Sunday, July 2, 2017


உயிர்மெய் - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பாக்ஸ் ஆபீஸ் திரைப்படம் `மௌன ராகம்.’ ``கையை முதல்ல எடுக்கிறீங்களா, ப்ளீஸ்... நீங்க தொட்டா, கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு’’ என அந்தப் படத்தில் ரேவதி, மோகனிடம் மனசு முழுக்க வலியையும், முகம் முழுக்க வெறுப்பையும் சுமந்துகொண்டு சொல்லும் ஒரு காட்சி வரும். மோகனுக்கு மட்டுமல்ல, திரைப்படம் பார்த்த அத்தனை பேருக்கும் அந்தக் காட்சி வலியை ஏற்படுத்தியது. `சே... காதல்ல தோற்றுப்போன ரேவதி பாவமா அல்லது காதலை வெளிப்படுத்த இயலாத மோகன் பாவமா?’ எனப் பல நாள்கள் அந்த வலி மனதில் இருந்துகொண்டே இருந்தது; படமும் அந்த வலியைக் கவிதையாகச் சொன்னவிதத்தில் பல நாள்கள் ஓடியது. ஆனால், இன்று ஆசை ஆசையாகத் திருமணம் செய்த பலருக்குள்ளும் துரதிர்ஷ்டவசமாக மனதிலோ, உடம்பிலோ இப்படியான கம்பளிப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக நிறைய ஊர்ந்துகொண்டிருக்கின்றன.
``அப்படி ஒண்ணும் பயலாஜிக்கல் பேபி எனக்கு வேணும்னு அவசியமில்லை டாக்டர். அதுல எந்தச் சிலிர்ப்பும் எனக்கு இல்லை. Surrogation-க்கு ஆகும் செலவை நினைச்சுத்தான் ஏதாவது ட்ரீட்மென்ட்ல முடியுமான்னு பார்க்க வந்திருக்கேன்’’ எனப் பேசிய நவீன பெண்ணொருத்தியைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறேன். பிறிதொரு நாளில்... ``பல் தேய்ச்சு, காபி குடிக்கிற மாதிரிதான் `அதுவும்’ இருக்கு சார். எனக்கு அதுல எந்த வித ஈர்ப்பும் சிலிர்ப்பும் சில காலமாக இல்லை. என்னன்னு தெரியலை. பட் ஐ’ம் ஸ்டில் இன் லவ் வித் ஹெர்’’ என்று சொன்ன ஒரு மடிக்கணினி மகராசனிடம் கொஞ்சம் கோபத்துடன் பேசியிருக்கிறேன். இரண்டு பேரும் `மௌன ராகம்’ ரேவதி - மோகன் மாதிரி பிரச்னையோடு வாழ்வைத் தொடங்கியவர்கள் இல்லை. வழியவழியக் காதல் பருகி, திருமணம் செய்து கொண்டவர்கள். இப்போது, கம்பளிப்பூச்சிகளைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து தத்தம் பர்முடாஸுக்குள்ளும் பட்டியாலாவுக்குள்ளும் போட்டுக்கொண்டவர்கள். ஏதேதோ காரணங்களால், குழந்தைப்பேறு தள்ளிப் போனவர்கள். ஆனால், `எதனால் தாமதம், என்ன பிரச்னை, எதை மறந்தோம்?’ என எந்தச் சிந்தனையும் சோதனையும் செய்யாமல், `இதுல என்னப்பா பரவசம் இருக்கு?’ என போலிச் சித்தாந்தம் பேசத் தொடங்கியதற்கு எது காரணம்? படிப்பா, பகுத்தறிவா, பன்னாட்டுப்பழக்கமா அல்லது எப்போதும் விரட்டும் மன அழுத்தமா? தெரியாது.

திருமணத்துக்குப் பின்னர் பல ஆண்டுகள் குழந்தைப்பேறு தள்ளிப் போவதாலும், அத்தோடு, அரக்கப்பரக்கவோ, முறையான கவனத்துடன் சிகிச்சையில்லாமல் போனதாலோ அல்லது சிகிச்சை பலனளிக்காமல் போனதாலோ, திருமணமாகி சில ஆண்டுகளிலேயே பலருக்கு உடலுறவின் மீதான ஈர்ப்பு குறைகிறது.

``ஒவ்வொரு தடவை சிகிச்சைக்குப் போகும்போதும், `பதினஞ்சாம் தேதி நீங்க கட்டாயம் பண்ணியாகணும்’னு சொல்றது வெறுப்பைத் தருது சார். என்னமோ `லாகின் செய்த மூணாவது நிமிடத்தில், நீங்க சரியா பாஸ்வேர்டு போடணும்; மூணு தடவை தப்பா பாஸ்வேர்டு போட்டா சிஸ்டம் மூடிக்கொள்ளும்’னு எங்க கம்பெனியில சொல்ற மாதிரி இருக்குது சார்’’ என்று ஒரு பெண் வருத்தப்பட்டதுண்டு. ``மத்த நாளில் வரும் காதலும் காமச் சுரப்பும்கூட அந்த நாள்ல வர்றது இல்லை சார். பரீட்சைக்கான தேதி நெருங்க நெருங்கப் படிச்சதெல்லாம் மறந்து போகும்ல, அது மாதிரி ஆகிடுது. பல சாமிகளைக் கும்பிட்டுட்டுவந்து பக்திப் பரவசமாகக் காத்திருக்கும் அவளைப் பார்க்குறப்போ, `சாமி’ படத்துல வரும் உக்கிரமான கடைசி சீன்தான் ஓடிவந்து மனசுல உட்காருது. மூளையில பல்பு எரியறதுக்குப் பதிலா மொத்தமா ஃபியூஸ் பிடுங்கின மாதிரி இருக்கு டாக்டர்” என்று சொல்லும் கணவனின் வார்த்தைகளில் வலி அதிகம். `` `குழந்தை பெத்துக்கிறதுக்கு, மாத்திரைகளைவிட மனசு முக்கியம். கொஞ்சம் கவித்துவமா காதல் பண்ணுங்க பாஸ். அது எவ்ளோ முக்கியம் தெரியுமா’னு  நீங்க சொல்ல வர்றதெல்லாம் நல்லாவே புரியுது. ஆனா, ஒரு சின்னப் பிரச்னை. கனவில் பார்த்த நாயகி மேலேயோ, கண்ணில் தென்படும் அழகிகள்கிட்டயோ உருவாகும் இந்த ஈர்ப்பு, மனைவிகிட்ட மட்டும் மிஸ் ஆகுதே ஏன்?’’ என்கிற கூட்டமும் இப்போது அதிகம். ஏன்? கொஞ்சம் உளவியல் சிக்கலும், நிறைய வாழ்வியல் சிக்கல்களும்தான் காரணம்.

காமம் என்பது, உடலுறுப்புகள் ஒன்றாகி நடத்தும் உயிரணு உமிழ்தல் அல்ல. சில மணி நேரமாவது கிளர்ச்சி தரும் நிகழ்வுகள் நடத்தும் உச்சத்தில் மலர்தல். மலர்தல் மறந்து போய், ஓவர் டைமில் உமிழ்வதில்தான் அதிகப் பலன் என ஆகிப்போனதில்தான் இப்படியான சிலிர்ப்பும் ஈர்ப்பும் இடம்பெயர்கின்றன. கடைசியாக எப்போது மனைவியை அரவணைத்தீர்கள்? கட்டிலில் அல்லாமல், கடைசியாக அவள் கரம் பற்றியது எப்போது? எல்லாம் நிகழ்ந்து களைத்த பின்னர், தடாலென எழுந்துபோய் மெயில் வந்திருக்கிறதா என ஐபோனை நோண்டாமல், உங்கள் மூச்சுக்காற்றை  நிதானமாக அவள் செவிக்குள் செலுத்தியது எப்போது?  ``அதெல்லாம் அந்த நேரத்து சமாசாரம். இதைப்போய் வெட்கமில்லாமல் கேட்கிறீர்களே? அதுவும் ஜாயின்ட் ஃபேமிலியாக அப்பா, அம்மா, மற்றவர்கள் உடன் இருக்கும்போது ஹாலில் கட்டிப்பிடிப்பது அசிங்கமாக இருக்காதா?’’ எனக் கேட்கும் கணவன்-மனைவியிடையே யதேச்சையாக மட்டுமே குழந்தைப்பேறு நிகழ்கிறது.

கரம் பற்றிக் கொடைக்கானல் மலையில்தான் நடந்து செல்ல வேண்டும் என்பதில்லை. காய்கறி வாங்கும்போதும்கூட நெருக்கடியான வீதியில், கரம் பற்றிப் போகலாம். ``அட! இன்றைக்கு என்ன அப்படி ஒரு அழகு?’’ எனக் கண்கள் வியந்து, அம்மாவோ அப்பாவோ பார்க்கும்போதும்கூட, கொஞ்சமும் கூச்சப்படாமல்,  மெல்லிய அரவணைப்போடு முத்தம் கொடுக்கலாம். இவை அத்தனையும் இன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. சின்ன வயது முதல் நாம் தொலைத்த தொடு உணர்ச்சிதான் இதற்கு மிக முக்கியக் காரணம்.

நம்மிடையே பண்பாட்டு ரீதியாகவே தொடுதல், அநேகமாக அசிங்கமாகவும் அநாகரிகமாகவும் ஆக்கப்பட்டுவிட்டது. `வெப்ப நாடுகளில் அரவணைப்பு வியர்வையைத்தான் தரும். குளிர் பிரதேசத்தில் அரவணைப்பு வெம்மையைத் தரும். அதனால்தான், நம் பண்பாட்டில் அரவணைப்புகள் அவ்வளவாக இல்லை. அவர்களுக்கு, அங்கு அது அவசியம்’ எனச் சொல்வோரும் உண்டு. இது மட்டும் அல்லாமல், நம் சமூகத்தின் மொத்தக் கூட்டமும் `அரவணைத்தல் என்பது, விளக்கை அணைத்த பின்னர் இருட்டில் நடக்கும் காம விளையாட்டின் முன் முகாந்திரச் செயல் மட்டுமே’ எனவும் போதித்துவிட்டுப் போய்விட்டது.

சமீபத்தில், வெளிநாட்டில் வகுப்புத் தோழன் ஒருவன் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, வரவேற்பறையில் அவனும் அவன் மனைவியும் இறுக அணைத்து முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் அழகிய போட்டோ ஒன்று இருந்தது. ``மச்சான்! எப்படா இதை எடுத்தே?’’ என  நான் கேட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியப் புத்தியில் ``யாருடா இதை எடுத்தது?’’ எனக் கேட்டுவிட்டேன். ``என் பொண்ணுதான்’’ என்றான். ``ஏன்டா உனக்கு வெட்கமா இல்லையா? வளர்ந்த பொண்ணு முன்னாடி போய்...’’ எனக் கேட்டதற்கு, ``எவன்டா அப்படிச் சொன்னான்? எங்கள் அன்பின் உச்சம்டா அது! அந்த உணர்வை என் மகள் உணர்வது அற்புதமான வாழ்வியல் பாடம். இன்னும் நம்ம ஊரு மாறவேயில்லேல்ல?’’ எனக் கேட்டான்.

ஆம். நாம் இன்னும் மாறவில்லை. `கண்கள் சொல்லாததை, வார்த்தைகள் தெரிவிக்காததை, சின்னத் தொடுதல் தெரிவிக்கும்’ என ஆழமாக ஆய்ந்து உளவியல் மருத்துவம் உரக்கச் சொல்கிறது. செல்லமாக முதுகைத் தட்டுதல், வாஞ்சையாக முதுகைத் தடவிக்கொடுத்தல், கணவனின் மார்பில் சாய்ந்துகொண்டு, விரல்களால் அவன் நெஞ்சைத் தன் நீண்ட விரலால் மெலிதாக வருடி விலகுதல், மனைவியின் காதில் தொங்கும் அழகிய அணிகலனைத் தொட்டுப் பார்த்து, `அட!’ என வியக்கும்விதமாக அவள் காதின் மடலை நொடிப்பொழுது அநாயாசமாகத் தடவி நகர்தல், என ஒவ்வொரு தொடுதலும் கடத்தும் செய்திகள் ஏராளம். அவை ஒவ்வொன்றும் `நானிருக்கேன்டா’ எனச் சொல்லும், `நீ மட்டும்தான்டா’ என அழும் வார்த்தைகள் இல்லாத `அங்க இலக்கியங்கள்.’

கிழக்கு ஐரோப்பாவில் ஒருமுறை ஒரு நீண்ட ரயில் பயணம் செய்துகொண்டிருந்தேன். வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த சக பயணிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தபோது கண்ணில் தென்பட்டன பலவகையான தீண்டல்கள். விரசமில்லாமல் காதலும் பாசமும், அன்பும் நேசமும் கொப்பளிக்கும் தீண்டல்கள் யாருடைய கவனிப்புக்கும் ஆளாகாமல் ஒவ்வோர் இருக்கையிலும் நிகழ்ந்துகொண்டே இருந்தன. ஸ்ட்ரோலரில் உடகார்ந்திருந்த ஆஸ்திரியக் குழந்தை, அவள் அம்மாவின் கைகளைப் பற்றியபடி, தன் ஊதா நிறக் கருவிழியை விரித்தபடி, ஜன்னலில் கடந்து செல்லும் ஆல்ப்ஸ் மலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தது. அந்தப் பிஞ்சுக் குழந்தையின் கைகளைத் தாயின் கரங்கள் பற்றியிருக்க, அந்தக் குழந்தையின் விரல்கள் அடிக்கடி தன் அன்னையின் உள்ளங்கையை உரசியபடி, தான் பத்திரமாக இருப்பதை உறுதிசெய்துகொண்டே இருந்தது.

இன்னொரு பக்கம் தன் அப்பாவின் கழுத்தைச் சூழ்ந்து, கைகளைப் போட்டிருந்த நீள மூக்குள்ள  பிரெஞ்ச் மகளொருத்தி, அடிக்கடி அவருக்கு முத்தமொன்றும் கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. அநேகமாக 50 வயதைக் கடந்திருந்த அந்த வெள்ளைக்காரர், தன் மடியில் இருந்த கிண்டிலில் புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டே மகள் கொடுத்த ஒவ்வொரு முத்தத்துக்கும் பதில் முத்தத்தையும், போனஸாகப் புன்னகையையும் கொடுத்துக்கொண்டே இருந்தார்.  

சில முத்தப் பரிமாறல்கள், சில முடி கோதல்கள், சில கரம் பற்றல்கள், சில மெல்லிய, சின்ன அழுத்தமும்கூட தராத அரவணைப்புகள், சில இறுக்கமாக அழுத்திய, காமத்துக்குக் காத்திருக்கும் ஏக்கங்கள்... என அநேகமாக எல்லாப் பக்கமும் அந்தத் தொடர் வண்டியில், தொடர் தொடுதல்களைப் பார்த்துக்கொண்டே இருக்க முடிந்தது. வண்டிக்குள் எங்கேயும், `ஏண்டி! வத்தக்குழம்புக்கு சரியா வெந்தயம் போட்டியா நீ?’ என்றோ அல்லது `மச்சான் டேய்... அநேகமா இரண்டு `சி’-க்கு முடியும்போல இருக்குடா. முடிஞ்சுட்டுதுனு வையீ... தலைக்கு நாலு லட்சம்’ எனச் சத்தமாக அலைபேசியில் அட்டூழியக் கதறல்களோ கேட்கவில்லை. சிலர் மௌனமாகப் புத்தகங்களோடு; சிலர் அன்பாக, காதலாகப் பயணித்துக்கொண்டிருந்தனர்.
பிள்ளைகளுக்கு `குட் டச், பேட் டச்’ - யார் அன்பில் தொடுகிறார்கள்... எது கெட்ட எண்ணத்தில் தொடுவது என்பதைக் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற உந்துதல் இப்போது மிகப் பரவலாக எழுந்துள்ளது. அது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு ஆணோ, பெண்ணோ அன்பையும் ஆதரவையும் நேசத்தையும் சொல்லும்விதமான தொடுதலையும் நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். தொடுதல் மிக முக்கியமான ஓர் உணர்வைச் சொல்லும் ஊடகம் என்பதையும் குழந்தைப் பருவத்தில் இருந்தே உணர்த்தியாக வேண்டும்.

`நலமா, போய் வருகிறேன், அழகன்டா நீ, ஒண்ணும் ஆகாதுப்பா...’ எனும் ஏராளமான பொருளைச் சொல்லும் இதமான அரவணைப்பு தினம் தினம் வீட்டில் நிகழ வேண்டும். எந்த உடற்பயிற்சி செய்தாலும் போகாத ஒன்று, இந்த விரலில் சொடக்கு எடுத்தல். `ஏன்தான் இப்படிச் சொடக்கு அடிக்கடி வருது?’ எனச் சலித்துக்கொள்வோருக்கு ஒரு சின்னக் கைப்பக்குவம். உங்கள் கணவரோ அல்லது மனைவியோ சொடக்கு எடுக்கட்டும். மூட்டு நோகாமல், நொடிப்பொழுதில் எடுக்கும் சொடக்கில், மூளைக்குள் எண்டார்பின்கள் சுரக்கும். மனதுக்குள் செரடோனின்கள் பீய்ச்சும். வேறென்ன..? தொட்டுப் பழகுவோம். அன்று தொட்டால் தொடரும். இன்று தொட்டால் மட்டுமே எல்லாமே தொடரும்!

- பிறப்போம்.

ரவணைப்புகள் ஆனந்தம் மட்டும் தருவதில்லை. ஆரோக்கியமும் தருகின்றனவாம். மன உளைச்சலில் உள்ள ஒரு நபரைத் தினம் ஒருமுறை ஆற்றுப்படுத்தும்விதமாக அரவணைப்பது மெள்ள மெள்ள அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும். இன்று இந்தியாவில், பத்தில் மூன்று பேர் மன அழுத்தத்தில் இருப்பதாக மருத்துவ உலகம் சொல்கிறது. கருத்தரிப்புக்காகக் காத்திருக்கும் பல பெண்களும் மன அழுத்தத்தில்தான் இருக்கிறார்கள். `14-ம் நாள் கட்டிப்பிடிக்கணும். 15-ம் நாள் கிளையன்ட் மீட்டிங். 16-ல் வெச்சுக்கலாமா?’ என  போர்டு மீட்டிங்குக்கு காலண்டரில் நாள் குறிப்பதுபோல் காதலுக்கு நாள் குறிக்காமல், தினமும் ஒருமுறை மெள்ள அரவணையுங்கள். யார் கண்டார்? அது மன அழுத்தம் குறைப்பதைத் தாண்டி, வேறு பல `நல்ல’ விஷயங்களையும் நடத்தலாம். பென்சில்வேனியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று ஓர் ஆய்வில் இறங்கியது. சளி பிடித்திருக்கும் ஒருவரை அவரது மூளையில் பல்பு எரிய வைக்கும் ஒருவர் கட்டிப் பிடிப்பதால், அவருக்கு  காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு 35 சதவிகிதம் குறைகிறதாம். என்ன ஆனது அந்த வைரஸுக்கு என ஆராய்ந்து பார்த்ததில், உற்சாகத்தோடு, நோய் எதிர்ப்பாற்றல் எக்கச்சக்கமாகக் கூடிப்போனதில், வைரஸுக்கு வெட்கம் வந்து விலகியதைப் பதிவிட்டிருக்கிறார்கள். ஆதலினால் கட்டிப்பிடியுங்கள்

No comments:

Post a Comment