ஸ்' என்ற சத்து, உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

முலாம் பழம்: உடல் உஷ்ணம் மற்றும் சிறுநீர் குழாயில் ஏற்படும் எரிச்சலை போக்கவல்லது. வயிற்றுப்போக்கை குணப்படுத்தக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை துாண்டி, உடலுக்கு புத்துணர்வை அளிக்கும். 
இப்பழ சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டை புண் குணமாகும்; கண் பார்வை கூர்மையாகும். 

திராட்சை: திராட்சை பழத்தை, 'பழங்களின் ராணி' என்பர். பச்சை, சிவப்பு, ஊதா மற்றும் கருப்பு நிறங்களில் திராட்சை கிடைக்கிறது. திராட்சையில், 'கார்டெனோய்ட், பாலிபினோல்' போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. 
இவை, புற்றுநோயை எதிர்த்து போராடவும், தோல் பிரச்னைகளையும் சரி செய்கிறது. 
திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால், கண்களுக்கு தேவையான புரதம் கிடைக்கும். முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். 'அல்சைமர்' போன்ற மூளை சம்பந்தப்பட்ட வியாதிகளையும் தடுக்கிறது. 
உலகம் சீராக இயங்க, வெயிலையும் கொடுத்து, அதிலிருந்து மக்களை காக்க, பலவித சத்துக்கள் நிறைந்த பழ வகைகளையும் படைத்த இறைவனின் கருணைக்கு நன்றி செலுத்துவோம்! 

No comments:

Post a Comment