Sunday, December 17, 2017

அசவுகரியங்களுக்குப் பழகுவோம்! thanks to dinamalar.com

Advertisement

பதிவு செய்த நாள்

19நவ
2017 
00:00
நம்மை அறியாமல், நாம் சுகவாசிகளாக ஆகிவிட்டோம். சொந்த வாகனமோ, வாடகை வாகனமோ மண்டப வாயிலில், 90 டிகிரி கோணத்தில் இறங்க நினைக்கிறோமே தவிர, 100 அடி முன், 100 அடி பின், நம் வாகனம் நின்றால், 'மண்டபம் அங்க இருக்கு; இப்படி, 1 கி.மீ., துாரம் முன்னாடியே நிறுத்தினா எப்படி...' என்று, ஓட்டுனரிடம் முகம் சுளிக்கிறோம்.
மண்டபத்தில் ஒரு மாடி கூடுதலாக ஏறிய பின் தான், சாப்பாட்டு அரங்கு என்றால், மண்டப உரிமையாளர், மனத்தளவில் நன்கு வசவு வாங்கிக் கொள்கிறார்... 
'இன்னய்யா மண்டபம் கட்டியிருக்கானுங்க... அந்த மண்டபத்தில் எப்படி தெரியுமா... சம தளத்தில், அடுத்த பகுதியில சாப்பாடு; எவ்வளவு சவுகர்யம்...' என்கிறோம்.
மனைவியை பார்த்து, 'ஏண்டி, இப்படிப் பண்றே... பை, பொணம் கனம் கனக்குது... இப்படி ஊருக்கு ஊர் கண்டதையும் துாக்கி உயிரை வாங்குறே...' என்கிறார் கணவர்.
'நம்மூர் கத்திரிக்காய் ருசி மாதிரி வராதுடி... என்ன ருசி...' என்று சாப்பாட்டு மேசையில் விமர்சித்தவர் தான், இப்படி திட்டுகிறார். 
எல்லாவற்றிற்கும் மிஷின் வந்துவிட்ட இக்காலத்தில், மக்கள் சவுகர்யத்திற்கு பழகி விட்டபடியால் அலுங்காமல், குலுங்காமல் வாழ்க்கையை ஓட்டவே விரும்புகின்றனர்.
ஒருநாள், 'ஏசி' ஓடவில்லை என்றால், 'தாட் பூட்' என்று குதிக்கின்றனர்.
'என்ன எழவு பிடிச்ச வீடு இது... எங்கடா வச்சிங்க, 'டிவி' ரிமோட்டை...' என்று குதிக்கின்றனர். எழுந்து, பட்டனைத் தொட்டு, சேனல் மாற்ற சோம்பேறித்தனம்!
ஒருமுறை, சக ரயில் பயணி ஒருவர், அந்த பகுதியே அதிரும்படி, 'அறிவு இருக்கா... எவண்டா உன்னை மேல் பர்த்தை, 'புக்' பண்ணச் சொன்னது... இப்ப, எப்படி மேல ஏறுவேன்... அறிவு கெட்டவனே...' என்று கத்தினார்.
இவருக்கு மேலே ஏறிப் படுக்கக் கூடிய வயதுதான்; ஆனால், சோம்பல். இவர் எடுத்த கடைசி நிமிட பயண முடிவிற்கு, டிக்கெட் கிடைத்ததே பெரிய விஷயம் என்று வந்தவன் மறுமொழி கூறிய பிறகே அடங்கினார், மனிதர். 
எந்த அசவுகரியத்திற்கும் பழகிக்கொள்ளாத நம் போக்கு, நம் மனத் துன்பங்களை வளர்க்குமே தவிர, குறையப் போவது இல்லை.
லாட்டரிச் சீட்டு விற்ற காலத்தில், விளம்பரத்தில், 'விழுந்தால் வீட்டிற்கு; விழாவிட்டால் நாட்டிற்கு' என்று ஒரு வாசகம் காணப்படும். அதுபோன்று, சவுகர்யமாக ஒன்று அமைந்தால் நல்லது; அசவுகர்யம் என்றால், அது உடலுக்கு நல்லது; சமயங்களில், பர்சிற்கும் நல்லது.
சோம்பேறித்தனத்திற்கு பழகிவிட்ட நம் உடலை, அசவுகர்யங்களுக்கும் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.
அவசியம் ஏற்பட்டு விட்டது என்றால், அதிக எடையை துாக்க முன் வரத்தான் வேண்டும். மின்சாரம் இல்லாவிட்டாலும், குளிர் சாதனம் பழுதடைந்தாலும், மின் விசிறி ஓடாவிட்டாலும், நாம் வியர்வையில் குளிக்க தயாராக இருக்க வேண்டும்.
பற்கள், 32 என்கிறோம்... இப்போதெல்லாம் இளைய தலைமுறையினருக்குப் பெரும்பாலும், 30 பற்கள் தான்; மீதம் உள்ள கடைவாய் பற்கள் இரண்டும் முளைக்க இடமில்லாமல், வெளிவரத் தெரியாமல் அமுங்கி விடுகின்றன.
ஆதி மனிதன் பச்சை மாமிசம் உண்டான்; அதனால், அவனுக்கு, 32 பற்கள், இயற்கையால் தரப்பட்டன. இன்று, நன்றாக வெந்த மாமிசம் உண்பதால், இரண்டு பற்களை தராமல் நிறுத்தி விட்டது, இயற்கை.
ஆம்... நாம், சவுகர்யங்களுக்கே பழகிக் கொண்டிருந்தால், எப்போதாவது தலை துாக்குகிற அசவுகர்யம் கூட, தாங்க முடியாத ஒன்றாக ஆகிவிடும்.
பொருளாதாரக் கஷ்டம்; கடமைகளின் கடினத் தன்மை; நெடிய பயணங்கள்; பிடிக்காத பருவநிலை; பிடிக்காத உணவு என, எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
எனவே, அவ்வப்போது அசவுகர்யங்களுக்குப் பழகி, அவற்றை கடந்து வர, உடல் மற்றும் மனதை பக்குவப்படுத்த வேண்டும்.

லேனா தமிழ்வாணன்

No comments:

Post a Comment