Sunday, December 31, 2017

பசியின்மைக்கு தீர்வு thanks to dinamalar .com

t
சொல்கிறார்கள்
சாப்பிடும் முன்நீராகாரங்களைதவிர்க்கலாம்!

பசியின்மைக்கு தீர்வு கூறும், ஊட்டச்சத்து நிபுணர், வாணி: அதிகம் பசிப்பது பிரச்னைக்குரியது போல், பசியே இல்லாதது அதை விடவும் பெரிய பிரச்னை. உடல், மன நல மாற்றங்களால் பசியின்மை ஏற்படுகிறது.
ஒரு வாரத்துக்கும் மேல் பசியின்மை தொடர்ந்தால், அது நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கக்கூடும். மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
உணவில் மசாலாப் பொருட்களை அதிகம் சேர்த்தால் பசி உண்டாகும். உதாரணமாக, லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி, பூண்டு போன்றவை, உடலின் இயக்கம் மற்றும் வளர்சிதை மாற்றங்களுக்கு வழி வகுக்கும்.
பொதுவாக, உணவு செரிமானமாக, உடலிலிருந்து அதிக உழைப்பை எதிர்பார்க்கும். உடல் சக்திக்கான தேவை அதிகரிக்கும்போது, பசி உணர்வு துாண்டப்படும். அப்போது, கொஞ்சம் கொஞ்சமாக உணவு உட்கொண்டால், பசி உணர்வு அதிகரிக்கும்.
உணவு இடைவேளையின்போது, ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்லது. ஆனால், அவற்றை ஒரே நேரத்தில் சாப்பிடாமல், கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடலாம். அதிக கலோரி கொண்ட சீஸ், முட்டை, டார்க் சாக்லேட், நட்ஸ் சாப்பிடுவது, உடல் செயல்பாட்டுக்கும், ஆரோக்கியத்துக்கும் உதவும்.
மோர், பழைய சாதம், கஞ்சி, சூப் போன்றவை, பசி உணர்வை அதிகப்படுத்துவதுடன், உடல் வளர்ச்சியை சீராக்கும். தினமும் உடற்பயிற்சி செய்வதால், உடலில் உள்ள கலோரிகள் முழுமையாக குறையும். அப்போது, பசி அதிகரிக்கும்.
மன அழுத்தமும், மன இறுக்கமும் பசியின்மைக்கான முக்கிய காரணங்கள். நாம் செய்ய வேண்டிய வேலைகளை எழுதி வைத்து, அட்டவணைப்படுத்தி செய்தால், இறுக்கமான சூழலில் இருந்து விடுபடலாம். மேலும், ஆழ்ந்து யோசனை, தேவையற்ற குழப்பங்களை தவிர்ப்பதும், பசியின்மையில் இருந்து விடுபட உதவும்.
சரியான நேரத்திற்கு சாப்பிடுவதும், பசியின்மை பிரச்னையைப் போக்கி, உடலை சீர்படுத்தும். சாப்பிடும் முன் நீராகாரங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை வயிற்றை நிறைத்து, பசியைக் குறைத்துவிடும். இதனால், தேவையான அளவு கலோரிகள் கிடைக்காமல் போகும்.
கெட்ட கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை, ஒருபோதும் சாப்பிடக் கூடாது. ஸ்நாக்ஸ் சாப்பிடும் பெரும்பாலானோர், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளையே சாப்பிடுகின்றனர்.
இது வயிறு மந்தமாக வழி வகுக்கும். ஆகவே, நல்ல கொழுப்பு நிறைந்த வாழைப்பழம், சீஸ், ஆப்பிள், தயிர் சாப்பிடலாம்.
துத்தநாகம், தயாமின் போன்றவை குறைந்திருந்தால், பசி உணர்வும் குறையும். மனதுக்குப் பிடித்த, கெட்ட கொழுப்புச்சத்து இல்லாத உணவை நேரத்துக்கு சாப்பிட வேண்டும். சரியான நேரத்தில் சரியான உணவை, திருப்தியுடன் சாப்பிடுவதால், இறுக்கமான சூழலில் இருந்து எளிதில் விடுபடலாம்.
ஆவாரம்பூ, பிரண்டைஊறுகாய்க்கு ஏக கிராக்கி!
சென்னை, கிழக்கு தாம்பரத்தில், 'பிரம்மி' என்ற பெயரில், இயற்கை வேளாண் விளைபொருள் அங்காடி நடத்தி வரும், குமுதா: 'உனக்கு பிடித்தமான தொழிலை தேர்ந்தெடுத்து துவங்கி, உன் திறமையை நீயே வளர்த்துக் கொள்' என, கணவன்ஊக்குவித்தார்.

இதையடுத்து, மத்திய அரசின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன துறையில், நான்கு நாள் படிப்பாக, சிறுதானியங்களின் மதிப்புக் கூட்டல் பயிற்சியில் சேர்ந்தேன்.
அப்போது ஏற்பட்ட சத்துணவு குறித்த விழிப்புணர்வால், அவற்றை தேடி வாங்கி வந்து, வீட்டினர், விருந்தினர், அக்கம் பக்கத்தவர்களுக்கு சமைத்து வழங்கினேன்.அனைவருக்கும் பிடித்து போகவே, நாட்டுக் கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, சாமை, குதிரைவாலி வாங்கி வந்து சுத்தம் செய்து, சிறிதளவு லாபம் வைத்து விற்கத் துவங்கினேன்.

நல்ல லாபம் தர ஆரம்பிக்கவே, அடுத்த கட்டமாக, சிறுதானிய இட்லி, தோசை, ரெடி மிக்ஸ் மற்றும் ஈரமாவு விற்பனையை ஆரம்பித்தேன்.ஆரம்பத்தில், மாதச் சேமிப்பு, 5,000 ரூபாயாக இருந்தது. அதன் பின் புதுக்கோட்டையிலிருந்து, ஆர்கானிக் பாரம்பரிய அரிசி வகைகளான கவுனி, மாப்பிள்ளை சம்பா, குடவாழைச் சம்பா; புதுச்சேரியில் இருந்து மிளகுச் சம்பா, தங்கச் சம்பாவை, நேரில் சென்று வாங்கி வந்து, வீட்டில் வைத்தே விற்க துவங்கினேன்; சேமிப்பு கூடியது.
அடுத்து, ஆவாரம்பூ ஊறுகாய், பிரண்டை ஊறுகாய், குறுமிளகு ஊறுகாய் என, வித்தியாசமாக செய்யத் துவங்கினேன்.ஆவாரம்பூ சீசன், நவம்பர், டிசம்பர் என்பதால் திருச்சி, மதுரைக்குச் சென்று, மொத்தமாகப் பூக்களை வாங்கி வந்து ஊறுகாய் போடுகிறேன்.

பிரண்டை பறிக்க, திருப்போரூர் செல்கிறேன். மிகவும் கஷ்டமான, நாட்கள் அதிகம் வேலை பிடிக்கும் ஊறுகாய் என்றால், பிரண்டை தான். 25 கிலோ பிரண்டை ஊறுகாய் செய்ய, நான்கு நாட்கள் தேவை.இந்த இரண்டு ஊறுகாய்களுக்கும், ஏக கிராக்கி. 'பிரம்மி' என்ற பெயரில், கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்கிறேன். மலேஷியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறேன்.
பொருட்களின் மருத்துவக் குணம், சமையல் டிப்ஸ்களை கூறி, விற்பனை செய்து வருகிறேன். இந்தத் தொழில் மனதிற்கு நிம்மதியையும், மக்களுக்கு இயற்கை உணவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வசதியாக இருக்கிறது.
எப்போதும் பொருட்களை வாங்கி வர அலைந்து திரிந்தபடி இருப்பதால், வாழ்க்கை சுவாரஸ்யமாக உள்ளது; அதே சமயத்தில் அர்த்தம் நிறைந்ததாகவும் உள்ளது.

No comments:

Post a Comment