Saturday, March 25, 2017

கடலை மிட்டாய், கம்பங்கூழுக்கு மாறுவோம்! thanks dinamalar.com

இன்றைய காலக் கட்டத்தில் நாம் கவலைப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம், நம் இளைய தலைமுறையினரின் உணவு பழக்கம் தான். என்றைக்கு நம் அரசுகள், 'கார்ப்பரேட் கம்பெனி'களை நம் நாட்டிற்குள் நுழைய விட்டதோ, அன்றே, நம் எதிர்கால துாண்களின் ஆரோக்கியத்தை அழித்துவிட்டோம்.
இன்று, பீட்சா, பர்க்கர், கே.எப்.சி., சிக்கனுக்கு மாறிவிட்ட நம் இளைய தலைமுறையினரின் நாவை, வடை, பஜ்ஜி, போண்டா பக்கம் திருப்புவது, மிக மிக கஷ்டமான காரியம்.
நம்ம ஊர் அரிசி உணவில், ஷுகர் இருக்கிறது என்று, அனைவரையும் கோதுமைக்கு மாற வைத்தனர். இதனால், தேங்கிப் போன, தரமிக்க அரிசி அனைத்தும் மறைமுகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆனது. அப்போதாவது விழித்தோமா... இல்லையே!
நம் வேர்க்கடலையில் உள்ள சத்துகளை நன்றாக அறிவோம். ஆனால், அதை சாப்பிட்டால், 'ஆண்மை குறைவு ஏற்படுகிறது' என்ற வதந்தி பரவ, மொத்தமாகவே கடலையை ஒதுக்கி விட்டோம்.
'இது தாண்டா சாக்கு' என, நம் வேர்க்கடலையை அடி மாட்டு விலைக்கு வாங்கிய வெளிநாட்டு கம்பெனிகள், அவர்களது சாக்லெட்களில் பாதாம், பிஸ்தாவுக்கு பதிலாக சேர்த்து விற்க ஆரம்பித்து 
விட்டன. நாமோ, நம் கடலை
மிட்டாயை மறந்து, பாதாம்,
பிஸ்தாவுக்கு மாறிவிட்டோம்.
ஒரு முறை, 'பெப்சி' குளிர்பானத்தில், அழுக்கு படலம் இருந்தது என, பெரியவர் ஒருவர் புகார் கொடுக்க, அதன் மாதிரியை, 'லேப் டெஸ்டு'க்கு அனுப்பியதில், 'மனிதர்கள் குடிப்பதற்கு ஏற்ற பானமில்லை' என, 'ரிப்போர்ட்' வந்தது. உடனே, அந்த கம்பெனியை பூட்டி, 'சீல்' வைத்தார், சகாயம் ஐ.ஏ.எஸ்., 
'குர்குரே' எனப்படும் குழந்தைகள் விரும்பி தின்னும் பண்டத்தை சாப்பிட்டு, 'ஈனோ' எனப்படும், வயிற்று உப்பசத்தை குறைக்கும் பானத்தை குடித்தவுடன், தொலைக்காட்சி தொகுப்பாளர், ஜேம்ஸ் வசந்தனின் மகனின், வகுப்பு தோழன் ஒருவன் இறந்து விட்டான் என்ற செய்தியை, அவரே, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இதை விட, பிரபல நடிகர் ஒருவர், ஒரு வெளிநாட்டு பானத்தை அதிகமாக விரும்பி குடித்ததால், கல்லீரல் பாதிக்கப்பட்டு, 10 மணி நேர அறுவைச் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். அதிலிருந்து, அதுபோன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள் குறித்த விளம்பர படங்களில் நடிப்பதையே அவர் நிறுத்திவிட்டார்.
இத்தனை பயங்கரமான உண்மைகளை கேள்விப்பட்ட பின்னும், நம் இளைய தலைமுறையினர், அந்த பானங்களை குடிப்பதை, 'ஸ்டைல், கெத்து' என, நினைக்கின்றனர். இன்றைய இளைய தலைமுறையினரின் ருசியை, பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களுக்கு மாற்ற வேண்டியது நம் கடமை.
பீட்சா, பர்க்கர், நுாடுல்ஸ் என, சாப்பிட்டு, சாப்பிட்டு தான், நம் குழந்தைகள், சின்ன வயதிலேயே, 'ஓவர்' குண்டுகளாக மாறியுள்ளனர். சுவைக்காக, அவற்றில் கலக்கப்படும் பன்றி கொழுப்பு, நம் குழந்தைகளை சிறு வயதிலேயே, யானை குட்டிகள் போல் ஆக்கி விடுகிறது. 
மேலே குறிப்பிட்ட உணவுப் பொருட்களின் அபாயங்களை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி, இளநீர், கரும்புச் சாறு, சோளம், கம்பு, கேழ்வரகு, சத்து மாவு கஞ்சி போன்றவற்றிற்கு அவர்களை மாற்ற வேண்டியது நம் கடமை. 
கூடுமான வரையில், அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிட வைத்து, ஆரம்பத்திலேயே பழக்கி விடுவது நல்லது. இந்த காலத்தில், பழங்களை கூட நம்பி வாங்க முடியவில்லை. காரணம், சீக்கிரமாக பழுக்க வேண்டும் என்பதற்காக, வேதிபொருட்களை பயன்படுத்துகின்றனர்.
இதற்கு, விவசாயிகள் மட்டுமல்ல, நாமும் தான் காரணம். 'மாம்பழத்துல சின்ன கரும்புள்ளி கூட இருக்கக்கூடாது. மஞ்சளா, அழகா, பளபளன்னு இருக்கணும்னு' பார்க்கிறோம். அப்படி இருக்க வேண்டும் என்பதற்காக பழங்களின் மீது ரசாயன மருந்துகளை பூசுகின்றனர்.
வெளிநாட்டினரோ, 'பழத்துல தடை செய்யப்பட்ட வேதிபொருள் அல்லது பூச்சி மருந்து இருக்கா...'ன்னு தான் முதலில் பார்க்கின்றனர். அதனால் தான், அவர்களுக்கு நல்ல பழமும், நமக்கு, 'கார்பைடு கல்' வைத்த பழமும் கிடைக்கிறது.
எனவே, பளபள பழங்களை வாங்காமல், சாம்பல் பூத்த, கவர்ச்சி
யில்லாத, நாட்டுப் பழங்களையே வாங்குங்கள். கவர்ச்சி பழங்களை வாங்கினாலும், அப்படியே சாப்பிடாமல், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பை கரைத்து, அதில் இப்பழங்களை போட்டு, அரை மணி நேரம் ஊற வைத்த பின், உபயோகித்தால் அதில் உள்ள வேதிப்பொருட்களின் தாக்கம் குறையும்.
நம் நாட்டில் இருந்து ஒரு பொருளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் போது, அத்தனை முறை, 'செக்' பண்ணி, பல கெடுபிடிகளை கடந்து தான், நம் நாட்டுப் பொருட்கள் அவர்கள் நாட்டிற்குள் நுழைய முடியும். அவர்கள் நாட்டு மக்களின், ஆரோக்கியத்தின் மீது அத்தனை அக்கறை எடுத்து கொள்கின்றன, அந்த அரசுகள். ஆனால், இங்கே, நம் அரசியல்வாதிகளோ, 'எனக்கு எத்தனை கோடி கொடுப்ப...' என்பதிலே தான் குறியாக இருக்கின்றனர்.
இவர்கள், கோடி, கோடியாக ஒவ்வொரு நாட்டு வங்கிகளிலும், 'பினாமி' பெயரில் சேர்த்து வைப்பதிலேயே குறியாக இருப்பதால் தான், போலி முட்டை கோஸ், போலி முட்டை என, எல்லாவற்றிலும், 'டூப்ளிகேட்'களை தயாரித்து, நம் தலையில் கட்டி விடுகின்றனர். 
சீன தயாரிப்புகளை அறவே வாங்காதீர்கள். கவர்ச்சிகரமான அவர்களது பொருட்களை காசு கொடுத்து வாங்கி, வீட்டுக்கு வருவதற்குள் உடைந்து போகும். அதன் பின், அதை துாக்கி எறிய வேண்டியது தான்.
நல்ல பொருட்களை தயாரித்து, முதல் தரமானவற்றை தங்கள் நாட்டில் வைத்து கொண்டு, போலிகளை நம் தலையில் கட்டும் இவர்களது சதி திட்டங்களுக்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். 
ஆனால், நாமோ, முதல் தரமான அரிசி, காய்கறி, உடைகள் போன்றவற்றை வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டு, மட்டமான, இரண்டாம், மூன்றாம் ரகங்களை உபயோகிக்கிறோம்.
'ரொம்ப நல்லவர்'களாக நாம் இருப்பதால் தான், போலியானப் பொருட்களைத் தயாரித்து, ஏமாந்த, இளிச்சவாயர்களாகிய இந்தியர்களிடம் தள்ளி விட்டு, அவர்கள் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி கொண்டே போகின்றனர்.
என்ன அநியாயம்... வெளிநாட்டு கழிவுகளை கொண்டு வந்து, நம் நாட்டில் கொட்டுகின்றனர். இதை பல ஆண்டுகளுக்கு பின்னரே அறிந்து, தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது, அரசு. ஆபத்தான, சுகாதாரத்துக்கு ஊறு விளைக்கும் வாயுக்களை தயாரிப்பது போன்ற செயல்களை செய்து பார்க்க, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை, 'தத்து' 
கொடுத்து விடுகின்றனர், நம்
அரசியல்வாதிகள். 
போதும், போதும். நாம் எல்லாரும், ரொம்ப நல்லவர்களாக இருந்தது; பொங்கி எழுவோம். இதற்கெல்லாம் நம் அரசியல்வாதிகள் தானே காரணம். இனி, இவர்களை நம்பி, நாம் வாழ முடியாது. நமக்கு நாமே விழிப்படைந்து, இப்படிப்பட்ட வெளிநாட்டு பொருட்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.
தற்போது, வணிகர்கள் எல்லாம் சேர்ந்து, அன்னிய நாட்டு குளிர்பானங்களை முடக்க முயற்சிப்பது போல, நாம் ஒத்துழைத்தால், சீன தயாரிப்புகள் அத்தனைக்கும் முடிவு கட்ட முடியும்.
கரும்பு சாறு, இளநீர் அல்லது பழச்சாறு போன்ற உள்நாட்டு இயற்கை பானங்களை நாம் குடித்தால், நம் நாட்டில், 7,000 கோடி ரூபாய் வரை சேமிக்கலாம். நம் விவசாயிகளுக்கு அவற்றை கொடுக்க, விவசாயிகள் யாரும் இனி மேல் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள். வெளிநாட்டு குளிர்பானங்களை தவிர்த்து, பழச்சாறு அருந்தும் போது, ஒரு கோடி பேருக்கு வருமானம் கிடைக்கும்.
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இதை செய்யவில்லை என்றால், வெளிநாடுகளுக்கு நம் செல்வத்தை இழக்க நேரிடும்.
குடிப்பதற்கு, லெமன், ஜூஸ், பிரஷ் புரூட் ஜூஸ், லஸ்சி, மோர், இளநீர், மசாலா பால், ப்ரூட் நிக், பவன்டோ. குளிப்பதற்கு, சிந்தால், சந்துார், மைசூர் சாண்டல், மார்கோ, மெடிமிக்ஸ், நிர்மா, சந்திரிகா, கங்கா போன்ற சோப்புகளை உபயோகியுங்கள். 
பல் விளக்க, நீம், பிராமிஸ், விகோ வஜ்ஜிரதந்தி, ப்ரூடன்ஸ், டாபர், மிஸ்வாக். ஷேவிங் க்ரீம், கோத்ரெஜ், இமாமி. பவுடர், கோகுல், சிந்தால், சந்துார், போரோ பிளஸ். ஷாம்பு, நிர்மா, வெல்வெட் ஷாம்பு. போன், பி.எஸ்.என்.எல்., ஏர்டெல்.
இவை, நம் நாட்டின் தயாரிப்பு. இந்த பொருட்களை நாம் வாங்க ஆரம்பித்தால், நம் நாடு, உலகின், இரண்டாவது பணக்கார நாடாக மாறும். இதுவரை ஏமாளிகளாகவே இருந்து விட்டதால், நம் பெருமையை நாமே உணராமல் இருக்கிறோம்.
நம்மை நாமே கேவலமாக நினைத்து, அன்னிய பொருட்களின் மீது மோகம், அன்னிய உணவு முறை, உடை போன்றவற்றில் நமக்குள்ள மிகப் பெரிய ஈர்ப்பு தான், நம் அடையாளங்களை
மறந்ததற்கு காரணம்.
இனி, கடலை மிட்டாய், கம்பங்கூழுக்கு மாறுவோம்... இழந்த ஆரோக்கியத்தை திரும்ப பெறுவோம்... ஹலோ சார்... எங்கே கிளம்பிட்டீங்க... கடலை மிட்டாய் வாங்கத் தானே!
ஜெனிபர் பிரேம் பத்திரிகையாளர் இ-மெயில்:
jjaneepremkumar@gmail.com

No comments:

Post a Comment