Friday, January 3, 2020

ஐங்குறு நூறு - இனிது மன்ற அவர் கிடக்கை

ஐங்குறு நூறு - இனிது மன்ற அவர் கிடக்கை 


என்ன எப்பப் பார்த்தாலும், தேவாரம், திருவாசகம், திருக்குறள் என்று ஒரு பக்தி, ஒழுக்கம், அறம் என்று தமிழ் இலக்கியம் என்றால் இவ்வளவுதானா என்று சிலர் நினைக்கலாம்.

இல்லை. தமிழ் இலக்கியம் மனித உறவின் நுணுக்கங்களை, அதன் சிக்கல்களை, அதன் நெளிவு சுளிவுகளை, யதார்த்தத்தை அப்படியே படம் பிடிக்கிறது.

அது ஒரு சிறிய வீடு. கணவன், மனைவி அவர்களின் சிறிய மகன் மூவர் மட்டும் இருக்கிறார்கள். ஒரே ஒரு படுக்கை அறை தான்.

ஒரு நாள் இரவு, கணவனும் மனைவியும் சற்று இன்பமாக இருக்கலாம் என்று நினைத்து ஆவலோடு படுக்கை அறையில் நுழைகிறார்கள். அவர்கள் படுத்ததுதான் தாமதம், எங்கிருந்தோ அந்த பையன் ஓடி வந்து அவர்கள் இருவருக்கும் நடுவில் படுத்துக் கொள்கிறான்.  அவள் , அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே பிள்ளையின் தலை கோதி இருப்பாள்.

அவர்கள் தவிப்பு அவனுக்கு எங்கே தெரிகிறது.


இருந்தும், அவர்களுக்கு பிள்ளை மேல் கோபம் இல்லை. சந்தோஷமாக அவனை கட்டி அணைத்துக் கொண்டு உறங்கிப் போனார்கள்.

அது எப்படி இருக்கிறது என்றால், மான் ஜோடிகளுக்கு நடுவில் படுத்துக் கிடக்கும் மான் குட்டியைப் போல இருக்கிறதாம்.

இல்லறத்தின் நுணுக்கமான உணர்வுகளை விளக்கும் பாடல்.

பாடல்

"மறி இடைப் படுத்த மான் பிணை போலப்
புதல்வன் நடுவணனாக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி
நீல் நிற வியல் அகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே"


பொருள்

"மறி  = மான் குட்டி

இடைப் படுத்த = இடையில் படுத்து இருந்த

மான் பிணை  = ஜோடி மான்களைப்

போலப் = போல

புதல்வன் = மகன்

நடுவணனாக = நடுவில் இருக்க

நன்றும் = நல்லது

இனிது  மன்ற =  இனிது என்று

அவர் கிடக்கை = அவர்கள் (கணவனும் மனைவியும்) படுத்துக் கிடந்தது

முனிவு இன்றி = கோபம் இன்றி

நீல் நிற வியல் = நீல நிறம் கொண்ட ஆகாயத்தின் கீழ்

அகம் = உள்ள உலகம்

கவைஇய = சூழ்ந்து உள்ள

ஈனும் = இன்றும் , இங்கும்

உம்பரும் = தேவர்களும் , மறு உலகிலும்

பெறலரும் = பெறுவதற்கு அரிதான

குரைத்தே" = உரைத்தல், சொல்லுதல்

அருகில், அன்பான மனைவி (/கணவன்) , பிள்ளை இவர்களை கட்டிக் கொண்டு கிடப்பது எவ்வளவு சுகம்  என்கிறது பாடல்.

இங்கு மட்டும் அல்ல, ஸ்வர்கத்திலும் இது போன்ற சுகம் கிடைக்காது என்கிறது பாடல்.

உண்மைதானே ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_26.html

Saturday, August 24, 2019

ஐங்குறுநூறு - புகுந்த வீட்டு பெருமை

ஐங்குறுநூறு - புகுந்த  வீட்டு பெருமை 


பிறந்த வீட்டு பெருமை பேசாத பெண் யார் இருக்கிறார்கள். ஒன்றும் இல்லாவிட்டாலும், "எங்க வீட்டுல ...." என்று ஆரம்பித்தால் எளிதில் முடிக்க மாட்டார்கள்.

என்ன செய்வது ? எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்த பெண், பெருமையையாவது பேசி விட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான்.

ஐங்குறுநூறு இதை வேறு ஒரு கோணத்தில் காட்டுகிறது.

ஒரு பெண். திருமணம் ஆகி, கணவன் வீட்டுக்குப் போய் சிறிது நாள் இருந்து விட்டு பின் தாய் வீட்டுக்கு வருகிறாள்.

அம்மாவுக்குத் தெரியும் , அங்கே ஒண்ணும் பெரிய சிறப்பு கிடையாது என்று. ஏதோ காதல், கத்தரிக்காய் என்று இந்தப் பெண் திருமணம் முடித்து போய் விட்டாள்.

தாய் கேட்டிருப்பாள் போல இருக்கு , "உன் புருஷன் வீடெல்லாம் எப்படி இருக்கு" னு.

அவளுக்கு கணவன் வீட்டை வீட்டுக் கொடுக்க முடியவில்லை. ஆனால், அது ஏழ்மையான வீடு என்ற உண்மையையும் மறைக்க முடியவில்லை.

அந்தப் பெண் சொல்கிறாள்

"அவங்க வீட்டு கொல்லை பக்கத்துல குப்பை கூளம் நிறைந்த தோட்டம் ஒன்று இருக்கிறது. சரியாக பராமரிக்காமல் விட்ட தோட்டம்தான். அதில் உள்ள குழியில் கொஞ்சம் நீர் தேங்கி இருக்கிறது. அது கலங்கிய நீர். சேரும் சகதியுமாக இருக்கும். அந்த நீரை மான்கள் பருகும். அந்த நீரானது, நம் வீட்டு தோட்டத்தில் நீ தரும் தேன் கலந்த பாலை விட சிறந்தது" என்கிறாள்.

பாடல்


அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைத் 
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு 
உவலை கூவல் கீழ 
மான் உண்டு எஞ்சிய கழிலிநீரே 

பொருள்

அன்னாய்  = அன்புத் தோழியே (தோழியிடம் சொல்வது போல அமைந்த பாடல்)

வாழி வேண்டு = நீ நீண்ட நாள் வாழ வேண்டுகிறேன்

அன்னை = நம் அன்னை

நம் படப்பைத் = நம் தோட்டத்தில்

தேன்மயங்கு = தேன் கலந்து தரும்

பாலினும் = பாலை விட

இனிய = இனிமையானது

அவர் = அவர் (என் கணவர்)

நாட்டு  = நாட்டில் (அவரது வீட்டில்)

உவலை = சருகுகள்

கூவல் = நீர் கட்டிக் கிடக்கும் குழி

கீழ = அதில்

மான் உண்டு எஞ்சிய கழிலிநீரே  = மான் உண்டது போக மிஞ்சிய கலங்கிய நீர்

 இங்க தேனும் பாலும் இருக்கு. ஆனால், அவளுக்கு கணவன் இருக்கும் இடம்தான் பெரிதாகத் தெரிகிறது.

மான் எல்லாம் வந்து தண்ணி குடிக்கும் என்றால், அவ்வளவு அன்பும் அரவணைப்பும் அங்கே   இருக்கிறது என்று அர்த்தம்.

செல்வம் அல்ல மகிழ்ச்சியைத் தருவது, அன்பும் அரவணைப்புமே இன்பம் தரும்.

எங்கோ இருந்து வந்த மான்கள் பயம் இல்லாமல் அவங்க வீட்டு தோட்டத்தில்  நீர்  குடிக்கும் என்றால், எனக்கு அங்கு ஒரு பயமும், கவலையும் இல்லை என்று  சொல்ல வருகிறாள்.

கணவனின் அன்பு  மட்டும் இருந்துவிட்டால் போதும், ஒரு பெண் எந்த இடத்திலும்  இனிமையாக குடும்பம் நடத்துவாள் என்பது செய்தி.

பிறந்த வீடு பெருமை பேசி, புகுந்த வீட்டை மட்டம் தட்டும் பெண்களுக்கு இது ஒரு  பாடம்.

அந்தக் காலத்தில் நம் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று காட்டும் பாடல் இது.

முடிகிறதோ இல்லையோ, எப்படி எல்லாம் வாழ்ந்தார்கள் என்று தெரிந்து கொள்வதில்  ஒன்றும் தவறில்லையே.....

https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post_24.html

Wednesday, March 26, 2014

ஐங்குறுநூறு - பைங்கிளி எடுத்த பைங்கிளி

ஐங்குறுநூறு - பைங்கிளி எடுத்த பைங்கிளி 



மகளுக்கும் தாய்க்கும் இடையில் காதலன்.

மகள் தாயை மறந்து காதலன் பின் சென்று விட்டாள்.

தலைவி, தலைவனோடு சென்று விட்டாள் .

தாய் கிடந்து தவிக்கிறாள்.  எல்லா இடத்திலும் தேடிவிட்டாள் . எங்கும் காணவில்லை.

என்னை விட்டு போய் விட்டாளா என்று கலங்குகிறாள்.

தன் மகள் உபயோகப் படுத்திய பொருள்கள் எல்லாம் ஒவ்வொன்றாகப் பார்க்கிறாள். ஒவ்வொன்றும், அந்தத் தாய்க்கு தன் மகளை நினைவு படுத்துகிறது.

வருவோர் , போவோர் எல்லோரையும் பார்த்து கண் கலங்குகிறாள்....என் மகளைப் பார்த்தீர்களா, என் மகளை பார்த்தீர்களா என்று கேட்டு பரிதவிக்கிறாள்.

அந்தத் தாயின்  பரிதவிப்பை, வீட்டை விட்டுப் போன மகளின் பிரிவை இந்தப் பாடல் பதிவு  செய்கிறது.

பாடல்


இதுவென் பாவை பாவை யிதுவென் 
   அலமரு நோக்கி னலம்வரு சுடர்நுதற் 
   பைங்கிளி யெடுத்த பைங்கிளி யென்றிவை 
   காண்டொறுங் காண்டொறுங் கலங்க 
   நீங்கின ளோவென் பூங்க ணோளே.

No comments:

Post a Comment