Saturday, June 4, 2016

தேடல்களை தூண்டும் அகமகிழ்வு: தேவைகளை தூண்டும் புறமகிழ்வு - நன்றி: தினமலர் - 29 மே 2016

தேடல்களை தூண்டும் அகமகிழ்வு: தேவைகளை தூண்டும் புறமகிழ்வு
வாழ்க்கையில் நாம் அனைவருமே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதை தான் விரும்புகிறோம். ஆனால், வாழ்க்கை முழுமை அடைவதே, கடினமான பொழுதுகளையும் லாவகமாய் தாண்டி வரும் போது தான். லேசான விஷயங்கள் நடக்கும் போது மகிழ்ந்து கொண்டாடி விட்டு, கடினமான பொழுதுகளை கண்டு அஞ்சி ஒதுங்கிக் கொள்கிறோம். என் தோழி ஒருவரின் நிகழ்வும் இதையொற்றியே இருந்தது. என் தோழி, மிக தைரியமான, அன்பான, பொறுப்பான பெண். ஆனால், சில நாட்களாக மிக சோர்வாய், கவலையாய், எதிலும் உற்சாகம் இல்லாமல் ஏனோதானோ என்று உடை அணிந்து, பேச்சிலும், செயலிலும் உற்சாகமில்லாமல் இருக்கவே, அவளை விசாரிக்க ஆரம்பித்தோம். எல்லா வசதிகளும் இருந்தும் ஏன் இந்த மகிழ்ச்சியின்மை என்று கேட்க, அவள் சொன்ன காரணங்கள், உங்களுக்கு சரியெனப்படுகிறதா என்று பாருங்கள்.வசதி வாய்ப்புகள், பதவி பாராட்டுகள், பெரிய பெயர், மதிப்பு இவையெல்லாம் புறம் சார்ந்த மகிழ்ச்சியை, அதுவும் தற்காலிக மகிழ்ச்சியை தான் கொடுக்கின்றன. நமக்கு மனம் என்று ஒன்று இருக்கிறது; அது சார்ந்த வாழ்க்கை, அதை மகிழ்ச்சிப்படுத்துவதற்கென நாம் ஏதும் சிந்திப்பதில்லை. அதாவது, அகம் சார்ந்த மகிழ்ச்சி என்பது அனைவருக்கும் வேண்டும். வயதாக வயதாக அகம் பற்றிய கேள்வி எழுகிறது. அந்த சந்தேகங்களுக்கு என்னால் தெளிவான பதிலை தேடி தர முடியவில்லை. ஒருவேளை அதுதான் என் உற்சாக மின்மைக்கு காரணமாய் இருக்கலாம் என்கிறாள். மகிழ்ச்சி என்றால் சந்தோஷமாய் இருப்பது, சிரிப்பது, கொண்டாடுவது என்றே நமக்கு தெரியும். அதிலும், இரண்டு பிரிவுகளாய் பிரித்து அகம், புறம் என பார்த்து பார்த்து சந்தோஷப்படணுமா என்ற கேள்வியும் எழுந்தது.

பாவனை உலகத்தில்...கஷ்டங்கள் வந்தால், என்னமோ வாழ்க்கை நம்மை மறுதலித்து விட்டதாய் அஞ்சுகிறோம். எப்போதுமே மகிழ்ச்சி, ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், சுய மரியாதை போன்றவற்றுக்கு மட்டுமே முதன்மை இடம் கொடுத்து, கடினமான பொழுதுகளை வெறுத்து ஒதுக்கி, அதை எப்படி கையாள்வது என்பதே தெரியாமல் ஒதுங்கிக் கொள்கிறோம். இரண்டு தருணங்களையும் எப்படி 
சமாளிப்பது என்று நமக்கு சொல்லித்தரவும் யாரும் இல்லை; தெரிந்திருந்தாலும் நாம் மற்றவர்களுக்கு சொல்லித்தரவும் தயாராக இல்லை.நாம் செய்கிற ஆக்கப்பூர்வமான செயல்கள், நமக்கு மற்றவர்கள் ஆக்கப்பூர்வமாய் செலுத்துகிற செயல்கள், இவை இரண்டுமே நமக்கு மகிழ்ச்சியை தரக் கூடியது தான். ஆனால், அதற்காக அவ்வப்போது ஏற்படுகிற தடங்கல்கள், துயரங்கள் போன்ற துன்ப செயல்களை நாம் 

எப்படி ஒதுக்கிவிட முடியும்?
அப்படியே, புற மகிழ்ச்சியிலேயே புதைந்து போவதும் நிரந்தரமானது அல்ல. அகம் சார்ந்த மகிழ்ச்சி, நிரந்தரமான, ஆழமான உணர்வு. இதை ஏன் அனைவரும் கொண்டாடுவதில்லை என்று யோசித்தால், நாம் அனைவருமே, பாவனை உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற கசப்பான உண்மை புரியும். அதாவது, புறத்தில் சுவை கண்ட பூனையாக, அகத்தை மறைத்து வைத்து, புற மகிழ்ச்சியை மட்டுமே எதிர்கொள்கிறோம்.என் வீடு, என் கணவன், என் பிள்ளைகள் அடங்கிய அழகிய கூடு; இது எனக்கு நிம்மதி தருவதாய் அமைந்துள்ளது. ஒருவேளை அப்படி அமையவில்லையென்றால், அமைத்துக் கொள்வேன் என்கிற சுய மதிப்பீடு நம்மிடையே குறைந்து 

வருகிறது. சபாஷ்! 'எத்தனை பெரிய பங்களா வாங்கியிருக்கிறாய்?' 
என மற்றவர்கள் கூறும் பாராட்டு வார்த்தையில் உள்ள புற மகிழ்ச்சியை ஏற்று கொண்டாடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
நம் தேடல்களை துாண்டும் அக மகிழ்வு, நிரந்தர மாய் நம்மை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும். தேவைகளை துாண்டும் புற மகிழ்வு, சுமைகளை அதிகப்படுத்தி நம்மை இருக்கிற நிலையிலேயே சோர்வடைய செய்துவிடும். எனக்கு அக மகிழ்வே வேண்டாம்; பிறர் பாராட்டும் புற மகிழ்வே போதும் என்று நினைத்து செயல்படுவோர், ஒரு கட்டத்திற்கு பின் எந்த மகிழ்ச்சியையும் அடையாமல், என் தோழி மாதிரி புலம்ப வேண்டியது தான். நம் அகம் அழகாய், மகிழ்வாய் அமைந்தாலே, நமக்கு தெளிவான பார்வை கிட்டும். செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதன் தெளிவு பிரதிபலித்தாலே, நம் வாழ்க்கை வளமாய் அமையும்.புற மகிழ்வை மட்டும் கருத்தில் கொண்டு கவனமாய் நடந்தாலும், தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும். அப்போது உங்களை புகழ்ந்தவர்களே, 'நல்லா வேணும்... என்ன ஆட்டம் போட்டாங்க இதுதான் முடிவு...' என்று புறம் பேசுவர். அப்போது நமக்கு ஏற்படும் சோக சுமையையும், ஏமாற்றங்களையும் எவராலும் தடுக்கவே முடியாது என்பது தான் நிதர்சனம். அதன் பின் நாம் யோசிப்போம், உண்மையான மகிழ்ச்சி என்பது என்ன; அது எதில் இருக்கிறது; அதனால் ஏற்படும் மன நிம்மதியில் எத்தனை சுகம் இருக்கிறது என்று.உள்ளதை உள்ளபடி... பல வேதனைகளையும், சோதனைகளையும், தடங்கல்களையும் தாண்டி, அதையெல்லாம் மீறி தான் வெற்றியடைந்தோம் என்று வெற்றியாளர்கள் கூறுவது உண்மையெனில், வெற்றியை விட நமக்கான அக மகிழ்வை இதுமாதிரியான வேதனைகளில் தான் கண்டறிய முடியும் என்பது 
புரியும். புற மகிழ்ச்சி, சடக்கென்று கடந்து போகக்கூடியது; அக மகிழ்வு அப்படி அல்லவே! நிரந்தரமாய் ஒரு பெருமிதத்தை, நிறைவை, வாழ்வின் முழுமையை அனுபவித்த சுகத்தை நமக்கு கொடுக்கும். எதிர்மறை எண்ணங்களை விட, ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் தான் நல்லது என்றாலும், நம் பிள்ளைகளுக்கு புறத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியை மட்டும் புலப்படுத்துவதில் நம் கடமை முடிந்து விடாது. உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் வேண்டும். வேதனைகளையும், சோதனைகளையும் முழுமையாக அனுபவித்து அதிலிருந்து பாடம் கற்று, மீண்டு வந்து தெளிவான வாழ்க்கையை தேர்ந்தெடுப்போர் மட்டுமே, அக மகிழ்ச்சியோடும், புற மகிழ்வில் ஒதுங்கியும் வாழ்வர். அவர்களாய் நாம் மாற, நாமே நம்மை சுயமாய் வாழ்த்திக் கொள்வோம். அக மகிழ்வு கிடைத்தவுடன் சுயமாய் பாராட்டிக் கொள்வோம். தவறொன்றுமில்லை நாயகியரே!

ம.வான்மதி

No comments:

Post a Comment