Saturday, March 9, 2019

குழந்தைகளிடம் பேசுங்கள்... பேசுவதைக் கேளுங்கள்! thanks to dinamalar.com

குழந்தைகளிடம் பேசுங்கள்... பேசுவதைக் கேளுங்கள்!


குடும்பம்
சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்
``ஒரு பிரச்னை என்றால், அறிவும் அனுபவமும் நிரம்பிய பெரியவர்களே சில நேரங்களில் தடுமாறிவிடுகிறோம். சரி, குழந்தைகளுக்குப் பிரச்னை என்றால்? பெற்றோர்தான் அதற்குத் தீர்வுகாண வழிகாட்ட வேண்டும். அதைச் செய்யாமல் குழந்தைகள் மீதே குற்றம் சாட்டும்போது, `அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியர்’ (Attention Seeking Behaviour) எனப்படும் கவன ஈர்ப்பு நடத்தையில் குழந்தைகள் இறங்குவார்கள்’’ என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன். அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியர் என்றால் என்ன, அது ஏன் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது, தடுக்க என்ன செய்யலாம்? விரிவாக விளக்குகிறார் அவர். 
``கவன ஈர்ப்பு நடத்தை, அனைத்துத் தரப்பு  வயதினரிடமும் இருக்கும் ஒன்று. ஒருவரின் பிரச்னையை மற்றவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாதபோது, அதன் தீவிரத்தை மற்றவர்களுக்கு உணர்த்த இப்படி நடந்துகொள்வார்கள். இதைத் தவறு என்றும் சொல்ல முடியாது; வளர்ந்தவர்களைவிட, குழந்தைகளிடம் சற்று அதிகமாகக் காணப்படும். 

பிரச்னையைச் சொல்லும் அளவுக்கு பெற்றோர் சுதந்திரம் கொடுத்தால், குழந்தைகள் கவன ஈர்ப்பு நடத்தையில் இறங்க மாட்டார்கள். பள்ளியில் பிரச்னை; அதை விவாதிக்க பெற்றோர் தயாராக இருந்தால், குழந்தைகள் அவர்களிடம் சொல்லி, தீர்வு கண்டுவிடுவார்கள். ஆனால், பல குடும்பங்களில் பெற்றோரிடம் வெளிப்படைத் தன்மை இருப்பதில்லை. 

பள்ளியில் ஆசிரியர், ஒரு குழந்தைக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கிறார்; இதனால் குழந்தைக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு, அவர் பாடம் நடத்தும்போது மட்டும் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. வீட்டில் சொன்னால், அதைக் கேட்கும் மனநிலையில் பெற்றோர் இல்லை. ஆசிரியரிடம் சென்று விவாதிக்கவும் அந்தக் குழந்தையால்  முடியவில்லை. இந்த நிலையில், `பள்ளிக்குப் போனால்தானே பிரச்னை?’ என்று கருதும் குழந்தை, அதைத் தவிர்க்க, `உடல்நிலை சரியில்லை’ என்று சொல்லும். பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். இதனால், குழந்தைக்கு இரண்டு அனுகூலங்கள். பள்ளிக்குப் போகவேண்டியதில்லை. பெற்றோரிடமிருந்து தொடர்ச்சியான கவனிப்பு கிடைக்கும். இந்த அனுபவம் கிடைத்த குழந்தை, வேறு எந்தப் பிரச்னை வந்தாலும், அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியரில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும்.  
தவிர, பிடிவாதம் பிடிப்பது, கோபப்படுவது, ஒழுக்கமின்றி நடந்துகொள்வது, பெற்றோர் பேச்சைக் கேட்காதது போன்றவற்றில் இறங்குவார்கள். 

அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியருக்கான மூன்று காரணங்கள். 

* பெற்றோரிடம் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை.

* சொல்வதைக் கேட்க ஆளில்லாமல் போவது. 

* பிரச்னையைத் தீர்க்க உதவாமல், பிறர் தன்னையே குற்றம்சாட்டுவது.

இந்தக் குழந்தைகளை எப்படி அணுகுவது?


நம் கவனத்தை ஈர்க்கத்தான் குழந்தை இப்படியெல்லாம் செய்கிறது என்று பெற்றோருக்குத் தெரிந்தால், கோபப்படக் கூடாது. என்ன பிரச்னை என்று கண்டறிய வேண்டும். திறந்த மனதுடன் குழந்தைகளிடம் பேச வேண்டும். 

மிரட்டுவது, குற்றம்சாட்டுவது போன்ற தொனியில் பேசக் கூடாது. `வா... உன் பிரச்னையை இருவரும் சேர்ந்து தீர்ப்போம்’ என்று ஆதரவு தரும்விதத்தில் பேச வேண்டும். இதனால், பெற்றோர் மீது குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படும்; எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வார்கள். அதைத் தீர்க்க வேண்டும் என்ற அவசியம்கூட ஏற்படாது. 

குழந்தைகளுக்கு, பிரச்னைகளை முதிர்ச்சியுடன் அணுகத் தெரியாது. அவற்றைத் தீர்க்க, நம் ஆலோசனைகளும் வழிமுறைகளும் தேவையாக இருக்கும். பின்னாளில், அதேபோல பிரச்னை ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள பெற்றோர் சொன்ன வழிமுறைகளையே பின்பற்றுவார்கள். 

ஒரு குழந்தை தனது கவனத்தை ஈர்ப்பதற்காக வயிற்றுவலி இருப்பதாகத் தொடர்ந்து பொய் சொல்லும். ஆனால், அப்படி எதுவும் இல்லையென்பதை மருத்துவரிடம் குழந்தையைக் காண்பித்து, உறுதிசெய்திருப்பீர்கள். ஆனால், குழந்தை தொடர்ந்து அதையே சொல்லிக்கொண்டிருந்தால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. குழந்தையின் மீது அக்கறை செலுத்தலாம். ஆனால், குழந்தை வெளிப்படுத்தும் நடத்தை மீதான கவனத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். வெளிப்படையாக எதையும் பகிர்ந்துகொள்ளும் சுதந்திரத்தை, குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். நிறைய குழந்தைகள் தங்கள் பிரச்னையை மற்றவர்களிடம் சொல்வார்கள்; பெற்றோரிடம் மட்டும் சொல்ல மாட்டார்கள். அதனால்தான் சிலர் குழந்தையை மிரட்டி சில காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார்கள்.

இந்த நடத்தை நார்மலானதுதான். ஆனால், அது தொடர்ந்துகொண்டிருந்தால், அது ஓர் ஆளுமையாக மாற வாய்ப்பிருக்கிறது. எனவே, எச்சரிக்கை தேவை!’’ என்கிறார் சிவபாலன் இளங்கோவன்.   
இதற்குத் தீர்வு உண்டா? குழந்தைகள்நல ஆர்வலர் தேவநேயனிடம் பேசினோம்.

``குழந்தையிடம் கெட்ட வார்த்தை பேசக் கூடாது என்கிறோம். ஆனால், குழந்தைக்கு முன்பாக நாமே கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கிறோம். `பொய் சொல்லக் கூடாது’ என்கிறோம். நாமே பொய் சொல்கிறோம். எது சரி, தவறு என்பது குழந்தைகளுக்குத் தெரியாது. தங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களிலிருந்தும் சூழலிலிருந்தும்தான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். 

குழந்தைகள் பிறரின் இயலாமையைத் தெரிந்துவைத்திருப்பார்கள். பெற்றோரிடம் எப்படிப் பேசினால் காரியத்தைச் சாதித்துக்கொள்ள முடியும் என்று அறிந்துவைத்திருப்பார்கள். அம்மா-அப்பாவுக்குள் பிரச்னை என்றால் குழந்தையின் அட்டென்ஷன் சீக்கிங் வேறு மாதிரியாக இருக்கும். அம்மாவைப் பற்றிக் குறை சொல்வதை அப்பா கேட்பார் என்றால், குழந்தை அதைச் சொல்லும். தன் மீது அப்பாவின் கவனம் குவியும் என்பதால், அப்படி நடந்துகொள்ளும். 

இன்றைக்குக் குழந்தைகள் குழந்தைத் தன்மையோடு வளர்வதில்லை. இணையதளங்களில் குழந்தைகள் பேசும் வீடியோக்களில் அதை கவனிக்கலாம். அது, குழந்தைகளின் நலனுக்கு எதிரானது என்பது பற்றி பலரும் யோசிப்பது இல்லை! பிறரைக் கவருவதற்காக குழந்தைகள் நடிப்பது ஆபத்தானது. அதைச் சரிசெய்ய வேண்டுமென்றால், முதலில் நாம் குழந்தைகளிடம் பேச வேண்டும். குழந்தையின் படிப்பு சார்ந்து மட்டும் அல்லாமல், நம் பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக்கூறுகள், உறவுகளை மீட்டெடுப்பது குறித்தெல்லாம் பேசவேண்டியது அவசியம்’’ என்கிறார் தேவநேயன்.

No comments:

Post a Comment