Saturday, March 9, 2019

கோலிக்குண்டு, பல்லாங்குழி, பாண்டி... ஆட்டமெல்லாம் ஆரோக்கியம்! thanks to dinamalar.com


கோலிக்குண்டு, பல்லாங்குழி, பாண்டி... ஆட்டமெல்லாம் ஆரோக்கியம்!

கண்ணன் புகழேந்தி விளையாட்டு மருத்துவ நிபுணர்
விளையாட்டு என்றாலே குதூகலமாகிவிடுவார்கள் குழந்தைகள். பிறந்து சில மாதங்களில் கைகால்களை அசைக்கும் பருவத்திலேயே ஏதாவது ஒரு பொம்மையைவைத்து விளையாடத் தொடங்கிவிடுவார்கள். வளர வளர வயதுக்குத் தகுந்த விளையாட்டுகளில் ஆர்வத்தோடு இறங்குவார்கள். இன்றைக்கு அந்த விளையாட்டு நேரம் வெகுவாகக் குறைந்துவிட்டது; விளையாட்டுகளிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு காலத்தில் பரவலாக இருந்த பாண்டி, கில்லி, கண்ணாமூச்சி போன்றவை காணாமல் போய்விட்டன. கோலிக்குண்டுகளை உருட்டிய, பனங்காயில் செய்த மாட்டுவண்டியை ஓட்டிய காலம் மாறி, இப்போது செல்போன் கேம்ஸ், வீடியோ கேம்ஸ் என டிஜிட்டல் விளையாட்டுகளை மட்டுமே பெரும்பாலான குழந்தைகள் விரும்புகிறார்கள். குழந்தைகள் வெளியே சென்று ஆட விரும்பினாலும், பல பெற்றோர்கள் அதற்கு அனுமதிப்பதில்லை. அதனால், குழந்தையின் கல்வி பாதிக்கப்படுமோ என்று அச்சப்படும் ஆசிரியர்களும் பெற்றோர்களும்தான் அதிகமாக இருக்கிறார்கள். 
``குழந்தைகளின் படிப்பின் மீதிருக்கும் அக்கறையில் விளையாட அனுமதிக்காமல் இருப்பது, அவர்களின் உடலை அலட்சியப்படுத்தும் ஒரு செயல்’’ என எச்சரிக்கும் விளையாட்டு மருத்துவ நிபுணர் கண்ணன் புகழேந்தி, அதன் அவசியத்தை விரிவாக விளக்குகிறார்.

``படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால், குழந்தைகளின் மனம் ஒருவித படபடப்புடனேயே இருக்கும். விளையாட்டு மட்டும்தான் அவர்களை ஆசுவாசப்படுத்தும் அற்புத மருந்து. உடலை கவனிக்காமல், படித்து நல்ல நிலைக்கு வந்தாலும், வாழ்வில் வெற்றிபெற உடல் ஒத்துழைப்புத் தர வேண்டும். அதற்கு, சிறு வயதிலிருந்தே குழந்தைகள்   உடற்பயிற்சி செய்யவேண்டியது அவசியம். `ஏதாவது உடல்நலப் பிரச்னை வந்தால், மருத்துவரைப் பார்த்துச் சரிசெய்துகொள்ளலாம்’ என்ற மனப்பான்மைதான் இப்போது அனைவரிடமும் இருக்கிறது. பிரச்னை வராமல் முன்கூட்டியே தடுக்கும் உடற்பயிற்சிகள், விளையாட்டுகள் எல்லாம் நம்மிடம் இருக்கின்றன என்பதை எல்லோரும் மறந்துவிட்டார்கள். 
உலக அளவில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களில் இளம் வயதினராக இருப்பவர்கள் இந்தியர்களே. இதற்கு நகருதல், ஓடுதல், ஆடுதல் என்று எந்த உடற்பயிற்சிகளும் இல்லாமல் குழந்தைகள் வளர்வதும் ஒரு காரணம். இந்தச் சூழலில் நம் குழந்தைகளைப் பாதுகாக்க உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்தவேண்டியது அவசியம். பல் துலக்குவது, குளிப்பது போன்று உடற்பயிற்சி செய்வதும் நம் அன்றாடக் கடமைகளில் ஒன்று என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். நேரடியான பயிற்சிகளாக இல்லாமல் விளையாட்டுகள் மூலம் கற்றுத் தரும்போது குழந்தைகள் இன்னும் அதிக விருப்பத்துடன் ஈடுபடுவார்கள். பிடித்த விளையாட்டுகளில் மிகப் பெரிய சாதனையாளராவது ஒருபுறம் இருக்கட்டும், தங்களின் ஆயுளைத் தக்கவைத்துக்கொள்வதற்காவது இன்றைய குழந்தைகள் அவசியம் விளையாட வேண்டும். உலகப் போர்களில் இறந்த மக்களைவிட போதிய உடற்பயிற்சி இல்லாமல் இறந்தவர்களே அதிகம். நம் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவத்துக்காகப் பல லட்ச ரூபாயைச் செலவு செய்வதைவிட உடற்பயிற்சிக்காக சில மணித்துளிகள் செலவு செய்தாலே போதும். விளையாட்டால் உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். 

கிரிக்கெட், ஹாக்கி, ஃபுட்பால், வாலிபால் எனத் தங்களுக்குப் பிடித்த எதையும் குழந்தைகள் விளையாடலாம். அதற்கு வாய்ப்பில்லாத குழந்தைகள் நடப்பது, ஓடுவது போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். நாளொன்றுக்கு 45 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டியது அவசியம். நம் எதிர்காலத் தலைமுறையைக் காக்கவேண்டிய பொறுப்பு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம்தான் இருக்கிறது’’ என்கிறார் கண்ணன் புகழேந்தி. இன்றைய குழந்தைகளிடம் பொறுமை, நிதானம், சகிப்புத் தன்மை, சமூகத்துடன் ஒன்றிணைதல், குழு மனப்பான்மை போன்ற பண்புகள் குறைவாக இருக்கின்றன. பாண்டி, கில்லி, கண்ணாமூச்சி போன்ற நம் பாரம்பர்ய விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமல்லாமல் வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல விஷயங்களையும் நமக்குக் கற்றுக் கொடுத்தன. 
நம் பாரம்பர்ய விளையாட்டுகளின் மகத்துவம் பற்றி விரிவாக விளக்குகிறார் ஸ்போர்ட்ஸ் சைக்காலஜிஸ்ட் கணேஷ்குமார்.
``கேரம், செஸ் போன்ற உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகளாக இருந்தாலும் சரி, கிரிக்கெட், ஃபுட்பால், டென்னிஸ் போன்ற ஓடி, ஆடி விளையாடும் விளையாட்டுகளாக இருந்தாலும் சரி, அவற்றின் மூலம் நம் உடலுக்கும் மனதுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன என்பது உண்மைதான். அதே நேரம் நம் பாரம்பர்ய விளையாட்டுகளின் மூலம் உணர்வுரீதியாகவும், சமூகம் சார்ந்தும் பல நன்மைகள் கிடைத்தன. மனரீதியாக பாதிப்புக்குள்ளாகி, என்னிடம் வரும் பெரும்பாலான குழந்தைகளுக்கு நான் வழங்கும் முதல் பயிற்சியே நம் பாரம்பர்ய விளையாட்டுகள்தான். நல்ல உணர்வுகளைத் தூண்டுவது, பிறருடன் எப்படிப் பேசுவது, பழகுவது, சமூகத்துடன் ஒருங்கிணைவது போன்ற பல நல்ல விஷயங்களை நம் பாரம்பர்ய விளையாட்டுகள் இயல்பாகவே கொண்டிருக்கின்றன. அதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்; பழங்காலத்தில் பெண்களால் விரும்பி விளையாடப்பட்டது, பாண்டி. தரையில் ஆறு அல்லது எட்டு கட்டங்கள் போட்டு, கையில் சதுர வடிவக்கல் ஒன்றை வைத்துக்கொள்வார்கள். ஆட்டம் தொடங்கியதும், அந்தக் கல்லை கட்டங்களைத் தாண்டி வீசிவிட்டு, ஒரு காலைத் தூக்கி, இன்னொரு காலை மட்டும் தரையில்வைத்து ஒவ்வொரு கட்டமாகத் தாண்டுவார்கள். அப்போது, ஒவ்வொரு கட்டத்தின் நான்கு திசைகளிலுமுள்ள எல்லைக்கோடுகளைக் காலால் மிதிக்காதபடி கவனமாகத் தாண்டி, கடைசியில் தாங்கள் ஆரம்பத்தில் தூக்கி எறிந்த கல்லை மிதித்து ஒரு சுற்றை நிறைவு செய்வார்கள். வயிறு மற்றும் இடுப்புப் பகுதிகளை கவனமாக பேலன்ஸ் செய்து விளையாடவேண்டியிருக்கும். 
கண்ணாமூச்சி... கண்களை மூடியபடி மற்றவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டின் மூலம் நம் குழந்தைகளுக்கு பொறுமையும் அறிவாற்றலும் பெருகும். கில்லியில் மரத்தால் ஆன ஒரு பெரிய குச்சியையும் ஒரு சிறிய குச்சியையும் வைத்து விளையாடுவார்கள். பெரிய குச்சியை வைத்து, சிறிய குச்சியை யார் கையிலும் சிக்கிவிடாமல் கவனமாக அடிக்க வேண்டும். பிறகு, சிறிய குச்சி சென்று சேருமிடத்திலிருந்து, குழி இருக்கும் இடம்வரை பெரிய கம்பால் அளந்துவர வேண்டும். இதன் மூலம் தசை வளர்ச்சியும் கணித அறிவும் மேம்படும்.

ஒரு கோலிக்குண்டை வைத்து, மற்றொன்றைக் குறிபார்த்து அடிக்கும்போது நம் உடலிலுள்ள சிறிய தசைகள் வலுவடையும். பார்வை, உற்றுநோக்கும் அறிவு மேம்படும். பெண்கள் தட்டாங்கல்லில் ஒரு கல்லை மேலே தூக்கிப் போட்டு, அந்தக் கல் கீழே வருவதற்குள் தரையில் மீதமிருக்கும் கற்களைக் கையால் வழித்து, மொத்தமாகப் பிடிப்பார்கள். இதன் மூலம் கை தசை வளர்ச்சி, பார்வைக் கூர்மை, கண், கை ஒருங்கிணைவு போன்ற பல விஷயங்கள் மேம்படும். பல்லாங்குழியில், எந்தக் குழியிலிருந்து காய்களை எடுத்து விளையாடினால் வெற்றி பெற முடியும் என்ற கணக்கு இருக்கிறது. இதன் மூலம் கணித அறிவு மேம்படும்.  
`ஊதுமுத்து’ என்ற புளிய விதைகளை வைத்து ஆடும் ஆட்டத்தில் வாயால் ஊதி ஒவ்வொரு விதையாக, ஒன்றுடன் மற்ற விதைகள் படாமல் லாகவமாக எடுக்க வேண்டும். இதனால் தசை வளர்ச்சி, அறிவாற்றல் மேம்படும். தாயக்கட்டையில் ஒன்று (தாயம்) போட்டால்தான் ஆட்டத்தையே தொடங்க முடியும். இதனால் குழந்தைகளுக்கு பொறுமை, விடாமுயற்சி போன்ற குணங்கள் வந்துவிடும். பெரியவர்களானாலும் இந்த குணம் அவர்களைவிட்டு விலகாது. பரமபதம், வாழ்வில் வெற்றி, தோல்விகளைச் சமாளித்து எப்படி இலக்கை அடைய வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கும்.

சேர்ந்து விளையாடுவதன் மூலம் மற்றவர்களைப் புரிந்துகொள்ளும் குணம், விட்டுக் கொடுக்கும் குணம் இயல்பாகவே குழந்தைகளுக்கு வந்துவிடும். ஓர் இலக்கின் மீது லட்சியத்தின் மீது எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்ற அக்கறை வந்துவிடும். ஒரு பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்ற திட்டமிடுதல் தெரியும். கோபம் போன்ற கெட்ட குணங்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும்.

மொபைல் விளையாட்டுகளில் தோல்வியோ, வெற்றியோ விளையாடுபவருக்கு மட்டுமே தெரியும். ஆனால், மற்றவர்களுடன் இணைந்து விளையாடும்போது தோல்வியடைந்தால், பிறருக்கு முன்பாக அதை ஒப்புக்கொண்டாக வேண்டும். சிறு வயதிலேயே ஒப்புக்கொள்ளப் பழகிவிட்டால், பெரியவர்களானாலும் மற்றவர்களின் மீது பொறாமையோ, காழ்ப்புணர்ச்சியோ, வஞ்சமோ ஏற்படாது. பாரம்பர்ய விளையாட்டுகள், நம் குழந்தைகளை மிகச் சிறந்த மனிதர்களாக  சமுதாயத்துக்கு அடையாளப்படுத்தும். கிரிக்கெட்டில் ஒரு சச்சினாகவோ, செஸ்ஸில் விஸ்வநாத் ஆனந்தாகவோ வருவதற்குக்கூட அவை உதவிபுரியும்’’ என்கிறார் கணேஷ்குமார்.

இரா.செந்தில் குமார் - படங்கள்: க.பாலாஜி

உளவியல் உண்மைகள்!

பெ
ற்றோர்கள், பிள்ளைகள் தாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமென்றால், அவா்கள் தவறைத் திருத்த வேண்டுமென்றால், `நீ செஞ்சது தப்பு’, `நீ ஏன் இப்படி சோம்பேறியா இருக்கே’ போன்ற சுட்டிக்காட்டும் `நீ’ வார்த்தையை விலக்கிவிட்டு `நான்’ வார்த்தையைப் பிரயோகிக்க வேண்டும். பிள்ளை வீட்டுக்கு தாமதமாக வந்தால், `தினமும் நீ லேட்டா வர்றதை நெனைச்சு நான் கவலைப்படுறேம்ப்பா’ என்று உங்கள் உணா்வுகளை வெளிப்படுத்தினால், அவர்கள் தவறை உணா்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

உளவியல் உண்மைகள்!

ங்களை யாருக்காவது பிடிக்கவில்லை என்றால், அதே நேரம் அவரிடம் நல்லுறவு வைத்துக்கொள்வது முக்கியமென்றால் அவ்வப்போது அவரைப் பார்த்து புன்னகை செய்யுங்கள். சிறு சிறு பாராட்டுகளை (உண்மையான) தெரிவியுங்கள். சின்ன உதவிகளைச் செய்யுங்கள். பிறகு பாருங்கள் மாற்றத்தை! 

No comments:

Post a Comment