Friday, March 27, 2020

கம்ப இராமாயணம் - ஐயோ ! என்னே இவன் அழகு

கம்ப இராமாயணம் - ஐயோ ! என்னே இவன் அழகு !


இராமனின் அழகை வருணிக்க முடியாமல் திணறுகிறான் கம்பன். 




வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான்
---------------------------------------------------------------------------------------------

பதம் பிரித்தால் கொஞ்சம் விளங்கும்....

-------------------------------------------------------------------------------------------------------
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளோடும் இளையானோடும் போனான்
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பது ஓர் அழியா அழகுடையான்
-----------------------------------------------------------------------------------------------------

வெய்யோன் ஒளி = சூரியனின் ஒளி

தன் மேனியின் = இராமனின் மேனியில் இருந்து வரும்

விரி சோதியின் மறைய = விரிகின்ற ஜோதியில் மறைய (விரி சோதி - வினைத்தொகை)

பொய்யோ எனும் இடையாளோடும் = சீதைக்கு இடுப்பு ஒன்று இருக்கிறதா இல்லையா... அது பொய்யா நிஜமா என்று தோன்றும் அளவுக்கு உள்ள இடையாளோடும்


இளையானோடும் போனான் = இளைய பெருமாளான லக்ஷ்மணன் உடன் போனான்

மையோ = அவன் நிறம் மை போன்ற கருமையோ ?

மரகதமோ = மரகத மணி போன்ற பச்சை நிறமோ?

மறி கடலோ = கடல் போல நீலமோ ?

மழை முகிலோ = மழை மேகம் போல் கருப்போ?

ஐயோ = ஐயோ எப்படி சொல்லுவது?

இவன் வடிவென்பது = இவன் வடிவழகு என்பது

ஓர் அழியா அழகுடையான் = எப்போதும் அழியாத அழகு உடையவன்

No comments:

Post a Comment