Wednesday, January 29, 2020

நல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில் thanks to vikatan.com


நல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில்!

மருத்துவம் 14 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
சிறு நெருஞ்சி
சிறு நெருஞ்சி
நெருஞ்சில் வகைகளில் சிறு நெருஞ்சி அல்லது நல்ல நெருஞ்சில், பெருநெருஞ்சில் அல்லது யானை நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் அல்லது செம்பொன் நெருஞ்சில் என மூன்று வகைகள் உள்ளன.
நல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில்!
சிறு நெருஞ்சில்
மழைக்காலங்களில் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் மிகவும் வேகமாக முளைத்து, தரையோடு தரையாகக் கொடியாகப் படர்ந்து காணப்படும். இதில் பூக்கும் மஞ்சள் நிறப் பூக்கள், சூரியனை நோக்கித் திரும்பும் தன்மையுடையவை. பூக்கள் முட்கள் நிறைந்த காயாக மாறும். மிகவும் பலம் வாய்ந்த யானைகூட இதன் முட்களை மிதித்துவிட்டால் உடலை வளைத்து வணங்கும். அதனால் இதை ‘ஆனை வணங்கி’ என்றும் அழைப்பார்கள். இதன் கொடி, காய், விதை அனைத்துமே மருத்துவப் பயனுடையவை. மழைக்காலம் முடிந்து கோடை வெயில் ஏறத் தொடங்கியதும், முதலில் காயத் தொடங்குவது நெருஞ்சில்தான். எனவே, முள்ளுடன்கூடிய காய், கொடியோடு மொத்தமாகச் சேகரித்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்வது நல்லது. பொதுவாக நெருஞ்சில் சமூலம் (சமூலம் என்பது முழுத் தாவரம்) சிறுநீரைப் பெருக்கும் மருந்துகளிலும், நெருஞ்சில் வித்து ஆண்மை பெருக்கும் மருந்துகளிலும் அதிகமாகச் சேர்க்கப்படுகின்றன.
நெருஞ்சில் கஞ்சி
வேர், காயுடன்கூடிய நெருஞ்சிக் கொடியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் அரிசி, தண்ணீர் சேர்த்து சோறு பொங்கி, கஞ்சியை மட்டும் வடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது நாட்டுவெல்லம் கலந்து குடித்துவர, சிறுநீர் நன்கு தாராளமாகப் பிரியும். இந்தப் பக்குவத்தைச் சிறுநீர்க்கட்டு உடையவர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.
கல்லடைப்பு குடிநீர்
நெருஞ்சி சமூலம், சிறுகண்பீளை வேர், பேராமுட்டி வேர், வெள்ளரி விதை, மாவிலங்கப்பட்டை ஆகியவற்றைச் சம எடையாக எடுத்து, ஒன்றிரண்டாகப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
30 கிராம் பொடியுடன், ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி, கால் லிட்டராக வற்றவைக்க வேண்டும். அதை 50 மி.லி எடுத்து, நாள் ஒன்றுக்கு ஐந்து வேளை குடித்துவர, எப்படிப்பட்ட கல்லடைப்பும் குணமாகும். இது தேரையர் நூல்களில் எழுதப்பட்டிருக்கும் அரிய மருத்துவ முறை.
சர்க்கரைநோயால் ஏற்படும் முதல் பாதிப்பு ஆண்மைக்குறைவு. இதற்கு நெருஞ்சில் சமூலம் சேர்த்த குடிநீர்தான் சிறந்த மருந்து. இந்தத் தாவரத்தை ‘இயற்கையின் அற்புதம்’ என்று சொல்லலாம்.
நெருஞ்சில் பருப்புக்கறி
நெருஞ்சில் இளம் கொழுந்து இலைகளை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். அதை வேகவைத்த துவரம்பருப்புடன் கூட்டி, துவட்டலாக வதக்க வேண்டும். அதை உணவுடன் சேர்த்து உண்டுவந்தால் நீர்க்கடுப்பு, வீக்கம் ஆகியவை நீங்கி நீர் நன்றாகப் பிரியும். பச்சை நெருஞ்சில் சாறு 30 மி.லி எடுத்து அதனுடன் மோர் கலந்து குடித்துவர, சிறுநீரில் ரத்தம் போவது குணமாகும். பிறகு ரத்தம் போவதற்கான காரணங்களை அறிந்துகொண்டு அதற்கான மருத்துவத்தை எடுக்க வேண்டும்.
சிறு நெருஞ்சி
சிறு நெருஞ்சி
நெருஞ்சில் சமூலம், கீழாநெல்லி சமூலம் இரண்டையும் பச்சையாக அரைத்து, 3 முதல் 5 கிராம் அளவு எடுத்து எருமைத் தயிருடன் கலந்து காலை, மாலை உண்டுவர வெள்ளைப்படுதல், சிறுநீர்ப்பாதை எரிச்சல், நீரடைப்பு ஆகியவை குணமாகும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து உட்கொண்டுவர வேண்டும். பாதாம், பிஸ்தா முதலிய வெளிநாட்டுப் பருப்பினங்களை மட்டும் உண்டு வந்தால் ஆண்மை பெருகும் என்ற ஒரு தவறான கருத்து நிலவிவருகிறது.
நமது நாட்டு நெருஞ்சில் வித்து ஆண்மையைப் பெருக்கும் தன்மையில் மிகவும் சிறந்தது. வெளிநாட்டுப் பருப்புகளில் புரதத்துடன் சேர்த்து சிறிது கொழுப்பு எண்ணெய்களும் இருப்பதால், அவை உடலில் கொழுப்பைக் கூட்டும். ஆனால், நெருஞ்சில் வித்தில் கொழுப்பு என்பதே கிடையாது. இந்த வித்தைப் பாலில் வேகவைத்து, உலர்த்தி, இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் பசும்பாலில் 2 டீஸ்பூன் அளவு கலந்து சாப்பிட்டுவர விந்து பெருகும்; ஆண்மை நீடிக்கும். இதே விதைப் பொடியுடன் முருங்கைப்பூ சேர்த்து உண்டுவர மேலும் நல்ல பலன் கிடைக்கும். நெருஞ்சில் விதைப் பொடியை இளநீரில் போட்டுக் குடித்துவர நீர்க்கட்டு குணமாகும்.
யானை நெருஞ்சில்
யானை நெருஞ்சில்
இன்றைக்கு `புரஸ்தகோள வீக்கம்’ (Prostapis) என்ற நோயால் முதியவர்களில் அதிகம் பேர் துன்பப்படுகிறார்கள். இதைச் ‘சொட்டு மூத்திரம்’ எனச் சித்த மருத்துவம் பதிவுசெய்து வைத்திருக்கிறது. இந்தச் சொட்டு மூத்திரத்துக்கு நெருஞ்சில் முள் அதிகமாகச் சேர்க்கிற ’சந்திரகாந்தி சூரணம்’ என்ற மருந்து மிகவும் நல்ல பலனைத் தரும். சர்க்கரைநோயால் மனித உடலில் ஏற்படும் முதல் பாதிப்பு ஆண்மைக்குறைவு. இதற்கு நெருஞ்சில் சமூலம் சேர்த்த குடிநீர் சிறந்த மருந்தாகக் கூறப்படுகிறது. பொதுவாக, ஆண்மைக்குறைவுக்குச் சித்த மருத்துவத்தில் நிறைய லேகியங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் வெல்லம், தேன், நெய் ஆகியவை அதிகமாகச் சேர்க்கப்படுவதால் அவற்றைச் சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்க முடியாது.
ஆண்மைக்குறைவுக்குச் சித்த மருத்துவத்தில் நிறைய லேகியங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் வெல்லம், தேன், நெய் அதிகமாகச் சேர்க்கப்படுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்க முடியாது.
யானை நெருஞ்சில்
இதுவும் மழைக் காலங்களில் எல்லா இடங்களிலும் முளைக்கும் தாவரம். நன்கு நீர்வளமான இடங்களில் ஓரடி வரைகூட வளரும். கொத்துக் கொத்தாக வளரும் இந்தத் தாவரத்தில் மஞ்சள் நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கி எள்ளுக்காய்களைப்போலக் காய்கள் உருவாகி, அவையே முதிரும்போது நிறைய விதைகள் வைக்கும்.
செப்பு நெருஞ்சில்
செப்பு நெருஞ்சில்
தண்ணீர் எண்ணெயாக மாறும் இயற்கை விந்தை!
இந்தத் தாவரத்தை ‘இயற்கையின் அற்புதம்’ என்று சொல்லலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் அல்லது நீராகாரம் எடுத்துக்கொண்டு அதனுள் ஒரு யானை நெருஞ்சில் முழுச்செடியை சிறிது நேரம் மூழ்கவைத்து, நன்கு குலுக்கி எடுத்துப் பார்த்தால் முழுத் தண்ணீரும் எண்ணெய்போலக் கொழகொழப்பாக மாறிவிடும். இந்தத் தண்ணீர் அல்லது நீராகாரத்தைக் காலையில் குடித்துவர நீரெரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவை குணமாகும். முழுச் செடியையும் அப்படியே அரைத்து, ஒரு சிறு எலுமிச்சை அளவு எடுத்து, தயிர் அல்லது மோரில் கலந்து உண்டுவர நீர்க்கடுப்பு, உடம்பெரிச்சல் முதலியவை குணமாகும். சிறுநெருஞ்சில் விதைகளைப் பாலில் அவித்து சூரணமாக்கி உண்பதுபோல இதன் விதைகளையும் உண்டுவர விந்தணுக்கள் பெருகி மலடு நீங்கும்.
செப்பு நெருஞ்சில்
சிறுநெருஞ்சில்போலவே தரையோடு படர்ந்து வளரும் ஒரு கொடியினம். இது இளஞ்சிவப்பு மலர்களை உடையது. புல்வெளிகளில் அதிகமாகக் காணப்படும். இதை ‘செம்பொன் நெருஞ்சில்’ என்றும் சில நூல்கள் கூறுகின்றன. பெண் மலட்டைக் குணமாக்கும் ‘கர்ப்ப சஞ்சீவி எண்ணெய்’ தயாரிப்பில் இதன் சாறு சேர்க்கப்படுகிறது. இதைப் பச்சையாகச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 50 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி, 250 மி.லியாக வற்ற வைத்து வடிகட்ட வேண்டும். இதைக் குடித்து வர சிறுநீர் நன்கு பிரியும். மேகச்சூடு நீங்கி உடல் பலம் பெறும்.
அடுத்த இதழில்... கோவை, கொல்லன்கோவை, அப்பக்கோவை குறித்துப் பார்ப்போம்.
மூலிகை பெயர் தாவரவியல் பெயர்
சிறு நெருஞ்சில் - Tribulus terrestris
பெரு நெருஞ்சில் - Pedalium murex
செப்பு நெருஞ்சில் - Indigofera enneaphylla

No comments:

Post a Comment