Tuesday, November 13, 2018

ஆபத்துக்குள் குதிக்க அனுமதிக்காதீர்கள்! thanks to vikatan.com

ஆபத்துக்குள் குதிக்க அனுமதிக்காதீர்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி
ண் குழந்தைகள் பருவமடைவது பற்றி, சென்ற இரு இதழ்களில் பேசிய மனநல மருத்துவர் ஷாலினி, இந்த இதழில் அந்தக் குழந்தைகள் தொடர்பாகக் கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார்...  
விழிப்பு உணர்வு  தேவை!

``பருவமடைதல் என்பது உடல் சார்ந்த ஓர் ஆரோக்கிய வளர்ச்சி; சந்தோஷமான நிகழ்வும்கூட. பெண் குழந்தைகள் பூப்படைந்தால் ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்ற பெயரில் அதைக் கொண்டாடுகிறோம். ஆனால், ஆண்கள் பருவமடைதல் பற்றி இதுவரை வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. இது அந்தக் குழந்தைகளுக்கு நாம் செய்யும் புறக்கணிப்பு. ‘பெண்கள் பருவமடைதலையே கொண்டாட வேண்டியது இல்லை’ என்றொரு கருத்து இப்போது வைக்கப்படுகிறது. அந்தச் சடங்கை, பெண்களுக்கு அதுபற்றிய விழிப்பு உணர்வைத் தரும் விழாவாகப் பார்த்திருக்கிறார்கள் நம் முன்னோர். வயதுக்கு வந்த பெண்ணிடம் பாட்டி, அம்மா, அத்தை, சித்தி, அக்கா என ஒவ்வொருவரும் கேலியாகவும் அனுபவங்களாகவும் அறிவுரைகளாகவும் மாதவிடாய் நாள்கள் பற்றிய தகவல்களைச் சொல்வார்கள். இப்படி ஒரு வெளிப்படையான இன்டராக்‌ஷன் ஆண் பிள்ளைகளுக்குக் கிடைப்பதில்லையே? எனவே, ஆண் பருவமடைதல் பற்றிப் பொதுத் தளங்களில் விழிப்பு உணர்வு நோக்கில் தொடர்ச்சியாக வெளிப்படையாகப் பேசவேண்டியதும், அந்தத் தருணத்தில் அவர்களை வாழ்த்தும்விதமாக சுற்றத்தினர் நடந்துகொள்வதும் நல்ல மாற்றமாக இருக்கும். ‘இது இயல்பான மாற்றம். இதில் உன் தவறு எதுவும் இல்லை. நீ ஆரோக்கியமாக இருக்கிறாய் என்று உன் உடல் உனக்குத் தரும் சான்றிதழாக அமைவதே இந்தப் பருவம்’ என்று அவர்களுக்கு உணர்த்தினால்தான், அவர்கள் தங்களின் சுயமரியாதையைச் சந்தேகிக்காமல் இருப்பார்கள். ஆம், நாம் ஆண் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம்.

ஸ்மால் டோஸ்களாக பேச வேண்டும்!

அம்மாவோ, அப்பாவோ சிங்கிள் பேரன்ட்டாக தன் ஆண்பிள்ளையை வளர்ப்பதில் சிக்கலான விஷயமென்று எதுவுமில்லை. குறிப்பாக, அம்மாக்கள் இதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை. குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி வகுப்புகள் எடுக்கிறவர்கள் பெரும் பாலும் பெண்களாகவே இருக்கிறோம். யார் கற்றுத்தருகிறார் என்பது குழந்தை மனதுக்கு ஒரு பொருட்டல்ல. அதை அவர்களுக்குப் புரிகிற மொழியில், அவர்களை சங்கோஜப்படுத்தாத, அவமானப்படுத்தாத அணுகுமுறையில் கற்றுத்தருகிறோமா, எளிமையாகச் சொல்லித்தருகிறோமா என்றுதான் குழந்தைகள் பார்ப்பார்கள். ஆண் குழந்தைகள் பருவமடைந்த நாளிலேயே அனைத்து விஷயங்களையும் அவர்களிடம் பேசிவிட வேண்டும் என்பதில்லை. அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. வயதுக்கு வருவதற்கு முன்பும் பின்பும் ஸ்மால் டோஸ்களாக அவர்களிடம் பேச வேண்டும்.

வீட்டுக்குள் போட்டி

போட்டிமனப்பான்மை என்பது ஆண்களின் இயல்பு. பருவமடைதல் விஷயத்தில், ஒருவரின் மீது ஒருவர் பொறாமை, கோபம் கொள்ள வைக்கலாம். ஒரு வீட்டில் ஓர் ஆண் குழந்தை வயதுக்கு வந்துவிட்டால், அந்த வீட்டில் இருக்கும் அவன் அண்ணனோ, சில நேரங்களில் அப்பாவோ கூட, ‘என்ன நீ பெரிய ஆம்பளை ஆகிட்டியா?’ என அந்தக் குழந்தையிடம் போட்டி மனப்பான்மையுடன் நடந்துகொள்ளலாம். அவனை எதிரியாக நடத்தும் அளவுக்கு இந்த மனப்பான்மை சிக்கலை வளர்க்கும். ஆண் மிருகங் களுக்கிடையே ஆதிக்கம் செலுத்து வதில் நடக்கும் போராட்டத்தின் மனித வெர்ஷன் இது. எனவே, இப்படி ஒரு பிரச்னை தலைதூக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அம்மாக்கள் உணர்ந்து, தன் வீட்டு ஆண்களுக்கு இடையில் இந்தப் போட்டியைத் தவிர்ப் பதில் கவனம்கொடுக்க வேண்டும். அப்பா, மகன்கள் என அனைவருக்கு இடையிலும் அமைதியான சூழல் நிலவ, அந்த வீட்டுப் பெண்கள் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும். ஒருவரையொருவர் மட்டம்தட்டிப் பேசுவது, ஒருவரோடு ஒருவர் மல்லுக்கு நிற்பது போன்ற சூழல்களைத் தவிர்க்கச்செய்ய வேண்டும். 
பெண் பருவமடைதலைப் பற்றிச் சொல்லலாம்!

பருவமடையும் ஆண்களிடம், ‘பெண்ணுடலிலும் இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்கின்றன’ என்பதையும் சொல்ல வேண்டும். ஆணும் பெண்ணும் எதற்காகப் படைக்கப்பட்டார்கள் என்பதையும் இருபாலினரிடமும் பேச வேண்டும். இயற்கையின் இப்படி ஓர் உடலியல் அமைப்பை வைத்திருக்கிறது என்ற முழு வரையறையும் புரிந்தால்தான், இதில் தன்னுடைய பங்கு என்ன, தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, மேம்படுத்திக் கொள்வது எப்படி போன்ற விஷயங்கள் அவர்களுக்குப் புரியவரும்.

ஆண்களுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுத்தருவது பெண்களின் மீதான ஈர்ப்புக்கோ, பெண்ணுடல் மீதான வேட்கைக்கோ வழிவகுக்கும் என்று நினைப்பதற்கு அவசியமில்லை. ஒரு விஷயத்தை மூடிவைக்கும்போதுதான் அதைப் பற்றி மனம் தீவிரமாக யோசிக்கும். அதையே அறிவியல் ரீதியாக விளக்கிச் சொல்லும்போது, அந்த விழிப்பு உணர்வு அவன் ஆரோக்கிய மனநிலையுடன் கூடிய ஆணாக வளர வழிநடத்தும். பருவமடையும் வயதில் ஆண்களுக்கு ஏற்படும் காதல் உணர்வும், அந்தக் காதலும் இயல்பானது. ‘திருமணம் செய்யும் வயதில் ஒரு பெண்ணின் மீது காதல் மட்டுமல்லாது, இவளை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பும் வரும். அப்போது பேசிக்கொள்ளலாம்’ என்று பக்குவமாகச் சொல்லிவைக்க வேண்டும். அப்போது, காதல் உணர்வைத் தாண்டி, தான் நேசிக்கும் பெண்ணுக்காக வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணமும் அந்த ஆணுக்கு ஏற்படும்.

ரிஸ்க் டேக்கர்ஸ்!

ஆண் குழந்தைகளைப் பொறுத்தவரையில் ஓர் ஆபத்து என்னவென்றால், அவர்கள் ரிஸ்க் டேக்கர்ஸ். என்ன, ஏதென்று யோசிக்காமல் விபரீதத்துக்குள், ஆபத்துக்குள் குதித்துவிடுவார்கள். எனவே, அவர்கள் வேகத்துக்கான கடிவாளத்தை அவ்வப்போது போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். குருகுல காலத்தில் அதற்கான பிரத்யேகப் பயிற்சிகள் கிடைத்தன. இன்றோ, அகடெமிக் தேவைகள் பெருகிவிட்டன. படிப்பை முடிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. எனவே, பெற்றோர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்... அல்லது ஆண் குழந்தைகளுக்கென ஓரியன்டேஷன் ட்ரெயினிங் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

நட்பு வட்டத்தில் பாலியல் குறித்த உரையாடல்கள்  இயல்பானதே!


பருவமடைகிற வயதில், ஆண் குழந்தைகளுக்குள் பாலியல் குறித்த உரையாடல்கள் முளைக்கலாம். ஒரு வகுப்பில் ஒரு பெண் பருவமடைந்தால், அனைத்துப் பெண்களும் அதைப் பற்றிப் பேசுவதுபோல இதுவும் இயல்பானதே. ஆனால், இன்றைய டெக்னாலஜி யுகத்தில் இன்டர்நெட், யூடியூப்  வாயிலாக தவறான பாலியல் தகவல்களைத் தேடுவதிலிருந்து அவர்களைக் கண்காணிக்க வேண்டியதும் பெற்றோரின் கடமையே. அதேபோல, ஆண் குழந்தைகளுக்கும் குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுத்து, அவர்களை எச்சரிக்கை உணர்வுடன் வளர்த்தெடுப்பதும் முக்கியம்.” 

No comments:

Post a Comment