Sunday, December 17, 2017

சொற்களால் மதிப்பிழக்கும் செயல்கள்! thanks to dinamalar.com

என் நண்பர்கள் இருவர், தத்தம் குடும்பத்தில் மூத்தவர்கள். இருவருமே, தங்களின் உடன்பிறப்புகளுக்காக செய்த செயல்கள், மேற்கொண்ட தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!
குடும்பத்தில் மூத்தவர்களாகப் பிறந்தவர்கள் மீது, இளையவர்கள் கூறும் குற்றச்சாட்டு, 'ரொம்ப அதிகாரம் செய்வார்; அகங்காரமாக நடக்கிறார். அனைத்தையும் தனக்கே வைச்சுக்கிட்டார். மற்றவர்கள் முன் கேவலமாகப் பேசுவார். நாம் சொல்வது எதையும் காதில் வாங்க மாட்டார்...' என்றெல்லாம், அடுக்கடுக்கான மனக்குறைகளை வெளிப்படுத்துவர்.
ஆனால், நான் குறிப்பிடும் இருவரும் அப்படிப்பட்டவர்கள் அல்லர்; நொடித்துப் போன தம்பியைக் கை துாக்கி விடுவதற்காக, சொந்த சவுகரியங்களை கூட விட்டுக் கொடுத்தவர்; ஒரு தம்பியின் நோய்ச் சிகிச்சைக்காக, குடும்பத்தின் பொது சொத்தின் ஒரு பகுதியை விற்று, வைத்தியம் பார்த்தார். 
மற்றவரின் தியாகமோ இன்னும் பெரிது. தம் இரு தங்கைகளின் திருமணத்திற்குப் பின், வயது போய்விட்ட காலத்தில் தான், அவர் திருமணம் செய்தார்.
அத்துடன், தன் கணவருடன் கருத்து வேறுபாடு கொண்டு தாய் வீடு வந்து விட்ட, தன் தங்கையையும், அவளது மகளின் கல்வி முதற்கொண்டு அனைத்து செலவுகளையும் செய்து, ஆதரித்து வருபவர்.
இப்பேர்ப்பட்ட தியாக அண்ணன்களுக்கு, தங்கள் உடன்பிறப்புகள் மத்தியில், எவ்வளவு உயர்வான மதிப்பும், மரியாதையும் இருந்திருக்க வேண்டும்... இருக்கின்றதா? இல்லை!
ஏன்... அவ்வப்போது தாம் செய்த செயல்களை, சொல்லிக் காட்டியவாறு இருப்பவர்கள், இந்த இருவரும்!
'எவன் தாலியை அறுத்து (?) உன் பொண்ணைப் படிக்க வச்சிக்கிட்டிருக்கேன் தெரியும்ல...' என்று, வார்த்தைகளால் வறுத்தெடுப்பதுடன், 'நீங்கள்லாம் செத்துத் தொலைஞ்சா தான் எனக்கு நிம்மதி...' என்பார்.
''நீ போய்த் தொலைச்சிட்டு வந்ததற்கு, குடும்பச் சொத்தையே அழிக்கிறாப்புல செய்துட்டியே...' என்பார், தம் தம்பியைப் பார்த்து, மற்றொருவர்.
நாம் பிறருக்காக என்ன தியாகங்களைச் செய்திருந்தாலும், எப்பேர்ப்பட்ட மறக்க முடியாத உதவிகளை வழங்கியிருந்தாலும், அவற்றை சொல்லிக்காட்டும்போது, நாம் பெற்ற மதிப்பெண்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விடுகின்றன.
இப்படி பொறுமையிழந்து பேசுவோருக்கு ஒரு சில வார்த்தைகள்...
'நான் உனக்கு ஏதாச்சும் கெடுதல் நினைச்சிருப்பேனா... நீ நல்லாயிருக் கணும்ன்னு நினைக்கிறவங்கள்ல நானும் ஒருத்தன். நான், உனக்கு ஏதாவது நன்மை செஞ்சிருந்தேன்னா அதை மட்டும் நெனைச்சுக்கோ. நான் செஞ்ச எதுவுமே உனக்கு சரின்னு படலைன்னாப் பரவாயில்ல; விட்டுடு. உனக்கு அதையெல்லாம் நினைவுபடுத்தினா, நான், உனக்கு செஞ்ச செயலுக்கு மதிப்பு இல்லாமப் போயிடும்...' என்கிற பாணியில், ஒரு கோடு போட்டுக் கொண்டே செல்லலாம்.
ஆனால், ஒன்று... இதைக் கூடச் சொல்லத்தான் வேண்டுமா என்று நன்கு யோசித்துக் கொள்ளுங்கள்.
காரணம், நாம் சொல்ல நினைத்ததை, சொல்லிக் காட்ட, என்றேனும் ஒருவர் வருவார்; அவர், நம் சார்பாக நிச்சயம் பேசுவார். 
'இது என்ன... அநீதி நடக்கும்போது கடவுள் அவதாரம் எடுப்பார் என்று சொல்வது போல் இருக்கிறதே...' என்று கேட்கிறீர்களா... 
நிச்சயம், உரியவர்களது மனசாட்சி ஒரு நாள் சாட்டையடிகளை அவர்களுக்குக் கொடுக்கும்; நாம் செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்கும் காலம் வரும். அது வரை, காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை!

லேனா தமிழ்வாணன்

No comments:

Post a Comment