Friday, December 22, 2017

ஏழு வகை ஸ்நானம் , குளியல் முறைகள்


ஏழு வகை ஸ்நானம் , குளியல் முறைகள் (Post No.4490)

by Tamil and Vedas
Written by  London Swaminathan 

Date: 13 DECEMBER 2017 

Time uploaded in London-  18-17


Post No. 4490
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.


குளியல் போடுவது எப்படி? ஸ்நானம் செய்வது எப்படி? இந்து மதத்தில் ஏழு வகை ஸ்நானங்கள் சொல்லப் பட்டுள்ளன. அவையாவன:

ஏழு வகைகளின் விவரம்:
1.வாருண ஸ்நானம்
ஜலத்தில் அமிழ்ந்து தலை முழுகுவது. ஆற்றிலோ, குளத்திலோ, குழாயடியிலோ, கிணற்றடியிலோ தலையில் தண்ணீர் விட்டுக் கொண்டு செய்யும் குளியல் இது.

2.பார்த்திவ ஸ்நானம்:
‘ம்ருத்திகே ஹநமே பாபம்’ என்று தொடங்கும் மந்திரத்தால் தேஹம் முழுதும் சுத்தமான மண்ணைப் பூசிக்கொள்வது; அதாவது மண் குளியல். மேல் நாட்டிலும் கூட MUD BATH ‘மட் பாத்’ பிரசித்தம்.

3.ஆக்நேயம்:
அக்னிஹோத்ர பஸ்மத்தை ஈசாநம் முதலிய மந்திரங்களால் தேஹத்தில் பூசுவது (அதாவது திரு நீற்றுக் குளியல்)

4.வாயவ்யம்:
பசுக்களின் குளம்பு தூள்களை கோ ஸாவித்ரியால் ஜபித்து உடலில் பூசிக்கொள்வது; அதாவது பசுத் தூசி குளியல்; பசு நிற்கும் இடமும் அதன் கால் தூசும் அவ்வளவு புனிதமானது.
5.திவ்ய ஸ்நானம்
உத்தராயண மத்யத்தில் வெயிலுடன் கூட மழை பெய்யும்போது அதில் நனைவது திவ்ய ஸ்நானம் என்று அழைக்கப்படும்.

6.மந்த்ர ஸ்நானம்
பிராமணர்கள் தினமும் மூன்று காலங்களில் செய்யும் ஸந்தியாவந்தனத்தில் வரும் ‘ஆபோஹிஸ்டா’ என்ற மந்திரத்தைச் சொல்லி, மந்த்ரத்தின் ஒவ்வொரு பாதத்தால் கால், தலை, மார்பு, தலை, மார்பு, கால்,  மார்பு, கால், தலை என்ற வரிசையில் தீர்த்தத்தை ப்ரோக்ஷித்துக் கொள்ளவேண்டும். அதாவது இந்த மந்திரங்களால் உடலின் பாகங்களில் நீரைத் தெளித்துக்  கொள்ள  வேண்டும்

  1. மாநஸம்
சங்கு சக்ர தாரியாய் சூர்ய மண்டல மத்தியத்தில் தங்க நிறத்தில் பகவான் எழுந்தருளி இருப்பதாகவும் அவர் திருவடி பெரு விரலில் இருந்து கங்கை நதி ப்ரவாஹம் எடுத்து, ப்ரஹ்மரந்த்ரத்தின் வழியாக நம் தேஹத்தில் விழுவதாகவும், அதனால் உள்ளும் புறமும் உள்ள மலம் (அழுக்கு) யாவும் கழிந்து விட்டதாகவும் தியானம் செய்வதே மாநஸம்.

இவை தவிர இரண்டு கால்களையும் கைகளையும் முகத்தையும் அலம்புவது பஞ்சாங்க ஸ்நானம் ஆகும்
ஈரத்துணியால் உடம்பு முழுவதையும் துடைத்துக் கொள்வது காபில ஸ்நானம் எனப்படும்
நெற்றிக்கும் உடலின் மற்ற பாகங்களுக்கும் விபூதி அல்லது திருமண் தரிப்பதும் ஒருவகை ஸ்நானம் ஆகும் உடலின் 12 இடங்களில் இந்த அடையாளக் குறி இடுவர்.
நெற்றிக்குத் திலகம் , பொட்டு, திருமண், திருநீறு  இல்லாமல் ஈரத் துணியுடன் செய்வது வேறு காரியங்களாகும்; அதாவது சுப காரியங்கள் அல்ல.
யாரும் ஈரத்துணியுடன் நல்ல காரியங்களைச் செய்யக் கூடாது. குளித்துவிட்டு உலர்ந்த வஸ்த்ரத்தை தரித்துக்கொண்டு (காய்ந்த ஆடையை உடுத்திக்கொண்டு) ஜப, தபங்கள் (தப= தவ) செய்யலாம்.அவரவர் ஆசாரப்படியோ சம்ப்ரதாயப்படியோ நெற்றிக்குத் திலகமிட்டுக்கொண்டு செய்ய வேண்டும்.

(காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொன்ன ஐந்து வகை ஸ்நானங்களையும் படிக்கவும்)

TAGS:-- ஸ்நான வகைகள், குளியல் முறைகள், ஏழு
--Subham--

No comments:

Post a Comment