Saturday, January 11, 2020

'தை பிறந்தால், வழி பிறக்கும் தங்கமே தங்கம். thanks to dinamalar.com

'தை பிறந்தால், வழி பிறக்கும் தங்கமே தங்கம்...'
மார்கழி மாதத்தில், வாசலில் கோலம் போட்டு, மாட்டு சாணத்தில், பிள்ளையார் வைக்கும் பழக்கம், கிராமங்களில், இன்னமும் பல வீடுகளில் நீடித்து வருகிறது.
மார்கழிக்கு அடுத்து, தை பிறப்பதால், இந்த மாதத்தில் தான், திருமணங்கள் நிச்சயிக்கப்படும். ஒரு வீட்டில், திருமண வயதில், பெண்ணோ, பையனோ இருக்கின்றனரா, இல்லையா என்று தெரிந்து கொள்ள, நம் முன்னோர், மிக எளிய முறையை கடைப்பிடித்தனர்.
வீட்டு வாசலில், சாணி பிள்ளையாரில், அருகம்புல் வைத்திருந்தால், அந்த வீட்டில், திருமணமாகாத இளைஞர் இருக்கிறார் என்று பொருள். சாணி பிள்ளையாரின் தலையில், பூசணி பூ வைத்திருந்தால், திருமணமாகாத இளம் பெண் உள்ளதாக பொருள்.
அருகம்புல்லும், பூசணி பூவும் இணைந்து வைத்திருந்தால், அந்த வீட்டில், திருமணத்திற்கு, மணமகனும் - மணமகளும் இருக்கின்றனர் என்று பொருள்.
வெறும் சாணி பிள்ளையார் மட்டும் வைத்திருந்தால், அந்த வீட்டில், திருமணத்திற்கு காத்திருப்போர் யாரும் இல்லை என்று அர்த்தம்.
காலையில், அந்த வீட்டை கடந்து செல்வோர், வாசல் கோலத்தில், சாணி பிள்ளையார் தலையில் இருக்கும் பூவை வைத்தே, திருமண பேச்சு பேசலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வர்.
இப்படி, மார்கழி மாதத்திலேயே தயாராகி விட்டால், அடுத்து வரும், தை மாதத்தில், திருமணம் முடிவு செய்ய, உதவியாக இருக்கும். அதனால் தான், கிராமங்களில், 'தை பிறந்தால் வழி பிறக்கும்' எனும், பழமொழி உருவானது.
-சங்கமித்ரா நாகராஜன், கோவை.

No comments:

Post a Comment