Thursday, June 30, 2016

கோலம் எனும் யோகப் பயிற்சி! - நன்றி: டாக்டர் விகடன் - 01 ஜூலை 2016 இதழ்

நன்றி: டாக்டர் விகடன் - 01 ஜூலை 2016 இதழ்

கோலம் எனும் யோகப் பயிற்சி!

கோலம், தமிழ்ச் சமூகம் கண்டுபிடித்த அலங்காரக் கலை. உண்மையில் கோலத்தின் பின்னே இருப்பது வெறும் அழகியல் உணர்வு மட்டும் அல்ல. இது உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் அற்புதப் பயிற்சி. நம் நலம் காக்கும் யோக முறை. தினமும் முறையாகக் கோலமிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை நன்மை கிடைக்கும்.

யோகாவில் மூச்சுப்பயிற்சி மிகவும் முக்கியமானது. கோலமிடுபவர்களுக்கு அவர்களையும் அறியாமலேயே சீரான மூச்சுப்பயிற்சி கிடைக்கிறது. குனியும்போது வயிறு சுருங்குகிறது. அப்போது மூச்சுக் காற்று பலமாக வெளியே செல்கிறது, நிமிரும்போது மீண்டும் காற்றை உள்ளே இழுக்கிறோம். இதனால், நுரையீரல் நன்மை பெறுகிறது. 

நாம் எப்படித் தொடர்ச்சியாக வார்த்தைகளை உபயோகித்துப் பேசுகிறோமோ... அதேபோல் தொடர்ச்சியாகக் கோலம் போட்டு பழகுபவர்களின் மூளை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைத் தர்க்கமாக சிந்தித்துப் பழகும். இது மூளைக்கான ஜிம் பயிற்சி போன்றது.

கோலம் போடக் குனிந்து நிமிரும்போது, முதுகுத்தண்டுக்குக் கீழே இருக்கும் மூலாதாரச் சக்கரம் இயக்கம் பெறும். இதன் மூலம் உடல் முழுதும் சீரான ரத்த ஓட்டம் இருக்கும். உடல் சக்தி பெருகும்.
கண்களில் ஆறு ஆக்டேவ் தசைகள் உள்ளன. மருத்துவர்கள்கூட இதற்குத்தான் பயிற்சி கொடுப்பார்கள். மேல், கீழ், இடம், வலம் என அனைத்துப் பக்கங்களும் பார்ப்பது, கருவிழியைச் சுழற்றுவது போன்ற பயிற்சிகள் கோலமிடும்போது இயல்பாகவே நிகழ்வதால், பார்வைத்திறன் மேம்படும்.

உடலில் சீரான ரத்த ஓட்டம் இருப்பதால், இதயம் முறையாக ரத்தத்தை பம்ப் செய்யும். இதயத்துடிப்பும் சீராக இருக்கும்.

குனிந்து நிமிர்ந்து கோலமிடுவது ஓர் உடற்பயிற்சிக்கு இணையானது. எனவே, கோலமிடுகையில் பெண்களுக்கே உரித்தான இயற்கையான நளினம் வெளிப்படும். அவ்வாறு தினமும் கோலமிட்டால் உடல்பருமனைத் தவிர்க்கலாம்.

கால் மூட்டுகளை மடக்கிக் கோலமிடுவதால் மூட்டுக்கு நல்ல பயிற்சியாக அமையும். மூட்டுவலி போன்ற பிரச்னைகள் வராது.

பெரிய கோலம் போட்ட பின் உள்ளே சிறு மாற்றம் செய்யும்போதோ, கலர் கொடுக்கும்போதோ, கோலத்தில் கால் படாமல் இருக்க, கால் கட்டைவிரல் மீது நிற்போம். இப்படி உடலின் மொத்த எடையையும் கால் கட்டைவிரல் மீது இறக்கும்போது, அது பாதத்துக்கு மிகுந்த வலுவைச் சேர்க்கிறது.

குனிந்து, நிமிரும்போது வயிறு சுருங்கி விரிந்து செயல்படுவதால், ஜீரணக் கோளாறு ஏற்படாது.

கர்ப்பப்பையும் சுருங்கி விரிவதால், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருக்காது. மேலும், சிறு வயதிலிருந்தே தொடர்ந்து கோலம் போடுவதன் மூலம் சுகப்பிரசவம் நடக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன!
- தா.நந்திதா

No comments:

Post a Comment